இலங்கையில் தனி நபர் நிகர கடன்தொகை 1.2 மில்லியன்களாக அதிகரிப்பு !

கடந்த ஆண்டிறுதி நிலவரத்தின் படி (31.12.2022) தனி நபர் நிகர கடன்தொகை 1.2 மில்லியன்களாக அதிகரித்துள்ளதாக பொதுக் கணக்காளர் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அதற்கு முந்தைய ஆண்டு (31.12.2021), 759,471 ரூபாயாக காணப்பட்ட நிலையில், ஒரு வருட காலத்திற்குள் 474,887 ரூபாய் அதிகரிப்பை காட்டியுள்ளது.

இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 62.53% அதிகரிப்பைக் காண்பித்து, தனிநபர் கடன் சுமையினை அதிகரித்திருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சராசரி ஆண்டு மக்கள்தொகையுடன் நாட்டின் மொத்த பொதுக் கடனை ஒப்பிட்டு அறியப்படும் இந்த தனிநபர் நிகரக் கடன் என்பது நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான அளவீடு ஆகும், இது ஒரு அரசாங்கத்தின் கடனின் மதிப்பை அதன் அதிகார வரம்பிற்குள் ஒவ்வொரு குடிமகனுக்கும் கூறப்படும் தொகையின் அடிப்படையில் அளவிடப்படுகிறது.

இந்த எண்ணிக்கையின் அதிகரிப்பு சராசரி இலங்கை குடிமகன் சுமக்கும் நிதிச்சுமையிலும் அதிகரிப்பை ஏற்படுத்துகிறது.

நிகர தனிநபர் கடனின் அதிகரிப்பிற்கு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாங்கும் கடன் தொகையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பே காரணம் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக இலங்கை தனது கடன் சுமைகளை நிர்வகிப்பதிலும், அதன் நிதி கடப்பாடுகளுக்கு ஏற்ப சேவை செய்வதிலும் பல்வேறு சவால்களை எதிர்நோக்குகின்றது.

இது தொடர்பாக பொருளாதார வல்லுநர்கள் கருத்துரைக்கையில் அதிகரித்து வரும் கடன் சுமை நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன்னர் 2012 ஆம் ஆண்டு (31.12.2012) நிகர தனிநபர் கடன் தொகை 264,811 ரூபாயாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *