19

19

மௌனம் சம்மதமல்ல: “எனது வீட்டை அடித்து நொருக்கி எரித்து என்னை யாழில் இருந்து விரட்டியது டொக்கடர் சத்தியமூர்த்தி அல்ல, மெடிகல் மாபியா” டொக்டர் ஜெயகுமரன்

யாழில் புற்றுநோய் மருத்துவ நிபுணர் ஜெயகுமரன் வீட்டை அடித்து நொருக்கி கழிவு எண்ணை ஊற்றி தன்னை விரட்டியது டொக்டர் த சத்தியமூர்த்தி அல்ல என்று டொக்டர் நடராஜா ஜெயகுமரன் இன்று யூலை 19 இணையத்தளப் பதிவில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே சமூகவலைத் தளங்களில் பரவியுள்ள இந்தத் தவறான செய்தியால் தன்னுடைய நன்மதிப்பு பாதிக்கப்பட்டதுடன் தனக்கு அச்சுறுத்தல்களும் ஏற்பட்டுள்ளதாக டொக்டர் சத்தியமூர்த்தி தேசம்நெற்றுக்கு அனுப்பிய குறும் செய்தியில் இன்று யூலை 19 குறிப்பிட்டுள்ளார்.

நேற்று யூலை 18 மாலை கப்பிடல் தொலைக்காட்சியின் அதிகாரம் நிகழ்வுக்கு நேரடியாக வந்து நேர்காணல் வழங்கிய மகரகம தேசிய புற்றுநோய் மருத்துவ நிபுணர் நடராஜா ஜெயகுமரன், நேர்கண்ட நிகழ்ச்சித் தொகுப்பாளர் சியா உல் ஹஸ்ஸன் 2012இல் வீட்டை அடித்து நொருக்கி எரித்தமை தொடர்பாக அழுத்திக் கேட்டதுடன் டொக்டர் சத்தியமூர்த்தியுடைய பெயரையும் அழுத்தமாகக் குறிப்பிட்டார். அப்போது டொக்டர் நடராஜா ஜெயகுமரன் மௌனமாகவே இருந்தார். அந்த ஒளிப்பதிவு டொக்டர் சத்தியமூர்த்தியே டொக்டர் ஜெயகுமரனை வெளியேற்றியத்தின் பின்னணியில் இருந்தார் என்பதை உருவகப்படுத்தியது.

டொக்கடர் அர்ச்சுனாவின் பிரச்சினை கொழுந்துவிட்டு எரிகின்ற நிலையில், அர்ச்சுனாவும் டொக்டர் சத்தியமூர்த்திக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்களை வைத்துள்ள நிலையில், டொக்டர் சத்தியமூர்த்தி மிகத் தவறாக குற்றம்சாட்டப்பட்டார். நேர்காணலை மேற்கொண்ட சியா உல் ஹஸ்ஸனோ அல்லது புற்றுநோய் நிபுணரோ இரு மணிநேரம் வரை நீடித்த நேர்காணலில் இதனைத் தெளிவுபடுத்தத் தவறியிருந்தனர்.

இந்நிகழ்ச்சி டொக்டர் சத்தியமூர்த்தி புற்றுநோய் நிபுணர் நடராஜா ஜெயகுமரன் அவர்கள் தொழில்முறைக்கு மாறாக தான் சிகிச்சை அளித்த நோயாளிகளை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புகின்றார் என்று இவ்வாண்டு மே மாதம் குற்றம்சாட்டி எழுதப்பட்ட கடிதம் தொடர்பாகவே அமைந்தது. அச்சமயத்தில் டொக்டர் அர்ச்சுனாவின் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை ஊழல்கள் அம்பலப்படுத்தியதையும் சுட்டிக்காட்டி, தானும் யாழில் இருந்து வலிந்து துரத்தப்பட்டதை புற்றுநோய் நிபுணர் நடராஜா ஜெயக்குமரன் அந்நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த உரையாடல்களுக்கு மத்தியில் தனது வீடு அடித்து, நொருக்கி, எரிக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும், அதனால் யாழில் இருந்து வெளியேறியதாகவும் புற்றுநோய் நிபுணர் ஜெயகுமரன் குறிப்பிட்டார். இந்தப் பின்னணியில் அந்த வீடு உடைக்கப்பட்ட பிரச்சினைக்கும் டொக்டர் சத்தியமூர்த்தியுடைய கடிதமும் தொடர்புபடுத்தப்பட்டதுடன் டொக்டர் சத்தியமூர்த்தி வீடுடைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபடுவதாக அந்த நேர்காணல் நகர்ந்தது. இது தொடர்பில் புற்றுநோய் நிபுணர் ஜெயகுமரன் மௌனமாகவே இருந்தார். இதுவே டொக்டர் சத்தியமூர்த்தி மீது இந்த வீண்பழி விழக் காரணமானது.

ஆனால் அதனைத் தற்போது தெளிவுபடுத்தியுள்ள டொக்டர் ஜெயகுமரன், என்னை விரட்டியடித்ததும் எனக்கு தவறான முறையில் கடிதம் அனுப்பியதும் இரு முற்றிலும் வேறுபட்ட சம்பவங்கள் என்றும் மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட வேண்டாம் என்று கேட்டுள்ளார்.

அந்நேர்காணலில் யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் புற்றுநோய் நிபுணராகக் கடமையாற்றிய தன்னை, ஊழல்களை வெளிப்படுத்தியதற்காக, உயிர் அச்சுறுத்தல் கொடுத்து வீட்டை அடித்து நொருக்கி எரித்து யாழில் இருந்து விரட்டி அடித்தனர் யாழ் மருத்துவ அதிகாரிகள் எனக் குற்றம்சாடினார் புற்றுநோய் மருத்துவ நிபுணர் ஜெயகுமரன். 2004 முதல் 2012 யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றிய இவர் அங்கு நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டுவந்ததால் தனக்கு எதிராக கடுமையாகவும் மோசமாகவும் நடந்து கொண்டதாக கபிடல் தொலைக்காட்சியின் அதிகாரம் நிகழ்வில் தெரிவித்தார். சம்பந்தப்பட்டவரின் பெயரைச் சொல்வதற்கே அருவருப்படைந்த டொக்டர் ஜெயகுமரன், பதவியைக் குறிப்பிட்டே இந்த விமர்சனத்தை வைத்தார். நேர்கண்ட சியா உல் ஹஸ்ஸன் டொக்டர் சத்தியமுமூர்த்தியின் பெயரைக் குறிப்பிட்டு இக்குற்றச்சாட்டை வைத்த போது டொக்டர் ஜெயக்குமரன் மௌனமாக இருந்தார். மௌனம் சம்மதமாக பார்வையாளர்களால் விளங்கிக்கொள்ளப்பட்டது.

தனது குடும்பத்தையும் இவர்கள் வன்முறையால் அச்சுறுத்தியதால் தன்னால் மேற்கொண்டு அங்கு பணிபுரிய முடியவில்லை என்றும் அதனைத் தொடர்ந்து மகரகம தேசிய புற்றுநோய் மருத்துவமனை – அபேஸ்கா வில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக புற்றுநோய் சிகிச்சை நிபுணராக அவர் கடமையாற்றி வருவதாகவும் டொக்டர் ஜெயகுமரன் அதில் தெரிவித்தார்.

யாழ் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் டொக்டர் அர்சுனாவால் அம்பலத்துக்கு வந்ததையடுத்து யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் தனது சகோதரன் இராசரத்தினம் பிரகாஸ் இரத்தப் போக்கை கட்டுப்படுத்தும் முதலுதவிச் சிகிச்சை கூட வழங்கபடாமல் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அங்கும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படாமல் எட்டு மணி நேரத்துக்குப் பின் இரத்தப்போக்கால் உயிரிழந்த செய்தி யூலை 14 தேசம்நெற் இல் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் உள்ள புற்றுநோய் மருத்துவ நிபுணர் டொக்டர் கிருசாந்தி தங்களது தந்தையர்களுடைய புற்றுநோய்யை குணமாக்குவதிலோ நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதிலோ எவ்வித அக்கறையும் காட்டவில்லை என கொடிகாமம், சுன்னாகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு ஆண்மகன்கள் நேரடிச்சாட்சியமளித்தனர். இவர்கள் மகரகமையில் டொக்டர் நடராஜா ஜெயகுமரனின் சிகிச்சையால் தங்கள் தந்தையர் குணமமைந்ததாகவும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை நம்பியிருந்திருந்தால் தங்கள் தந்தையர்கள் உயிரோடு இருந்திருக்க மாட்டார்கள் என்றும் மகன்மார் தெரிவித்தனர்.

புற்றுநோய்க்குள்ளான நோயாளியின் கணவர் தன்னுடைய மனைவிக்கு நடந்த கொடுமையை விபரிக்கையில் “ஆறாவது தடவை மருந்து ஏற்றும் காலம் தவறிவிட்டது” என்று டொக்டர் கிருசாந்தி தெரிவித்து இருக்கிறார். “அப்ப என்ன செய்யலாம் டொக்டர்?” என்று கணவர் கேட்க, “வீட்டை கூட்டிக்கொண்டு போய் நாளைக் எண்ணிக்கொண்டிருங்கோ” என்று அலட்சியமாக அதிகாரத்தோரணையில் தெரிவித்ததாக அக்கணவர் கண்கலங்கியவாறு தெரிவித்தார். அதன் பின் இந்தியா அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று மீண்டும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்குச் சென்ற போது “எங்கேயோ எல்லாம் போய் நீங்கள் ரீட்மன்ட் எடுத்திட்டு வாறத பார்க்கவோ நான் இங்க இருக்கிறன்” என்று டொக்டர் கிரிசாந்தி தெரிவித்ததாக அக்கணவர் தெரிவித்தார். மேலும் சிகிச்சைக்கு வந்து உதவும்படி கேட்ட போதும் டொக்டர் கிருசாந்தி மறுத்துள்ளார். எல்லாம் கையறுந்த நிலையில் மகரகம புற்றுநோய் மருத்துவ நிலையத்துக்குச் சென்றபோது காலம் கடந்துவிட்டது. அங்கும் புற்றுநோயாளர்கள் எண்ணிக்கை கூடுதாலக இருந்ததால் பாதிக்கப்பட்ட பெண் சிஅங்கு மரணத்தை தழுவினார்.

டொக்டர் ஜெயக்குமரனின் நன்மதிப்பை அறிந்து பலர் யாழில் இருந்து மகரகம சென்று சிகிச்சை எடுக்கின்றனர். முக்கிய சிகிச்சைகள் முடிவடைந்து குணமானவர்கள் ஊர் திரும்பியபின் வழமையான பரிசோதணைகளை யாழ் தெல்லிப்பளையில் செய்யும்படி மகரமக வைத்தியசாலை கடிதம் கொடுத்து விட்டால், யாழ் தெல்லிப்பளையில் இந்த நோயாளிகளை சிகிச்சை அளிக்காமல் அவர்களை அலைச்சலுக்கு உள்ளாக்குவதாக டொக்டர் நடராஜா ஜெயக்குமரன் தெரிவிக்கின்றார். இது தொடர்பில் டொக்டர் சத்தியமூர்ந்தி உட்பட ஐவர் கையெழுத்திட்டு டொக்டர் நடராஜா ஜெயகுமரனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் அவர் தேவையற்ற விதத்தில் தன்னுடைய நோயாளிகளை தங்களுக்கு அனுப்பி வைப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஒவ்வொரு நோயாளிக்கும், தனக்கு பொருத்தமான வசதியான இடத்தில் சிகிச்சையைப் பெறுவதற்கு முழு உரிமையும் உண்டு. அரசாங்கம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கே மருத்துவர்களுக்கு சம்பளம் வழங்குகிறது. ஆனால் டொக்டர் சத்தியமூர்த்தி சிகிச்சை முடிவின்பின் மேலதிக சிகிச்சைகளை யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் யாழில் வழங்குவதற்கு ஏன் மறுப்புத் தெரிவிப்பது நோயாளர்களுக்கு மிகுந்த கஸ்டத்தையும் செலவீனத்தையும் ஏற்படுத்துகின்றது. இவர்கள் மருத்துவத்துறையை அபிவிருத்தி செய்வதற்குப் பதிலாக அங்குள்ள கண்ணியமான கறைபடியாத மருத்துவர்களை அதிகாரிகளை விரட்டுவதிலும் யாழ் நோக்கி வரும் சிறந்த மருத்துவர்களை அதிகாரிகளை விரட்டுவதிலுமே குறியாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் வலுவடைந்து வருகின்றது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் என்ன நடந்ததோ அதுவே தனக்கு 2012 இல் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நிகழ்ந்தது என்கிறார் டொக்டர் நடராஜா ஜெயக்குமாரன். தான் தொடர்ச்சியாகவே இந்த டொக்டர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட ஐவர் கையொப்பமிட்ட கடிதம் வந்ததாகவும் அவர் தெரிவித்தார். டொக்டர் அர்ச்சுனாவை மிரட்டுகின்ற மருத்துவ மாபியாக்களே டொக்டர் ஜெயகுமரனை யாழில் இருந்து வெளியேற்றுவதிலும் ஈடுபட்டிருந்தது. 2012இல் சமூகவலைத்தளங்கள் ஆதிக்கம் பெற்றிருந்தால் தானும் டொக்டர் அர்ச்சுனா போன்றே செயற்பட்டிருப்பேன் என்றார் புற்றுநோய் மருத்துவ நிபுணர் ஜெயகுமரன்.
கபிடல் தொலைக்காட்சியின் தவறான திசைதிருப்பும் நேர்காணலை அடிப்படையாகக் கொண்டு செய்தி வெளியிட்டவர்கள் தற்போது செய்தியின் உண்மைத் தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்துவது அவசியம். மகரகம புற்றுநோய் மருத்துவநிபுணர் நடராஜா ஜெயகுமரனின் வீடு அடித்து நொருக்கப்பட்டு கழிவு எண்ணையும் ஊற்றப்பட்டது என்பது முற்றிலும் உண்மை. அது அவர் அங்கு நடைபெற்ற ஊழலை வெளிக்கொணர்ந்ததால் அதற்கான பழிவாங்கலாக மருத்துவ மாபியாக்களால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் டொக்டர் ஜெயக்குமரனின் வீடு தாக்கப்பட்டு அவர் யாழில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கும் டொக்டர் சத்தியமூரத்திக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்ற உண்மை பதிவுசெய்யப்பட வேண்டும்.

விஷ ஜந்து கடிக்குள்ளான நபருக்கு சிகிச்சை செய்ய யாருமில்லாத நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

விஷ ஜந்து கடிக்குள்ளான தனது தந்தையை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு (Chavakachcheri Base Hospital) கொண்டு சென்ற வேளை அங்கு சிகிச்சை வழங்குவதற்கு யாரும் இருக்கவில்லை என நபர் ஒருவர் சமூக வலைதளத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த தகவலை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (Sri Lanka Human Rights Commission) யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் கடந்த 17.07.2024 அன்று இரவு விஷ ஜந்து கடிக்குள்ளான தனது தந்தையினை சிகிச்சைக்காக கொண்டு சென்ற வேளையில் மருத்துவமனையில் இரவு மருத்துவர்களோ, தாதியர்களோ இருக்கவில்லை.

இந்நிலையில் யாரும் அங்கு இல்லாத காரணத்தினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் செய்திகள் பிரசுரிக்கப்பட்டன.

செய்தி தொடர்பில் 1996 ஆம் ஆண்டு 21 இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 14 இற்கு அமைய, ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையாக பதிவுசெய்யப்பட்டு சாவகச்சரி ஆதார வைத்திசாலையின் பதில் மருத்துவ அத்தியட்சகர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணம், மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வடக்கு மாகாணம் ஆகியோரிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த விளக்க அறிக்கையை எதிர்வரும் 22.07.2024 இற்கு முன் சமர்ப்பிக்க பணிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளார்.

மகாவன்ச வரலாற்று நூல்கள் அடங்கிய தொகுப்பு உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிப்பு !

பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள இலங்கையின் வரலாற்றின் முக்கிய ஆதாரமான மகாவன்ச வரலாற்று நூல்கள் அடங்கிய தொகுப்பு உலக பாரம்பரியச் சின்னமாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த விழாவுக்கு பிரதம விருந்தினராக யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசுலே (Audrey Azoulay) கலந்து கொண்டார்.

யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகத்தினால் மகாவன்சத்தை உலக மரபுரிமைச் சின்னமாக பிரகடனப்படுத்துவதற்கான சான்றிதழ் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் ஜி.எச்.பீரிஸிடம் கையளிக்கப்பட்டது.

 

அத்துடன், பல்கலைக்கழகத்துகு்கு விஜயம் செய்ததைக் குறிக்கும் வகையில் பிரதி வேந்தர் பேராசிரியர் எம்.டி.லமவன்ச, பணிப்பாளர் நாயகத்திற்கு நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கி வைத்தார்.

மகாவம்சம் நூலானது பல பாகங்களை கொண்ட இலங்கையின் தொடர்ச்சியான வரலாற்று மூலதாரமாகும். அதேவேளை மகாவம்சத்தில் கூறப்படும் ஒருபக்க சார்பான – பௌத்த மதத்திற்கு ஆதரவான கருத்துக்களே இன்று வரை இலங்கையில் நீளும் தமிழர் – சிங்களவர் பிரச்சினைகளுக்கான அடிப்படையை இட்டுக்கொடுத்தது என தமிழ் வரலாற்று பேராசிரியர்கள் குறிப்பிடுவதும் கவனிக்கத்தக்கது.

புலிப்பயங்கரவாதிகள் கூட போர்க்காலத்தில் பாடசாலைகளை மூடவில்லை ஆனால் இன்று ஆசிரியர் சங்கங்கள் கண்மூடித்தனமாக பாடசாலைகளை மூடுகிறது – அமைச்சர் மனுஷ நாணயக்கார

 

இந்த நாட்டில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் பயங்கரவாத அமைப்பாக இருந்த போதிலும், முப்பது வருடகால யுத்தத்தின் போது பாடசாலைகளை மூடுவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்கவில்லை, ஆனாலும் யுத்த சூழலில் இருந்த ஆசிரியர்கள் பதுங்கு குழிக்குள் அமர்ந்து பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கினார்கள்.

 

இன்றைய தொழிற்சங்கங்கள் தமது அரசியல் நலன்களுக்காக 10,000 பாடசாலைகளை மூடுவது வீரமாக கருதுகின்றனர் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்

 

களுத்துறை மாவட்டத்துக்கான ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (18) மத்துகம பொது விளையாட்டரங்கில் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது .

 

இங்கு தொடர்ந்தும் பேசிய அமைச்சர்

 

வடக்கில் விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பாக இருந்து 30 வருடங்களாக யுத்தம் இடம்பெற்ற போதும் பாடசாலைகளை மூட அனுமதிக்கவில்லை. ஆசிரியர்கள் வடிகால்களை வெட்டி பீப்பாய்களுக்குள் வைத்து குழந்தைகளுக்கு கற்பித்தார்கள்.

 

தற்போதைய சூழலில் ஆசிரியர்களாகவும் தெய்வங்களாகவும் கருதப்பட்ட ஆசிரியர்களின் கௌரமும் மரியாதையும் கெட்டுவிட்டது.

 

பாடசாலைக்குச் சென்றிடாத அகில இலங்கை ஆசிரியர் சங்கங்களின் தலைவர் ஸ்டாலின், மஹிந்த ஜயசிங்கவின் அரசியல் நலன்களுக்காக கௌரவமான அதிபர்களையும் ஆசிரியர்களையும் பயன்படுத்தி இலவசக் கல்விக்கு பாரிய களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார் நாட்டில் 10,000 பாடசாலைகளை மூடியதுதான் இவர்களின் செயற்திறமையாகும் .

“இன்று நாங்கள் நிற, கட்சி வேறுபாடின்றி ஒரே அரசில் இணைந்து செயற்படுகின்றோம் அவ்வாறே இன்று அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் அரசியல் பற்றி சிந்திக்காமல் ஒன்றிணைந்துள்ளனர் – நாட்டையும் வீழ்ந்த நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முழு நாட்டு மக்களும் பாரிய இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர் அன்றே அந்தக் கொள்கைகளை மாற்றிய பிறகு, கொரியா மீண்டும் IMF க்கு செல்லாத நாடாக முன் வந்தது.

 

இன்று இலங்கையும் அந்தப் பயணமும் ஆரம்பமாகிவிட்டது. எங்களுக்கு கட்சி அரசியல், இனம், மதம், சாதி, நிறம் எதுவும் வேண்டாம். நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்துக்கு நாடு வந்துள்ளது ஆனால் இன்று இந்த மக்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தம்மைத் தியாகம் செய்து, சிரேஷ்ட அமைச்சர்கள் தமது அமைச்சுக்களைக் கூட தியாகம் செய்து, நாட்டுக்காக அனைவரும் ஒன்றிணைந்த ஒரு பயணமாகும்

 

புலம்பெயர்ந்த தொழிலாளிகள் பன்னிரண்டு பில்லியன் அமெரிக்கா டொலர்களை நாட்டுக்கு அனுப்பி வைத்து வீழ்ந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு பாரிய பங்களிப்பை செய்தார்கள்.

 

இவ்வாறு நாட்டுக்கு பங்களிப்பு செய்துள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே 100,000 தொழில்முனைவோரை நாம் உருவாக்குவோம்.அதற்கான வாய்ப்பு தற்போது எமக்கு கிடைத்துள்ளது அதாவது எமது நாட்டில் முதலீடு செய்ய கொரியா, ஜப்பான், இஸ்ரேல், மத்திய கிழக்கு மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் இருந்து தொழில் முனைவோர் வந்துள்ளனர் என அமைச்சர் தெரிவித்தார்.

“வெளிநாடுகளிலுள்ள இலங்கை பிரஜைகள், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்த வேண்டும்” – மீனாக்ஷி கங்குலி

“வெளிநாடுகளிலுள்ள இலங்கை பிரஜைகள், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்த வேண்டும்” என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பிரதி இயக்குநர் மீனாக்ஷி கங்குலி வேண்டுகோள் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை முடிவிற்கு கொண்டுவருவதாக, அரசாங்கம் உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அதிகாரிகள் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை தமது எதிராளிகளுக்கு எதிராகப் பயன்படுத்துவதாகவும் மீனாக்ஷி கங்குலி இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்.

குறிப்பாக நாட்டின் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராகவே பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்த அவர் கடந்த காலத்தில் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக நாட்டில் சிறியளவு முன்னேறங்கள் ஏற்பட்டிருந்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 10 குடும்பங்களில் 4 குடும்பங்கள் நாளாந்த உணவுக்கு திண்டாடுகின்றன – ஐக்கிய நாடுகள் சபை

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை படிப்படியாக மீண்டுவருகின்ற போதிலும், நாடளாவிய ரீதியில் 10 குடும்பங்களில் 4 குடும்பங்கள் தமது அன்றாட வாழ்வாதார மற்றும் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு பல்வேறுபட்ட மாற்று வழிமுறைகளைக் கையாண்டு வரும் நிலை தொடர்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கை அண்மைக்காலமாக காலநிலைமாற்ற சவால்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும், அதிகரித்த வெப்பநிலை மற்றும் உயர்வான வெப்பம் என்பன மக்களின் ஆரோக்கியத்திலும், விவசாய நடவடிக்கைகளிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் உலக உணவுத்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

“பிரச்சினை இருக்கு ஆனா இல்ல. அவை விசயம் தெரியாம (தென்மராட்சியாருக்கு கொஞ்சம் அறிவு குறைவு) பெரிசாக்கி கதைக்கினம்” புளொட் தலைவர் த சித்தார்த்தன்

 

வடக்கின் சுகாதார நிலைகள் பற்றிக் கேட்டறிய நேற்று யூலை 18 சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண யாழ் விஜயம் மேற்கொண்டிருந்தார் அங்கு அவரைச் சந்தித்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் புளொட் தலைவர் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சி சார்பில் எஸ் சிறிதரன், சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ராமநாதன் அங்கஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆனால் இவர்கள் வடக்கில் மக்களுக்கு சுகாதாரப் பிரச்சினைகளோ, பாதிப்போ இருப்பதாக எதுவும் குறிப்பிடவில்லை.

 

மாறாக புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்ற போது ரமேஸ் பத்திரணவின் தந்தைக்கு புகழாரம் சூட்டியதோடு தங்களுடைய பிரதேசத்துக்கு வந்ததற்கும் நன்றியும் தெரிவித்தார். தென்மராட்சி மக்களும் மற்றவர்களும் ஏதோ விசயம் தெரியாமல் கொஞ்சம் எல்லாத்தையும் பெருப்பித்துப் போட்டினம். பிரச்சினை இருக்குத் தான். ஆனா பிரச்சினை இல்லை” என்று மிகத் தெளிவாக மிக உறுதியாக சிரித்து சில்லெடுத்தார். இலங்கையில் உள்ள முதகெலும்பற்ற பிரயோசனமற்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்று பெயரெடுத்த சித்தார்த்தனுக்கு ஊன்றுகொலாக பா உ சிறிதரனும் அங்கு வந்திருந்தார். பக்கத்தில் உள்ள தென்மராட்சி மக்களின் குரலுக்கு செவிமடுக்காத எஸ் சிறிதரன், லண்டனில் தனது மகனை படிப்பிக்கும் கோயில்காரரின் தேருக்கு லண்டனுக்கு காவடி எடுக்கின்றார். பா உ எஸ் சிறிதரன் லண்டன் வந்தால் அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போராட்டம் ஒன்றை நடத்த லண்டனில் வாழும் தென்மராட்சி மக்களும் அவர்களின் நண்பர்களும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிபேதமில்லாமல் தென்மராட்சி மக்களதும் தமிழ் மக்களதும் முதகில் குத்திவிட்டதாக கிளிநொச்சியில் வாழும் மனிதஉரிமைப் பாதுகாவலர், செயற்பாட்டாளர் த கிருஷ்ணன் தேசம்நெற்க்கு யூலை 18 வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார். பா உ க்கள் எஸ் சிறிதரன், எம் சுமந்திரன், த சித்தார்த்தன், ராமநாதன் அங்கஜன், செல்வம் அடைக்கலநாதன், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரும் அவர்களது கட்சிகளும் தாங்களுக்கு தமிழ் மக்களது அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளில் அக்கறையில்லை என்பதை மிகத் தெளிவாகக் காட்டிவிட்டார்கள் என த கிருஷ்ணன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

யாழ்ப்பாண வைத்தியசாலை ஐரோப்பிய வைத்தியசாலைகளின் தரத்தில் இருப்பதாக ரமேஸ் பத்திரண தெரிவித்ததை வேடிக்கையாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். இப்பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ அவர்களது குடும்பத்தினருக்கோ இனிமேல் வயிற்றுவலி வந்தால், பாம்பு கடித்தால், பல்லுக் கொதித்தால், நெஞ்சு நொந்தால், பிள்ளைப்பேறு என்றால் அருகில் உள்ள ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும். அந்த டொக்டர் கையெழுத்துப் போட்டுவிட்டு ப்ரைவேட்டுக்கு போயிருந்தால், அவர் வரும்வரை இவர்கள் காத்திருக்க வேண்டும். அப்படி வந்து பார்த்து சரிவராது என்று சொன்னால் நீங்கள் யாழ்ப்பாணம் போதனா வைதியசாலைக்கு கொண்டு போய் உயிர் தப்பி வந்து சொல்லுங்கோ. “பிரச்சினை இருக்கு ஆனா இல்ல. தென்மராட்சியாருக்கு கொஞ்சம் அறிவு குறைவு அவை விசயம் தெரியாம கதைக்கினம்” என்று புளொட் சித்தார்த்தனும் சிறிதரனும் அங்கஜனும் சொல்றதை நாங்களும் ஏற்றுக்கொள்வோம்.

முதல்ல பென்ஸ்காரை குவிச்சு வைத்துக்கொண்டு சைக்கிள் சின்னத்தில தமிழ் தேசியம் பேசிய பொன்னம்பலம் கஜேந்திரகுமாரை ஐரோப்பிய தரத்தில் இருக்கிற யாழ் தேசிய மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை அளியுங்கள். இனிமேல் வடக்கில இருக்கின்ற ஒரு பாரளுமன்ற உறுப்பினரும் அரசாங்க வைத்தியசாலையைத் தவிர வேறு தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லக்கூடாது. உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு எதற்கு உரிமை இருக்கிறதோ அதுதான் உங்களுக்கும்.