சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்காக அதிகரித்த அவுஸ்திரேலியா !

சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

அதன்படி, 710 அவுஸ்திரேலிய டொலராக இருந்த விசா கட்டணம் தற்போது 1,600 டொலராக அதிகரித்துள்ளது.

இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் தலைமையிலான அரசாங்கம், மாணவர்களின் இடம்பெயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தக் கட்டண உயர்வை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விசா கட்டண உயர்வு, சர்வதேச கல்வி முறையின் தரத்தை மேம்படுத்தவும், இடம்பெயர்வை குறைக்கவும், சிறப்பாகவும் மாற்ற அவுஸ்திரேலியாவிற்கு உதவும் என, அவுஸ்திரேலிய உட்துறை அமைச்சர் கிளேர் ஓநீல் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த முடிவு சர்வதேச மாணவர்களின் கல்விக் கட்டணத்தை நம்பியுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் பொருளாதாரம் இரண்டுக்கும் உகந்ததல்ல என, அவுஸ்திரேலிய பல்கலைக்கழகக் குழுவின் தலைவர் லூக் ஷீஹி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, பிரித்தானிய நாடுகளை விட அவுஸ்திரேலியாவின் மாணவர் விசா கட்டணம் உயர்ந்துள்ளது.

இதேவேளை கடந்த மார்ச் மாதம் வெளியான தரவுகளின் படி, கடந்தாண்டு செப்டம்பர் வரை அவுஸ்திரேலியாவில் குடியேறுபவர்கள் 60 வீதத்தால் உயர்ந்து 5 இலட்சத்து 48 ஆயிரத்து 800 பேரை எட்டியுள்ளதாகத் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *