December

December

வெளிநாட்டு இலங்கையருக்கு கைமாறு: இவர்களும் தேர்தலில் வாக்களிக்கலாம்!

வெளிநாட்டு இலங்கையருக்கு கைமாறு: இவர்களும் தேர்தலில் வாக்களிக்கலாம்!

தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பங்களித்த புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் ஏற்பாட்டை தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்து வழங்க உள்ளது. மேற்குலகெங்கும் வாழும் நாடுகளில் இத்தேர்தலையொட்டிய பிரச்சாரங்கள் அமோகமாக நடைபெற்றது. என்பிபி இன் கூட்டங்கள் மண்டபம் நிறைந்த மக்களோடு சர்வதேச தலைநகரங்களிலெல்லாம் நடைபெற்றது. என்பிபி இன் வெற்றியின் ஆரம்பம் இங்கிருந்துதான் ஆரம்பித்தது. அதற்கு நன்றியைத் தெரிவிக்கும் வகையில் அவர்களது வாக்குரிமையைப் பயன்படுத்தும் சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்படுவது பலராலும் வரவேற்கப்படுகின்றது.

இலங்கைக்கு வெளியே தொழில், கல்வி, குடும்பம் மற்றும் இன முரண்பாடு போன்ற பல்வேறு காரணங்களுக்காக புலம்பெயர்ந்து வாழ்கின்ற இலங்கை பிரஜைகளுக்கு அங்கிருந்தபடியே வாக்களிக்கும் வசதியை ஆளும் புதிய என்பிபி அரசாங்கம் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவர உள்ளதாக வெளிவிவகாரங்களுக்கான பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

அதன்படி வெளிநாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகள் உள்ளூராட்சி தேர்தல்கள் உட்பட அனைத்து தேர்தல்களிலும் வாக்களிக்க முடியும். ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க இது தொடர்பில் நடவடிக்கைகளை ஆரம்பிக்கும்படி நேரடியாக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளார் என அருண் ஹேமச்சந்திரா தெரிவிக்கின்றார்.

கடந்த ஒரு தசாப்தமாக இந்தவிடயம் தொடர்பில் புலம்பெயர் இலங்கை பிரஜைகள் அமைப்புக்கள் கோரி வந்தன. ஒருபக்கம் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களால் உறவுக்களுக்கு அனுப்பி வைக்கப்படும் நிதியுதவி மற்றும் அந்நியசெலவாணியையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மறுபுறம் வெளிநாடுகளில் தேர்தல்களில் வாக்களிக்கும் போது முறைகேடுகள் இடம்பெற அதிக வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. இவ்வாறான ஏற்பாட்டை இந்தியா ஏற்கனவே செய்து இலங்கைக்கு முன்மாதிரியாகவுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்களும் தேர்தலில் வாக்களிக்கும் விதமாக தேர்தல் விதிமுறைகளில் இந்தியா திருத்தம் மேற்கொண்டுள்ளது. அப்படியாயின் வெளிநாடு வாழ் இலங்கையர்களும் தேர்தலில் வாக்களிக்கும் விதமாக தேர்தல் விதிமுறைகளை திருத்துவதில் பாராளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை பெற்றிருக்கின்ற என்பிபி அரசாங்கத்திற்கு எந்தத் தடையும் இருக்கப் போவதில்லை. எவ்வாறெனினும் இலங்கை குடியுரிமை வைத்திருக்கும் வெளிநாடு வாழ் இலங்கையர் மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்திய சிறையிலிருந்து இரண்டு இலங்கை மீனவர்கள் விடுதலை!

இந்திய சிறையிலிருந்து இரண்டு இலங்கை மீனவர்கள் விடுதலை!

அனலைதீவுப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இயந்திரக்கோளாறால் இந்தியாவிற்குள் எல்லை தாண்டி சென்ற மூன்று மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். கடந்த 7 மாதங்களாக சிறிது காலம் புழல் சிறையில் திருச்சி இடைத்தங்கல் முகாமிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

புதிய என்பிபி அரசாங்கத்தின் முயற்சியாலும் தற்போதைய கடல்த்தொழிலமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் ஊக்கத்தாலும் நேற்றைய தினம் இம் மூன்று மீனவர்களும் விடுதலையாகி யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். சமீபத்தில் இந்திய விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதியின் நிகழ்ச்சிநிரலில் வடக்கு மீனவர்களின் பிரச்சினை முக்கிய இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுதவிர நேற்றைய தினம் வடமாகாண ஆளுநர் தனது அலுவலகத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ சமூக பிரதிநிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தார். அப்போது வடமாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டது. இச்சந்திப்பு தொடர்பில் கூறிய ஆளுநர் நா. வேதநாயகன், நேற்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விடயங்கள் கடல்த்தொழில் அமைச்சருக்க பரிந்துரைக்கப்படும் என்றார்.

‘’நாங்கள் எந்த நிதி மோசடியிலும் ஈடுபடவில்லை!’’ முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் சகோதரர்

‘’நாங்கள் எந்த நிதி மோசடியிலும் ஈடுபடவில்லை!’’ முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் சகோதரர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்த போது விஜயகலா மகேஸ்வரனுக்கு வழங்கப்பட்ட நிதி, ஆலய புனர் நிர்மானங்களுக்கே பயன்படுத்தப்பட்டது என்றும் அந்த நிதியில் நாங்கள் கையாடியதாக திட்டமிட்டு சிலர் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர் அதனை நான் வன்மையாகக் கண்டிப்பதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நிச்சயமாக சட்ட நடவடிக்கையும் எடுப்பேன் என முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் சகோதரர் துவாரகேசன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

நாங்கள் நீண்டகாலம் வர்த்தகக் கப்பல் முதல் பல்வேறு தொழில்துறைகளையும் நடத்துகின்ற வர்த்தகத்தில் முன்னணியில் உள்ளவர்கள். இவ்வாறான வழிகளில் பணம் சேர்க்க வேண்டிய அவசியம் எங்கள் குடும்பத்திற்கு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் எங்களைப் பற்றிய இந்தப் பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றார். இவர்களுக்கு எதிரகா சட்நடவடிக்கை எடுத்துள்ளேன் என்றும் துவாரகேசன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இவருடைய முழுமையான நேர்காணல் தேசம்ரியூப்பில் வெளியாக உள்ளது.

துப்பாக்கி – போதைவஸ்து – விலையுயர்ந்த கார்: கனடாவில்தமிழ் பெண்ணும் ஆணும் கைது!

துப்பாக்கி – போதைவஸ்து – விலையுயர்ந்த கார்: கனடாவில்தமிழ் பெண்ணும் ஆணும் கைது!

கார் கடத்தல் குற்றச்சாட்டில் சந்தேக நபர்களாக கருதப்படும் இரண்டு தமிழர்கள் டிசம்பர் 10இல் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கனேடிய பொலிஸார் குற்றப் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். இவர்களோடு இணைந்து இணைந்து குற்றத்தில் ஈடுபட்ட மேலும் இருவரைத் தேடி வலைவிரித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக டிசம்பர் 10 பிரம்டன் நகரில் ஒரு தொகை போதைப்பொருட்களும், களவாடப்பட்ட கார் ஒன்றையும் மீட்டுள்ளனர் பொலிஸார். பிக்கரிங் நகரசைச் சேர்ந்த 34 வயதான சுவிசான் கணேசமூர்த்தி மற்றும் பிரமன் நகரத்தைச் சேர்ந்த 29 வயதான அருண்ஷியா அருளானந்தம் என்ற இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் ஒரு கும்பலைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நவம்பர் 4 இரண்டு கனேடிய சாலைகளான ஓல்ட் கெனடி மற்றும் டெனிசன் தெரு வீதிகளில் கார் ஒன்றை மூவர் துப்பாக்கி முனையில் திருடிச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட காரானது 2021 மெர்சிடஸ் ஜி வேகன் (Mercedes g Wagen) என்ற ரகமான பென்ஸ் என்று கூறப்படுகிறது. திருடப்பட்ட காரை மிசுசாகா குடியிருப்பு பகுதியில் கைவிட்டுவிட்டு நாலாவது சந்தேக நபர் ஓட்டி வந்த பி எம் டபிள்யூ (BMW) காரில் மற்றைய மூன்று சந்தேக நபர்களும் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர். கடத்தப்பட்ட கார் கைவிடப்பட்ட இடத்திலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் இக்கும்பலைச் சேர்ந்த பலரை தேடிவருவதாக அறிவித்துள்ள பொலிஸார். பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.

முன்னாள் எம்பி திலீபனின் லீலைகளும் கைதும் – ”இல்லை இல்லை சுத்தமான சுவாமிப்பிள்ளை” என்கிறார் திலீபன்! 

முன்னாள் எம்பி திலீபனின் லீலைகளும் கைதும் – ”இல்லை இல்லை சுத்தமான சுவாமிப்பிள்ளை” என்கிறார் திலீபன்!

முன்னாள் ஈபிடிபி வன்னி மாவட்ட எம்பி குலசிங்கம் திலீபன் காசோலை மோசடி முறைப்பாடொன்றை அடுத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். பின்னர் வவுனியா மாவட்ட நீதிவானால் 15 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ரணில் அரசாங்கத்தில் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவராகவும் செயற்பட்டிருக்கிறார்.

திலீபனின் பிரத்தியேக செயலாளாரும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஈபிடிபி சார்பாக போட்டியிட்ட வேட்பாளரான கிறிஸ்டோபர் டினேஸ் என்பவரை டிசம்பர் 19 இல் வவுனியா மாவட்ட நிதி மோசடி குற்றப்பிரிவினர் காசோலை மோசடி முறைப்பாட்டில் கைது செய்திருந்தனர். காணி கொடுக்கல் வாங்கல் ஒன்றில் 15 இலட்சம் பெறுமதியான காசோலையை மோசடி செய்த குற்றச்சாட்டில் டினேஸ் கைது செய்யப்பட்டார். டினேஸ் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் திலீபனும் கைது செய்ப்பட்டிருந்தார்.

பிணையில் வெளியே வந்துள்ள திலீபன் ஊடகங்களிடம் தான் குற்றவாளி இல்லை என்கிறார். இந்த காசோலை பரிமாற்றம் தன்னுடைய அலுவலகத்தில் நடந்ததால் தான் அதற்கு பொறுப்பேற்றுக் கொண்டதாக கூறுகிறார். மேலும் இந்த கைதின் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றார்.

திலீபன் நவம்பர் 22 நடந்த பாராளுமன்ற தேர்தலில் வீணைச் சின்னத்தில் ஈபிடிபி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார். தோல்வியின் பின்னர் ஈபிடிபி கட்சியிலிருந்தும் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. திலீபன் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. அவர் அபிவிருத்திக் குழு தலைவராக இருந்த போது அவருடைய சகாக்களால் பல காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது என்ற பெரிய குற்றச்சாட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் பெண்கள் விடயத்திலும் பலகீனமான திலீபன் பல்வேறு பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர் என விமர்சிக்கப்படுகிறார்.

திலீபன் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் உலாவுகின்றன. திலீபனுடைய பிரத்தியேக செயலாளர் மீதும் திலீபனுடைய சகாக்கள் மீதும் பல முறைப்பாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

திலீபன் மீதான குற்றப் பின்னணி கருதி அவர் மீது ஈபிடிபி கட்சி மேலிடம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்த போது திலீபன் தானாகவே கட்சியிலிருந்து விலகிவிட்டார்.

முன்னாள் எம்பி திலீபன் மண் கடத்தல், மரம் வெட்டுதல், காணி அபகரிப்பு மற்றும் மோசடி என பல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்படுகின்றார். இவற்றின் உண்மைத் தன்மையை சோதித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வாங்கிக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்கிறார்கள் மக்கள். திலீபன் கள்ள மரம்வெட்டுதல் தொடர்பில் தேசம்நெற் கட்டுரையையும் வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜேர்மன் கிறிஸ்மஸ் மார்க்கற்றில் தாக்குதல் – இருவர் பலி – 60 பேர் வரை காயம் !

ஜேர்மன் கிறிஸ்மஸ் மார்க்கற்றில் தாக்குதல் – இருவர் பலி – 60 பேர் வரை காயம் !

கிழக்கு ஜேர்மனியில் சக்சன் அன்ஹல்ட் என்ற மாநிலத்தில் மார்க்ட்போர்க் (Magdeburg) என்ற இடத்தில் நேற்று மாலை கிறிஸ்மஸ் மார்க்கற்றில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தை பி.எம்.டபிள்யூ BMW கார் ஒன்று மோதித்தள்ளியதில் இதுவரை குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் 60 க்கும் அதிகமானோர் காயப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இத்தாக்குதலை மேற்கொண்ட 50 வயதுடைய ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சவுதிரேபியாவைச் சேர்ந்தவர். 2006 ஆம் ஆண்டில் ஜேர்மனிக்கு குடிபெயர்ந்துள்ளார். இவர் ஜேர்மனியில் வைத்தியராக கடமையாற்றி வந்தவர் என முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தாக்குதல்தாரி செலுத்தி வந்த கார் வாடகைக்கு எடுக்கப்பட்டிருக்கின்றது. இதுவரை தாக்குதல்தாரி தீவிர இஸ்லாமிய அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணியதாக எந்தவிதமான புலனாய்வு தகவல்களும் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை.

இதே மாதிரியானவொரு தாக்குதல் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி 8 வருடங்களுக்கு முன்னர் பேர்லினில் கிறிஸ்மஸ் மார்க்கற்றில் இடம்பெற்றிருந்தது. அத்தாக்குதலின் போது தாக்குதல்தாரி பார ஊர்தி ஒன்றை கொண்டு, மக்கள் கூட்டத்தின் மீதாக செலுத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் இருந்தனர்.

கிழக்கு ஜேர்மனியை பொறுத்தவரை ஏ.எப்.டி (AFD) தீவிர வலதுசாரி போக்குடைய, ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான கொள்கைகளை உடைய கட்சியின் செல்வாக்கு அதிகமுள்ள பகுதியாகும். 2025 பெப்ரவரியில் ஜேர்மனியின் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தீவிர வலதுசாரிகட்சியான AFD இத்தாக்குதலை தன்னுடைய தேர்தல் வெற்றிக் சாதகமாக பயன்படுத்தும் சாத்தியம் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

அரச அதிகாரிகளில் பணியாளர்களில் மக்கள் கோபம் கொள்கின்றனர்! போராடவும் தயாராகின்றனர்!

அரச அதிகாரிகளில் பணியாளர்களில் மக்கள் கோபம் கொள்கின்றனர்! போராடவும் தயாராகின்றனர்!

இலங்கையில் 14 லட்சம் ஊழியர்கள் அரச பணியில் உள்ளனர். இது இலங்கையின் சனத்தொகைக்கு தேவைக்கு அதிகமானது. இத்தொகை ஏழு லட்சமாக இருக்கவேண்டும் என்பதே மதிப்பீடு. நாட்டின் தற்போதைய நிதி நிலமையை கருத்தில் கொண்டு அரச ஊழியர்களுக்கு வருகிற வருடம் வழங்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அறிவிக்கப்பட்டிருந்த சம்பள உயர்வை என்பிபி அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. இதனை ஒக்டோபர் 15 அமைச்சர் விஜித ஹேரத் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஒருபுறம் அரச ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு போராடத் தயாராக இருக்கின்றனர். மறுபுறம் வேலையற்ற பட்டதாரிகள் தம்மை அரசுப்பணியில் இணைக்கச் சொல்லி போராடுகின்றனர். “சும்மா இருந்து சம்பளம் எடுக்கலாம் பென்சன் எடுக்கலாம்” என்ற நினைப்பு என்கிறார் தனியார் வங்கியில் முகாமையாளராகச் செயற்படும் கதிர்காமராஜா வனோஜன்.

இலங்கைக்கு கடன் வழங்கியுள்ள சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற அமைப்புக்கள் அரச துறையில் ஆளணிக்குறைப்பு செய்யும்படி இலங்கையை நிர்ப்பந்திக்கின்றன. பெரும் கடன் சுமையில் தத்தளிக்கும் இலங்கை தற்சமயம் பணியிலுள்ள அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே அதன் வருமானத்தில் பெரும்பங்கு செலவிடப்படுகின்றது.

அப்படியிருந்தும் அரச ஊழியர்களின் அசமந்தம், வினைத்திறனற்ற மற்றும் பொறுப்பற்ற செயற்பாடுகளும் இலஞ்சம், ஊழல் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் மலிந்தும் காணப்படுகிறது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இதனால் நீண்ட காலமாகவே அரச ஊழியர்கள் மக்களை நடத்தும் விதம் தொடர்பில் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். குறிப்பாக சமீபத்தில் பருத்தித்துறையில் கற்கோவளம் என்ற கிராமத்தில் வெள்ள நிவாரணம் வழங்கிய போது அக் கிராமசேவகர் நடந்து கொண்ட விதம். அவர் தனது கணவரின் பொலிஸ் அதிகாரத்தை பயன்படுத்தி தன்னை எதிர்த்து கேள்வி கேட்ட பொதுமகனை கைது சிறையில் அடைத்தமை, அதனால் வீதிக்கு இறங்கி போராடிய சம்பவங்களை குறிப்பிடலாம்.

இதனையே தான் வடக்கு மாகாண ஆளுநர் டிசம்பர் 18 இல் கிளிநொச்சியில் செவிப்புல சவால் உடையோரின் சைகைமொழி உரிமை மற்றும் விழிப்புணர்வு தொடர்பாக நடந்த நிகழ்வொன்றில் இப்படி கூறுகிறார். ‘’ஏழைகளின் குரலை கிஞ்சித்தும் செவிமடுக்க தயாரில்லாத அரச ஊழியர்களால் சாதாரண சேவைகளை பெறவே மக்கள் மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள்’’.

அரச சேவையில் தேவைக்கு அதிகமாக பணியாளர்கள் இருந்து மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதுடன் தகுந்த சேவையையும் வழங்காமல் தங்களுடைய நேரத்தையும் உழைப்பையும் வீணடிப்பதாக பொதுமக்கள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் அவர் கூறும் போது இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் இங்கு நீங்கள் திரண்டிருப்பதன் மூலம் உங்கள் உரிமையை நிலைநாட்ட எவ்வளவு அக்கறையாக இருக்கின்றீர்கள் என்பதை உணர முடிவதாகக் குறிப்பிட்டார். உங்களின் குரல்கள் மாத்திரமல்ல ஏழைகளின் குரலும் அரச திணைக்களங்களில் உள்ளவர்களால் கேட்கப்படுவதில்லை என ஆளுநர் வேதனையுடன் சுட்டிக்காட்டினார்.

அரச ஊழியர்கள் தம்மிடம் சேவை பெற வரும் மக்களை எவ்வாறு அலட்சிய மனப்பான்மையுடன் மட்டம் தட்டுகிறார்கள் என வேதனையோடு பிரதமர் ஹரிணி அமலசூரிய குறிப்பிடுகிறார். ‘’அரச ஊழியர்கள் சரியாக பேசுவதில்லை, குறைகளை செவி கொடுத்து கேட்பதில்லை மற்றும் கேள்வி கேட்டால் பதிலும் சொல்வதில்லை மக்கள் குறைப்படுகிறார்கள்’’ என்கிறார் பிரதமர் ஹரிணி.

சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கூட எம்பி அர்ச்சுனா இராமநாதன் ஒதுக்கப்பட்ட நிதிகளை அரச ஊழியர்கள் எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பது தொடர்பில் விமர்சனங்களையும் தெரிவித்து கேள்விகள் கேட்ட போது அரச ஊழியர்களுக்கு அது சினத்தை மூட்டியிருந்தது. அரச ஊழியர்கள் அர்ச்சுனா மீது காட்டிய உணர்வெழுச்சியான எதிர்வினையை மக்கள் ரசிக்கவில்லை. மாறாக அர்ச்சுனா அரச ஊழியர்களுக்கு தடியோட்டியதை ரசித்தனர். அரச ஊழியர்கள் தம்மை யாரும் கேள்வி கேட்க கூடாது என்ற தோரணையில் நடந்து கொண்டதாகவே இந்த விடயத்தில் மக்கள் பார்வையுள்ளது. மக்களுக்கும் அரச ஊழியர்களுக்குமான இடைவெளி அதிகமாகிக் கொண்டே போகின்றது.

இக்குற்றச்சாட்டுக்கள் ஒட்டு மொத்த அரச ஊழியர்களை நோக்கியும் கூற முடியாது என்பதையும் மக்கள் விளங்கிக் கொண்டு தான் உள்ளனர். அரச ஊழியர்களின் எதேற்ச்சதிகார போக்கை கட்டுப்படுத்த அரச சேவைத்துறையில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க என்பிபியின் ஆட்சியில் தருணம் வந்துவிட்டது என மறுசீரமைப்பு வாதிகள் கருதுகின்றனர். மேலும் ஜனாதிபதி அனுரா “நீங்கள் நியாயமாக நடந்தால் நான் உங்களுடன் இருப்பேன்” என மிகத் தெளிவாகவே அரச ஊழியர்களுக்குச் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் அரச ஊழியர்களின் தபால் மூலமான வாக்குகளே இன்றைய அரசாங்கத்தின் வெற்றியை கட்டியம் கூறி உறுதிப்படுத்தியது. அரச ஊழியர்களும் மக்களாகவும் இருக்கின்றார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

கான்சர் தடுப்பூசியை உருவாக்கியது ரஷ்யா – மருத்துவ உலகில் புதிய மைல்கல்!

கான்சர் தடுப்பூசியை உருவாக்கியது ரஷ்யா – மருத்துவ உலகில் புதிய மைல்கல்!

அறிவியல் உலகில் முக்கியமான முன்னேற்றமாக, புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையங்கள் இணைந்து இந்த தடுப்பூசி உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளன. இது நடைமுறைக்கு வந்தால் மேற்குலகின் அறிவியலுக்கு ஒரு சவாலாக அமையும். எப்போது ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தங்களுடைய திறமைகளைக் களவாடுபவர்கள் என்ற மாயை மேற்குலகில் உள்ளது. ஆனால் தொழில்நுட்பத்தில் சீனா மேற்குலகைக் காட்டிலும் இரண்டு ஆண்டுகள் முன்னாகப் பயணிக்கின்றது. மேற்குலகின் கோவிட் வக்ஸிசினில் நீண்டகால பக்கவிளைவுகளின் பாதிப்புக்கள் திட்டமிட்டு மறைக்கபட்டதாக குற்றச்சாட்டுகள் வெளிவருகின்றது. ஆனால் சினோவகஸில் அவ்வாறான பிரச்சினையில்லை எனக் கூறப்படுகின்றது.

ரஷ்யாவுடைய இக்கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் மிகப்பெரும் புரட்சியாக அமையும். MRNA அடிப்படையிலான புற்றுநோய் தடுப்பூசியை 2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது மனிதனின் உடலில் உள்ள நோயெதிர்ப்பு மண்டலத்தை சுறுசுறுப்பாகச் செய்து புற்றுநோய்க் கிருமிகளை தாக்கக் கூடிய வகையில் செயல்படுகிறது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்தத் தடுப்பூசியின் முதன்மை நோக்கம் புற்றுநோயை தடுப்பதும், அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதாகும்.

பல ஆண்டுகளாக இடம்பெற்ற ஆராய்ச்சி மற்றும் பரிசோதனைகளின் முடிவில் இந்தத் தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. ஆரம்ப பரிசோதனைகளில் சிறந்த முடிவுகள் கிடைத்துள்ளதாகவும், மனிதர்களில் சோதிக்க தயாராக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடுப்பூசி உலகளவில் புற்றுநோயை தடுக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, இதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்களுடைய மரண விகிதத்தை குறைக்கவும் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆஸ்திரேலிய மாணவர் விசா நடைமுறைகளில் இறுக்கம்!

ஆஸ்திரேலிய மாணவர் விசா நடைமுறைகளில் இறுக்கம்!

 

ஆஸ்திரேலியாவுக்கான சர்வதேச மாணவர்களின் வருகையில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாணவர் விசா மூலம் ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது. இலங்கையின் தென்பகுதியில் இருந்து பெருமளவான சிங்கள மாணவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு தங்கள் கற்கைகளுக்காகச் செல்வது குறிப்பிடத்தக்கது. புதிய விசா கொள்கையினால் நாட்டின் வளங்களை உரியமுறையில் கையாள்வதில் இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக நகரப் பகுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகளில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்தே விசாக் கொள்கைகளில் புதிய மாற்றங்களை தாங்கள் ஏற்படுத்தி உள்ளதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மேற்குலகம் எங்கும் குடிவரவாளர்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்கள் தீவிரமடைந்து வருகின்றது. அந்த வகையில் வலதுசாரித்தன்மையுடன அவுஸ்திரேலியாவின் இந்த முடிவு ஆச்சரியமானதல்ல.

அதேவேளை புதிய விசாக் கொள்கைகள் மூலமாக நாட்டின் கல்வித் தரத்தினை உரியமுறையில் பேண முடியும் என அஅவுஸ்திரேலிய அரசு கூறினாலும், வெளிநாட்டு மாணவர்களின் வருமானத்திலேயே அவர்கள் குறியாக உள்ளனர். பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களின் நிதியிலேயே இயங்குகின்றது. இதன்படி, 80 வீதமான மாணவர் வெற்றிடங்கள் நிரம்பும் வரை தளர்வான விசா நடைமுறை இருக்கும் எனவும் அதன் பின்னர் விசா விண்ணப்பங்களை கையாள்வதில் தாமதங்கள் இருக்கும் எனவும் அறிய முடிகின்றது. கடந்த ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல் சர்வதேச மாணவர் விசா கட்டணம் 710 அமெரிக்க டொலரிலிருந்து இரண்டு மடங்கிற்கும் அதிகமாக 1,600 அமெரிக்க டொலராக அதிகரிக்கப்பட்டிருந்தது.

தொடர்ச்சியாக சர்வதேச மாணவர் சேர்க்கையை 2,70,000 ஆகக் குறைக்க ஆஸ்திரெலிய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைக்கு அந்த நாட்டு வலதுசாரிக் கட்சியும் கிரீன் கட்சியும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன. இதையடுத்தே ஆஸ்திரேலிய அரசாங்கம் இந்த கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது. இதே போன்ற கட்டுப்பாடுகளை அண்மையில் கனடிய அரசும் அறிவித்திருந்தமை தெரிந்ததே.

 

டிக்டொக்குக்கு செவிசாய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் – தடை தடைப்படுமா?

டிக்டொக்குக்கு செவிசாய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் – தடை தடைப்படுமா?

அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம், டிக்டொக் செயலியைத் தடை செய்யும் முயற்சியை எதிர்த்து அதன் உரிமையாளர் ByteDance நிறுவனம் தாக்கல் செய்த அவசர மனுவை பரிசீலிக்க ஒப்புக்கொண்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 19ஆம் திகதியிலிருந்து டிக்டொக் மீதான தடை அமுலுக்குவரவுள்ள நிலையில் ஜனவரி 10ஆம் திகதி இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அமெரிக்காவில் 170 மில்லியனுக்கும் அதிகமானோர் டிக்டொக் செயலியைப் பயன்படுத்துகின்றனர். டிக்டொக் செயலி மூலம் சீன அரசு அமெரிக்கப் பயனாளர்களின் தகவல்களைச் சேகரிக்கக்கூடும். இது தங்களது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது எனக்கூறி அமெரிக்க அரசாங்கம் டிக்டொக்கை தடைசெய்ய முயற்சிக்கின்றது.

ஆனால், டிக்டாக் நிறுவனம், அமெரிக்காவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் செயல்படவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த தடை டிக்டொக்கில் தங்கியிருக்கும் மில்லியன் கணக்கான பயனர்களையும் அவர்களுடைய வர்த்தகத்தையும் பாதிக்கும் இது வெளிப்பாட்டு சுதந்திரத்துக்கு எதிரானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தப் பின்னணியின் அடிப்படையிலேயே ByteDance நிறுவனம் தாக்கல் செய்த அவசர மனுவை பரிசீலிக்க அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

சீனச் செயலியான டிக்டொக்கை முடக்க அமெரிக்கா, இந்தியா போன்ற சீன வெறுப்பு நாடுகள் கடும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. ஆனாலும் வி.பி.என் போன்ற செயலிகளின் ஊடாக பெரும்பாலானவர்கள் டிக்டொக்கை தொடர்ந்தும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. டிக்டொகின் பயனாளிகளின் தகவல்ககளை சீன அரசு பெற்றுக்கொள்ளுமானால் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சமூக வலைத்தளங்களின் பயனாளர்களின் தகவல்களை அமெரிக்க புலனாய்வு நிறுவனங்கள் பெற்றுக்கொள்கின்றன என்ற விடயமும் காலம் காலமாக உள்ளது.

இந்திய அரசு மைக்கிரோசொப்ற் வின்டோசைப் பயன்படுத்துவதில்லை. காரணம் அதனூடாக அமெரிக்க புலனாய்வு தங்களுடைய கணணிகளுக்குள் குதித்துவிடும் என்ற அச்சம். அண்மையில் இஸ்ரேல் மொசாட் உளவுப் பிரிவினர் லெபனான் ஹிஸ்புல்லாக்களின் பேஜர்கள் வெடித்துச் சிதற வைத்தது. மிகநுட்பமான மிகத்திட்டமிட்ட இத்தாக்குதலில் பல ஹிஸ்புல்லா தலைவர்கள் கொல்லப்பட்டனர். காயப்பட்டனர். எதிர்காலத்தில் விமானத்தில் பறக்கின்ற போது மோபைல்போன்களை வெடிக்க வைக்கவும் இவர்கள் முயற்சிக்கலாம். தொழில்நுட்பம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வளர்ந்துகொண்டுள்ளது. இருக்கின்ற எதையும் வைத்து யாரையாவது கொல்வதற்கான வழியை மேற்குலகு புதிது புதிதாக கண்டுபிடித்துக்கொண்டுள்ளது.