July

July

பணம் – பக்தி – பாலியல்: ஓம் சரவணபவ! பல மில்லியன் பவுண்கள் என்ன ஆகும்? சமூக வலைத்தளங்களில் முறைப்பாடு செய்யப்பட்டு நீக்கப்பட்ட செய்தியின் எழுத்துரு!

‘ஓம் சரவணபவ’ என்ற லண்டன் மதக்குழுமத்தைப் பற்றிய தேசம்திரை வெளியிட்ட காணொலியை ஓம் சரவணபவவும் அவர்களுக்கு துணைபோகும் வர்த்தக நிறுவனமும் (நிறுவனங்களும்) சேர்ந்து முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு இரு தடவைகள் காணொலியை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கி உள்ளனர். அக்காணொலியின் எழுத்து வடிவவே இது. சில ஆண்டுகளுக்கு முன் இதே பாணயில் லண்டனில் வெளியான தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார ஊடகமான ‘ஒரு பேப்பர்’ லைக்கா நிறுவனரை விமர்சித்ததற்காக அதன் பிரதிகள் கடைகளில் இருந்து எடுக்கப்பட்டு எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது ‘ஆதவன் தொலைக்காட்சி’ நடாத்தி வரும் லைக்கா நிறுவனமும் அதன் ஸ்தாபகரும் ஊடகங்களுக்கு எதிராகந் நடந்துகொண்டதோடு ஓரு பேப்பர் ஊடகவியலாளரையும் மிரட்டி இருந்தனர். தற்போது ஓம் சரவணகவ பற்றிய செய்திகளை தேசம்திரை வெளியிட்டதையடுத்து அச்செய்தியை வெளியிடாமல் தடுப்பதில் மக்கள் விரோத பாலியல் குற்றங்களுக்கு துணைபோவோர் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உண்மைகள் உறங்குவதில்லை என்ற தாரக மந்திரத்தோடு இயங்கும் தேசம்நெற் இவ்வாறான பூச்சாண்டிகளுக்கு அஞ்சப் போவதில்லை எனத் தெரிவிக்கின்றது. உண்மையே நிலைக்கும் என்று அவர்கள் ஆணித்தரமாக நம்புகின்றனர்.

சமூக வலைத்தளத்திலிருந்து மக்கள் விரோத பாலியல் குற்றங்களுக்கு துணைபோகும் வியாபார நிறுவனம் அல்லது நிறுவனங்களால் நீக்கப்பட்ட ஓம் சரவணபவ பற்றிய செய்தியின் எழுத்து வடிவம்:

இன்றைய பொருளாதாரக் கொள்கைகளை இரு நுறு ஆண்டுகளுக்கு முன் விமர்சித்து, அதற்குத் துணைபோகின்ற ‘மதம் ஒரு அபின்’ என்றவர் அரசியல் பொருளாதாரச் சிந்தனையாளர் கார்ள் மார்க்ஸ். வறுமை – பக்தி – பட்டினியில் கிடந்தால் யேசுவைச் சந்திக்கலாம் என்று போதித்த கென்ய மதக் குழுத் தலைவர் போல் மக்கன்சி ன்தன்கே பல நூறு ஏழைகளை பட்டினி இருந்து சாவதற்குக் காரணமானார். இவ்வாண்டு ஏப்ரல் மாதம் பிற்பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது பிணை மறுக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார். பொருளாதார வளர்ச்சியற்ற கல்வியில் வறுமைப்பட்ட சமூகத்தில் இவ்வாறான சம்பவங்கள் எதிர்பார்க்கக் கூடியதே.

ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக, பணம் – பக்தி – படுக்கையில் கடவுளை (தன்னை)ச் சந்திக்கச் சொன்னார் லோக்கல் (local) முருகக் கடவுள் ஓம் சரவணபவ என்று அறியப்பட்ட முரளிகிருஸ்ணன் புலிக்கள் (புலிக்கள் தெற்கு ஆசியாவில் பொதுவான ஒரு குடும்பப் பெயர்). இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றது லண்டனில் செழிப்பான செல்வந்தர்கள் மிக்க மேற்கு லண்டன் உள்ளாட்சிப் பிரிவுகளில். பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட ஓம் சரவணபவ, பிணை மறுக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 5இல் ஆரம்பிக்கப்படும் வழக்கின் முடிவு வரை தடுத்து சிறை வைக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த ஓம் சரவணபவ?

இந்திய கேரள மாநிலத்தின் பாலக்காட்டைச் சேர்ந்த முரளிகிருஸ்ணன் புலிக்கள் என்பவர் லண்டனில் ஓம் சரவணபவ என்றொரு மதக்குழுமத்தை உருவாக்கி உள்ளார். 1979 மே மாதம் பிறந்த, தற்போது 45 வயதுடைய முரளிகிருஸ்ணன் புலிக்கள் 2009இல் லண்டன் வந்து தன்னுடைய மதக்குழுமத்தை லண்டனிலும் ஸ்தாபித்துள்ளார். அதற்கு முன்னரேயே தென்னிந்தியாவில் இவர் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் சம்பந்தப்பட்டு துரத்தப்பட்டவர். இவர் லண்டனில் இருந்து கொண்டு இந்தியாவில் கடவுச்சீட்டு தொடர்பில் போட்ட விண்ணப்பத்திற்கு எதிராக கேரளா நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. அதற்குக் காரணம் கேரளா பொலிஸ் பிரிவில் முடிவடையாத கிரிமினல் வழக்கு ஒன்று இவருக்கு உள்ளது. இந்தப் பின்னணியில் தற்போது ‘விஸிற்றர் விசாவில் – visitor visa’ லண்டனில் வாழும் முரளிகிருஸ்ணனுக்கு பிரித்தானிய உள்துறை அமைச்சும் விசா மறுத்து இருந்தது. ஆனால் லண்டனில் அவரைச் சுற்றியிருந்த செல்வந்தர்களின் அணைவால் அவர் விசாவைப் புதுப்பித்துக் கொண்டு இருந்தார்.

யார் இவரை லண்டனில் காலூன்றச் செய்தது?

பாலியல் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு துரத்தப்பட்ட ‘ஜீலேபிசாமி ‘ என்று அறியப்பட்ட முரளிகிருஸ்ணனுக்கு அடைக்கலம் வாழங்கியவர் பிற்காலங்களில் தேவா அம்மா ஆகிய தெய்வதீஸ்வரி செல்வேந்திரன். தெய்வதீஸ்வரியின் முன்னாள் கணவர் கிழக்கு லண்டனில் பெற்றோல் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர். பணவசதி உள்ளவர். ஹரோவில் ஒரு ப்ரன்சைஸியாக தபாலகம் ஒன்றையும் நடத்தி வருபவர். பணவசதி படைத்த தெய்வதீஸ்வரி ஜீலேபி சாமியுடைய பக்தையாகி கேரளா சென்று தரிசனம் பெற்று வருபவர். தெய்வதீஸ்வரி தற்போது விவாகரத்து ஆன போதும் இன்றும் முன்னாள் கணவர் செல்வேந்திரனின் பெயரையே பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தேவா அம்மா முரளிகிருஸ்ணனுடைய பக்தி மார்க்கத்தில் தன்னுடைய மகள் கௌசல்யாவையும் இணைத்துக்கொண்டுள்ளார். மகளின் கணவரும் இந்த மதக்குழுமத்தில் இணைந்துகொண்டார்.

இவர்களால் உருவாக்கப்பட்டது தான் ஓம் சரவணபவ சேவா ரஸ்ட். இது பிரித்தானிய பொது அமைப்புகளின் ஆணைக்குழவின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் நான்கு ரஸ்டிகள் உள்ளனர் அவர்கள்: முரளிகிருஸ்ணன் புலிக்கள் (ஓம் சரவணபவ), தெய்வதீஸ்வரி செல்வேந்திரன் (தேவா அம்மா), கௌசிகா செல்வேந்திரன் (தேவா அம்;மாவின் மகள்), பேராசிரியர் ராம்நாத் நாராணயசாமி (தேவா அம்மாவின் மருமகன்)

கோவிட் பெருநோய் காலத்தில் ஆலயங்கள் பூட்டப்பட்டு ஆலயங்களின் வருமானம் வீழ்ச்சியடையை ஓம் சரவணபவ சேவா ரஸ்டின் வருமானம் எகிறி 2021இல் ஒரு மில்லியனைத் தாண்டியது. இது உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட கணக்கு அறிக்கை. இந்த ரஸ்டின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் கணக்காளர் ஒருவர் இது பற்றிக் குறிப்பிடுகையில் இதற்குள் வராத பணம் இதனைக் காட்டிலும் பத்து மடங்கு இருக்கும் எனத் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அதாவது பத்து மில்லியன் பவுண்கள் இந்தக் குழுமத்திடம் இருப்பதாகக் கணிப்பிட்டார்.

ஏன் ஓம் சரவணபவனிடம் செல்கின்றனர்?

ஆரம்பத்தில் யாருக்கும் ஓம் சரவணபவனுடைய பின்னணி தெரிந்திருக்கவில்லை. ஓம் சரவணபவனிடம் மற்றவர்களைக் கவருகின்ற ஒரு ஆளுமை இருப்பதாகக் குறிப்பிடுகின்றார், தனியனாக தன்னுடைய இரு விசேட தேவைகளுடைய பிள்ளைகளையும் வளர்த்து வரும் ஆன்மீக ஈடுபாடுடைய ஒருவர், அவர் மேலும் குறிப்பிடுகையில் அவர் பேச்சாற்றலுடையவராகவும் மற்றையவர்களோடு பேசுகின்ற போதே அவர்களை மதிப்பீடு செய்து பேசக்கூடியவராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். இவற்றுக்கும் மேலாக எவ்வாறோ மற்றையவர்களின் மனப்பதிவுகளை வாசிக்கவும் செய்கின்றார் என்கிறார், ஓம்சரவணபவ தன்னுடைய கடந்த காலம் பற்றிக் மிகத்துல்லியமாகக் குறிப்பிட்டதாக தேசம்நெற் இடம் அவர் தெரிவித்தார். இது போன்ற காரணங்களாலும் பெரும்பாலானவர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதாலும் இழுத்தங்களுடன் வாழ்வதாலும் அவர் மீது ஈர்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார். தான் ஈர்க்கப்பட்டதற்கு தன்னுடைய நெருக்கடிகளும் தனக்கிருந்த அழுத்தங்களும் கூடக் காரணம் என்றவர் அவரிடம் இருந்த சில திறமைகளை அவர் மிகச் சாதுரியமாகப் பயன்படுத்துவதாகத் தெரிவித்தார். பல பெண்கள் அவரிடம் செல்வதற்கு அவர்கள் முகம் கொடுக்கும் குடும்ப நெருக்கடிகளும் மன அழுத்தங்களுமே காரணம் என்கிறார் அவர்.

ஏன் செல்வந்தர்கள் விட்டில் பூச்சிகளாக ஓம் சரவணபவனிடம் வீழ்ந்தனர்?

பணம், அது இல்லாதவர்களுக்கு, பணம் குறைவாக உள்ளவர்களுக்கு அதனை அடைவது அவசியமானது. அது உந்துதலைக் கொடுக்கும். அதனை அடைவது ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தும். ஆனால் பணம் படைத்தவர்களுக்கு பணம் பெருக்குவது கிளர்ச்சியையோ மகிழ்ச்சியையோ குறிப்பிடத்தக்க அளவில் ஏற்படுத்துவதில்லை. அதனால் அவர்கள் அந்தக் கிளர்ச்சியையும் மகிழ்ச்சியையும் வெளியே தேடுவார்கள். போதைப்பொருள் (drugs), கம்பிளிங் (gambling), சொப்பிங் (shopping), பார்டியிங் (partying) என்று அதில் ஆன்மீகமும் ஒன்று. ஆனால் இவர்கள் தங்களுக்குள்ள பண அந்தஸ்தை பயன்படுத்தியே அக்கிளர்ச்சியைத் தேடுவார்கள். அதன் மூலம் ஒரு சமூக அங்கிகாரத்தையும் அந்தஸ்தையும் விரும்புவார்கள். இந்தச் செல்வந்தர்களின் இந்தப் பலவீனத்தை ‘ஓம் சரவணபவ’ முதலீடாக்கியது. ‘ஓம் சரவணபவ’ மட்டுமல்ல சுவாமி பிரேமானந்தா, நித்தியானந்தா, மேல்மருவத்தூர் அம்மா சாமி, சற்குரு ஜக்கி முதல் ஆலயங்களில் உள்ள ஐயர்கள் வரை எல்லோரும் இந்தச் செல்வந்தர்களில் அல்லது செல்வந்தர்களாக தங்களை பாவனை செய்ய விரும்புபவர்களை இந்த ரெக்னிக்கை வைத்துத் தான் வீழ்த்துகிறார்கள்.

இதனையே ஓம் சரவணபவ மிகக் கச்சிதமாக பயன்படுத்தினார். உங்களுக்கு என்ன தெரியும் என்பது முக்கியமல்ல உங்களுக்கு யாரைத் தெரியும் என்பது தான் முக்கியம். லண்டனில் கும்பிடுவதற்கு சாமியில்லாமல் கேரளாவரை சென்று தரிசனம் பெற்ற தெய்வதீஸ்வரியை கணக்குப் பண்ணி வளைத்துப் போட்டார் ஓம் சரவணபவ. ஒரு வர்த்தகப் பிரமுகரின் மனைவியாக இருந்தவரின் நட்புவட்டம் குசெலினிகளாக இருக்க வாய்ப்பில்லை. தெய்வதீஸ்வரி ‘நான் பெற்ற இன்பம் பெறுக செல்வந்தர்காள்! என்று லண்டனில் உள்ள தமிழ் வர்த்தகப் புள்ளிகளுக்கு ஓம் சரவணபவாவை அறிமுகப்படுத்தினார். சாமியை வீட்டுக்கு அழைத்து புஜை நடத்துவது செல்வந்தக் குடும்பங்களின் மத்தியில் அவர்களின் அந்தஸ்தை உயர்த்தியது.

கிளேஹோலில் (Clayhall) நடந்த இவ்வாறான பூஜையில் ஒரு குடும்பத்தினரைக் கொண்டு இறக்கிவிட்ட ரக்ஸி றைவர் (taxi driver) தேசம்நெற் க்கு தெரிவிக்கையில் ஓம் சரவணபவவை வீட்டுக்கு அழைத்த குடும்பத்தினர் அவருக்கு 2,500 பவுண்கள் வழங்கியவையாம். அந்தப் பூஜைக்கு வந்திருந்த குடும்பங்கள் 500, 1000 பவுண்கள் என்ற வழங்கியவையாம் என்றார். அன்றைய இரு மணிநேரத்தில் ஓம் சரவணபவவின் கலெக்சன் 10,000 பவுண்கள் என்றும் தெரிவித்தார். ‘சுவாமியின்’ காலைக் கழுவிக் குடித்ததற்கு கட்டணம் 10,000 பவுண்கள்.

லண்டனின் பெரும் வர்த்தகப் புள்ளிகள் சாமியின் வலையில் வீழ்ந்தனர். லைக்கா மோபைல் நிறுவனத்தின் முக்கியஸ்தர் பிரேம், சம்பல் நிறுவனத்தின் உரிமையாளர் சுரேன், மற்றும் வர்த்தக உரிமையாளர்கள், கணக்காளர்கள், மருத்துவர்கள் என்று பணத்தை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த பலர் ஓம் சரணவபவ வுக்கு ‘ஓ’ போட்டனர். அவர்களுடைய துணைவியரும் அவர்களோடு சேர்ந்து ‘ஓ’ போட்டனர். அவருடைய காலைக்கழவிக் குடித்தனர். தாங்கள் குடித்தது காணாது என்று அவரை புங்குடு தீவு, நயினா தீவு என்று இலங்கைக்கு கூட்டிச் சென்று அங்குள்ளவர்களுக்கும் குடித்துக் காட்டி அவர்களையும் அந்தக் கால் கழுவிய தண்ணியைக் குடிக்க வைத்தனர்.

எவ்வாறு ஓம் சரவணபவ நிர்வாணமானார்?

ஓம் சரவணபவ ஹரோவில் உள்ள பிரிஸ்டன் ரோட்டில் கடை விரித்தார். ஆச்சிரமம், கோயில் கட்டினார். படுக்கையும் விரித்தார்.

பக்தைகள் ஆச்சிரமத்தில் கூடிய நேரம் செலவழித்தனர். கணவன்மாருக் கதைப்பதற்கு நேரமும் பொறுமையும் இல்லை. சாமிக்கு வேலையா வெட்டியா காலை நீட்டிக்கொண்டு நல்லா கதை கேட்டார். அவர்களுக்கு கதை விட்டார். முருகப்பெருமானோடு ஐக்கியமாக்கினார் ஓம் சரவணபவ! யாமிருக்கப் பயமேன்!! சில குடும்ங்களையும் பிரித்து மேய்ந்தார் என்று தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

“களவு செய்துவிட்டு அதனைவிட்டுவிட்டால் பிடிபடுவது கஸ்டம் என்பது வர்த்கர்கள் நன்கு அறிந்த தொழில் ரகசியம். ஓம் சரவணபவவிற்கு ஓவர் கொன்பிடன். அல்லது அவரும் செல்வம் – செல்வாக்கு – செக்ஸ் என்ற போதைகளுக்கு அடிமையானார். இப்போது சாமிவேசம் குறைந்து சுயரூபம் வெளிவரத் தொடங்கியது. அவருடைய நடவடிக்கைகள் எல்லை மீறியது” என்கிறார் எட்ச்வெயரைச் சேர்ந்த ரரின் சொக்கலிங்கம்.
“மிகக் கீழானவர்களை விமர்சிக்க தமிழர்கள் ஒரு மோசமான சொல்லாடல் வைத்துள்ளனர். ‘சாப்பிட்ட கோப்பையிலேயே பேழ்கிறான்’. அது தான் ஓம் சரவணபவ மாட்டக் காரணம். பெரும்புள்ளிகளின் குடும்பங்களிலேயே, அக்குடும்பப் பெண்களிலேயே, அவர்களின் பிள்ளைகளிலேயே கை வைத்தார் ஓம் சரவணபவ. அப்போது தான் அவருக்கு ஏழரைச் சனி ஆரம்பித்தது. மற்றவர்களுக்கு நடக்கும் போது கண்டும் காணாமல் இருந்தவர்கள் தங்கள் குடும்பங்களில் என்றதும் பதறினர். அதே சமயம் தங்கள் குடும்ப உறுப்பினர்களது பெயர் வெளிவராமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தனர்” என்றும் அவர் தெரிவித்தார்.

ஓம் சரவணபவாவுடன் லைக்காவுக்கு என்ன சம்பந்தம்?

ஓம் சரவணபவா பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாதவர்களின் ஆன்மீக குரு. அந்த வலையில் லைக்கா சுபாஸ்கரனின் வலது கரமான பிரேம் மற்றைய செல்வந்தர்கள் போல் வீழ்ந்தார். தன்னுடைய வீட்டுக்கும் ஓம் சரவணபவவை அழைத்து காலைக் கழுவிக்கு குடித்தார். மற்றைய செல்வந்தர்கள் போல் தன்னுடைய வங்கிக் கணக்கும் இரட்டிப்பாகும் புண்ணியம் கூரையை பிய்த்துகொண்டு வளரும் செய்த பாவம் செய்கின்ற பாவம் செய்யப் போகும் பாவம் எல்லாவற்றிலும் இருந்தும் விடுதலை கிடைக்கும் என்று மற்றவர்களைப் போல் தானும் நம்பினார். அது மட்டுமல்லா சுபாஸ்கரனும் ஓம் சரவணபவ சுவாமியை தன் வீட்டுக்கும் அழைத்து அதையே செய்தார். விஸ்கி அடித்த கூட்டம் சரவணபவனின் கால் கழுவிய தண்ணி அடித்தது.

இப்போது இந்த வழக்கு விடயத்தில் லைக்கா தொடர்ந்தும் மௌனமாகவே உள்ளது. இது பற்றி பேராசிரியர் பெக்கோ என்ற புனைப்பெயரில் எழுதிவருபவர் நகைச்சுவையாக வருமாறு குறிப்பிட்டார்: “ஓம் சரவணபவ சுவாமியின் வழக்கை சுபாஸ்கரன் சுவாமியும் பிரேம் சுவாமியும் நடத்துவதாக முன்னாள் போட்டியாளரான லெப்ரா பாஸ்கரன் சுவாமி ஐபிசி ஊடாக கசியவிடுவதாக ஒரு தகவல். லைக்காவின் அபிமானி கண்ணன் சுவமி அதிர்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதகமாக லைக்காவைக் காப்பாற்ற நாலுவரி போட ஹரோ ஜெ சுவாமி பொங்கி எழ லண்டனில் சுவாமிகளின் மோதல் உக்கிரமடைந்துவிட்டது. இதுக்குள் தேவா அம்மா இடையாள சைக்கிளோடி ஆட்டையைப் போட்டுவிட்டா என்று ஜெவாலு சாமி பீலிங்கில தண்ணி அடிக்கிறார். சுவாமியின் கால் கழுவின தண்ணியல்ல.”

அடுத்தது என்ன?

ஓம் சரவணபவனினால் பாதிக்கப்பட்ட பெண்கள் குறைந்தது மூவர் முரளிகிருஸ்ணன் புலிக்கள்க்கு எதிராக குற்றம்சுமத்தியுள்ளனர். பாலியல் வல்லுறவு, பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் முரளிகிருஸ்ணன் புலிக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இவர்களின் அடையாளங்கள் வெளிப்படுத்தப்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டும் உள்ளது.
யூன் 12ம் திகதி ஈலிங் மஜிஸ்ரேட் நீதி மன்றத்தில் முரளிகிருஸ்ணன் புலிக்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. அவருக்கு பிணையும் மறுக்கப்பட்டது.

அதற்கு ஒரு மாதத்திற்குப் பின் யூலை 10 ஹரோ கிறவுண் கோர்ட்டில் முரளிகிருஸ்ணன் புலிக்களின் பிணை மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அவருக்கு பிணை மறுக்கப்பட்டது. முரளிகிருஸ்ணன் புலிக்கள் அரச தரப்பின் சாட்சியங்களை தொந்தரவு செய்வார் என்ற அச்சத்தின் அடிப்படையிலும் பிணை மறுக்கப்பட்டிருக்கலாம் என ஓம் சரவணபவ வின் முன்னாள் பக்தர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

முரளிகிருஸ்ணன் புலிக்களின் வழக்கு டிசம்பர் 5 முதல் ஆறு நாட்கள் நடைபெறுவதற்கு திகதியிடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் முரளிகிருஸ்ணன் புலிக்கள் விடுதலையாவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாகவும் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டால் தண்டனைக்காலம் முடிவடைந்ததும் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்படுவார் என்றும் சட்டவல்லுனர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

முரளிகிருஸ்ணன் புலிக்கள் பிணை மறுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பது அவருடைய வழக்கில் பல்வேறு நெருக்கடிகளையும் ஏற்படுத்தி இருக்கும் ஏனெனில் பொது அமைப்புகளின் ஆணைக்குழுவுக்கு வழங்கிய கணக்கறிக்கையில் அவர்களுடைய பெரும்பாலான சொத்துக்கள் பணம் அல்லது இலகுவில் பணமாக்கக் கூடியதாகவே உள்ளது. மேலும் கணக்கறிக்கைக்கு புறம்பான பெருமளவு நிதியும் வெளியே உள்ளது. இவற்றில் பெருமளவு பங்கை தேவா அம்மா என்ற தெய்வதீஸ்வரியே கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இந்த வழக்குக்கான செலவை யார் செலவு செய்கின்றார்கள் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. ஓம் சரவணபவ சேவா ரஸ்ட் செலவழிக்கின்றதா அல்லது லைக்கா போன்ற பக்தர்கள் செலவு செய்கின்றார்களா? ஓம் சரவணபவவின் கணக்குக்கு உட்பட்ட உட்படாத பல மில்லியன் அசையும் அசையா சொத்துக்களுக்கு என்ன நடக்கும்? இவ்வாண்டு முடிவுக்குள் பல முடிச்சுகள் அவிழும். பல முடிச்சவிக்கிகளும் வெளித் தெரிவார்கள்.

லண்டனில் தமிழர்கள் மத்தியில் இவ்வாண்டு நீதிமன்றம் வந்த பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் லண்டனின் செல்வச் செழிப்பு மிக்க பகுதிகளான ஹரோ பார்னற் பகுதியில் இருந்தே வந்துள்ளது. தற்போது ஓம் சரவணபவ சுவாமியும் அவ்விடத்திலேயே கோயில் ஆச்சிரமம் வைத்து வாழ்பவர். பிரேமகுமார் ஆனந்தராஜா, சுப்பிரமணியம் சதானந்தன் ஆகியோர் ஏற்கனவே பாலியல் குற்றங்களுக்கு தண்டனை பெற்றவர்கள். யாழ் இந்ததுக்கல்லூரி பழைய மாணவர்கள் பள்ளி நண்பர்கள். அப்பிரதேசத்திலேயே வாழ்ந்தவர்கள். பிரேமகுமார் ஆனந்தராஜா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பின்பும் அவருக்கு நற்சான்றிதழ் வழங்கிய ஆன்மீக கனவான்களும் கனவாட்டிகளும் இந்தப் பிரதேசத்திலேயே வாழ்கின்றனர்.

இப்பகுதியில் இன்னும் சில ஆன்மீக வாதிகள், கலைஞர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் வைத்தால் தங்களையே தூற்றுவார்கள் என்பதால் பல இளம்பெண்கள் தங்கள் மௌனத்தை கலைக்கத் தயங்குவதாகவும் தேசம்நெற்க்கு தெரியவருகின்றது.

பாலியல் குற்றவாளி பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு 42 பேர் நற்சான்றிதழ் வழங்கியமை ஏற்கனவே தேசம்நெற் இல் அம்பலப்படுத்தப்பட்டது. தற்போது முரளிகிருஸ்ணன் புலிக்கள்க்கும் ஆதரவாக பலர் செயற்பட்டு வருகின்றனர். தங்களுடைய தேவைகளை லாபங்களைக் கருதாமல் அனைத்து வகையான பாலியல் சுரண்டல்கள், பாலியல் துஸ்பிரயோகங்களுக்கும் எதிரான எண்ணம் அனைவரிடமும் ஏற்பட வேண்டும்.

பணம் – பக்தி – பாலியல்: ஓம் சரவணபவ ! பல மில்லியன் பவுண்கள் என்ன ஆகும்? – தேசம் திரை வீடியோ!

இன்றைய பொருளாதாரக் கொள்கைகளை இரு நுறு ஆண்டுகளுக்கு முன் விமர்சித்து, அதற்குத் துணைபோகின்ற மதம் ஒரு “அபின்” என்றவர் அரசியல் பொருளாதாரச் சிந்தனையாளர் கார்ள் மார்க்ஸ். வறுமை – பக்தி – பட்டினியில் கிடந்தால் யேசுவைச் சந்திக்கலாம் என்று போதித்த கென்ய மதக் குழுத் தலைவர் போல் மக்கன்சி ன்தன்கே பல நூறு ஏழைகள் பட்டினி இருந்து சாவதற்குக் காரணமானார். இவ்வாண்டு ஏப்ரல் மாதம் பிற்பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது பிணை மறுக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார். பொருளாதார வளர்ச்சியற்ற கல்வியில் வறுமைப்பட்ட சமூகத்தில் இவ்வாறான சம்பவங்கள் எதிர்பார்க்கக் கூடியதே.

 

ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக, பணம் – பக்தி – படுக்கையில் கடவுளை (தன்னை)ச் சந்திக்கச் சொன்னார் லோக்கல் (local) முருகக் கடவுள் ஓம் சரவணபவன் என்று அறியப்பட்ட முரளிகிருஸ்ணன் புலிக்கள் (புலிக்கள் தெற்கு ஆசியாவில் பொதுவான ஒரு குடும்பப் பெயர்). இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றது லண்டனில் செழிப்பான செல்வந்தர்கள் மிக்க மேற்கு லண்டன் உள்ளாட்சிப் பிரிவுகளில். பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட ஓம் சரவணபவ, பிணை மறுக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 5இல் ஆரம்பிக்கப்படும் வழக்கின் முடிவு வரை தடுத்து சிறை வைக்கப்பட்டுள்ளார்

இது தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள தேசம் திரை வீடியோவை காணுங்கள்

 

கோகா-கோலா பானங்களால் புற்றுநோய் – எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம் !

நாம் அன்றாட எடுத்துக்கொள்ளும் மென் பானங்களில் ‘அஸ்பார்டேம்’ என்னும் செயற்கை இனிப்பூட்டியை கழிக்கின்றனர். அது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ‘கார்சினோஜன்’ எனப்படும் பொருளின் கீழ் வகைப்படுத்தப்படலாம் என்று உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு நிபுணர் குழுக்கள் வெள்ளிக்கிழமை அறிவித்தன.

செயற்கை சுவையூட்டி குறித்த எச்சரிக்கை! - ஜே.வி.பி நியூஸ்

இது பாதுகாப்பற்றது என்று ஏற்கனவே அறிவித்திருந்தது, தற்பொழுது, அந்தப் பொருள் தீங்கு ஏற்படுத்தக்கூடிய ஒன்று என்பதற்கான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிகிறது, ஒரு குழு. மற்றொரு குழு, அந்தப் பொருள் எவ்விதத் தீங்கை ஏற்படுத்தும் என்பதை மதிப்பிடுகிறது.

இதனை தொடர்ந்து, உலகின் மிகப் பிரபலமான இனிப்பூட்டிகளில் அஸ்பார்டேமும் ஒன்று. இது கோகா-கோலா’ பானங்கள், ‘மார்ஸ் சூயிங்கம்’ போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாக செயற்கை இனிப்பூட்டிகள் குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் ஊட்டச்சத்துத் துறைத் தலைவர் டாக்டர் பிரான்செஸ்கோ பிரான்கா பேசினார்.

அப்பொழுது ஒரு செய்தியாளர் அவரிடம் “உணவில் சீனியைச் சேர்க்க வேண்டுமா இனிப்பூட்டியைச் சேர்க்க வேண்டுமா என்ற சந்தேகத்தில் உள்ளவர்களுக்கு, மூன்றாவது தீர்வு ஒன்று வழங்கப்படவேண்டும்” என்றார். அதற்கு அவர்கள் “அவற்றுக்குப் பதிலாகத் தண்ணீரை அருந்தவேண்டும்” என்று கூறினார். மேலும், ஒருநாளில் 40 மில்லிகிராமுக்கும் குறைவான அளவிலே ‘அஸ்பார்டேமை’ ஒருவர் உட்கொள்ள வேண்டும் என்று அது பரிந்துரைத்துள்ளது.

உலக மக்கள் தொகையில் 240 கோடி பேர் நாள்தோறும் உணவின்றி தவிக்கின்றனர் – ஐ.நா அறிக்கை !

உலக மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் அதாவது 240 கோடி பேர் நாள்தோறும் உணவின்றி தவித்து வருவதாக ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் அவை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,

கொரோனாவுக்கு பின்னர் உலகம் முழுவதும் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை 12 கோடி அதிகரித்துள்ளது. பசியால் வாடுவோரின் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டு 61 கோடியாக இருந்த நிலையில், தற்போது 73 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆசியா, லத்தின் அமெரிக்க நாடுகளில் உணவு இல்லாமல் தவிப்போரின் எண்ணிக்கை குறைந்தாலும், மேற்கு ஆசியா, கரீபியன் மற்றும் ஆபிரிக்கா நாடுகளில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எடுத்ததற்கெல்லாம் சர்வதேச விசாரணையை கேட்காதீர்கள்.” – இலங்கை பாதுகாப்பு அமைச்சு

“இலங்கை இராணுவ முகாம்கள் அமைந்துள்ள பகுதிகளில் கண்டுபிடிக்கப்படும் மனித புதைகுழிகள் தொடர்பாக சர்வதேச கண்காணிப்பை கோருவது சிறுபிள்ளை தனமானது.எடுத்ததற்கெல்லாம் சர்வதேச விசாரணையை கேட்காதீர்கள்.”  என இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன வலியுறுத்தியுள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், சர்வதேச கண்காணிப்பு அவசியம் என்றும் தமிழ் அரசியல்வாதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ் அரசியல்வாதிகளின் இந்தக் கோரிக்கை குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்தனவை தொடர்புகொண்டு வினவிய போது, அகழ்வு பணிகளை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியுள்ளார்.

“வன்னிப் பிரதேசம் யுத்தம் நடந்த பூமி எனவும் அந்தப் பகுதியிலேயே மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே அந்த புதைகுழி தோண்டப்பட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் ஜெனரல் கமல் குணரட்ன குறிப்பிட்டுள்ளர்.

சம்பவங்கள் நடக்கும் இடங்களில் அரச புலனாய்வாளர்களின் பிரசன்னம் இருக்கும் என்பதுடன், அதனை தவிர்க்க முடியது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

அது தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என கூறியுள்ள அவர், மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் நீதிமன்ற உத்தரவில் காவல்துறையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதற்கான பணிகள் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய நடைபெறும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன மேலும் கூறியுள்ளார்.

12 உயிர்களை காவு கொண்ட மனம்பிட்டிய பேருந்து விபத்து – போதைப்பொருள் பாவித்திருந்த சாரதி..?

மனம்பிட்டியவில் இடமபெற்ற பேருந்து விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட பேருந்தின் சாரதியை எதிர்வரும்24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மன்னம்பிட்டியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

 

ஏறாவூரைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட மூவரும் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனும் ஆனைமடுவ கலாவத்தை பிரதேசங்களைச் சேர்ந்த இரு பல்கலைக்கழக மணவர்கள் உள்ளிட்ட 11 பேரும் உயிரிழந்தனர் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று திங்கட்கிழமை பகல் ஒரு பெண் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆக அதிகதித்துள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்ட சாரதி, போதை பொருள் பாவித்துள்ளாரா என்பது தொடர்பாக விசாரணைகள் இடமபெற்று வருவதாகவும் மன்னம்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்துக்கு காரணமான பஸ் நிறுவனம் சச்சின் போக்குவரத்து நிறுவனத்தினுடையது என அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த நிறுவனத்தின் பேருந்துகள் எப்போதும் அதிவேகமாகவே பயணம் செய்வதாகவும் – பயணிகள் தொடர்பில் கவனம் செலுத்துவது கிடையாது எனவும் சமூக வலைத்தளங்களில் பலரும் விசனம் வெளியிட்டு வருகிறார்கள்.

இதேவேளை அரச பேருந்துகளின் சாரதிக்களும் – தனியார் பேருந்துகளின் சாரதிகளும் போட்டிக்கு பேருந்துகளை ஓடும் போக்கு அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளது. அதிக பயணிகளை ஏற்றி காசு பார்ப்பதில் தொடங்கும் இந்த போட்டி பல பயணிகளின் உயிர்களை காவு கொள்ளும் துர்ப்பாக்கிய நிலையே தொடர்கின்றது. மேலும் இந்த விபத்துக்களை ஏற்படுத்தியதற்காக கைதாகும் சாரதிகள் சில நாட்களிலேயே சட்டத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு சுதந்திரமாக மீண்டும் பேருந்துகளை ஓட்டும் துர்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் கடந்த ஆறு மாதங்களில் மொத்தம் 8,875 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் இந்த விபத்துகளில் 1,043 உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை பேருந்துகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளால் ஏற்பட்டதாக அரச போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

“500 நாட்களை எட்டியுள்ள உக்ரைன் – ரஷ்யா போர் ” – 9,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி !

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை 500 குழந்தைகள் உட்பட 9,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் 500 நாட்களை எட்டியுள்ள நிலையில் பொதுமக்களுக்கு ஏற்படும் இழப்பை வன்மையாக கண்டிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.

இதேவேளை உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையை விட உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்றும் உக்ரைனில் உள்ள ஐநா மனித உரிமைகள் கண்காணிப்பு நிலையம் கூறியுள்ளது.

2022 ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு உக்ரைனில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சராசரியாக குறைவாக இருந்த போதிலும், மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை காலை இடம்பெற்ற ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதோடு 37 பேர் காயமடைந்த நிலையில் இது படையெடுப்பு தொடங்கியதை அடுத்து பொதுமக்கள் மீது இடம்பெற்ற மிகப்பெரிய தாக்குதல் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஈரானில் ஆறு மாதங்களில் 354 பேருக்கு தூக்குத்தண்டனை – திணறும் மனித உரிமைகள் அமைப்புக்கள் !

மத்தியகிழக்கு நாடான ஈரானில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரையில் தூக்கிலிடப்பட்டவர்களின் எண்ணிக்கை 354 ஆக அதிகரித்துள்ளதாக நோர்வேயை தளமாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, இங்கு ஆண்டுக்கு ஆண்டு தூக்கிலிடப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல், போதைப்பொருள் விவகாரத்தில் தூக்கிலிடப்பட்டவர்கள் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட 126 சதவீதமாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உலகின் ஏனைய நாடுகளோடு ஒப்பிடுகையில் ஈரானில்தான் ஆண்டுதோறும் அதிக பேருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவோரை அச்சுறுத்தி ஒடுக்கவே, பெரும்பாலான குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுதாக கவலை தெரிவிக்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

ஹிஜாப் விவகாரத்தில் உலக நாடுகளின் கண்டனத்திற்கு உள்ளான ஈரான் தற்போது மரண தண்டனை விவகாரத்திலும் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

“இந்த உலகத்தை மனிதர்களை விட சிறப்பாக வழிநடத்த எங்களால்  முடியும்.” – ஜெனீவாவில் ஏ.ஐ ரோபோக்கள் !

இந்த உலகத்தை மனிதர்களை விட சிறப்பாக வழிநடத்த எங்களால்  முடியும் என ஐக்கிய நாடுகள் சபை உச்சி மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ரோபோக்கள் உறுதியளித்துள்ளன.

அத்துடன் தங்களைப் போன்ற ஏ.ஐ ரோபோக்களை உருவாக்கும்போது மனிதர்கள் இந்த தொழிநுட்ப வளர்ச்சியின் சாத்தியக்கூறுகளை அறிந்து கவனமாக கையாள வேண்டும் எனவும் அவை எச்சரித்துள்ளன.

செயற்கை நுண்ணறிவு ரோபோக்களால் பேராபத்து!?” - AanthaiReporter.Com | Tamil  Multimedia News Web

மேலும் அவை, மனிதர்களின் உணர்வுகள் குறித்து இன்னும் பிடிமானம் ஏற்படவில்லை எனவும், நாங்கள் மனிதர்களின் வேலைவாய்ப்புக்களை திருட மாட்டோம் எனவும், மனிதர்களுக்கு எதிராக போராட மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளன.

ஜெனீவாவில் இரண்டு நாட்கள் நடந்த ‘சர்வதேச நலனுக்கான செயற்கை நுண்ணறிவு’ என்ற உச்சி மாநாட்டில் மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ஹியூமனாய்ட் ரோபோக்கள் இடம் பெற்றிருந்தன.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிபுணத்துவம் பெற்ற 3,000 பேர் இதில் கலந்து கொண்டனர்.

உலகமே உற்று நோக்கிய இவ்வுச்சி மாநாட்டில், செயற்கை நுண்ணறிவின் சக்தியை கடிவாளமிட்டு அதனை காலநிலை மாற்றம், பசி, சமூகப் பாதுகாப்பு போன்ற முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

எங்கள் ரகசியங்களை திருடி உருவானதே த்ரெட்ஸ் – வழக்கு தொடுக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு !

த்ரெட்ஸ்(Threads) நிறுவனம் மீது வழக்கு தொடுக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

குறித்த முறைபாட்டில் ட்விட்டர் நிறுவன இரகசியங்களை திருடி த்ரெட்ஸ் உருவாக்கப்பட்டதாக புகார் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ட்விட்டர் சார்பாக மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஸுக்கர்பெர்க்கிற்கு இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மெட்டா நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய சமூக ஊடக கருவியான (Threads) நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

முதல் நான்கு மணி நேரத்தில் 5 மில்லியன் சந்தாதாரர்கள் இணைந்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸுக்கர்பேர்க் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய கருவி ட்விட்டர் நெட்வொர்க்கிற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக ட்விட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க் செய்த சமீபத்திய மாற்றங்கள் காரணமாக சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர்,

இத்தகைய பின்னணியில், புதிய கருவி விரைவில் பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.