விடுதலைப் புலிகளை இலங்கையில் இருந்து முற்றிலுமாக அழித்து ஒழிப்போம்’ என்று இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினங்களை முன்னிட்டு இலங்கை ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் பொன்சேகா கூறியிருப்பதாவது:
முன்பு விடுதலைப்புலிகளிடம் இருந்த 13 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவிலான பகுதிகள், தற்போது 23 சதுர கி.மீ. அளவுக்கு சுருங்கி விட்டது. விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள், விமானங்கள், படகுகள் போன்றவற்றை அழித்து விட்டோம். இலங்கையில் இருந்து தீவிரவாதம் மற்றும் தனி ஈழம் கோரும் விடுதலைப்புலிகளின் கனவு ஆகியவற்றை முற்றிலுமாக ஒழிப்பதே எங்களின் லட்சியம்.
விடுதலைப்புலிகளின் பிடியில் இருந்து தப்பித்து வரும் அப்பாவி மக்களுக்கு உபசரிப்பு, நட்பு மற்றும் அன்பை ராணுவம் அளித்து வருகிறது. பாதுகாப்பு வளைய பகுதிக்குள் வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதே இதற்கு உதாரணம் ஆகும். விடுதலைப்புலிகள் பிடியில் இருக்கும் மற்ற அப்பாவி மக்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். இலங்கையில் விரைவில் அமைதி பூத்து குலுங்கும் என்று கூறியுள்ளார்.