March

March

திருமலை சிறுமியின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் வரதராஜா ஜனார்த்தனன் சயனைட் அருந்தி தற்கொலை

Regie_Varsaஜூட் ரெஜி வர்ஷா (வயது 6 ) என்ற சிறுமியை கடத்தி பின்னர் படுகொலை செய்த சம்பவம் தொடர்புடைய சந்தேக நபரொருவர் இன்று சயனைட் அருந்தி தற்கொலை செய்துள்ளார். ஜனா எனப்படும் வரதராஜா ஜனார்த்தனன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் என பொலிஸ் தகவல்கள் மூலம் தெரியவருகின்றது.

உப்புவெளி பகுதியில் தங்களது ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை அடையாளம் காட்டுவதாகக் கூறியதையடுத்து பொலிஸார் இவரை அங்கு அழைத்துச் சென்ற போது அங்கு இரண்டு கைக்குண்டுகள் கண்டுபிடிக்கபப்ட்டதாகவும், அந்த சமயம் இவர் சயனைட் உட்கொண்டதாகவும் பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது. பின்னர் இவர் உயிரிழந்ததாக தெரிவிக்கபப்டுகின்றது.

இச்சிறுமியின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைதான போதிலும் பிரதான சந்தேக நபர் ஏற்கனவே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருந்தார். இன்று சயனைட் உட்கொண்ட நபர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்று விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் வெளியாகியுள்ளன 

மோதல் இடம்பெறும் பிரதேசத்தில் “கெயர்” நிறுவனப் பணியாளர் ஒருவர் பலி

care.jpg“கெயர்” எனப்படும் மனிதாபிமான தொண்டுகளை மேற்கொள்ளும் அரசியல் சார்பற்ற அமைப்பின் ஊழியர் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை மோதல்கள் இடம்பெறும் வன்னி பிரதேசத்தில் வைத்து கொல்லப்பட்டுள்ளதாக “கெயர்” நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பலியானவர் முல்லைத்தீவு மாவட்டத்தில் “கெயர்” நிறுவனம் சார்பில் பணிகளை மேற்கொண்டு வந்த ஆர்.சபீசன் (வயது24) என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எறிகணை தாக்குதல் காரணமாக அவரது காலில் காயம் ஏற்பட்டதாகவும் போதிய மருத்துவ வசதி கிடைக்காத காரணத்தால் அவர் மரணம் ஆனதாக கெயர்” மேலும் தெரிவித்துள்ளது. 

திருகோணமலைச் சிறுமியின் கொலையுடன் ரிஎம்விபி யினரின் தொடர்பு மூடி மறைக்கப்படுகின்றது. – அனுரகுமார திசாநாயக்க

Regie_Varsaதிருகோண மலையில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் கொலையுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு உள்ள தொடர்பை மூடி மறைக்க பல வழிகளாலும் முயற்சிகள் இடம் பெறுவதாக ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதை தெரிவித்த அவர் அம்முயற்சியின் ஒரு பகுதியாக திருமலை சிரேஸ்ட பொலிஸ் அத்தியஸ்டரை இடமாற்றுவதற்கான ஏற்பாடுகள் இடம் பெறுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இக்கொலை தொடர்பான விசாரணைகள் திருமலை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்த்தன அவர்களின் தலமையில் இடம்பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இருவார காலத்தில் 1000 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் முல்லைத்தீவுக்கு! – அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தகவல்

sb_diwarathnass.jpgகடந்த இருவார காலத்தில்; 1000 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் முல்லைத்தீவில் விடுவிக்கப்படாத பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி. திவாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு ஆணையாளர் மேலும் கூறியதாவது,

இந்த 1000 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் இரு கட்டங்களாக வாடகைக்கு அமர்த்தப்பட்ட கப்பல்மூலம் அனுப்பிவைக்கப்பட்டன. முல்லைத்தீவில் துறைமுகம் இல்லாத காரணத்தால் கப்பல் கடலில் நங்கூரமிடப்பட்டு சிறு படகுகள் மூலமே தரையிறக்கப்பட்டன. பின்னர் இக்கப்பல் மூலம் முல்லைத்தீவில் புலிகளிடம் சிக்கியுள்ள நோயாளிகள் திருகோணமலைத் துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இவ்வாறு கடந்த பெப்ரவரி மாதம் முதல் இம்மாதம் 16 ஆம் திகதிவரையில்  4116 நோயாளிகள் திருகோணமலைக்கு கப்பல் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

புலிகளால் அச்சுறுத்தல் இருந்தபோதும் ஒரு மாதத்துக்கு மூன்று முறை இக்கப்பல் மூலம் முல்லைத்தீவுக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் நடவடிக்கை பல கஷ்டங்களுக்கும் மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

மட்டக்களப்புவரை நகரங்களுக்கு இடையிலான புதிய ரயில் சேவை! அமைச்சர் டளஸ் அழகப்பெரும பாராளுமன்றத்தில் அறிவிப்பு

parliament.jpgகொழும்புக் கோட்டையிருந்து மட்டக்களப்பு வரையில் நகரங்களுக்கு இடையிலான புதிய ரயில் சேவையொன்று இவ்வார இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சகல ரயில் என்ஜின்களும் இப்பொது சேவையிலீடுபடடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

ஆதர்- சி – க்ளார்க் நினைவு தின சொற்பொழிவு இன்று

arthur_c_clarke.jpgசர்வதேச புகழ்பெற்ற விஞ்ஞானி ஆதர் சி. க்ளார்க்கின் முதலாவது சிரார்த்த தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு இன்று மாலை 5.00 மணிக்கு கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நினைவு தின சொற்பொழிவொன்று இடம்பெறவுள்ளதாக விஞ்ஞான தகவல் தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.

நவீன தொழில்நுட்பத்துக்கான ஆதர் சி. க்ளார்க் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்த நினைவு தின சொற்பொழிவை இந்திய விஞ்ஞானியான கலாநிதி கிருஷ்ணசுவாமி கஸ்தூரிரங்கன் நிகழ்த்துவார். பெங்களுரிலுள்ள உயர் கல்விக்கான தேசிய நிறுவனத்தின் பணிப்பாளரான இவர் இந்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனங்கள் பலவற்றிலும் பணியாற்றியுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச வங்கிகளில் கடன்களை மீளச் செலுத்தாத 5512 பேருக்கு எதிராக வழக்கு – அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தகவல்

ranjithsiyabalapitiya.jpg இலங்கையின் அரச வங்கிகளில் பெற்ற கடன்களை மீளச் செலுத்தாத 5512 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரச வருமான மற்றும் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவ்வாறு பெற்றுக்கொண்ட கடன்களின் மொத்தப் பெறுமதி 17800 மில்லியன் ரூபாவாகும் எனத் தெரிவித்த அமைச்சர் கடன்களை மீளச் செலுத்தாதவர்களுக்கு சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்;.

இலங்கை நிலைமை தொடர்பாக ஜனாதிபதியுடன் ஐ.நா. செயலர் தொலைபேசியில் உரையாடல்

ban-ki-moon.jpgஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீமூன் செவ்வாய்க்கிழமை மாலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இலங்கை நிலைகள் தொடர்பாக தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார். இந்த தொலைபேசி உரையாடலின் போது இலங்கையில் மனிதாபிமான நிலைவரங்கள் தொடர்பான ஐ.நா.வின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளையின் அண்மைய அறிக்கை குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், வடக்கின் மனிதாபிமான நிலைமைகள் இடம்பெயர்ந்தவர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட அரசாங்கத்தின் ஏனைய உதவிகள், இடம்பெயர்ந்தவர்களுக்கான கிராமங்களின் நிலைமைகள், அரசு மேற்கொள்ளும் அரசியல் ரீதியான முன்னெடுப்புகள் உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் பேசப்பட்டதாக ஜனாதிபதி செயலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விடுதலைப் புலிகள் பொதுமக்களை விடுவிக்க எதிர்ப்பு காட்டி வருவதால் அம் மக்கள் பெரும் கஷ்டத்தை அனுபவித்து வருவதாகவும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு தப்பிவரும் மக்கள் எதிர் நோக்கும் அச்சுறுத்தல் மற்றும் அபாயம் குறித்தும் ஜனாதிபதி இதன்போது விளக்கமளித்திருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதேநேரம், விடுதலைப்புலிகள் பொதுமக்கள் இருக்கும் பகுதிகளில் பதுங்கு குழிகளை அமைத்திருப்பதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், அதை புகைப்படங்களுடன் சமர்ப்பிக்க முடியுமென்றும் ஜனாதிபதி ஐ.நா.செயலாளர் நாயகத்துக்கு தெரிவித்திருக்கிறார்.

எவ்வாறிருப்பினும், விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், இது சாதகமான சமிக்ஞை என்பதுடன், சுருங்கி வரும் புலிகளின் பகுதியிலிருந்து பொதுமக்கள் விடுபட்டு வருவதானது சிறைவைப்பிலிருந்து மக்களுக்கு ஓய்வு கொடுப்பதற்கு உதவியாக இருக்குமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.

இதேநேரம், இடம்பெயர்ந்தவர்களுக்கான உணவு விநியோகம் குறித்து ஐ.நா. செயலாளர் நாயகம் வெளியிட்ட கரிசனைக்கு பதிலளித்த ஜனாதிபதி ராஜபக்ஷ, விடுதலைப்புலிகளின் எதிர்ப்பு மற்றும் தடங்கல்களுக்கு மத்தியிலும் போதியளவான உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டுக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டியிருப்பதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்திருக்கிறது.

அத்துடன், உணவு விநியோகம் தொடர்பான புள்ளி விபரங்கள் ஐ.நா. செயலாளருக்கு கிடைக்கும் வகையில் இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி ராஜபக்ஷ பான் கீ மூனிடம் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி செயலக அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.  இதேநேரம், விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை குறித்து இதன்போது குறிப்பிட்டிருக்கும் ஜனாதிபதி, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசம் அடங்கலாக பொதுமக்கள் இருக்கும் பகுதிகள் மீது கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தக் கூடாதென்ற உத்தரவை படையினர் கடுமையாக கடைப்பிடித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். அத்துடன், பாதுகாப்பு படையினரால் அறிவிக்கப்பட்ட மோதல் தவிர்ப்பு அல்லது பாதுகாப்பு வலய பகுதிகளில் எந்த தாக்குதலும் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பாகிஸ்தானிய சாரதி மேகர் கஹாலியா இலங்கைக்கு விஜயம் செய்ய குடும்ப விசா

drive-mogar.jpgபாகிஸ்தான் லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீது இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தின் போது இலங்கை அணி சென்ற பஸ்ஸை செலுத்திய பஸ்ஸின் சாரதி இலக்கைக்கு விஜயம் செய்ய விசா வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி வீரர்கள் பயணித்த பஸ்சினை செலுத்திய பாகிஸ்தானிய மேகர் கஹாலிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இலங்கைக்கு 10 நாள் விஜயத்தை மேற்கொள்ள குடும்ப விசா வழங்கப்பட்டுள்ளது. அவரது திறமையையும், சாதுரியத்ததயும் பாராட்டியே இலங்கை கிரிக்கட் அணி மேகர் கஹாலியாவை நாட்டுக்கு அழைத்துள்ளது.

புதிய குடியேற்ற கட்டணத்தை அறிமுகப்படுத்துகிறது பிரிட்டன்

uk.jpgஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத பிறநாட்டு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் பிரித்தானியாவிற்குள் உட்பிரவேசிப்பதற்கு முன்னர் குடியேற்றக் கட்டணமாக 50 ஸ்ரேலிங் பவுண்களை செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது. இப்புதிய சட்டம் குடியேற்ற முறைமையை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக அடுத்த மாதத்தில் அறிமுகமாகவுள்ளது. இதன் மூலம் பெறப்படும் பணம் குடியேற்றவாசிகளின் பொதுச் சேவைக்கான மேலதிக செலவை ஈடு செய்யும் பொருட்டு உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்கப்படும்.

இவ்வாறு பெறப்படும் குடியேற்றக் கட்டணத்தின் மூலம் ஒரு வருடத்திற்கு 70 மில்லியன் டொலர்களை பெற முடியுமென அந்நாட்டு அரசாங்கம் கருதுகிறது. பெருமளவிலான குடியேற்றவாசிகளால் தமது வளங்கள் பாதிக்கப்படுவதாக உள்ளூர் அதிகார சபைகளிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்தே இப்புதிய குடியேற்றக் கட்டண முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பில் சமூகம் மற்றும் உள்ளூர் அரசாங்கத்தின் உயரதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்; எமது சமூகத்தில் குடியேற்றவாசிகள் முக்கிய பங்கை வகிக்கின்றனர்.இவர்கள் எமது சமூகத்திற்கு செய்யும் பங்களிப்பு தொடர்பில் விவாதங்கள் தேவைப்படுகின்றன. தற்போது குடியேற்றக் கட்டணத்தின் மூலம் அறவிடப்படும் பணம் குடியேற்றவாசிகள் செறிந்து வாழும் பிரதேசங்களிற்கே வழங்கப்படும் என்றார்.

மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத நாடுகளின் மாணவர்கள் தமது முதல் வருடக் கல்விக்கும் 9 மாதங்களுக்குரிய வாழ்க்கைச் செலவிற்கும் போதுமான பணம் உள்ளது என்பதை உறுதிப்படுத்த வேண்டுமெனக் கோரப்படுகின்றனர். இச்சட்டத்தின் படி இத்தொகை பணமாக இருக்க வேண்டும். பங்குகளாகவோ ஓய்வூதியத் தொகையாகவோ இருக்கும் பட்சத்தில் தூதுவராலயம் இதனை ஏற்றுக் கொள்ளாது. அத்துடன், அவர்களது பணம் வங்கிக் கணக்கிலிருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

இப்பணத்தின் தொகை அவர்கள் தொடரவுள்ள கற்கை நெறியின் காலம் மற்றும் அவர்கள் லண்டனிலா அல்லது புறநகர்களிலா தங்கியிருக்கப் போகின்றனர் என்பதற்கேற்ப மாறுபடும்.