01

01

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் 2024 – வன்முறை போராட்டங்கள் அதிகரிப்பு!

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சி முன்னிலை பெற்றதைத் தொடர்ந்து எதிர்த்தரப்பினர் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், தலைநகர் பரீசின் பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதோடு, பொதுச் சொத்துக்களும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரிகள் முன்னிலைபெற்றுள்ள அதேவேளை தற்போதைய ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

 

குடியேற்றவாசிகளிற்கு எதிரான ஆர்.என். கட்சி 33 வீத வாக்குகளை பெற்றுள்ள அதேவேளை இடதுசாரிகூட்டணி 28 வீத வாக்குகளை பெற்றுள்ளது. ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கூட்டணிக்கு 21 வீத வாக்குகள் கிடைத்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மக்ரோனின் கட்சி முற்றாக துடைத்தெறியப்பட்டுள்ளது என ஆர்.என்.கட்சியின் மரைன் லெ பென் (Marine Le Pen)

தெரிவித்துள்ள அதேநேரம், பிரான்ஸ் மக்கள் வாக்களித்தால் நான் அனைத்து பிரான்ஸ் மக்களினதும் பிரதமராக தயார் என ஆர்.என். கட்சி தலைவர் ஜோர்டன் பர்டெல்லா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இதற்கு எதிராக தீவிர இடதுசாரிகள் இஸ்லாமிய ஆதரவாளர்கள் உட்பட சமூகத்தின் பலதரப்பட்டவர்கள் இந்த வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பெரிசில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களும் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருவதால், அங்கு பதற்றமானதொரு சூழலும் ஏற்பட்டுள்ளது.

இந்த வன்முறைகளில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறையில் ஈடுபட்டுள்ள சிலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பரீசின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்றில் தீவிர வலதுசாரிகள் வெற்றிபெற்றுள்ளமை அதன் வரலாற்றில் இதுவே முதல்தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்காக அதிகரித்த அவுஸ்திரேலியா !

சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

அதன்படி, 710 அவுஸ்திரேலிய டொலராக இருந்த விசா கட்டணம் தற்போது 1,600 டொலராக அதிகரித்துள்ளது.

இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் தலைமையிலான அரசாங்கம், மாணவர்களின் இடம்பெயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தக் கட்டண உயர்வை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விசா கட்டண உயர்வு, சர்வதேச கல்வி முறையின் தரத்தை மேம்படுத்தவும், இடம்பெயர்வை குறைக்கவும், சிறப்பாகவும் மாற்ற அவுஸ்திரேலியாவிற்கு உதவும் என, அவுஸ்திரேலிய உட்துறை அமைச்சர் கிளேர் ஓநீல் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த முடிவு சர்வதேச மாணவர்களின் கல்விக் கட்டணத்தை நம்பியுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் பொருளாதாரம் இரண்டுக்கும் உகந்ததல்ல என, அவுஸ்திரேலிய பல்கலைக்கழகக் குழுவின் தலைவர் லூக் ஷீஹி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, பிரித்தானிய நாடுகளை விட அவுஸ்திரேலியாவின் மாணவர் விசா கட்டணம் உயர்ந்துள்ளது.

இதேவேளை கடந்த மார்ச் மாதம் வெளியான தரவுகளின் படி, கடந்தாண்டு செப்டம்பர் வரை அவுஸ்திரேலியாவில் குடியேறுபவர்கள் 60 வீதத்தால் உயர்ந்து 5 இலட்சத்து 48 ஆயிரத்து 800 பேரை எட்டியுள்ளதாகத் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வருடத்திற்குள் மட்டும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த 239 இந்திய மீனவர்கள் 32 படகுகளுடன் கைது !

Sea Of Sri Lanka எனும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்கள் 25 பேர் வடக்கு கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது மீனவர்களின் 4 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர், கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறைக்கு அழைத்து வந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் Sea Of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த 239 இந்திய மீனவர்கள் 32 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் நேற்றிரவு(30) இராமேஸ்வரத்தில் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்ய சென்ற கடற்படை வீரரொருவர் உயிரிழந்தமை தொடர்பில் இந்திய அரசாங்கத்திடம் இலங்கை அரசாங்கம் தமது அதிருப்தியை வௌியிட்டுள்ளது.

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஷெனுக செனவிரத்ன இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கரை சந்தித்தபோது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்தது.

இந்த வி்டயம் தொடர்பில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் அறிவித்ததாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.