09

09

3 மாதங்களின் பின் காலநிலையில் மாற்றம்

climate.jpgஇலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் தாழமுக்கம் ஏற்பட்டிருப்பதால் கடும் காற்று வீசுவதுடன் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. கடந்த மூன்று மாதங்களாக நாட்டில் நிலவிய கடும் வரட்சியான காலநிலை முடிவுக்கு வந்துள்ளது.

இக்காலப் பகுதியில் மின்னலால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

ஹமாஸ், பதாஹ் இணக்கப்பாடு: பலஸ்தீனப் பிரதமர் பதவி விலக சம்மதம்

w-n.jpgபலஸ்தீன் ஜனாதிபதி சலாம் பயாத் தனது பதவியை ராஜினாமாச் செய்யவுள்ளார். மார்ச் மாத இறுதியில் சலாம் பயாத் ராஜினாமாச் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எகிப்தில் ஹமாஸ¤ம் பதாவும் நடாத்திய பேச்சுக்கள் வெற்றிபெற்றதையடுத்து பலஸ்தீனப் பிரதமர் பதவியைத் துறக்க முன்வந்தார். காஸாவையும், பலஸ்தீனையும் மீண்டும் ஒன்றாக இணைத்து ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர இந்தப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. பெரும்பாலும் பிரதமர் பதவி காஸாவை ஆளும் ஹமாஸ¤க்குச் செல்லவுள்ளது. காஸாவை புனரமைக்க வழங்கப்பட்ட உதவிகள் ஹமாஸிடம் செல்வதை உலக நாடுகள் விரும்பவில்லை.

மேற்குக் கரையை ஆளும் பதாஹ் அமைப்பின் தலைவர் ஜனாதிபதி மஃமூத் அப்பாஸிடம் நிதிகள் செல்வதையே சர்வதேச நாடுகள் விரும்புகின்றன. இவ்வாறான நிலையில் ஹமாஸ், பதாஹ் அமைப் பிடையே இணக்கப்பாடுகள் உண்டானதை உலக நாடுகள் வரவேற்றுள்ளன.

அதேவேளை ஐக்கியப்பட்ட பலஸ்தீன் மீண்டும் உருவானால் தொடர்ந்தும் இஸ்ரேலுடன் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கான நல்ல வாய்ப்புகள் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றன.அமெரிக்காவும் ஹமாஸ், பதாஹ்விடையே ஏற்பட்ட ஒற்றுமையை வரவேற்றுள்ளதுடன் மத்தியகிழக்கு பேச்சு வார்த்தை தொடர்வதை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க தனியாகப் பிரிந்துசென்ற ஹமாஸ் தடையாகச் செயற்பட்டது. தற்போது இது நீங்கும் எனக் கருதப்படுகிறது.

ரீ.எம்.வி.பி. ஆயுதப் பிரிவில் அங்கம் வகித்த உறுப்பினர்களுக்கு தொழில் வாய்ப்பு

pullayaan.jpgதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆயுதப் பிரிவு கலைக்கப்பட்டுள்ளதையடுத்து அப்பிரிவைச் சேர்ந்த அங்கத்தவர்களை அவர்களது விருப்பின் பேரில் பொலிஸ் மற்றும் இராணுவப் படைப்பிரிவில் இணைத்துக் கொள்வதற்கும் வெளிநாட்டில் தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டிருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரி வித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பின் ஒத்துழைப்புடன் அரசாங்கத்தின் உதவியுடனும் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் சில இளைஞர்களுக்கு புனர்வாழ்வ ளித்து வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து சுயதொழில் ஆரம்பிக்க வழிகாட்டவும் கட்சி தீர்மானித் திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆயுதப்பிரிவில் இதுவரைக்காலமும் தியாக உணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வந்த உறுப்பினர்களுக்கு கட்சி சார்பாகவும் தனிப்பட்ட ரீதியிலும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் முதலமைச்சர் கூறினார்.

பெண்களைப் பாதுகாப்பதற்கு இலங்கையில் சட்ட திட்டங்கள் – அமைச்சர் சுமேதா

sumeda-jayasena.jpgபெண்களைப் பாதுகாப்பதற்கு இலங்கையில் பல்வேறு சட்ட திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இவை இருப்பதே தெரியாது. சில நீதிபதிகள், சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் கூட இவ்வாறான சட்டங்கள் இருப்பதனை அறிந்து வைத்திருக்கவில்லை. சட்டங்களின் அடிப்படையில் கணவனால் கூட மனைவியை உடலுறவுக்கு கட்டாயப்படுத்த முடியாதென பெண்கள் வலுவூட்டல் அமைச்சர் சுமேதா ஜி. ஜயசேன தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினம் நேற்று கொழும்பு நவரங்கஹல மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் தொடர்ந்தும் கூறியதாவது:-

பெண்களைப் பாதுகாப்பதற்கான கடுமையான சட்டங்கள் இதுவரை உருவாக்கப்படவில்லை. எமது சமுதாயத்தின் எண்ணத்தில் பாரிய மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.  அப்போதுதான் நம் நாட்டுப் பெண்களை சக்திமிக்கவர்களாகத் தோற்றுவிக்க முடியும்.

ஊடகங்களில் வெளியாகும் அறிக்கைகளின்படி பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொலை, கற்பழிப்பு மற்றும் பாலியல் வல்லுறவு என்பவற்றைத் தவிர ஏனைய பாலியல் துஷ்பிரயோகங்கள் பேரூந்துகளிலேயே இடம்பெறுகின்றன.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பகிடிவதை என்ற பெயரில் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றனர். இவற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள பெண்கள் போராட வேண்டியுள்ளது. சில பெண்கள் இதனைத் தவிர்ப்பதற்காக மாடிகளிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

மஹிந்த சிந்தனையின் கீழ் பெண்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்துவதற்காக பல்வேறு செயல்திட்டங்களை சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சு முன்னெடுத்து வருகின்றது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் பெண்களது நலன்புரி செயல்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

அமைச்சர் சுமேத ஜி. ஜயசேனவின் 20 வருட கால அரசியல் சேவையைப் பாராட்டி நாட்டின் முதற் பெண்மணியான சிரந்தி ராஜபக்ஷ அவரை விருது வழங்கி கெளரவித்தார். நேற்றைய நிகழ்வில் பல்வேறு துறைகளிலும் தமது திறமைகளை வெளிப்படுத்திய பெண்களும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

மலையக இளைஞர், யுவதிகளின் பிரச்சினைக்கு தீர்வுகாண ஆலோசனை குழு – மத்திய மாகாண அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன்

ratha-kirishnan.jpgமலையக இளைஞர், யுவதிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்வினைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்று மத்திய மாகாண அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  இதற்கென ஆலோசனைக் குழுவொன்றை அமைத்து செயற்படுத்தப் போவதாகவும் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இ. தொ. கா உப தலைவரான இராதாகிருஷ்ணனுக்கு மத்திய மாகாண சபையில், கைத்தொழில், விளையாட்டுத்துறை, இளைஞர் மற்றும் மகளிர் விவகாரம், தோட்ட உட்கட்டமைப்பு இந்து கலாசார அலுவல்கள், கிராமிய அபிவிருத்தி தமிழ்க் கல்வி அமைச்சர் ஆகிய அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

கண்டி- பேராதனையிலுள்ள அமைச்சு அலுவலகத்தில் நேற்று முன்தினம் கடமைக ளைப் பொறுப்பேற்றுக் கொண்ட மாகாண அமைச்சர் ராதாகிருஷ்ணனுக்கு கண்டி – ரோயல் ஹோட்டலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் இ. தொ. கா. தலைவரும், பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம், முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, முன்னாள், இந்நாள் மாகாண சபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள், உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

மத்திய மாகாண சபையில் நான்காவது தடவையாக அமைச்சராகியிருக்கும் இராதாகிருஷ்ணன் இங்கு உரையாற்றுகையில், “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் முதற்தடவையாக அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறேன். இ. தொ. கா. என்ன சொல்கிறதோ அதனைக் கட்டாயம் நிறைவேற்றித் தீருவேன்.

இந்திய உதவி தூதுவரிடம் சென்று உதவிகள் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளோம். 188 இந்து அறநெறிப் பாடசாலைகளையும் ஒரு கொள்கையின் கீழ் திட்டமிட்டு அபிவிருத்தி செய்வோம். ரம்பொடவிலுள்ள தொண்டமான் கலாசார நிலையத்தினை கவின்கலை நிறுவனமாக மாற்றி, நடனம், சங்கீதம், இசைக் கருவிகளுக்கான பாடநெறிகள் ஆரம்பிப்போம்.

தேசிய பாடசாலை என்பதில் நாம் உடன்பாடில்லை. தேசிய பாடசாலைகளை கொழும்பே நிர்வகிக்கின்றது. மாகாண அமைச்சு நிர்வகிக்க முடியாது. இன்று அதிகார பரவலாக்கலின் கீழ் தேசிய பாடசாலைகள் மாகாண பாடசாலைகளாக்கப்படவுள்ளன என்று தெரிவித்தார்.

வள்ளம் அனுப்பினேன்…… ஹெலி அனுப்பினேன்……. : ஈழமாறன்

Pirabakaran_Vஎங்கு பார்த்தாலும் ஒரு குடையின் கீழ் அணி திரளுங்கள். இரண்டு குடையின் கீழ் அணி திரளுங்கள் என்று ஒரே அவியல். ஐபிசியில என் ரி ஜெகன் அண்ணன் தொப்புள்கொடி அறுநாக்கொடி என்று அறுவை தாங்க முடியேல்ல. மூலைக்கு மூலை சங்கம். நாட்டுக்கு நாடு கோசம். பிரபாகரனைக் காப்பற்றுவதற்காக வன்னி மக்கள் என்ற முலாம் பூசிக் கொண்டு, சன்னி பிடித்தலையும் கூட்டத்தை பார்த்து சிரிப்பதற்கு கூட மனமில்லாத துயர் மனதை வாட்டுகிறது. (இடைக்காடர் கொஞ்ச நாள் குடை பிடித்தார். இடையிலை காடர் ஒட இப்ப புது கோஸ்ரி கிளம்பியிருக்கு)

தலைப்புக்கு வருவோம். றீடஸ் டஜஸ்ற் (Readers Digest) என்ற புத்தகத்தில் சில வருடங்களுக்கு முன் வாசித்த ஒரு சிரிப்பு பகுதி. ‘ஒரு நாட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. அந்த நாட்டு அரசு மக்களை பொது இடங்களில் கூடுமாறு பணிக்கிறது. அப்போதுதான் இலகுவாக பாதுகாப்பான இடங்களுக்கு மக்களை நகர்த்தலாம் என்பது திட்டம். மக்கள் அல்லோகலப் பட்டு பக்கத்தில் இருந்த பாடசாலைக்கு ஓட ஒரு யேசுவின் மீது அதீத அன்பு கொண்ட பக்தன் மட்டும் வீட்டில் இருந்து வெளியேற மறுத்து விடுகிறான். வெள்ளம் பெருக்கெடுக்கிறது. அந்தச் சமயம் ஒரு வள்ளம் வந்து ஏறிக் கொள் என்று கேட்க மறுத்து விடுகிறான் பக்தன். வெள்ளம் கூரையை மூடுகிறது. பக்தன் கூரைமேல் ஏறி நிற்கிறான். மீண்டும் ஒரு வள்ளம். மறுத்து விடுகிறான் பக்தன். உங்களுக்கு கடவுளில் நம்பிக்கை இல்லாவிட்டால் செல்லுங்கள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னைக் கடவுள் காப்பாற்றுவார். இப்போது வெள்ளம் கூரையையும் தாண்டி அவன் கழுத்துக்கு வருகிறது. அந்த வேளையில் ஒரு ஹெலி ஏணியை இறக்கி ஏறும்படி வற்புறுத்த மறுத்து விடுகிறான் பக்தன். பின் மரணம். கடவுளிடம் செல்லும் அவன் சாதாரண மக்கள் முன்னால் என் அன்பை கொச்சைப் படுத்தி என்னை ஏமாற்றி விட்டாயே ஆண்டவா. நான் மரணித்தது கூட கவலையில்லை நீ தக்க தருணத்தில் உதவி உன்னை நம்பியவர்களை காப்பாற்றியிருக்க வேண்டாமா என்று கேட்கிறான்.

அமைதியாக பொறுமையாக பதட்டமில்லாமல் இருக்கும் கடவுள் சொல்கிறார். “பக்தா இரண்டு வள்ளம் அனுப்பினேன். ஒரு தடவை ஹெலி கூட அனுப்பினேன். நீ எதிலுமே ஏற மறுத்து விட்டு தற்போது என்னைக் குறை சொல்வது என்ன நியாயம்.”’

ஏக பிரதிநிதித்துவம் என்ற பிசாசு பிடித்து தலைமைப் பதவி என்ற மாயக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு எதிரே நின்றவர்கள் எல்லாரையும் எதிரி என்று சுட்டுவிட்டு குடை, படை என்று ஒப்பாரி வைக்கிறீர்களே நீங்கள் எல்லோரும் புலம்பெயர்ந்த சில வால்கள் உட்பட தமிழர்களுக்குச் செய்த பாதகச் செயலுக்காக தார்மீகப் போராட்டத்தை தர்பார் சண்டித்தனமாக ஆக்கி விட்டு ஒரு குடையின் கீழ் வாருங்கள் என்று கூவுவதற்க்கு பதிலாக பெற்றோல் ஊத்தி மற்றவன் கொழுத்த நீங்கள் மறத் தமிழன் பட்டம் கொடுக்கிறதை விட்டுவிட்டு உங்களுக்கு நீங்களே பெற்றோல் ஊத்திக் கொழுத்தலாமே. லண்டனிலை பெற்றோல் ஸ்ரேசன் முழுக்க நம்மட ஆக்கள் தானே. இலவசமா வாங்கலாம்.

பிரபாகரன் என்ற தழிழீழ பக்கதனுக்கு அதனை அடைவதற்கு எத்தனையோ வள்ளங்கள் வந்து நின்றன. எத்தனையோ ஹெலிகள் வந்து நின்றன. அத்தனையிலும் ஏற மறுத்து விட்டு ஒரு குடையின் கீழ் அணிதிரளுங்கள் என்று கூச்சலிடுகிறீர்களே தமிழ் பேரவை என்ற போர்வையைப் போத்திக் கொண்டு சில புலத்து ‘மா’க்களே உங்களுக்கு என்ன தமிழன் கேணயன் என்ற நினைப்பா? புலம்பெயர் சூழலிலும் பிளேன் விளையாட்டுக் காட்டுகிறீர்களா?

சித்திரா அச்சகத்தில சுந்தரத்தில தொடங்கினியல். (அன்றைக்கு கூட இருந்தனியல் உதுகளைப் பற்றி ஏதும் சொல்லலாமே.) கள்ளக் காதலியிடம் தமிழீழ உணர்வு தலைக்கேறி ஒளித்து ஒளித்து செல்கையில் கைக்குண்டு வீசி காலை உடைத்து விட்டு 70க்கும் மேற்பட்ட சக அமைப்பு போராளிகளை ஒரு அறையினுள் பூட்டி வைத்து கொன்றபோது உங்கள் ஒரு குடையின் கம்பி உடைந்து போனது தெரியாதா புலத்து ‘மா’க்களே? மட்டக்களப்பில் இருந்து வந்து, பயிற்சி முடித்துவிட்டு தமிழீழக் கனவில் படுத்திருந்த ரெலோ போராளிகளை நாயைச் சுடுவது போல சுட்டு தெருத் தெருவா ரயர் போட்டு எரித்தீர்களே. அன்று சோடா உடைத்து கொடுத்து விட்டு, இன்று சொகுசா வெளி நாடுகளிலே வாழும் புலத்து ‘மா’க்களே அப்போது இரண்டாவது கம்பி உடைகிறதே என்று சொன்ன போது ஏக பிரதிநிதித்துவ பித்தம் தலைக்கேறி தலைகால் தெரியாமல் வென்ற யுத்தம் எல்லாம் வேலுப்பிள்ளையின் மகன் பிரபாகரன் செய்தது. தோத்ததெல்லாம் பால்ராஜ் செய்தது என்று கொண்டாடிவிட்டு இன்று எங்கிருந்து கொண்டு வந்தீர்கள் உங்கள் குடையை.

முள்ளிக் குளத்தில் முகாம் இட்டிருந்த புளட் இயக்கப் போராளிகளை சுற்றிவளைத்து சுட்டு விட்டு அறிக்கை விட்டபோது சிவாஸ்றீகல் அடித்து விட்டு சந்தோசப்பட்ட புலத்து ‘மா’க்களுக்கு திடீரென குடைபிடிக்கும் எண்ணம் வருவதற்கு காரணம் என்ன?

காத்தான் குடியில் பள்ளிவாசலில் ”அல்லா எங்களைக் காப்பாற்று” என்று கதறக் கதற கர்ப்பிணிப் பெண்கள் என்று கூடப் பார்க்காமல் வெட்டித் தள்ளிய போது உங்கள் குடையின் இன்னொரு கம்பி முறிந்து போனது. பின் அனுராதபுரத்தில் அப்பாவி மக்களைச் சுட்டபோது, 24 மணி நேரத்தில் முஸ்லிம் மக்களை விரட்டியடித்தபோது, பாடசாலை அதிபர்கள், புத்திஜீவிகள், சகபோராளிகள், பக்கத்து நாட்டுத் தலைவன் என்று உங்கள் ஏகத்தலைவன் ஏகப்பட்ட மக்களின் அவலங்களுக்கு, அழிவுக்கு காரணமாக இருந்தபோது மேதகு என்று பட்டம் சூட்டி பச்சை குத்தித் திரிந்த இந்தச் சில புலத்து ‘மா’க்கள் அமைதியாக இருந்து விட்டு இப்போது கொக்கரிக்கிறீகளே கொழுத்தினவனுக்கு விழா எடுக்கிறீர்களே இப்போது எங்கிருந்து வந்தது இந்த ஞானம்.

ஊரில் சொலவார்கள் ‘அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது’ என்று. அரசியலால் வென்றிருக்க வேண்டிய போராட்டத்தை வெறும் ஆயுத்ததால் வெல்லப்போன தம்பிக்கு அடிவிழும் போது வந்திருக்கின்ற இந்த ஞானம் வேடிக்கையான ஞானம். அண்ணைக்கு மரணப்பயம் என்பது இப்போதுதான் புரிகிறதோ. பொட்டன் வைத்த பொட்டுக்கெல்லாம் இப்போதுதான் ஞானம் பிறக்கிறதோ. மாத்தையா என்ற போராளியை குறைந்த பட்ச கவுரவம் கூட கொடுக்காமல் சுட்டுத் தள்ளிய திமிரில் கருணா அம்மானுக்கு ஆப்பு வைக்க போன போது புரியாத தெரியாத சர்வதேச சமூகம் திடீரென தெரிந்திருக்கென்றால் அண்ணைக்கு அடி கொஞ்சம் பலமோ. அழுகை அழுகையா வருதோ?

சீமானுக்கு காசு கொடுத்து நெடுமாறனுக்கு ஆஸ்பத்திரி கட்டிக்கொடுத்து தமிழக மக்களை தெருவுக்கு கொண்டுவந்து புதுக் குடியிருப்பையாவது காப்பாத்த வன்னி மக்கள் என்று முலாம் பூசி நீங்கள் காட்டும் பூச்சாண்டி புரியாமல் போக நாம் ஒன்றும் சாம் பிரதீபன் மாதிரி முகட்டைப் பார்த்துக் கொண்டு புலி வால்பிடிக்க தீபம் தொலைக்காட்சியில் கவிதை வாசிக்கும் நிஜத்தை மறந்த முட்டாள்கள் அல்ல.

ஏக பிரதிநிதித்துவம் என்றால் என்ன? ரெலோ தேவையில்லை. ஈபி தேவையில்லை. புளட் தேவையில்லை. முஸ்லிம்கள் தேவை இல்லை. இவ்வளவேன் எந்தப் புலத்து ‘மா’க்களும் தேவை இல்லை என்று புதுவை ரத்தின துரை எழுதின கவிதையில் வந்த நீங்கள் தேவையில்லை புலி மட்டும், புடுங்கும் என்பது தானே. அப்படி தனிச்சு நின்று புடுங்கப்போறம் என்று ஒரு லட்சம் மக்களைக் காவு கொடுத்த திட்டம் வகுப்பதில் கெட்டிக்காரன் வேலுப்பிள்ளையின் மகனிடம் போய் கேட்கலாமே ஏன் அண்ணை திட்டம் போட்டு சிங்கள ராணுவத்திற்கு பாடம் புகட்டாமல் புதுக் குடியிருப்பு வரை நீங்களே பாடம் கற்றுக் கொண்டு போறியள், இனி எப்பதான் அடிபடப் போறியள் என்று. முல்லைத்தீவு முகாம் விழுந்த போது தலைவர் நேரடி கண்காணிப்பு. ஜெயசிக்குறு ஓடியபோது தலைவர் தலைமையில் ஒப்பறேசன். இப்ப துண்டக் காணம் துணியக் காணம் என்று ஓடும் போது தலைவர் முதல்லேயே ஓடிவிட்டாரா. இல்லை என்றால் ஒரு திட்டத்தை போட்டிருக்கலாமே. 

குழந்தை பிறக்கிறபோது குறிப்பு எழுதுவார்கள். அப்போ ஊர் சாத்திரி சொல்வார். இவருக்கு தரையிலை கண்டம். தண்ணியிலை கண்டம் என்று. அதுபோல மாவிலாறு தண்ணியிலை கை வைக்கும் போது தெரிந்திருக்க வேண்டும் அண்ணைக்கு கண்டம் ஸ்ராட் பண்ணுதெண்டு. பால மோட்டையிலை அடி விழும் போது தலைவர் பொறுமையா இருந்தார். மல்லாவியிலை மரண அடி விழுந்த போது தலைவர் பொறுiமாய் இருந்தார். கிளிநொச்சி வரைக்கும் எத்தினை கதை விட்டீர்கள். உள்ளுக்கை விட்டு அடிப்பார் என்று உள்ளுரக் கனவு கண்டுகொண்டு மன்னாரில் மக்கள் செத்தபோது மட்டக்களப்பில் மக்கள் செத்தபோது வவுனியா வடக்குப் பிரதேச சண்டையில் மக்கள் செத்தபோது மூதூரில் மக்கள் செத்தபோது தாசீசியஸின் பாசையில் மக்கள் எல்லாம் மாடுகள் என்று பேசாமல் இருந்து விட்டு தலைவர் புதுக்குடியிருப்புக் காட்டுக்கை சூடுதின்ற யானைபோல சுழரும்போது வந்திருக்கும் உங்கள் ஞானத்தைப் புரிந்து கொள்ளாமல் போகுமளவுக்கு தமிழ் பேரவையில் வேலை செய்பவர்கள் அல்ல மக்கள். எமக்கு நிஜமும் தெரியும். புலியினால் ஏற்பட்ட வலியும் தெரியும். அதனால் ஏற்பட்ட வடுவும் தெரியும்.

அதால இலங்கை அரசாங்கத்தின்ர ஜில்மால் கோல்மால் தெரியேல்லை என்று நினைக்க வேண்டாம். அதுவும் தெரியும். தம்பி எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும் என்று ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறதும் தெரியும். அவைக்கு தனிவிருந்து இருக்கு. அது கிடக்கட்டு இப்ப.

ஜ.நா வுக்கு சொல்லச் சொல்லிறியள். சொல்கெயிமிட்ட சொல்லச் சொல்லிறியள். கருணாநிதியிட்டை சொல்லச் சொல்லிறியள். ஒபாமாவுக்கு கடிதம் போடச் சொல்லிறியள். (ஒபாமா என்ன ஆனந்தசங்கரி என்ற நினைப்பா) பிறவுணுக்கு மனு அனுப்பச் சொல்லிறியள். இது எல்லாத்திற்க்கும் காரணம் வன்னி மக்களைக் காப்பாற்றுவதுதான் என்றால் அண்ணைக்கு ஒரு கடிதம் போட்டிருந்தால்  எல்லாம் முடிந்திருக்குமே. அடைச்சி வைச்சிருக்கிறது அண்ணை. அதுக்குள்ள உள்ள சனத்துக்கு நீங்களும் செல் அடிக்கிறியல். தப்பிப் போற சனத்தையும் சுடுறியல். பிறகு  ஜ.நா வுக்கு மனுக்குடுக்கிறயல்? என்ன எங்களை வைச்சு நீங்கள் காமெடி கீமெடி ஏதும் பண்ணலையே?

முதல் வள்ளம் திம்புப் பேச்சு வார்த்தையில் வந்து நின்றது. பிரபாகரன் ஏறிக்கொள்ளவில்லை. வெள்ளமும் அவ்வளவாக இருக்கவில்லை. மன்னித்து விடலாம். பின்னர் வந்தது இலங்கை இந்திய ஒப்பந்த வள்ளம். இந்த வள்ளத்தைப் பிடிச்சு சாதுரியமாக அரசியல் செய்திருந்தால் ஒரு கரை சேருறதுக்கு வாய்ப்பு இருந்தது. இலங்கை வந்திருக்கும் இந்திய இராணுவத்தோடு ஒத்துழைத்திருந்தால் ஜேவிபி போன்ற இனவாத கட்சிகள் தெற்கில் தலையெடுத்து விரிவடையும் போது தவிர்க்க முடியாதபடி தமிழ் மக்களுக்கு உதவிசெய்து நிரந்தர தீர்வுக்கு இட்டுச் செல்லக் கூடிய அரசியல் சூழலை உருவாக்கியிருக்கலாம்.

அல்லது குமரப்பா புலேந்திரன் உட்பட 11 பேரையும் கொழும்பு கொண்டு செல்ல விட்டிருந்தால் இலங்கை அரசின் ஒப்பந்த முறிப்பைச் சாதகமாக்கி இந்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கலாம். துப்பாக்கியையும், குண்டுகளையும், பொட்டனையும் நம்பும் ஒரு இராஜதந்திர தூரநோக்கற்ற பிரபாகரனிடம் முடிவுகளை ஒப்படைத்துவிட்டு; சோட வாங்கிக் கொடுப்பதிலும், மஞ்சள் சேலையை கட்டிக் கொண்டு, அவற்றை உருவப் படத்தையும் தூக்கிக் கொண்டு, ஊர்வலம் போனால் தமிழீழம் கிடைக்கும் என்று உந்த TNA காரரும், சில கேணைக் கூத்தர்களும் மேடையில் கத்த கடும் குளிரில் நின்று நீங்கள் விசிலடித்ததும் மேளம் அடித்து நடனம் ஆடியதும் வன்னி மக்கள் மீதான கருணையின் நிமித்தம் அல்ல என்பதை புரிந்து கொள்ள நாமும் முகட்டைப் பார்த்துக் கொண்டு கவிதை வாசிக்க வேண்டிய தேவை இல்லை.

கடைசியா மாவீரர் உரை வாசிக்கும் போது தெரியும். இனித் தலைவர் நாயோட்டமும் சில்லறைப் பாச்சலும் தான் என்று. தமிழ்நாட்டில் அணுவாயுத சாலையை வைத்திருக்கும் இந்தியாவுக்கு பக்கத்தில் இருந்து கொண்டு பத்து றாத்தல் குண்டு போடுற மருந்தடிக்கிற பிளேனைக் கொண்டு வந்து என்ன விளையாட்டு. இதுவரைக்கும் விமானம் வைத்து கெரிலா அமைப்புக்கள் போராடாது இருக்கும் போது நாம் செய்தால் உலக வல்லரசுகள் பயப்பிடுமே. இந்தியாவுக்கு கவலை வருமே. இதுக்காகவே பூண்டோடை ஒளிச்சு கைலாயம் அனுப்பிடுவாங்களே என்று கூட யோசிக்காமல் கொண்டைக்கிளாறன் குருவி சைசிலை இரண்டு பிளேன். பத்திறாத்தல் குண்டு. இப்ப படுத்து உறங்க பத்து ஏக்கர் காணி கூட இல்லாத நிலை. ரெண்டு பிளேனையும் ஆமிக்காறன் பிடிச்சிட்டாலும் என்று 14 வயசில இருந்து வளர்த்தெடுத்த பெடியளை குண்டைக் கட்டி அனுப்பிறரே வேலுப்பிள்ளையின் மகன் இதென்ன சூதாட்டமா விட்டுப் பார்க்க. தமிழ் மக்களின் தலைவிதியை தனித்துத் தீர்மானிக்கிறோம் என்று சொல்லிவிட்டு குருட்டுத்தனமா விளையாட்டுக் காட்டினால் என்ன நடக்கும் என்று சிந்தித்து இருக்க வேண்டாமா?

அடுத்து வந்த வள்ளம் சந்திரிகா கப்டன்யாய் இருந்து செலுத்தி வந்த வள்ளம். இயலாமல் போகும் போது யுத்த நிறுத்தம் அறிவிப்பதும் அதனை சாக்காக வைத்து புலத்து மக்களிடம் காலிறுதி அரையிறுதி இனி கடைசியிலும் கடைசி என்று ஏதோ கால்பந்து உலகக்கிண்ண விளையாட்டு மாதிரி திகதி குறித்து புரட்ச்சி செய்யப் புறப்பட்ட புலிகளுக்கு வக்காலத்து வாங்கிய பேரவை போன்ற ஏதிலிகள் அன்று தட்டிக் கேட்காமல் இன்று ஒப்பாரி வைத்தால் என்ன செய்வது.

காலம்சென்ற மதிகெட்ட உரைஞ்சர் என்ன சொன்னார் என்று உந்தப் புலத்து ‘மா’க்கள் எல்லாம் மாவீரர் நிகழ்வில் கைதட்டி விசிலடிச்சவை. சந்திரிகாவை தான் வைச்சிருக்கிறதோ தலைவர் வைச்சிருக்கிறதோ என்று சின்ன இழுபறியாம். அந்தாள் அறளைபேந்து ஏதோ உளற இங்க உள்ள விசலடிச்சான் குஞ்சுகள் பட்டபாடு. அது ஏதோ மிசன் ஸ்ரேட்மன் மாதிரியெல்லோ உந்த புலத்து ‘மா’க்கள் துள்ளினவை.

அன்றைக்கு கூட்டணிகாரர் உசுப்பேத்திவிட நீங்களும் தமிழீழம் கேட்டியல். சரி ஆர்வக்கோளாறு நாங்களும் உங்களுக்கு பின்னால வந்தம். ஆனால் கூட்டணிகாரர் எல்லாம் சுத்துறான்கள் என்று சொல்லி கதைக்க வாறம் என்று போட்டு போட்டும் தள்ளிப் போட்டியள்.

ஆனால் சந்திரிகா ஆட்சிக்கு வருகிற போது நிலைமைகள் மாறியிருந்தனவே. அதற்கு ஏற்றால் போல் ஒரு தீர்வை நோக்கி புலிகளும் மாறியிருக்க வேண்டும் அல்லவா? அரசியல் சாணக்கியம் என்பதும் அதுதானே. ஆனா என்ன செஞ்சியல். நீலனை போட்டத் தள்ளினியல். சர்வதேசமே அறிஞ்ச ஒரு ஒரு அரசியல் சட்ட வல்லுனர். அந்தாள் வைச்ச தீர்வு உங்களுக்கு விளங்கேல்லை எண்டா என்ன போட்டுத் தள்ளுறதே.

அது என்ன இயக்கத்தில் ஒருத்தரும் பொம்பிளையளை பார்க்கக் கூடாது. தொட்டும் பாக்கக் கூடாது என்று சட்டம் போடுறியள். தொட்டதுக்காக சுட்டும் போடுறியள். ஆனா உண்ணாவிரதம் இருந்த பெட்டையளைத் தூக்கிக்கொண்டு போறியள்.  மதியை வாட்டசாட்டமா கண்டவுடனை மெதுவா தொட்டும் பாக்கிறியள். மஞ்சள் தண்ணி வேறை ஊத்துறியளாம். பிள்ளையும் பெறுறியள். அதை பிழையென்று நான் சொல்ல வரேல்ல. ஆனா ஒழுக்க விதி என்ற பெயரிலேயே உமாவையும் சுட்டியள். கூட இருந்தவனை சுட்டியள். பிறகு மாற்றத்தின் தேவையை தலைவருக்கு சதி வரும் போது உணர்ந்தீர்கள் தானே.  கால மாற்றத்தைக் கண்டு ஒழுக்க விதியையும் மாத்தினீர்கள் தானே. அதுதானே ஒரு போராட்ட அமைப்புக்கு தேவையான கொள்கையும் கூட. அதே போல சந்திரிகா தலைமையில் வந்த வள்ளத்தில் ஏறியிருந்திருக்க அல்லவா வேண்டும். இது என்ன உங்கள் குடும்பச் சொத்தா? 60000 மக்கள் பலியாகியிருந்த அந்தச் சந்தர்ப்பத்தில் இந்த வள்ளம் வன்னிக் கடலில் நின்றபோது ஏறமறுத்து தமிழ் மக்களின் தலைவிதியை நாசமறுத்து போட்டு ஜ.நா வுக்கு கடிதம் போட்டால் உது என்ன விளையாட்டு.

ரெலோ எதிரி. ஈபி எதிரி. மகிந்த எதிரி. இந்தியா எதிரி. அமெரிக்கா எதிரி. ஜரோப்பா எதிரி. முஸ்லிம்கள் எதிரி. கருணா, பிள்ளையான் எதிரி. புளட் எதிரி. புளியம் பொக்கணை பொன்னம்மாக்கா மகளை அனுப்ப மறுத்ததாலை அவவும் எதிரி. சரி அதை விடுவம். தமிழ் பேரவையையும் தீபம் தொலைக்காட்சி சாமும் மனிசியும் தவிர புலிகளுக்கு யார் நண்பர்கள். யாராவது ஒரு நாடு. ஒரு கட்சி (TNA) ஜோக் அடிக்கக் கூடாது நான் சீரியசா கேக்கிறன். ஒரு சங்கம். ஏன் நீர் மாடுகள் மாதிரி சாய்த்துக் கொண்டுபோய் சுத்திவர விட்டு விட்டு நடுவிலே நின்று உயிர்ப்பிச்சை கேட்கும் வன்னி மக்களில் குறைந்தது 3 பேராவது ஆதரவளித்தால் தமிழீழம் சாத்தியம் என்று நம்பலாம். அதில் எதுவுமே சாத்தியமில்லாமல் பொட்டனையும் நடேசனையும் தவிர இயக்கத்தில் இருந்த அத்தனை திறமை சாலிகளையும் எதிரியாக்கி போட்டு 40 கி.மீ.பரப்பளவுக்குள் ஓடி ஒழிந்து கொண்டு சர்வதேச சமூகம் கண்ணைத் திறக்க வேண்டும் என்று அறிக்கை விட்டால் இது என்னப்பா விளையாட்டு. அரசியல் ஒரு விளையாட்டு அரங்கு என்று இதற்க்குத்தான் சொன்னார்களோ?

ஜயா சர்வதேசத்துக்குள் தான் இந்தியா இருக்கு. இந்தியாவிலை வைச்சு ராஜீவை போட்டியள். சர்வதேசத்துக்குள் தான் பிரான்ஸ் இருக்கு. அங்கு வைத்துத்தான் சபாலிங்கத்தைப் போட்டியள். ஏன் உங்கட நாதனை கஜனைப் போட்டியள். சர்வதேசத்துக்குள் தான் இங்கிலாந்து இருக்கு. இந்த நாட்டுப் பிரசை அதுவும் உங்களுக்கு வாலாட்டிக் கொண்டிருந்த ஒரு அபிமானி பார் என்றால் பளார் என்று அறைந்துவிடும் அளவுக்கு அபிமானி. இந்த பிரித்தானிய பிரைசையைக் கூப்பிட்டு வெளிநாட்டுக் கோவணத்தையும் அவிட்டுப் போட்டு எலியை விட்டா? (இந்த ‘கோவணம்’ அண்ணன் ‘ராசாகரனின்ட மார்க்ஸிச டிக்சனரியில’ இருந்து சுட்டது. அவருக்கு எனது நன்றிகள் உரித்தாகட்டும்.) இது என்ன அம்மண விளையாட்டு. இது ஏதும் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய தமிழர்களின் வீர விளையாட்டுகளில் இதுவும் ஒன்றோ?

சர்வதேசத்திற்குள் தான் கனடா இருக்கு. அங்கை பத்திரிகை ஆசிரியர்களை அடிச்சியள். இப்படி சர்வதேசம் முழுக்க நாசம் பண்ணிப்போட்டு. இப்ப உங்கட கோவணத்தையும் மகிந்த பிறதேர்ஸ் புடுங்கப் போறாங்கள் என்ற உடன ஒபாமாவுக்கு கடிதம் போடுங்கோ. இன்ரநஷனல் கொம்மியூனிற்றை சொல்லுங்கோ எண்டா. எங்கை நீங்கள் அநியாயம் பண்ணாது விட்டீர்கள் நாம் அங்கு சென்று முறையிட. அதென்ன ஜெயதேவனின்ர கோவணத்தைக் கழற்றும் போது ஒருவருக்கும் நீங்கள் கடிதம் போடச் சொல்லேலை. பிரபாகரன்ரை கோவணம் பறிபோகும் போது மட்டும் துள்ளினா இது என்னப்பா நியாயம். வேணும் என்றால் சாம் பிரதீபனிடம் சொல்லி அண்ணையின் கோவணம் என்ற தலைப்பில் ஒரு போன் இன் (Phone in) புறோக்கிறாம் வைக்கச் சொல்லுங்கோ. சந்தா கட்டின ஆக்களை பைத்தியக்காரர் என்று நினைக்கும் தீபம் நிருவாகம் நிச்சயம் அனுமதிக்கும் என்று நினைக்கிறேன். என்னடா GTV, IBC பற்றி வாயே திறக்கிறான் இல்லை என்று யோசிக்க வேண்டாம். அதுதான் திறந்தாலே தெரியுமே.

சரி எல்லா வள்ளத்தயும் விடுவோம். கடைசியாக வந்தது நோர்வேயிலிருந்து ஹெலி. தமிழர்களின் போராட்ட வரலாறில் கவுரவமாக ஒரு தீர்வை அடைவதற்கான கடைசி வழி. இரணைமடுக் குளத்திலை ஏறுறியள். மாலை தீவிலை இறங்கிறியள். தாய்லாந்து போறியள். சரக்கு வேறை பாக்கிறியள். சமஜ்டி முறையிலான ஒரு தீர்வுக்கு கையொப்பம் இட்டு விட்டு நாடு திரும்பின கருணாவை நாட்டை விற்று விட்டு வந்துவிட்டான் என்று நையாண்டி பண்ணிவிட்டு கவுரவமான ஒரு தீர்வுக்கு கிடைத்த ஹெலியை தவறவிட்ட வரலாற்றில் தமிழினம் என்றும் மன்னிக்க முடியாத  தவறை இழைத்திருக்கிறார் பிரபாகரன்.

நீங்கள் காலில் விழுந்து கதறியழுது, செஞ்சிக் கூத்தாடி, பிச்கைச கேட்டு கடிதப் போட்டு, மண்டியிட்டு, தமிழினம் வரலாற்றில் காணாதா அவமானங்களையும், இழிவுகளையும் சந்திக்க வைத்து, இன்று புதுக்குடியிருப்பு காட்டுக்குள் புடையன் பாம்புகள் போல வெடிபட்ட கரடிகள் போல வெந்து துடிக்கிறீர்களே ஒரு வேளை பிரபாகரனும் பொட்டனும் சக பாடிகளும் இந்த இறுதி அழிவிலருந்து தப்பித்துக் கொண்டாலும் தமிழினத்தின் மரியாதை கௌரவம் நியாயமான தீர்வு என்று அத்தனையையும் குழி தோண்டிப் புதைத்ததற்காக வரலாறு உங்கள் மீது காறி உமிழும் என்பதை மறந்து விடவேண்டாம்.

எத்தனை வள்ளம் வந்தது. எத்தனை ஹெலி வந்தது. எத்தனை தடவை எங்கள் மக்கள் கவுரவமாக வாழக் கூடிய சந்தர்ப்பம் வந்தது. அத்தனையையும் போட்டு நொருக்கி விட்டு ‘உள்ளே விட்டு அடிப்பார்’ என்ற கனவில் இருந்த புலத்து ‘மா’க்களிடம் கேட்பது இதுதான். காப்பாற்றப்பட வேண்டியது வன்னி மக்களும் அவர்களது வாழ்வும். அது உங்கள் உள்ளங்களை உறுத்தினால் ஊர்வலம் செல்லுங்கள். வன்னி மக்களை விடுவிக்கும்படி. உண்ணாவிரதம் இருங்கள். உயிர்களைக் காப்பாற்றும் படி. எண்ணை ஊற்றி உங்களை நீங்களே கொழுத்துங்கள். பிரபாகரனே உனது முட்டாள் தனத்திற்கு ஒரு எல்லை இருக்கு. போதும் பிளளைகளைக் கூட்டிக்கொண்டு எங்காவது தொலைந்து விடும்படி. தமிழர்கள் இனி தங்கள் தலைவிதியை ஏகப்பட்ட பிரதிநிதிகளிடம் கொடுத்து நிர்ணயித்துக் கொள்ளட்டும்.

தேர்தல் அறிவிப்புடன் புது வேகத்தில் நகரும் ஈழ ஆதரவுப் போராட்டங்கள் : தினக்குரல்

vaiko-black-flag.jpgஈழத்தில் தொடரும் தமிழினப் படுகொலையை கண்டித்தும் யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தியும் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் “புயலில்’ சிக்கி தொய்வு ஏற்பட்டு விடுமோ என்று தமிழுணர்வாளர்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சத்துக்கு மாறாக போராட்டங்கள் புதுவடிவம் பெற்று முழுவீச்சில் வீறுகொண்டுள்ளதுடன் நடக்கப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை அரசியல் ஆக்குவோம் என்று தேசிய, மாநில அரசியல் கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியிருப்பது மக்களைச் சிந்திக்க வைத்துள்ளது.

கடந்த வாரம் “தமிழீழ விடுதலை ஆதரவு கூட்டமைப்பின்’ சார்பில் இருபத்து ஐந்து அமைப்புகள் சென்னையிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் முன்பாக “தூதரகத்தை இழுத்து மூடும்’ போராட்டத்தை ஒருபுறம் நடத்த, மறுபுறம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக ஐம்பது கிலோ மீற்றர் தூர “நாம் தமிழர் நடைப்பயணம்’ அறுநூறு குழுக்களாக மாவட்டம் தோறும் பிரிந்து செயல்பட மாநிலக் கல்லூரி மாணவர்கள் சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்தி சிறை நிரப்பியுள்ளனர்! இத்தனைக்கும் நடுவே, அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா திடீரென அறிவித்திருக்கும் ஈழத் தமிழருக்கான உண்ணாவிரதப் போராட்டம் சிகரம் வைப்பதுபோல் அமைந்துவிட்டது.

தமிழகத்தில் தலைதூக்கியுள்ள மும்முனைப் போராட்டங்களில் மக்கள் இன்று திக்குமுக்காடிக் கொண்டிருக்கின்றனர். ஒருபக்கம் வழக்கறிஞர்கள், பொலிஸார் மோதல் விவகாரம்; மறுபக்கம் நாடாளுமன்றத் தேர்தலின் எதிரொலி. நடுவே இருபக்கங்களையும் இணைக்கும் ஈழத் தமிழருக்கான ஆதரவுப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள்!

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த மாதம் 19ஆம் திகதி வழக்கறிஞர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே மூண்ட பயங்கரமோதலைத் தொடர்ந்து இருசாராருக்கும் ஆதரவாக அங்குமிங்கும் உண்ணாவிரதப் போராட்டங்களும் கறுப்புக்கொடி ஏந்திய ஆர்ப்பாட்டங்களும் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் நிலையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களைப் புறக்கணித்து வருகின்றனர். சில மாவட்டங்களில் நீதிமன்ற உள்ளிருப்பு போராட்டம் நடக்கிறது. விழுப்புரம் நீதிமன்றத்தில் கடந்த வாரம், வழக்காட முயற்சித்த தி.மு.கழக ஆதரவு வழக்கறிஞர்களுக்கும் நீதிமன்றப் புறக்கணிப்பு செத அ.தி.மு.கழக ஆதரவு வழக்கறிஞர்களுக்குமிடையில் மூண்ட மோதல், பின்னர் திண்டிவனம் நீதிமன்றத்திலும் தொடர்ந்து வன்செயலில் முடிந்தது. தி.மு.கழக வழக்கறிஞர்கள் ஜெயலலிதா உருவ பொம்மையையும் அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் கலைஞர் கருணாநிதி உருவ பொம்மையையும் எரிக்கமுயன்று தடுக்கப்படவே இவர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் பதாகைகளை தீயிட்டுக் கொளுத்தினர்.

சென்னையில் ஐநூறுக்கும் அதிகமான வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். சில மாவட்ட தலைநகரங்களில் வாயில் கறுப்புத் துணி கட்டி வழக்கறிஞர்கள் மௌன ஊர்வலம் நடத்தினார்கள். சென்னை உயர் நீதிமன்ற மோதல் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா, (டில்லி) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனிடம் அறிக்கை தாக்கல் செதிருந்த போதிலும் இதனை எழுதிக் கொண்டிருக்கும் வரை மேற்படி அறிக்கை மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. ஆனாலும், மோதலுக்கு காரணமான பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்கும்வரை நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் தொடரும் என்றும் அந்த நடவடிக்கையும் வெறும் இடமாற்றம் என்றில்லாமல் இடைநீக்கம் ஒன்று இருக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

பொலிஸ் வழக்கறிஞர்கள் மோதல் பின்னர் வழக்கறிஞர்களுக்கிடையே மோதலாக மாறி, இப்பொழுது கட்சி ஆதரவு வழக்கறிஞர்கள் மோதலாக முடிந்திருக்கிறது. இவர்கள் மோதலினால் நீதிமன்றங்களே இயங்கமுடியாதிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல் நிலைமை

கட்சியைக் கட்டிக் காப்பதிலும் கூட்டணி உருவாக்குவதிலும் கடந்தவாரம் முழுவதும் கணக்குப் பார்த்த அரசியல் தலைவர்கள், நாளை முதல் தங்கள் பலத்தை வெளிப்படையாகக் காட்டத் தொடங்குவார்கள். இன்றைய நிலையில் காங்கிரஸ் தி.மு.க.கூட்டணி என்றும் பாரதிய ஜனதா கூட்டணி என்றும் இடதுசாரிக் கட்சிகள் தலைமையில் எட்டுக் கட்சிகள் அங்கம் வகிக்கும் மூன்றாவது அணி என்றும் மூன்று முக்கிய அணிகள் தேர்தல் களத்தில் குதித்துள்ளன. எதிர்வரும் பன்னிரண்டாம் திகதி உதயமாகும் மூன்றாவது அணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிய கம்யூனிஸ்ட், பார்வார்ட் புளக், புரட்சிகர சோஷலிஸ்ட், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிரியசமிதி, மதசார்பற்ற ஜனதாதளம் அ.தி.மு.க. காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்து, அழைப்பு புறக்கணிக்கப்பட்ட நிலையில் “நான் விடுத்தது அழைப்பல்ல, வெறும் ஆலோசனை’ என்று ஜெயலலிதா இப்பொழுது விளக்கம் அளித்திருப்பதன் மூலம் மூன்றாம் அணியில் அ.தி.மு.கழகம் இணைவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தே.மு.தி.க.தலைவர் நடிகர் விஜயகாந்த் தனது நிலைபற்றி வாதிறக்காவிட்டாலும் அவருக்கு காங்கிரஸ் தி.மு.க.கூட்டணியில் ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டதாக டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், இக்கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் ஒரு இடம் கிடைத்திருப்பதாக தகவல். தொல்.திருமாவளவனுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும் அ.தி.மு.க. கூட்டணியில் வைகோ இருப்பதையும் உரத்தகுரலில் புலி ஆதரவு எழுப்பியும் “அம்மா’ கண்டுகொள்ளாமல் இருப்பதையும் காரணம் காட்டி வெற்றி ஒன்று மட்டும்தான் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று “டில்லி அம்மா’ கூறி வாயை அடைத்துவிட்டாராம். “நான் தி.மு.க. கூட்டணிக்காரன். காங்கிரஸ் கூட்டணியில் நான் இல்லை’ இது திருமா மந்திரம். இதுமட்டுமல்ல, “ஈழத்தமிழன் தமிழினம் இதுதான் எனது குறிக்கோள். இலட்சியம். தேர்தல், பதவி எல்லாம் இரண்டாம் பட்சம்தான்!’ என்று அடிக்கடி கூறுகிறார் தொல்.திருமாவளவன்.

தேர்தலில் குதிக்கும் சமத்துவ கட்சித் தலைவர் சரத்குமார் தனித்துப் போட்டியிட தயாரில்லை. ஏதாவது ஒரு அணியின் பச்சை விளக்கை எதிர்பார்த்திருக்கிறார்.

ஈழத் தமிழர் ஆதரவு

நாடாளுமன்றத் தேர்தலினால், பிரசாரத்தினால்,ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்களில் தொவு ஏற்பட்டுவிடுமோ என்று தமிழ் உணர்வாளர்கள் அச்சப்பட அவசியமில்லாத அளவுக்கு உணர்வுத் தீ எரிந்து கொண்டே இருக்கிறது. கல்லூரிகள் முழு அளவில் திறக்கப்படாதபோதிலும் மாணவர்களின் பங்களிப்பு நீடிக்கிறது. பல்வேறு போராட்டங்களை அவர்கள் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். கட்சிகள் தரப்பில் மட்டுமன்றி தமிழ் அமைப்புகள் கூட மாவட்டங்கள் தோறும் ஆர்ப்பாட்டங்கள் நடத்திவருகின்றன.

கடந்த திங்கட்கிழமை இருபத்து ஐந்து தமிழ் அமைப்புகள் ஒன்றுகூடி, சென்னையிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தை இழுத்து மூடக்கோரும் போராட்டத்தை நடத்தின. “தமிழ் மக்களே அணிதிரள்வோம்’ “ஈழத்து இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்துவோம்’ என்று முழக்கமிட்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர். தமிழீழ விடுதலை ஆதரவுக் கூட்டமைப்பு ஆதரவில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சுமார் முந்நூறு பேர் கைதாகி விடுதலை செயப்பட்டனர். ஈழத் தமிழின விடுதலைக்கும் ஆதரவுக்கும் உரமேற்றும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளின் மாணவர்களைக் கொண்டு “தமிழ் மாணவர் பேரவை’ என்ற வலுவான அமைப்பையும் அழிவிலிருந்து இனத்தையும் மொழியையும் காப்பாற்ற அரசியல் கடந்து பணியாற்ற “தமிழ் இளைஞர் பேரவை’யும் தொடக்க விழா சென்னையில் கடந்த வாரம் நடைபெற்றது. தொல். திருமாவளவன், கவிஞர் காசி ஆனந்தன், பாவாணன், இயக்குநர் மணிவண்ணன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால்.கனகராஜ், வணிகர்சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன், தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவர் அன்பழகனார், மு.பாலகுரு, பேராசிரியர் அறிவரசு உட்பட பலர் எழுச்சி உரை நிகழ்த்தினார்கள்.

கட்சி சார்பற்ற தமிழ் இன உணர்வாளர்களை ஒன்றுசேர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டுவரும் இயக்குநர் விஜ டி.ராஜேந்தர், “”தமிழ் இன பாதுகாப்பு முன்னணி’ எனும் அமைப்பை ஆரம்பித்து ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். தமிழினப் படுகொலையை சர்வதேச மட்டத்தில் கொண்டுவர எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார்.

இனப்படுகொலையைக் கண்டித்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தொடர்ச்சியாக கண்டனக் கூட்டங்களையும் ஐ.நா.வுக்கான மனுவில் இரண்டு கோடி கையெழுத்து வேட்டையும் நடத்திவரும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்திவருகிறது.

வழக்கறிஞர்கள் பொலிஸ் மோதல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் களைகட்டியபோதிலும் ஈழத் தமிழருக்கு ஏற்பட்ட கொடுமைக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கும் போராட்டங்கள் எதுவுமே வலுவிளக்கவில்லை. மாறாக கொளுந்து விட்டெரிந்து தேர்தல் முடிவுகளையே மாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. தமிழக மக்களை பெரிதும் பாதித்துவிட்ட ஈழத் தமிழர் பிரச்சினை எதிர்வரும் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரதிய ஜனதாக் கட்சி இதற்கு உடனடியாகவே பச்சை விளக்கு காட்டிவிட்டது!

பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை இனப் படுகொலையைத் தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதை முன்வைத்து பா.ஜ.கட்சி பிரசாரம் செயும் என்று பா.ஜ.க. தமிழ் மாநிலத் தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “இலங்கை இனச் சிக்கலில் தமிழர்களுக்கு மத்திய அரசு இரண்டகம் செய்துவிட்டது. பொறுப்பும் கடமையும் இருந்தும் செய்ய வேண்டியதை செய்யாமல் செய்யக்கூடாததை இந்திய மத்திய அரசு செய்திருக்கிறது.

தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்தவோ போர் நிறுத்தத்தை ஏற்படுத்தவோ நடவடிக்கை எடுக்கவில்லை. விடுதலைப் புலிகளை ஒழிக்கின்றோம் என்ற பெயரில் அங்கு அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். நாகர் கோவிலில் அத்வானியால் தொடங்கிவைக்கப்படும் பா.ஜ.கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் இலங்கை இனப்பிரச்சினையே முக்கிய சிக்கலாக முன்நிறுத்தப்படும். மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கட்சி வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் இலங்கை இனப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணப்படும்’ என்று இல.கணேசன் சூளுரைத்தார்.

இதே கருத்தை இயக்குநர் தங்கர் பச்சானும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்ட சீமானைப் பார்த்துவிட்டுவந்த தங்கர்பச்சான் செதியாளர்களிடம், “தமிழர் அணி எனும் பெயரில் ஒரு புதிய அமைப்பு உருவாக வேண்டும். இளைஞர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட தமிழ் உணர்வுமிக்க அனைவரும் கட்சியே தங்களைத் துறந்து இதில் திரள வேண்டும். இந்த அமைப்பின் அரங்கேற்றமாக இயக்குநர் சீமான் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

இயக்குநர் மணிவண்ணன் தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு இலங்கை போர்நிறுத்தத்தை வலியுறுத்தியும் அங்கு தமிழினத்தை அழிவிலிருந்து காப்பாற்றுமாறும் குரல் கொடுத்து வருகின்றார். தமிழக சஞ்சிகை ஒன்றுக்கு மணிவண்ணன் அளித்த சிறப்புப் பேட்டியில் அவர் போட்ட “கணக்கு’ இது.

இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாது என்று அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகிறார். ஆனால், இலங்கையில் சார்க் மாநாடு நடந்தபோது பிரணாப் முகர்ஜி அங்கு போகவில்லை. ரணிலும் சந்திரிகாவும் டில்லி வந்து பிரணாப் முகர்ஜியை சந்தித்துள்ளனர். விடுதலைப் புலிகள் வசம் இரண்டரை லட்சம் தமிழர் சிக்கியிருப்பதாக சிங்கள அரசு சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்தது. ஆனால், இப்போது வெறும் 75,000 தமிழர்கள் மட்டுமே இருப்பதாக அதே அரசு அறிவித்துள்ளது. இதே எண்ணிக்கையைத்தான் ரணிலும் சந்திரிகாவும் இப்போது சொல்கிறார்கள். பிரணாப் முகர்ஜியும் 75,000 தமிழர்கள்தான் உயிருடன் இருக்கிறார்கள் என்று உறுதிப்படுத்துகின்றார். அப்படியானால் இரண்டரை லட்சம் தமிழர்களின் எண்ணிக்கை 75,000 ஆக மாறியது எப்படி? மீதமுள்ளவர்கள் எங்கே போனார்கள்? இரண்டரை லட்சம் தமிழர்களை 75,000 ஆகக் குறைக்க சிங்கள அரசுடன் அந்நாட்டு எதிர்க்கட்சிகளும் சதித்திட்டம் தீட்டியிருக்கின்றன. அதையொட்டித்தான் முன்கூட்டியே தமிழர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுகிறார்கள். இந்த நிலையில் இலங்கைத் தமிழர் இனப்படுகொலையை மறைத்து அல்லது ஈழத் தமிழருக்கான வெளிப்படை ஆதரவைக் குறைத்து மதிப்பிடும் அரசியல் கட்சிகள் நிச்சயம் அதன் பலனை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது அரசியல் அவதானிகள் கருத்து.

தமிழகத்திலிருந்து கே.ஜி.மகாதேவா

நன்றி: தினக்குரல் 08.03.2009

சிலாபம், பள்ளமயில் கோர விபத்து; ஐவர் பலி; பத்துப் பேர் படுகாயம்

van-accidents-images.jpgசிலாபம், பள்ளம, மண்டலான பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட ஐவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். இவர்களில் இருவர் சிறுவர்கள் என்று சிலாபம் தள வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இச் சம்பவத்தில் பத்துப் பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் கூறின.

இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ள ஐவரும் நீர்கொழும்பு பெரியமுல்லையைச் சேர்ந்தவர்கள் என்றும், இச் சம்பவத்தில் பெரியமுல்லையைச் சேர்ந்த எட்டுப்பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் எனவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டன. இச்சம்பவத்தில் ட்ரக் வண்டியின் சாரதியும், நடத்துனரும் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வட்டாரங்கள் கூறின.

இச் சம்பவத்தில் உயிரிழந்த முஹம்மத் ஈஸான் (வயது 38), பாத்திமா நஸ்மியா (வயது 28), முஹம்மத் அல்தாப் (வயது இரு வருடங்களும் ஆறு மாதங்களும்) பாத்திமா அன்ஜிலா (வயது ஏழு மாதங்கள்) ஆகியோரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்ட பெரியமுல்லை வாசியொருவர் பாத்திமா பாத்திலா (வயது 50) இவர்களது அயல் வீட்டவர் என்றும் கூறினார். ஆனமடுவ, சங்கட்டிகுளத்தில் திருமண வைபவமொன்றுக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த பெரியமுல்லைவாசிகள் பயணம் செய்த வானும், ட்ரக் வண்டியுமே நேற்று மாலை 5.15 மணியளவில் மோதுண்டு இவ்விபத்து ஏற்பட்டதாக பள்ளம பொலிஸார் கூறினர்.