29

29

இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் – மூடப்பட்டுள்ள 40ற்கும் அதிகமான வைத்தியசாலைகள் !

ஆயிரத்திற்கும் அதிகமான வைத்தியர்கள் கடந்த 10 மாதங்களில் மாத்திரம் நாட்டை விட்டு சென்றுள்ளமையினால், நாடளாவிய ரீதியில் 40 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது மேலும் அதிகரித்து 100 வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

இதற்கமைய, குறித்த வைத்தியசாலைகளுக்கு அவசியமான வைத்திய உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்து, சிகிச்சை செயற்பாடுகளை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளரின் தலைமையில் விசேட குழுவொன்றை நியமிக்குமாறும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

 

பிலிப்பைன்ஸில் தங்கம் வென்ற அகிலத்திருநாயகிக்கு யாழில் கௌரவம் !

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற `National Masters & Seniors Athletics` போட்டியில் இலங்கையையின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 72 வயதான அகிலத்திருநாயகி 2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்திருந்தார்.

இந்நிலையில் அகிலத்திருநாயகியை கௌரவிக்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

 

யாழ்.சிறைச்சாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையில் தனி நபர் நிகர கடன்தொகை 1.2 மில்லியன்களாக அதிகரிப்பு !

கடந்த ஆண்டிறுதி நிலவரத்தின் படி (31.12.2022) தனி நபர் நிகர கடன்தொகை 1.2 மில்லியன்களாக அதிகரித்துள்ளதாக பொதுக் கணக்காளர் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அதற்கு முந்தைய ஆண்டு (31.12.2021), 759,471 ரூபாயாக காணப்பட்ட நிலையில், ஒரு வருட காலத்திற்குள் 474,887 ரூபாய் அதிகரிப்பை காட்டியுள்ளது.

இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 62.53% அதிகரிப்பைக் காண்பித்து, தனிநபர் கடன் சுமையினை அதிகரித்திருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சராசரி ஆண்டு மக்கள்தொகையுடன் நாட்டின் மொத்த பொதுக் கடனை ஒப்பிட்டு அறியப்படும் இந்த தனிநபர் நிகரக் கடன் என்பது நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான அளவீடு ஆகும், இது ஒரு அரசாங்கத்தின் கடனின் மதிப்பை அதன் அதிகார வரம்பிற்குள் ஒவ்வொரு குடிமகனுக்கும் கூறப்படும் தொகையின் அடிப்படையில் அளவிடப்படுகிறது.

இந்த எண்ணிக்கையின் அதிகரிப்பு சராசரி இலங்கை குடிமகன் சுமக்கும் நிதிச்சுமையிலும் அதிகரிப்பை ஏற்படுத்துகிறது.

நிகர தனிநபர் கடனின் அதிகரிப்பிற்கு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாங்கும் கடன் தொகையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பே காரணம் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக இலங்கை தனது கடன் சுமைகளை நிர்வகிப்பதிலும், அதன் நிதி கடப்பாடுகளுக்கு ஏற்ப சேவை செய்வதிலும் பல்வேறு சவால்களை எதிர்நோக்குகின்றது.

இது தொடர்பாக பொருளாதார வல்லுநர்கள் கருத்துரைக்கையில் அதிகரித்து வரும் கடன் சுமை நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன்னர் 2012 ஆம் ஆண்டு (31.12.2012) நிகர தனிநபர் கடன் தொகை 264,811 ரூபாயாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“மோசடியாளர்களின் பக்கமே நான் என்பதை ஜனாதிபதி ரணில் உறுதிப்படுத்தியுள்ளார்.” -விமல் வீரவன்ச

மோசடியாளர்களின் பக்கமே நான் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதிப்படுத்தியுள்ளார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (28)  இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசாங்கத்துக்கும் நாட்டு மக்களுக்கும் இடையிலான தொடர்பு ஒப்பந்த செயலாற்றுகை எந்தளவுக்கு உறுதியாக காணப்படுகிறதோ அந்த அளவுக்கு அரச நிர்வாகம் வினைத்திறனாக இருக்கும் என்று ஆளும் தரப்பின் உறுப்பினர் குறிப்பிடுகிறார்.

அரசாங்கத்துக்கும், நாட்டு மக்களுக்கும் இடையிலான தொடர்பு இன்று பலமாக உள்ளதா அல்லது பலவீனமடைந்துள்ளதா,

என்பதை சற்று ஆராயுங்கள். கிரிக்கெட் துறையின் ஊழல் மோசடியை வெளிப்படுத்தி,தற்றுணிவுடன் செயற்பட்டதால் விளையாட்டுத்துறை,இளைஞர் விவகாரம் மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சு பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டார்.

கோட்டபய ராஜபக்ஷவின் நிர்வாகம் மோசமானது என்று குரல் எழுப்பப்பட்டதால் தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி மகுடம் சூட்டப்பட்டது. ஆனால் இன்று அனைத்தும் தலைகீழாக உள்ளது. போராட்டத்தின் ஊடாக ஜனாதிபதி மகுடம் சூடிய ரணில் விக்கிரமசிங்க தனது உண்மை முகத்தை நேற்று (நேற்று முன்தினம்) காண்பித்துள்ளார்.

ஊழல் மோசடி தொடர்பில்  கருத்துரைத்தவரை பதவி நீக்கி விட்டு,ஊழல்வாதிகள் பக்கம் ஜனாதிபதி அமர்ந்துள்ளார். இவ்வாறான நிலையில் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான தொடர்பு ஒப்பந்தம் எவ்வாறு பாதுகாக்கப்படும்.

பொருளாதார பாதிப்பு தொடர்பில் கவனம் செலுத்தாமல் சிறுப்பிள்ளை போல் கடந்த அரசாங்கம் செயற்பட்ட போது தவறுகளை சுட்டிக்காட்டினோம். குறிப்பிட்ட விடயத்தை ஆராயாமல் அப்போதைய  ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ என்னையும், உதய கம்மன்பிலவையும் அமைச்சு பதவியில் இருந்து நீக்கினார்.

அதுவே அவரது அரசாங்கத்தின் அழிவுக்கு ஆரம்ப புள்ளி வைத்தது. அரசாங்கத்துக்கும், மக்களுக்குமிடையிலான தொடர்பு முறிந்தது. இந்த அரசாங்கத்தின் அழிவு ரொஷான் ரணசிங்கவை அமைச்சு பதவியில் இருந்து நீக்கியதுடன் ஆரம்பமாகியுள்ளது.

ஊழல்வாதிகளுக்கு சார்பாகவே நான் செயற்படுவேன் என்பதை ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார்.பொதுஜன பெரமுனவினர் ஆட்சியதிகாரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைத்து விட்டு அரச நிர்வாகம் முறையாக இடம்பெறுகிறது என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.வெகுவிரையில் அதன் பிரதிபலனை அவர்கள் பெறுவார்கள்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.சுமார் 06 இலட்சம் பேரின் மின்விநியோகம்  துண்டிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் 12 இலட்சம் பேருக்கு சிவப்பு எச்சரிக்கை மின்கட்டண படிவம் அனுப்பட்டுள்ளது. மனசாட்சி இல்லாமல் கடுமையான தீர்மானங்களை அமுல்படுத்துதால் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாது.

மின்கட்டண அதிகரிப்பால் சிறு மற்றும் நடுத்தர தொழிற்றுறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.இந்நிலை நீடித்தால் சமூக கட்டமைப்பு மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். அரச சேவையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பளம் அதிகரிப்பதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 20 ஆயிரம் ரூபா  மாதந்தம் வரி அறவிடலுக்கான முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு எவ்விதமான திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை.வரி அறவிடல்  மாத்திரமே அரசாங்கத்தின் பிரதான கொள்கையாக காணப்படுகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 அம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார் என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

தற்போதைய நெருக்கடி சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சர்வதேச நிறுவனங்களில் உயர் பதவியை பெற்றுக்கொள்வார். நாட்டின் எதிர்காலம் குறித்து அவருக்கு அக்கறையில்லை. தற்போதைய தவறான தீர்மானங்கள் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்றார்.

மாவீரர் தினத்தில் புலிகள் அமைப்பினர் போன்று ஆடையணிந்து வந்த சிறுவர்கள் – பெற்றொருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகும் யாழ்ப்பாணம் பொலிஸ் !

தமிழீழ விடுதலைப் புலிகள் போன்று ஆடை அணிந்து சயனைட் போன்றவற்றை கழுத்தில் வைத்து நினைவேந்தலில் ஈடுபட 3 சிறுவர்களை பாவித்தமை தொடர்பில் யாழ் மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் வீசாந்தவின் உத்தரவின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

போரில் உயிரிழந்த விடுதலைப் புலி உறுப்பினர்களை நினைவு கூரும் வகையில் கோப்பாயில் உள்ள துயிலும் இல்லத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுக்காக இந்த மூன்று சிறுவர்களும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்த மூன்று சிறுவர்களின் பெற்றோர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிரபாகரனின் மகள் எனக் கூறப்படும் பெண் – அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன..? – அமைச்சர் பந்துல விளக்கம் !

மாவீரர் தினத்தை முன்னிட்டு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் எனக் கூறப்படும் பெண் ஒருவரின் காணொளியொன்று இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயத்தைக் குறிப்பிட்டு நாட்டின் பாதுகாப்பு குறித்து வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்குப்  பதிலளித்த அமைச்சர் ” தேசிய பாதுகாப்பு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் மீண்டும் இந்த நாட்டில் பயங்கரவாதம் இடம்பெறுவதை நாட்டுமக்கள்  விரும்ப மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன்  நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக் காட்டினார்.

யாழில் 34 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்பு !

யாழ்ப்பாணம் – வடமராட்சி வெற்றிலைக்கேணி வத்திராயன் பகுதியில் 34 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன்  சந்தேக நபரும்  கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை  (28)    இடம்பெற்றதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்  தாளையடி பகுதியை  சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படை மற்றும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட 03 பிளாஸ்டிக்  பரல்களில் அடைக்கப்பட்டிருந்த 17 பொதிகளில் கேரள கஞ்சா மீட்கப்பட்டது.

கண்டுபிடிக்கப்பட்ட கேரள கஞ்சா சுமார் 34 கிலோ 400 கிராம் எடை கொண்டது எனவும் மொத்த மதிப்பு 13 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தாலியில் மூளைச்சாவடைந்த இலங்கையர் ஒருவரின் உறுப்புக்கள் தானமாக வழங்கப்பட்டன !

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூளைச்சாவடைந்த இலங்கையர் ஒருவரின் இரண்டு சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் இரண்டு கண்கள் ஆகியன  அந்நாட்டில் உள்ள நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளன.

image

அவரது மனைவி, தாய் மற்றும் இரு சகோதரர்களின் இணக்கத்துடனேயே  அவரது உடலுறுப்புகள் தானமாக  வழங்கப்பட்டன.

ஷமில பெர்னாண்டோ என்ற 35 வயதுடைய நபரின்  உடல் உறுப்புகளே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளனர்.

இவரது  மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பியதாகவும், இரண்டு சகோதரர்கள் பல வருடங்களாக இத்தாலியில் பணிபுரிவதாகவும்  தெரிய வருகிறது.