April

April

கோள் சொல்ல நாணய நிதியத்திடம் நேரம் ஒதுக்கிக் கேட்கிறது ஐ.தே.க

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப் புவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் அரசு பேச்சு நடத்திக்கொண்டிருக்கும்போது அதனை தடுக்கும் வகையில் பொறுப்பற்ற முறையில் ஐ.தே.க செயற்படுகிறது என அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு இல்லாத தையும், பொல்லாததையும் கூறுவதற்கும் கோள் சொல்வதற்கும் நேரம் ஒதுக்கித் தருமாறு ஐ.தே.க கேட்டுள்ளது. அவர்கள் அதற்கு இணங்கவில்லை. அதனால் நியூயோர்க்கில் தொடர்புகொண்டு நேரம் ஒதுக்கித் தருமாறும் கேட்டுள்ளார்கள்.

எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் ஐ.தே.க செயற்படுகிறது. ஐ.தே.க கட்சியின் ஆட்சிக் காலத்தில் இருந்த சர்வதேச நாணய நிதியமல்ல இப்போது இருப்பது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கை முற்றிலும் மாறுபட்டுள்ளது.

அரச ஊழியர்களின் சேவையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. எக்காரணம் கொண்டும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படமாட்டாது என்பதை பொறுப்புடன் கூற விரும்புகிறேன் என்றும் கூறினார். ஐ.தே.க எம்.பி ரவி கருணாநாயக்க கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இ.போ.ச. மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவோம் -அமைச்சர் டளஸ்

dalas_alahapperuma.jpgஇலங்கை போக்குவரத்து சபை மீது பிரயாணிகள் வைத்துள்ள நம்பிக்கை இழக்கப்படுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது. அதனைக் காப்பாற்றுவோம் என போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். பலங்கொட பஸ் டிப்போவை 37ஆவது மாதிரி டிப்போவாகத் தரமுயர்த்தும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அண்மையில் நடைபெற்ற இவ்வைபத்தில் உரையாற்றிய அமைச்சர், தற்போதைய அரசாங்கம் இலங்கை போக்குவரத்துச் சபையை சரியான பாதையில் கொண்டு செல்கிறது. போக்குவரத்துச் சபை ஊழியர்களின் அர்ப்பணிப்புடனான சேவை காரணமாக அதன் பஸ்களின் எண்ணிக்கை 5200 ஆக அதிகரித்துள்ளது என்று மேலும் குறிப்பிட்டார். 

திருமலை கடலில் துருக்கி இரசாயன கப்பல்: சல்பூரிக் அமில கசிவு; கடல்நீர் பாதிப்பு

திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக திருகோணமலை நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ள துருக்கி நாட்டுக் கப்பலையும், அதிலுள்ளவர்களையும் காப்பாற்றும் அவசர பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக கடற்படையின் பதில் பேச்சாளர் கொமாண்டர் மஹேஷ் கருணாரட்ன தெரிவித்தார்.

சல்பூரிக் அமிலத்தை ஏற்றிக் கொண்டு சென்ற துருக்கி நாட்டுக்குச் சொந்தமான ‘எம்.ரி. கிரேன்ட்பா’என்ற கப்பலே திருமலை துறைமுகத்திற்கு அப்பாலுள்ள நடுக்கடலில் வைத்து கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சல்பூரிக் அமிலத்தினால் இலங்கையின் கடற்பரப்பிலும், கரையோர பிரதேசத்திலும் ஏற்படும் சுற்றாடல் பாதிப்பை தவிர்க்கும் வகையில் அந்தக் கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கைகளை கடற்படையினர் அவசரமாக மேற்கொண்டு வருவதாகவும் கடற்படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் மேலும் தகவல் தருகையில், சல்பூரிக் அமிலம் இரசாயனத்தை ஏற்றிக்கொண்டு இந்தியாவின் தென்பகுதியிலுள்ள தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இந்தியாவின் மற்றுமொரு துறைமுகமான காக்கிநாடா நோக்கி கடந்த 2ம் திகதி இந்தக் கப்பல் பயணத்தை தொடங்கியுள்ளது.

அந்தக் கப்பலில் சரக்குகளை ஏற்றக்கூடிய அளவைவிட மேலதிகமாகவும் சரக்குகள் இருந்துள்ளன. இந்தக் கப்பலில் சல்பூரிக் அமிலம் வைக்கப்பட்டிருந்த தாங்கிகளில் கசிவு ஏற்பட்டு அது கப்பலின் ஸ்திர சமநிலை பேணுவதற்காக வைக்கப்பட் டுள்ள தாங்கிப் பிரதேசத்திற்குள் படிய ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து அந்தக் கப்பலிலிருந்து உதவிக்காக இலங்கை கடற்படைக்கு அவசரத் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இத்தாலியிலுள்ள மீட்பு ஒத்துழைப்பு மையத்தின் ஊடாக இந்த தகவல்களை பெற்றுக்கொண்ட இலங்கை கடற்படையிர் இந்தக் கப்பல் சட்டபூர்வமான ஒரு சரக்குக் கப்பல் என்பதை ஊர்ஜிதம் செய்த பின்னர் அவசர மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

சல்பூரிக் அமில கசிவினால் இந்தக் கப்பல் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கப்பலின் ஊழியர்கள் உடனடியாக அதிலிருந்து கடற்படையினரால் அப்புறப் படுத்தப்பட்டுள்ளனர். கப்பலுக்குள் பிரவேசித்த இலங்கை கடற்படையினர் அதன் தாங்கிகளை பரிசோதித்தபோது அதில் அமிலக் கசிவு ஏற்பட்டுள்ளமையை உறுதி செய்துள்ளனர். இந்தக் கப்பலிலுள்ள சல்பூரிக் அமிலம் இலங்கையின் கடற்பரப்பிலும், கரையோர பிரதேசத்திலும் பாரிய சுற்றாடல் பிரச்சினையை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்தக் கப்பலை தற்பொழுது மேலும் ஆழ்கடலை நோக்கி இழுத்துச் செல்வதற்கான அவசர நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர். கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்வதற்கான வசதிகளை வழங்குவதில் கப்பலின் முகவர்களும் அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து இலங்கை அரசாங்கத்தின் ஊடாக துருக்கிக்கு கடற்படையினர் அறிவித்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேசத்தில் வெள்ளத்தினால் நெல் வயல்கள் முற்றாக சேதம்

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை வயல் பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தினால் உழுது பண்படுத்தலுக்குத் தயாராக விருந்த பல நெல் வயல்கள் பலத்த சேதத்திற்குள்ளாகி இருப்பதுடன் வரம்புகளும் இருந்த இடம் தெரியாமல் அழிந்துள்ளன.கடந்த வாரம் அம்பாறைக்கு மேற்புறமாகப் பெய்த பலத்த மழை காரணமாக பெருக்கெடுத்த வெள்ளம் ஆற்றின் குறுக்கால் வயலுக்கு நீர் வழங்குவதற்கு போடப்பட்டிருந்த பலகைத் தடை காரணமாக ஆற்றில் செல்ல முடியாமல் மேலெழுந்து வயல் நிலங்களுக்குள் பிரவேசித்ததனாலேயே சேதம் ஏற்பட்டுள்ளதாக இப்பிரதேச விவசாயிகள் தெரிவித்தனர்.

சம்மாந்துறை விவசாய பிரிவைச் சேர்ந்த தொய்யன் வட்டை, வீரக்காடு போன்ற கண்டங்களிலுள்ள பெரும்பாலான வயல்களிலுள்ள மண் இந்த வெள்ளித்தினால் ஆற்றுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் பல அடி ஆழமான குழிகளும் நெல் வயல்களில் ஆங்காங்கே காணப்படுகின்றது.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வேளையில் அணைக்கட்டின் தடைப் பலகையைக் கழற்றி இருந்தால் இந்தப் பாரிய அழிவு ஏற்பட்டிருக்காது என விவசாயிகள் தெரிவித்தனர்.

தமிழர்களின் இனப்படுகொலையை கண்டித்து இன்று Wed. 8 April 4pm லண்டனில் இந்திய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

சோசலிஸ்ட் கட்சியினால் (CWI- Socialist Party) ஆரம்பித்து வைக்கப்பட்ட தொடர் பிரச்சார நிகழ்வின் ஒர் அம்சமாக 8ம் திகதி புதன்கிழமை இன்று இந்திய தூதரகம் முன்பாக ஓர் ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்தியா தமிழ்நாட்டை மையமாக கொண்டு இயங்கும் இந்த பிரச்சார ஏற்ப்பாட்டாளர்கள் குழு சர்வதேசம் எங்கும் பல நாடுகளில் ஒரே நாளில் ஆர்ப்பாட்டங்களை நடாத்த ஒழுங்கு செய்துள்ளனர்.

இலங்கையில் ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தின் தமிழ் போராட்ட இயக்கங்களுக்கு ஆதரவளித்து ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க உதவிய இந்தியா தற்போது நடைபெறும் மனித அவலங்களிலும், தமிழினப் படுகொலையிலும் பங்காளிகளாக இருப்பதை இன்று இந்த ஆர்ப்பாட்டம் கண்டனம் செய்யும்.

பிராந்திய வல்லரசான இந்தியா இலங்கை தமிழர்களின் மனித அவலங்களை நிறுத்த விருப்பமின்றி தனது இந்திய பொருளாதாரத்தை மட்டுமே கருத்திற் கொண்டு செயல்ப்படுவதையும்;

விடுதலைப்புலிகளை அழிப்து என்ற போர்வையில் தனது வல்லாதிகத்தை இலங்கையில் ஏற்ப்படுத்துவதும் இந்த மனித அவலங்களில் அக்றையற்ற சர்வதேசங்களின் மனச்சாட்சியையும்;

தமிழ் மக்களின்மீது நடாத்தப்படும் இந்த மனித அவலத்தின் பொறுப்பை தட்டிக்கழிக்கும் சர்வதேசத்தின் நிலையையும் இந்த ஆர்ப்பாட்டம் கண்டனம் செய்யும்.

ஆளும் வர்க்கம் தமது நலனிலும் தொழிலாளிகளின் உழைப்பை சுரண்டுவதில் மட்டுமே அக்கறையுடன் இருப்பதையும் தொழிலாளிகள் விவசாயிகள் தமிழ்பேசும் மக்கள் தமது உரிமைக்காக தாமே போராட வேண்டும் என்பதையும் இன்று இந்த ஆர்ப்பாட்டம் வலியுறுத்தும்.

International Day of Action – Protest at INDIA HOUSE, Aldwych, London, WC2B 4NA
http://www.stoptheslaughteroftamils.org/

Wednesday 8 April 4 – 5.30 pm

தமிழர்கள் தமிழர்களுக்காக போராடுவதன் மூலமே தமிழர்களை அழிவினின்றும் பாதுகாக்க முடியும்

A RACIST WAR IN SRILANKA’ Arundhati Roy – வன்னி மக்களுக்காக ஒலிக்கும் சர்வதேசக் குரல்கள்

லாலு பேச்சு: கைது செய்ய உத்தரவு

laluprasat.jpgநான் மத்திய உள்துறை அமைச்சராக இருந்திருந்தால் வருண் காந்தியை ரோடு என்ஜினை ஏற்றி கொன்றிருப்பேன் என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறினார். இதையடுத்து அவரைக் கைது செய்ய பிகார் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

லாலு பிரசாத் யாதவின் இந்தப் பேச்சு தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. லாலுவின் இந்தப் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. லாலுவின் பேச்சு விஷமமானது. இதுவும் துவேஷப் பேச்சாகும் என்று பாஜக மூத்த தலைவர் சுதீந்திர குல்கர்னி தெரிவித்திருந்தார்.

இருப்பினும், நான் சொல்ல வந்தது வேறு. மதவாத அரசியலைத்தான் புல்டோசர் போட்டு நசுக்க வேண்டும் என கூறியிருந்தேன். ஆனால் மீடியாவில் வந்ததைப் போல நான் பேசவில்லை. அரசியல் ரீதியாக வருண் கதையை முடித்திருப்பேன் என்றுதான் நான் கூறினேன் என்று ஜகா வாங்கியிருந்தார் லாலு.

இந்த நிலையில் இன்று லாலு பிரசாத் யாதவ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந் நிலையில் லாலுவைக் கைது செய்ய கிஷண்கஞ்ச் எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

சுதந்திரப் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தலைவர் திடசங்கற்கம் பூண்டுள்ளார்: பா. நடேசன்

thalai.jpgதமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத்தை இடையறாது முன்னெடுக்க தமிழீழு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக அதன் அரசியல்துறைப் பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன் தெரிவித்துள்ளார்.
 
1985ம் ஆண்டு பூட்டானின் தலைநகர் திம்புவில் முன்வைக்கப்பட்ட சமாதானத் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தயார் நிலையில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்திலிருந்து வெளியாகும் ஜனசக்தி தமிழ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவசரகாலச் சட்டம் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

srilanka-parliament.jpgநாட்டில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணை பாராளுமன்றத்தில் இன்று 81 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது.

அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் பிரேரணையை பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க  பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்தார்; இதற்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் கிடைத்தன. மக்கள் விடுதலை முன்னணி பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களித்தது. ஐ.தே.க.வும் முஸ்லிம் காங்கிரஸ{ம் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இத்தாலி : நிலநடுக்க பலி 180 ஆக உயர்வு

italyearthquake.jpgஇத்தாலியின் மையப்பகுதியில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது.

அப்ருஸோவின் தலைநகரான லக்யுலாவின் பெரும்பாலான பகுதிகள் இந்த நிலநடுக்கத்தில் கடுமையாக சேதமடைந்துள்ளன. அந்நாட்டு நேரப்படி நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக பல கட்டிடங்கள் இடிந்தன. அதில் தூங்கிக் கொண்டிருந்த மக்களும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

தற்போது வரை மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 1,500 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

புதுவருடம் கழிந்ததும் பயங்கரவாதமற்ற நாடு உருவாகும் – பாராளுமன்றத்தில் பிரதமர்

pm-srilanka.jpgமுப்பது வருடகாலமாக நாட்டைப் பெரிதும் பாதித்து வந்த பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்படும் நாள் நெருங்கிவிட்டது. புதுவருடம் முடிந்தவுடன் பயங்கரவாதமற்ற நாட்டில் மக்கள் வாழ முடியுமென பிரதமர் ரத்ணசிறி விக்ரமநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணையை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். பிரதமர் தமதுரையில் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

இந்த மகத்தான வெற்றியை ஈட்டுவதற்கு எமது வீரமிக்க பாதுகாப்புப் படையினர் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளனர். யுத்தமுனையில் அதிக எண்ணிக்கையிலான தமது தலைவர்களை இழந்துள்ள எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பு இந்தத் தோல்வியை மறைப்பதற்கு பொய்ப் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. எனினும் அவர்களின் போலிக் குற்றச்சாட்டுக்களை முறியடிக்க அரசாங்கம் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். புலிகள் மேற்கொண்டு வரும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளபோதும் இதற்கு சில தரப்பினர் உதவி வழங்கி வருவதையிட்டு நாம் கவலையடைகிறோம். வடக்கில் விடுவிக்கப்படாத பிரதேசங்களிலுள்ள சிவிலியன்களின் நலன் கருதி அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தில் புலிகள் பொதுமக்கள் மத்தியில் மறைந்து வாழ்கின்றனர். எனினும் மனித நேயத்துடன் செயற்பட்டு வரும் எமது படை வீரர்கள் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் பயங்கரவாதிகளுக்கெதிரான தாக்குதல்களில் மட்டும் ஈடுபட்டு வருகின்றனர்.

புலிகளால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட துண்புறுத்தல்கள் பற்றி சில சர்வதேச அமைப்புக்கள் முற்றாக உதாசீனம் செய்துள்ளன. எனினும் ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் இத்தகைய அமைப்புக்களின் நோக்கம் தோல்வி கண்டுள்ளன என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.