November

November

“மோசடியாளர்களின் பக்கமே நான் என்பதை ஜனாதிபதி ரணில் உறுதிப்படுத்தியுள்ளார்.” -விமல் வீரவன்ச

மோசடியாளர்களின் பக்கமே நான் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதிப்படுத்தியுள்ளார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (28)  இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசாங்கத்துக்கும் நாட்டு மக்களுக்கும் இடையிலான தொடர்பு ஒப்பந்த செயலாற்றுகை எந்தளவுக்கு உறுதியாக காணப்படுகிறதோ அந்த அளவுக்கு அரச நிர்வாகம் வினைத்திறனாக இருக்கும் என்று ஆளும் தரப்பின் உறுப்பினர் குறிப்பிடுகிறார்.

அரசாங்கத்துக்கும், நாட்டு மக்களுக்கும் இடையிலான தொடர்பு இன்று பலமாக உள்ளதா அல்லது பலவீனமடைந்துள்ளதா,

என்பதை சற்று ஆராயுங்கள். கிரிக்கெட் துறையின் ஊழல் மோசடியை வெளிப்படுத்தி,தற்றுணிவுடன் செயற்பட்டதால் விளையாட்டுத்துறை,இளைஞர் விவகாரம் மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சு பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டார்.

கோட்டபய ராஜபக்ஷவின் நிர்வாகம் மோசமானது என்று குரல் எழுப்பப்பட்டதால் தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி மகுடம் சூட்டப்பட்டது. ஆனால் இன்று அனைத்தும் தலைகீழாக உள்ளது. போராட்டத்தின் ஊடாக ஜனாதிபதி மகுடம் சூடிய ரணில் விக்கிரமசிங்க தனது உண்மை முகத்தை நேற்று (நேற்று முன்தினம்) காண்பித்துள்ளார்.

ஊழல் மோசடி தொடர்பில்  கருத்துரைத்தவரை பதவி நீக்கி விட்டு,ஊழல்வாதிகள் பக்கம் ஜனாதிபதி அமர்ந்துள்ளார். இவ்வாறான நிலையில் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான தொடர்பு ஒப்பந்தம் எவ்வாறு பாதுகாக்கப்படும்.

பொருளாதார பாதிப்பு தொடர்பில் கவனம் செலுத்தாமல் சிறுப்பிள்ளை போல் கடந்த அரசாங்கம் செயற்பட்ட போது தவறுகளை சுட்டிக்காட்டினோம். குறிப்பிட்ட விடயத்தை ஆராயாமல் அப்போதைய  ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ என்னையும், உதய கம்மன்பிலவையும் அமைச்சு பதவியில் இருந்து நீக்கினார்.

அதுவே அவரது அரசாங்கத்தின் அழிவுக்கு ஆரம்ப புள்ளி வைத்தது. அரசாங்கத்துக்கும், மக்களுக்குமிடையிலான தொடர்பு முறிந்தது. இந்த அரசாங்கத்தின் அழிவு ரொஷான் ரணசிங்கவை அமைச்சு பதவியில் இருந்து நீக்கியதுடன் ஆரம்பமாகியுள்ளது.

ஊழல்வாதிகளுக்கு சார்பாகவே நான் செயற்படுவேன் என்பதை ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார்.பொதுஜன பெரமுனவினர் ஆட்சியதிகாரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைத்து விட்டு அரச நிர்வாகம் முறையாக இடம்பெறுகிறது என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.வெகுவிரையில் அதன் பிரதிபலனை அவர்கள் பெறுவார்கள்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.சுமார் 06 இலட்சம் பேரின் மின்விநியோகம்  துண்டிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் 12 இலட்சம் பேருக்கு சிவப்பு எச்சரிக்கை மின்கட்டண படிவம் அனுப்பட்டுள்ளது. மனசாட்சி இல்லாமல் கடுமையான தீர்மானங்களை அமுல்படுத்துதால் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாது.

மின்கட்டண அதிகரிப்பால் சிறு மற்றும் நடுத்தர தொழிற்றுறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.இந்நிலை நீடித்தால் சமூக கட்டமைப்பு மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். அரச சேவையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பளம் அதிகரிப்பதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 20 ஆயிரம் ரூபா  மாதந்தம் வரி அறவிடலுக்கான முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு எவ்விதமான திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை.வரி அறவிடல்  மாத்திரமே அரசாங்கத்தின் பிரதான கொள்கையாக காணப்படுகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 அம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார் என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

தற்போதைய நெருக்கடி சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சர்வதேச நிறுவனங்களில் உயர் பதவியை பெற்றுக்கொள்வார். நாட்டின் எதிர்காலம் குறித்து அவருக்கு அக்கறையில்லை. தற்போதைய தவறான தீர்மானங்கள் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்றார்.

மாவீரர் தினத்தில் புலிகள் அமைப்பினர் போன்று ஆடையணிந்து வந்த சிறுவர்கள் – பெற்றொருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகும் யாழ்ப்பாணம் பொலிஸ் !

தமிழீழ விடுதலைப் புலிகள் போன்று ஆடை அணிந்து சயனைட் போன்றவற்றை கழுத்தில் வைத்து நினைவேந்தலில் ஈடுபட 3 சிறுவர்களை பாவித்தமை தொடர்பில் யாழ் மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் வீசாந்தவின் உத்தரவின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

போரில் உயிரிழந்த விடுதலைப் புலி உறுப்பினர்களை நினைவு கூரும் வகையில் கோப்பாயில் உள்ள துயிலும் இல்லத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுக்காக இந்த மூன்று சிறுவர்களும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்த மூன்று சிறுவர்களின் பெற்றோர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிரபாகரனின் மகள் எனக் கூறப்படும் பெண் – அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன..? – அமைச்சர் பந்துல விளக்கம் !

மாவீரர் தினத்தை முன்னிட்டு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் எனக் கூறப்படும் பெண் ஒருவரின் காணொளியொன்று இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயத்தைக் குறிப்பிட்டு நாட்டின் பாதுகாப்பு குறித்து வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்குப்  பதிலளித்த அமைச்சர் ” தேசிய பாதுகாப்பு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் மீண்டும் இந்த நாட்டில் பயங்கரவாதம் இடம்பெறுவதை நாட்டுமக்கள்  விரும்ப மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன்  நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக் காட்டினார்.

யாழில் 34 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்பு !

யாழ்ப்பாணம் – வடமராட்சி வெற்றிலைக்கேணி வத்திராயன் பகுதியில் 34 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன்  சந்தேக நபரும்  கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை  (28)    இடம்பெற்றதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்  தாளையடி பகுதியை  சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படை மற்றும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட 03 பிளாஸ்டிக்  பரல்களில் அடைக்கப்பட்டிருந்த 17 பொதிகளில் கேரள கஞ்சா மீட்கப்பட்டது.

கண்டுபிடிக்கப்பட்ட கேரள கஞ்சா சுமார் 34 கிலோ 400 கிராம் எடை கொண்டது எனவும் மொத்த மதிப்பு 13 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தாலியில் மூளைச்சாவடைந்த இலங்கையர் ஒருவரின் உறுப்புக்கள் தானமாக வழங்கப்பட்டன !

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூளைச்சாவடைந்த இலங்கையர் ஒருவரின் இரண்டு சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் இரண்டு கண்கள் ஆகியன  அந்நாட்டில் உள்ள நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளன.

image

அவரது மனைவி, தாய் மற்றும் இரு சகோதரர்களின் இணக்கத்துடனேயே  அவரது உடலுறுப்புகள் தானமாக  வழங்கப்பட்டன.

ஷமில பெர்னாண்டோ என்ற 35 வயதுடைய நபரின்  உடல் உறுப்புகளே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளனர்.

இவரது  மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பியதாகவும், இரண்டு சகோதரர்கள் பல வருடங்களாக இத்தாலியில் பணிபுரிவதாகவும்  தெரிய வருகிறது.

 

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு – 37 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்வு !

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஏழாவது நாளாக நேற்றையதினம் (27)  முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினத்துடன் சேர்த்து  37 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர்  ஊடகங்களுக்கு மேலும்  தெரிவித்துள்ளதாவது

“இதுவரை  37 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த வாரத்தில் இடம்பெற்ற விஷேட ராடர் பரிசோதனையின் போது குறித்த மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு நெடுஞ்சாலையின் மையப்புள்ளி வரை விஸ்தரிக்கப்பட்டு செல்வது அவதானிக்கபட்டுள்ளது.

இது சம்பந்தமான முடிவுகள் எதிர்வரும் காலங்களில் நீதிமன்ற நடவடிக்கையின் போது தீர்மானிக்கப்படும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கில்  ஐவர் யாழ்.நீதவான் நீதிமன்றில் சாட்சியம் !

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கில்  ஐவர் யாழ்.நீதவான் நீதிமன்றில் தமது சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் சகோதரன் , தந்தை , இளைஞனை காவல்துறையினர் கைது செய்யும் போது , நேரில் கண்ட இளைஞன் உள்ளிட்ட ஐவரே இவ்வாறு சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர்.

சாட்சி பதிவுகளை அடுத்து வழக்கினை எதிர்வரும் 1ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் , அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கும் உத்தரவிட்டார்.

அதேவேளை பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் , வழக்கின் மூன்றாவது சாட்சியத்தின் அடிப்படையில் ஐந்து காவல் உத்தியோகஸ்தர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நால்வரை மாத்திரமே கைது செய்துள்ளனர்.

ஏன் மற்றையவரை கைது செய்யவில்லை என்று மன்றில் கேள்வி எழுப்பினர்.

அது தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து மற்றைய நபரையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

வட்டுக்கோட்டை காவல்துறையினரால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இளைஞன் உயிரிழந்தது , யாழ்.நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் என்பதனால் , கொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

உயிரிழந்த இளைஞனுடன் கைதான இளைஞனின் சாட்சியத்தின் அடிப்படையில் 04 காவல்துறை உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டு கடந்த சனிக்கிழமை நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களை எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நான்கு காவல் உத்தியோகஸ்தர்களாலும், ஏற்கனவே கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மற்றும் குற்றவாளிகளால் இவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனும் காரணத்தால் நான்கு காவல்துறை உத்தியோகஸ்தர்களும் அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை தூய்மைப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.” – புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரான ரொஷான் ரணசிங்க அமைச்சு பதவியில் இருந்து விலக்கப்பட்டதற்கான காரணத்தை அரச தரப்பு வெளியிட்டுள்ளது.

அதாவது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோருடன் இணைந்து இந்திய உயர்ஸ்தானிகரிடம் கிரிக்கெட் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது ஏன் என ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார்.

வாராந்த அமைச்சரவை சந்திப்பு நேற்று (27) இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு ரொஷான் ரணசிங்கவிடம் ரணில் விக்ரமசிங்க கேட்டுள்ளார்.

மேலும், மகாவலி காணி பகிர்வு அமைச்சராக அவர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தில் முன்மொழியப்பட்ட பெரும்பாலானோரில், அவரது அரசியல் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இருந்தமை ஏன் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியிருந்தார்.

இவ்வாறான சூழலில் ரொஷான் ரணசிங்க ஜனாதிபதியின் கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்களை வழங்காத நிலையில் அவரின் அமைச்சு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

எவருக்கும் எதிராகச் செல்ல தாம் எதிர்பார்க்கவில்லை, உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா உட்பட அனைவரின் உதவியுடன் மீண்டும் கிரிக்கெட் விளையாட்டை “சுத்தம்” செய்ய விரும்புவதாக புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உறுதியளித்துள்ளார்.

புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

“நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை தூய்மைப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) விதித்துள்ள தடையை நீக்குவதன் மூலம் கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருவார்கள் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஐசிசி தடையை ஒரு சில நாட்களுக்குள் விரைவில் மாற்றியமைப்பது மிகவும் முக்கியம்.” என்றார்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்ட சில மணி நேரங்களின் பின்னர், ஹரின் பெர்னாண்டோ நேற்று (27) மாலை அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

“இலங்கை தமிழரிடையே பல குழுக்கள் உள்ளன. அவர்களுள் சிலரே தனிநாட்டை உருவாக்க விரும்பினர்.” – கோவாவில் முத்தையா முரளிதரன் !

உள்நாட்டுப் போரின் போது ஏற்பட்ட இன நெருக்கடியை தமிழக அரசு சரியாகப் புரிந்துகொள்ளத் தவறியதன் காரணமாகவே தேசத் துரோகம் இழைத்ததாக தன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.

இந்திய சர்வதேச திரைப்பட விழாவுடன் இணைந்து நேற்று (26) கோவாவில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அன்றைய இலங்கையின் உண்மை நிலவரத்தை தமிழக அரசு புரிந்து கொள்ளத் தவறிவிட்டது என்று கூற தாம் அஞ்சப்போவதில்லை என்று கூறிய முத்தையா முரளிதரன், அதற்குக் காரணம் தமிழகத்திற்கும் இலங்கைக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன என குறிப்பிட்டார்.

இலங்கை தமிழ் சமூகத்தில் பல்வேறு துணைகுழுக்கள் உள்ளன. எல்லா குழுக்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை ஆனால் அவை அரசியல் ரீதியாக பிளவுபட்டுள்ளன என்று முரளிதரன் கூறினார்.

அந்தக் குழுக்களில் உள்ள சிலர் இலங்கையின் ஒரு பகுதியை பிரித்து தனி நாட்டை உருவாக்க விரும்புவதாகவும், ஆனால் பலர் அவ்வாறு செய்ய விரும்பவில்லை எனவும் முரளிதரன் தெரிவித்தார்.

‘வடக்கு, கிழக்கில் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த காணிகள் இருந்தால் அதனை அடையாளப்படுத்த நடவடிக்கை.” – அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததாக அடையாளப்படுத்தப்படும் அனைத்து இடங்களையும் அவர்களுக்கே மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மக்களின் காணி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எங்களுடைய வரைபடத்தில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த காணிகள் இருந்தால் அதனை அடையாளப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். ஜனாதிபதியின் ஆலோசனையின் படி நான் சமர்ப்பித்துள்ள அமைச்சரவை பத்திரத்துக்கு அமைய அந்த படங்களை மக்களுக்கே மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதற்கமைய, எனது அமைச்சின் செயலாளர் மற்றும் வனஜீவசாரிகள் திணைக்களத்தின் செயலாளர் நாயகம் ஆகியோர் அந்தந்த மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ளனர். மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ள இவர்கள் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த இடங்கள் எவை என்பது குறித்து முழுமையான தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

அந்த தகவல்களுக்கு அமைய இறுதி அறிக்கையும் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஜனாதிபதி செயலாளரின் தலையிலான குழுவிடம் சமர்ப்பித்து, அதனூடாக காணி ஆணையாளரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பின்னர் அந்த காணிகளை பிரதேச செயலாளரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். இதனைத் தொடர்ந்து உரிய காணியை, காணி உறுதி பத்திரத்துடன் மக்களிடம் வழங்குவோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.