April

April

ஐ.நா வதிவிடப் பிரதிநிதி பிரிட்டிஷ் பிரதி ஸ்தானிகர் நிவாரண கிராமங்களுக்கு விஜயம்

ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி நீல்பூனேயும் பிரிட்டிஷ் பிரதி உயர்ஸ்தானிகர் மார்க் குடிங்கும் நேற்று புதன்கிழமை வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களுக்கு நேரில் விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்தனர்.

வவுனியா நிவாரணக்கிராமங்களுக்கு தனித்தனியாக விஜயம் மேற்கொண்ட இவர்கள் அங்கிருந்த மக்களின் தேவைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.

இவர்கள் மாவட்ட அரச அதிபர், பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி, வவுனியாவில் உள்ள ஐக்கியநாடுகள் அலுவலகத்தில் கடமையாற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடலை நடத்தியிருந்தனர்.

இடம்பெயர்ந்துள்ள மக்களுடைய சேம நலன்களை கவனிப்பதில் காட்டப்படும் அக்கறை குறித்து விபரமாக அறிந்து கொண்டனர். ஐக்கியநாடுகள் வதிவிட பிரதிநிதி மெனிக்பாம் நிவாரண கிராமத்திற்கும் விஜயம் செய்திருந்தாரென அதிகாரிகள் தெரிவித்தனர்.

தனியார் தோட்டங்களால் அரசாங்கத்துக்கு மூவாயிரத்து 11 மில்லியன் ரூபா நஷ்டம் – அமைச்சர் டியு குணசேகர

deu-gunasekara.jpgநாடளாவிய ரீதியிலுள்ள பாரிய தோட்ட நிறுவனங்கள் கடந்த பத்து வருடங்களில் அரசாங்கத்துக்கு எதுவித கட்டணமும் செலுத்தாத நிலையில் உள்ளன என்றும் இதனால் அரசாங்கத்துக்கு மூவாயிரத்து 11 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதெனவும் அரசியலமைப்பு மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் டியு குணசேகர தெரிவித்தார்.

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் காணிகளின் நிலைப்பாடு குறித்து ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை குறித்து விளக்கம் அளிக்கும் முகமாக தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில்

நாடளாவிய ரீதியில் 23 பாரிய தோட்டங்கள் உள்ளன. அவற்றில் மூன்றைத்தவிர ஏனையவை தனியார் நிறுவனங்களாகவே இயங்கி வருகின்றன. இவ்வாறு இயங்கி வரும் 20 தோட்டங்களும் கடந்த பத்து வருடங்களாக அரசாங்கத்துக்கு எவ்வித கட்டணமும் செலுத்தவில்லை. சில தோட்ட நிறுவனங்கள் அவற்றின் முகாமைத்தவக் கட்டணமாக வருமானத்தின் 50 வீதத்தை ஒதுக்கியுள்ளன. அதேவேளை அந்தத் தோட்டங்களின் விவரங்கள் திரட்டப்படுவது தெரிய வந்ததும் அவை முகாமைத்துவ கட்டணத்தை 20 வீதமாகக் குறைத்து கணக்குகளைத் தயாரித்துள்ளன.

சில தோட்ட நிறுவனங்கள் மீள் நடுகைக்காக பெருமளவில் கடனுதவி பெற்றுள்ளதுடன் மீள் நடுகை மேற்கொண்டதற்கான எவ்வித அறிகுறியும் தென்படவில்லை. இவ்வாறு 10047 மில்லியன் ரூபா கடனாகப் பெறப்பட்டுள்ளது. எனினும் இந்தக்கடன் தொகைக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை.

காணி மறுசீரமைப்பு ஆணைக்கழுவினால் சுவீகரிக்கப்பட்ட காணியின் அளவு 4 இலட்சத்து 8487 ஹெக்டயர் ஆகும். இந்த ஆணைக்குழுவினால் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட காணிகளின் அளவில் குளறுபடிகள் நிலவுகின்றன. ஆணைக்குழுவின் பதிவுகளின் எண்ணிக்கைக்கும் பெற்றுக்கொண்ட நிறுவனங்கள் தெரிவிக்கும் எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் தென்படுகிறது.

இவ்வாறு பாரிய குளறுபடிகள் தெண்படுவதாக கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதியிடம் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். அமைச்சரவை உப குழு அதன் அறிக்கை ஊடாக சில சிபாரிசுகளை முன்வெத்துள்ளது. காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு  மறுசீரமைக்கப்பட வேணடும். தோட்ட நிறுவனங்களுக்குரிய காணியின் அளவை 5000 ஏக்கருக்கு மட்டுப்படுத்தல், சிறிய தோட்ட உரிமையாளர்களுக்கு காணிகளைப் பகிர்ந்தளித்தல், விசேட தேடுதல் நடவடிக்கைப் பிரிவொன்றை உருவாக்கல் போன்றவை முன்வைக்கப்படட சிபாரிசுகளில் முக்கியமானவைகளாகும்.

அமைச்சர் டியு குணசேகர தலைமையிலான அமைச்சரவை உப குழுவில் அமைச்சர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா,  ஜீவன் குமாரதுங்க,  சமல் ராஜபக்ஷ ஆகியோரும்  இடம்பெறுகின்றனர்

ஜி20 நாடுகளின் மாநாடு இன்று லண்டனில் ஆரம்பம்

g-20.jpgலண்டன், எக்ஸல் மையத்தில் இன்று ஜி20 நாடுகளின் மாநாடு ஆரம்பமாகவுள்ளது. நான்கு நாட்கள் இடம்பெறவுள்ள ஜி20 நாடுகளின் மாநாட்டில் உலக பொருளாதார நெருக்கடி குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டன் வந்துள்ளார்.இதன் போது பிரித்தானிய ஜனாதிபதி கோடன் பிரவுணை 10 டவுனிங் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.அமெரிக்கா ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் பராக் ஒபாமா முதன்முறையாக லண்டன் வந்துள்ளது இதுவே முதற் தடவையாகும்.

இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய உயர் மட்டக் குழு லண்டன் சென்றுள்ளது. இந்தியக் குழுவில் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் எம்.எஸ்.அலுவாலியா, வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.தனது பயணத்தின்போது அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கவுள்ளார் மன்மோகன் சிங். 

பகிஷ்கரிப்பில் ஈடுபட்டாலும் தடையின்றி பஸ் சேவைகள்

ஒரு சில தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலை பகிஷ்கரிப்பில் ஈடுபடுகிறபோதும் தடையின்றி தனியார் பஸ் சேவைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று (1) பெரும்பாலான தூரசேவை தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட்டதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் அமல் குமாரகே தெரிவித்தார்.

பஸ்கள் சேவையில் ஈடுபடுவதற்கு இடையூறு செய்யும் வகையில் சிலர் பஸ் சாரதிகளை அச்சுறுத்தியும் பஸ்கள் மீது கற்களால் தாக்கியும் வருவதாகவும் இதனை தடுக்க விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இடையூறு விளைவித்த மூவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதோடு ஏனையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தனியார் பஸ் சங்கமொன்று நேற்று முன்தினம் முதல் வேலை பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகிறது. சட்ட ஒழுங்குகளை மீறும் பஸ் சாரதிகளுக்கு எதிராக தண்டம் அறவிடுவது; பஸ் அனுமதிப் பத்திரத்தை ரத்து செய்வது  போன்ற சட்டங்களை நீக்குமாறு கோரியே இவர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் கோரிக்கைகளில் எதுவித நியாயமும் கிடையாது எனவும் அவர்களின் எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படாது எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் அமல் குமாரகே கூறினார். பெரும்பாலான தனியார் பஸ் ஊழியர்கள் வேலை பகிஷ்கரிப்பில் ஈடுபடவில்லை எனவும் தடையின்றி பஸ் சேவைகளை நடத்தும் வகையில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பதுளை, கேகாலை, தென் பிராந்தியம் அடங்கலான பல பகுதிகளுக்கான தூரசேவை பஸ்கள் நேற்று (1) சேவையில் ஈடுபட்டதாகவும் சொன்னார்.

இதேவேளை, சேவையில் ஈடுபடும் பஸ்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களையும் இடையூறு செய்பவர்க ளையும் கைது செய்ய நடமாடும் பொலிஸ் குழுக்களும் மோட்டார் சைக்கிளில் ரோந்தில் ஈடுபடும் பொலிஸ் குழுக்களும் சிவிலியன்களைக் கொண்ட குழுக்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இது தவிர நாடு பூராவும் உள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் இது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் தூரசேவை பஸ்களுக்கான பாது காப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை தமது சங்கம் இந்த வேலை பகிஷ்கரி ப்பில் ஈடுபடவில்லையெனவும் பெரும்பாலான தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன கூறினார். சேவையில் ஈடுபட்ட தமது சங்க ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

‘உலக பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்’- இந்தியப் பிரதமர்

manmohan.jpgஉலக பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான் என்று இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் வர்ணித்துள்ளார்.

பிரிட்டனின் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த செவ்வியில், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா என்று கூறியுள்ள பிரதமர் மன் மோகன் சிங், பயங்கரவாத அமைப்பான லஷ்கர் அமைப்பை கட்டுப்படுத்த விரும்பாமல் அல்லது கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் உள்ளதாக கூறியுள்ளார்.

மும்பையில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தாக்குதலுக்கு லஷ்கர் மீது இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. இத்தாக்குதலில் 170 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

சுங்க திணைக்களத்திற்கு புதிதாக 300 ஊழியர்களை சேர்த்துக் கொள்ள அரசு தீர்மானம்

இலங்கை சுங்கத் திணைக்களத்திற்குப் புதிதாக 300 ஊழியர்களைச் சேர்த்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 100 பரிசோதகர்களும், 200 பணியாளர்களும் நியமிக்கப்படவுள்ளதாக அரச வருவாய்த்துறை அமைச்சரும் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதியமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இது தொடர்பாக அரச சேவை ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சுங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளார். சுங்கத் திணைக்களத்தின் பணிகளை மேலும் வினைத் திறன்மிக்கதாக்கி, கூடுதல் வருவாயை ஈட்டுவது தொடர்பாகவும் இந்தப் பேச்சுவார்த்தையில் ஆராயப்பட்டதாக அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

கிழக்கில் 60 சு. கட்சி அலுவலகங்கள்

karuna1.jpgகிழக்கு மாகாணத்தில் ஏப்ரல் மாதத்தில் 60 சுதந்திரக் கட்சியின் அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரும் தேசிய நல்லிணக்க அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் அவ்வலுவலகங்கள் திறக்கப்படவுள்ளன. முதலாவது அலுவலகம் எதிர்வரும் 6ம் திகதி மட்டக்களப்பில் மாவட்ட அலுவலகமாகத் திறக்கப்படும். கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

பாடசாலைகளிலுள்ள மரங்களின் கிளைகளைத் தறிக்க அவசர உத்தரவு

fallen-tree-branch.jpgவவுனியா பாடசாலை வளவுகளில் உள்ள சகல மரங்களினதும் கிளைகளை தறிக்குமாறு வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி வி.ஆர்.ஏ. ஒஸ்வோல்ட் அவசர உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மர நிழல்களில் பாடசாலை வகுப்புக்களை நடத்துவது பற்றி கவனமாக இருக்குமாறும் அதிபர்கள் இந்த வியடத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டுமெனவும் பணிப் பாளர் ஆலோசனை தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் மகா இறம்பைக்குளம் பாடசாலை வளவில் மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் ஆசிரியையும் மாணவியும் மரணமாகி 13 பாடசாலை மாணவர்களும் காயங்களுக்கு உள்ளானார்கள்.

ஐபிஎல் 20-20 ஆட்டம் 10 நிமிடம் அதிகரிப்பு

_ipl_graphic_.jpgஇந்த ஆண்டுக்கான ஐபிஎல் 20 20 வரும் 18ம் தேதி தென்னாப்பிரிக்காவில் கோலாகலமாக தொடங்குகிறது.  வழக்கமாக 20 20 ஆட்டங்கள் 3 மணி நேரம் நடைபெறும். இதில் 15 நிமிட இடைவேளையும் அடங்கும். இந்நிலையில் விளம்பர வருமானத்திற்காக போட்டியின் இடைவேளை நேரத்தை 10 நிமிடம் அதிகரிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஐபிஎல்லும் போட்டி ஒளிபரப்பாகும் சோனி டிவியும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இதன்படி ஒவ்வொரு அணிக்கும் 10 ஓவர்கள் முடிந்ததும் 5 நிமிட இடைவேளை வழங்கப்படும். இந்த நேரத்தில் கேப்டன் சக வீரர்களுடன் ஆலோசனை நடத்திக்கொள்ளலாம் என ஐபிஎல் தெரிவித்துள்ளது. மேலும் டிவி நிறுவனங்கள் தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது.

மேல் மாகாண சபை தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும்

மேல் மாகாண சபைத் தேர்தல்களுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் (02) நாளையும் (03) இடம்பெற உள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

இதற்கான சகல ஒழுங்குகளும் முன்னெடுக்கப்பட்டுள்ள தோடு வாக்களிப்பு நடைபெறும் அரச நிறுவனங்களுக்கு அருகில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிரி தெரிவித்தார்.

இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்கு 35,915 பேர் தகுதி பெற்றுள்ளனர். 5,379 விண்ணப்பங்கள் திணைக்கள த்தினால் நிராகரிக்கப்பட்டிருந்தன. இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் இருந்து 15,789 பேரும், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 10,926 பேரும், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 8,699 பேரும் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

இதேவேளை தேர்தலுக்கான வாக்களார் அட்டைகள் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.