ஒரு சில தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலை பகிஷ்கரிப்பில் ஈடுபடுகிறபோதும் தடையின்றி தனியார் பஸ் சேவைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று (1) பெரும்பாலான தூரசேவை தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட்டதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் அமல் குமாரகே தெரிவித்தார்.
பஸ்கள் சேவையில் ஈடுபடுவதற்கு இடையூறு செய்யும் வகையில் சிலர் பஸ் சாரதிகளை அச்சுறுத்தியும் பஸ்கள் மீது கற்களால் தாக்கியும் வருவதாகவும் இதனை தடுக்க விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இடையூறு விளைவித்த மூவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதோடு ஏனையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தனியார் பஸ் சங்கமொன்று நேற்று முன்தினம் முதல் வேலை பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகிறது. சட்ட ஒழுங்குகளை மீறும் பஸ் சாரதிகளுக்கு எதிராக தண்டம் அறவிடுவது; பஸ் அனுமதிப் பத்திரத்தை ரத்து செய்வது போன்ற சட்டங்களை நீக்குமாறு கோரியே இவர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களின் கோரிக்கைகளில் எதுவித நியாயமும் கிடையாது எனவும் அவர்களின் எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படாது எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் அமல் குமாரகே கூறினார். பெரும்பாலான தனியார் பஸ் ஊழியர்கள் வேலை பகிஷ்கரிப்பில் ஈடுபடவில்லை எனவும் தடையின்றி பஸ் சேவைகளை நடத்தும் வகையில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பதுளை, கேகாலை, தென் பிராந்தியம் அடங்கலான பல பகுதிகளுக்கான தூரசேவை பஸ்கள் நேற்று (1) சேவையில் ஈடுபட்டதாகவும் சொன்னார்.
இதேவேளை, சேவையில் ஈடுபடும் பஸ்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களையும் இடையூறு செய்பவர்க ளையும் கைது செய்ய நடமாடும் பொலிஸ் குழுக்களும் மோட்டார் சைக்கிளில் ரோந்தில் ஈடுபடும் பொலிஸ் குழுக்களும் சிவிலியன்களைக் கொண்ட குழுக்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
இது தவிர நாடு பூராவும் உள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் இது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் தூரசேவை பஸ்களுக்கான பாது காப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை தமது சங்கம் இந்த வேலை பகிஷ்கரி ப்பில் ஈடுபடவில்லையெனவும் பெரும்பாலான தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன கூறினார். சேவையில் ஈடுபட்ட தமது சங்க ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் சொன்னார்.