April

April

இலங்கையில் வாழும் இந்துக்களுக்கு நீதி கோரி டெல்லியில் இந்துக்கள் அமைப்பினரால் போராட்டம் !

இலங்கையில் வாழும் இந்துக்களுக்கு நீதி கோரி டெல்லியில் இந்துக்கள் அமைப்பினரால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள கோவில்களை இடிப்பதற்கும், இந்துக்களுக்கு தீங்கு விளைவிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பழமையான வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இந்து கோவில்களை இடித்து, இந்து தமிழ் சமூகத்தின் கலாசார இனப்படுகொலையை இலங்கை அரசாங்கம் செய்து வருவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர்.

இதுபோன்ற செயற்பாடுகள் இந்துக்களுக்கும், இந்தியாவுக்கும் எதிரான தீங்கிழைக்கும் செயல் என இந்து இயக்கத்தின் சர்வதேச தலைவர் ஸ்ரீ அருண் உபாத்யாய் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இந்த பிரச்சினையை இந்திய அரசு உணர்ந்து, இந்தியா வரும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தனுஷ்க குணதிலகவுக்கு புதிய சலுகை !

அவுஸ்திரேலிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக தனது பிணை நிபந்தனைகளில் மாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளார்.
இந்த வழக்கு சிட்னி டவுனிங் சென்டர் பிராந்திய நீதிமன்றத்தில் இன்று (06) எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்படி, இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக வுக்கு விதிக்கப்பட்டிருந்த சமூக வலைத்தளத் தடையை நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொன்னையா சுப்பிரமணியன்: காணாமல் ஆக்கப்பட்ட மலையகக் குரல்! – காணொலி

மணியன் மாஸ்ரர் என்றழைக்கப்படும் பொன்னையா சுப்பிரமணியன் மலையகத்திலிருந்து வடமாகாணத்துக்குப் புலம்பெயர்ந்து வன்னியில் மலையகத் தமிழர்களின் குரலாக இருந்தவர். தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையில் மொழிபெயர்பாளராக இருந்த இவர் வன்னி இறுதி யுத்தத்தின் பின் வன்னியில் இருந்த மலையக மக்களின் குரலாகச் செயற்பட்டவர். பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் உட்பட இன மத பேதம் கடந்து பல தரப்பட்ட அரசியல் கட்சிகளோடும் தொடர்பில் இருந்தவர்.

இந்நேர்காணல் மேற்கொள்ளப்பட்ட சில வாரங்களுக்குள்ளாகவே இவர் காணாமல் ஆக்கப்பட்டார். இவர் காணாமல் ஆக்கப்படுவதற்கு முற்பட்ட காலகட்டங்களில் இவர் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரனுடன் மிகுந்த முரண்பாட்டைக் கொண்டிருந்தார். எஸ் சிறிதரன் மலையகத் தமிழர்களை அவமதித்துப் பேசிய ஓடியோ பதிவுகள் வெளிவந்திருந்த காலம். பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரனை அம்பலப்படுத்துவதில் முன்நின்றவர். அதனைத் தொடர்ந்தே அவர் காணாமல் ஆக்கப்பட்டார்.

மிகவும் அறியப்பட்ட, உயர்மட்ட அரசியல் தலைமைகளோடு உறவுகளைக் கொண்டிருந்த போதும் மலையகத் தமிழர்களுக்கு தேயிலைத் தோட்டங்களில் மட்டுமல்ல வன்னி மண்ணில் என்ன நடந்தாலும் கேட்க நாதியில்லை என்ற நிலையே இன்னமும் தொடர்கிறது. 200 ஆண்டுகளுக்குப் பின்னும் மலையகத் தமிழர்களின் வாழ்வியலில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படவில்லை.

அவர் காணாமலாக்கப்படுவதற்கு சிறிது காலத்திற்கு முன் ஓகஸ்ட் 21 2016இல் பதிவு செய்யப்பட்ட இந்நேர்காணல் முதற்தடவையாக காணொலியாக வெளியிடப்படுகின்றது.

பசிக்காக உணவு திருடிய பழங்குடியின இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரம் – 5 வருடங்களின் பின்பு தீர்ப்பு !

அட்டப்பாடி பழங்குடியின இளைஞர் மது என்பவர் அடித்து கொலைச் செய்யப்பட்ட வழக்கில் 14பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளா மாநிலம், பாலக்காடு அட்டப்பாடி கடுகுமன்னா பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மல்லான் என்பவரின் மகன் மது. குகையில் வசித்து வந்த இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். மது பசிக்காக 2018 பிப்ரவரி 22-ம் திகதி முக்கலி பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து உணவு திருடியதாக கூறி அவரை கையும், காலையும் கட்டி தரையில் இழுத்து சென்று அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் உடம்பில் 15 இடங்களில் ஏற்பட்ட கொடுங்காயங்களால் தான் மது உயிரிழக்க நோ்ந்ததாக உடற்கூராய்வு அறிக்கையிலும் கூறப்பட்டியிருந்தது.

இந்த வழக்கில் அந்த பகுதியில் உள்ள வியாபாரிகள், கார் டிரைவர்கள் உட்பட 16 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்தனர். இதில் முக்கிய குற்றவாளிகளான கார் டிரைவர் சம்சுதீன், வியாபாரிகளான ஹீசைன், முனீர் ஆகியோர் முதல் மூன்று குற்றவாளிகளாக குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டியிருந்தது. இந்த வழக்கில் 16 பேர் மீது கொலை, பழங்குடியினர் மீதான தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.வழக்கில் 129 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன.

5 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.எம். ரத்தீஷ்குமார் தீர்ப்பளித்தார். அட்டப்பாடி மது கொலை வழக்கில் 14 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. IPC 304(2) கீழ் ஹுசைன், மரைக்கார், ஷம்சுதீன், ராதாகிருஷ்ணன், அபுபக்கர், சித்திக், உபைத், நஜீப், ஜெய்ஜூமோன், முனீர், சஜீவ், சதீஷ் முனீர் சஜீவ், சதீஷ், ஹரீஷ் மற்றும் பிஜு ஆகிய 14 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில், அனீஷ் மற்றும் அப்துல் கரீம் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகள் 14 பேருக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்பட உள்ளது.

இங்கிலாந்தில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் – தெற்காசியாவை சேர்ந்தவர்களே காரணம் என்கிறது அரசு !

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணிக்க புதிய அதிரடிப் படையை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தொடங்கி வைத்துள்ளார்.

இங்கிலாந்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றன.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் தெற்காசியாவை சேர்ந்தவர்களாக இருப்பதாகவும், குறிப்பாக இங்கிலாந்து வாழ் பாகிஸ்தானியர்களாக இருப்பதாகவும் உள்துறை அமைச்சர் சூயெல்லா பிராவர்மன் கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகளை கண்காணித்து, அவர்களுக்கு உரிய தண்டனையை உறுதி செய்ய புதிய அதிரடிப் படை அமைக்கும் திட்டத்தை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நேற்று தொடங்கி வைத்தார்.

அவர் கூறுகையில், ”இனவெறி, மதவெறி குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது தவறு. குற்றம் செய்தவர்கள் இனி தப்ப முடியாது” என்றார்.

டுவிட்டர் லோகோவில் நீலக்குருவிக்கு பதிலாக ஜப்பானின் நாய் உருவம் !

உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து அதில் பல மாற்றங்களை செய்து வருகின்றார்.

இந்தநிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் லோகோவாக நீல நிறத்தில் குருவி ஒன்று இருந்து வந்தநிலையில், தற்போது அது நாய் படமாக மாற்றப்பட்டுள்ளது.

டுவிட்டரில் நீண்ட கால வழக்கத்தில் இருக்கும் நீல நிற குருவி வடிவ லோகோவே தற்போது மாற்றப்பட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள முக்கிய நாய் இனமான ‛ஷிபு இனு’ என்ற நாயே டுவிட்டரின் புதிய லோகோவில் இடம்பெற்றுள்ளது.

டுவிட்டரில் எலான் மஸ்க் மேற்கொண்டு வரும் குறித்த பல மாற்றங்கள் குறித்து டுவிட்டர் பயனர்கள் பலரும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

“நான் ஒரு திறமையானவன். ஏனெனில் எனக்கு ஒன்றும் தெரியாது” – மு நித்தி: ஒரு தேடி!

மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகால துன்பியல் வரலாறு என்பது வெள்ளைக்கார பிரித்தானியர்கள் நாட்டை விட்டுச் சென்று எழுபது ஆண்டுகளுக்குப் பின் இன்னமும் தொடர் கதையாகவே இருக்கின்றது. இன்றும் இந்த மக்கள் அடிமைத்தளைகளில் இருந்து தங்களை விடுவிக்க முடியாதபடி சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புகளால் விலங்கிடப்பட்டுள்ளனர். இலங்கையின் பிரபல்யமான சிறுநீரக மாற்று மருத்துவமனை கண்டியில் உள்ளது. ஏன்? தோட்டங்களில் தேயிலை பிடுங்கியவர்கள் தலைநகரில் தேநீர் கடைகளுக்குள் முடக்கப்படுகின்றனர். ஏன்? இந்த 21ம் நூற்றாண்டிலும் தேயிலை கொழுந்து பிடுங்குவதில் தானே மலையகத்தில் போட்டி நடத்துகின்றனர். ஏன்?

இதற்கு சிங்கள பௌத்த தேசியவாதம் தான் முழுக்காரணம் என்று சொல்லிவிட்டு நாங்கள் யாரும் கைகழுவிட முடியாது. இந்நிலை தொடர்வதற்கு சிங்கள பௌத்த தேசியவாதத்திற்கு முண்டுகொடுத்துக் கொண்டிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பரபம்பரை அரசியலுக்கு முக்கிய பங்கு உண்டு. இலங்கையின் பொருளாதாரத்தின் அடிநாதமாக இருந்த மக்களின் முதுபெலும்பை அவர்களின் வாக்குரிமையைப் பறித்து ஒடித்ததில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பாட்டனார் ஜி ஜி பொன்னம்பலம் முக்கியமானவர்.

தமிழ் சிறுபான்மையினத்தின் அரசியல் அபிலாசைகள் சந்தேகக் கண்ணோடு பார்க்கப்படவும் இலங்கையில் உள்ள ஏனைய சமூகங்களோடு சமூகமான உறவைப் பேணவும் மிகுந்த தடையாக இருப்பது இவ்வாறான துரோகத்தனங்களும் நயவஞ்சகமான சூழ்ச்சிகளுமே. பெரும் நிலச்சுவந்தராக இருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சியில் பலநூறு ஏக்கர் நிலத்தைக் கொண்டிருந்த போதும் தங்கள் பரம்பரையிழைத்த பாவத்திற்கு ஒரு பிரயாச்சித்தம் கூடச் செய்யவில்லை. இன்னும் கிளிநொச்சி உட்பட்ட வன்னிப் பிரதேசத்தில் வாழும் மலையக மக்களுக்கு எந்த அரசியல் பிரதிநிதித்துவமும் தமிழ் அரசியல் கட்சிகளுக்குள் இல்லை. மலையகத் தமிழர்கள் பற்றிய வடக்கில் உள்ள பாரம்பரிய அரசியல் தலைமைகளின் பரிவு என்பது முதலைக் கண்ணீர்.

மலையகத் தமிழர்கள் பற்றிய மலையகத் தமிழ் அரசியல் கட்சிகளின் நிலை இதனிலும் மோசமானது. அவர்கள் அம்மக்களை எப்போதுமே அடிமையாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டுமோ அதனையே இப்போதும் செய்கின்றனர். அவர்களை சுயமற்றவர்களாக தங்கள் வாக்கு வங்கிகளாக மட்டுமே வைத்திருப்பது. அவர்களை எப்போதும் தோட்டங்களோடே கட்டிப்போடுவது. அதன் மூலம் அவர்களை காலத்துக்கும் அடிமையாக்குவது. மலையகத்தை விட்டு வெளியே வன்னிவரை வந்த மலையகத் தமிழர்களின் வாழ்நிலை மலையகத்தில் உள்ள மலையகத் தமிழர்களின் வாழ்நிலையோடு ஒப்பிடுகையில் கணிசமான முன்னேற்றத்தையே கொண்டுள்ளது. அதற்குக் காரணம் அவர்கள் தோட்டங்களில் இருந்து விடுவிக்கப்பட்டதும் தங்கள் கடின உழைப்பினால் அடைந்த முன்னேற்றம்.

ஆகவே மலையகத் தமிழர்களின் இன்றைய நிலைக்கு பிரித்தானிய ஏகாதிபத்தியமும் சிங்கள பௌத்த பேரினவாதமும் தான் காரணம் என்று சொல்லிவிட்டு யாரும் தப்பித்துவிட முடியாது. தமிழ் சமூகமும் தமிழ் அரசியல் வாதிகள் மீது பழி போட்டுவிட்டு தப்பித்துவிட முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமூகமும் இவ்விடயத்தில் தங்களைக் கேள்விக்குட்படுத்த வேண்டும். மலையக அரசியல் கட்சிகள் மலையக அறிவியில் சமூகம் உட்பட.

ஆங்காங்கே சில தீவிர செயற்பாடுகள் சிலரினால் முன்னெடுக்கப்பட்டு அது மலையக மக்களின் வாழ்வியலை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. இலக்கியவாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யும் விரல்விட்டு எண்ணக்கூடிய பொறுப்பான இடங்களில் உள்ளவர்கள். அவ்வாறானவர்கள் இலைமறை காயாகவே உள்ளனர். அந்த வகையில் கிளி விவேகானந்த வித்தியாலயமும் அதன் அதிபர் ஜெயா மாணிக்கவாசன் குறிப்பிடப்பட வேண்டியவர். முற்று முழுதாக மலையக தமிழர்கள் குறிப்பாக கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளோடு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை இன்று கிளிநொச்சியின் முன்னரங்க பாடசாலையாகவும் அரசின் கல்வித் திட்டங்களை பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்தும் பாடசாலையாகவும் இயற்கையோடு ஒன்றிய பாடசாலையாகவும் மாகாண மட்டத்தில் பரீட்சைகளில் சாதனை படைத்த பாடசாலையாகவும் உள்ளது. இவ்விடத்தில் கிளிநொச்சியின் மற்றுமொரு பின் தங்கிய பிரதேசமாக உள்ள சாந்தபுரம் மகாவித்தியாலய அதிபர் பெருமாள் கணேசன் குறிப்பிடப்பட வேண்டியவர். அவர் மலையகத் தமிழர்களின் ஒரு உரத்த குரலாகவும் கிளிநொச்சியில் உள்ளார்.

இன்னல்களை அனுபவித்த, அனுபவிக்கின்ற மலையக மக்களின் இடைவிடாத குரலாக எனக்கு மிகவும் பரீட்சயமானவர் மு நித்தியானந்தன். ஏப்ரல் 01, 2023இல் நித்தியானந்தனின் 75வது பிறந்த தினத்தையொட்டிய பவள விழா லண்டனின் புறநகர்ப் பகுதியான ஸ்ரான்மோரில் (Stanmore) உள்ள பென்ற்லி ஹை ஸ்கூலில் (Bently High School) இடம்பெற்றது. இந்நிகழ்வில் மு நித்தியானந்தனின் மலையக இலக்கியம் சிறுமை கண்டு பொங்குதல், மலையகச் சுடர் மணிகள், பெருநதியின் பேரோசை, ஆடல் எங்கேயோ அங்கு ஆகிய நான்கு நூல்கள் அந்நிகழ்வில் வெளியிடப்பட்டதுடன் ‘நித்தியம்’ என்ற தலைப்பில் மு நித்தியானந்தனின் பவள விழா மலரொன்றும் வெளியிடப்பட்டது.

நான் 1991இல் லண்டனுக்குப் புலம்பெயர்ந்த போது எனக்கு வயது இருபது. இயக்க மோதல்கள், பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான தாக்குதல்கள், படுகொலைகள், அதற்குப் பின் இந்திய இராணுவத்தின் வரவு பின் இந்திய இராணுவத்தின் வெளியேற்றம். இலங்கையிலும் தமிழ் பிரதேசங்களிலும் எங்களுக்கு எதிர்காலம் மட்டுமல்ல வாழ்வதே கேள்விக்குறியாகி இருந்த நிலையில் என்னைப் போன்று பலர், ஆயிரக்கணக்கில் நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்த காலம். வட்டுக்கோட்டையில் இருந்து யாழ் நகருக்கு சைக்கிள் மிதித்துச் சென்றால் யாழ் நகரின் பிரதான சந்திகளில் சுரேஸ் பிரேமச்சந்திரனின் மண்டையன் குழு கழுத்தை வெட்டி முண்டத்தை மட்டும் போட்டுவிட்டுச் சென்றிருப்பார்கள் அல்லது புலிகள் நெற்றியில் பொட்டு வைத்து மின்கம்பத்தில் கட்டிவிட்டிருப்பார்கள். யாருக்கு யார் துரோகி என்ற குழப்பமான காலகட்டம். புளொட், ரெலோ போன்ற அமைப்புகளும் தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை கொலைகளினூடாக நிரூபிக்கத்தவறவில்லை. வே பிரபாகரன் அதற்கு முன்னரே கூட இருந்த பலரைப் போட்டுத் தள்ளியருந்தாலும் சுந்தரம் படுகொலை முதலாவது சகோதரப் படுகொலையானது.

இவ்வாறான பின்னணியில் தான் அன்றைய செய்திகள் இருந்தது. அன்றைய காலகட்டங்களில் கொலை, கொள்ளை என்பதெல்லாம் எண்ணிக்கையின் அல்லது மதிப்பீட்டின் அடிப்படையில் தான் முன்பக்கத்திற்கு வரும். எம் என் எம் அனஸின் மொழியில் சொன்னால் அது ‘பிணம் செய்த தேசம்’.

அப்போது, நித்தியானந்தன், வண பிதா சிங்கராயர், குட்டிமணி, தங்கத்துரை, நிர்மலா போன்ற பெயர்களை பத்திரிகைகளில் அறிந்த காலம். அதன் பின் 1983 வெலிகடைப்படுகொலை. அதில் தப்பியவர்கள் மட்டக்களப்புச் சிறைக்கு மாற்றப்பட்டது. மட்டக்களப்புச் சிறையை புளொட் வாசுதேவா – ஈஸ்வரன் – அசோக் ஆகியோர் உடைக்கத் திட்டமிட்டதும் உடைத்ததும் மு நித்தியானந்தன் இந்தியாவுக்குச் சென்றதும் நிர்மலா “புலிகள் வந்து கூட்டிக்கொண்டு போனால் தான் சிறைக்கு வெளியே வருவேன்” என்றதும் பத்திரிகைகளிலும் செவிவழியாகவும் அறிந்த தகவல்கள். இவ்வாறுதான் நித்தியானந்தன் எனக்கு அறிமுகமாகி இருந்தார். அவர்களை புலிகளாக கருதியிருந்த காலம். இந்த தகவல்களுக்கு அப்பால் 1991இல் இலங்கையைவிட்டு லண்டனுக்கு புலம்பெயர்ந்த போது எனக்கு இவர்கள் தொடர்பில் வேறேதும் அறிந்திருக்கவில்லை. ஆனால் இவர்கள் மீது ஒரு பிரமிப்பு இருந்தது.

லண்டனுக்கு வந்த எனக்கு தீப்பொறி குழுவினருடன் ஊரிலிருந்தே தொடர்பு இருந்ததால் லண்டனில் நடைபெறுகின்ற இலக்கிய, சமூக, அரசியல் சந்திப்புகளிலும் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். அந்த நட்புவட்டம் வளர்ந்தது, விரிந்தது, ஆழமானது. இவ்வாறு நித்தியானந்தனும் அறிமுகமாகின்றார். என்னிடம் இருந்த பிரமிப்பை நித்தியானந்தன் தன்னுடைய எளிமையான இயல்பான உரையாடலால் தகர்த்துவிட்டார். விரைவிலேயே நித்தி அண்ணையாகிவிட்டார்.

மு நித்தியானந்தனின் உரைகளின்பால் நான் மிகவும் கவரப்பட்டேன். அவருடைய கதை சொல்லும் நளினம், எளிமை மிகவும் கவர்ச்சியானது. கேட்போரின் ஆர்வத்தைத் தூண்டும் அவருடைய ஆளுமை மிகச் சிறப்பானது. கல்வியியல் கோட்பாட்டாளர்களில் ஒருவரான ஸ்கினர் நடத்தையியலாளர் “யாரும் எதையும் கற்கலாம்” என்பவர். சிறு குழந்தைக்கும் விண்வெளிக்கு ரொகட் விடுவதை கற்பிக்க முடியும் என்பவர். மு நித்தியானந்தனின் உரையில் இதனைக் காணலாம். யாருக்கும் எதனையும் தெளிவுபடுத்தும் ஆற்றல் அவருக்கு இருந்தது.

என்னுடைய வாசிப்பு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. இருந்தாலும் நித்தியானந்தனின் உரைகளுக்கூடாக பலநூல்களை வாசித்த அனுபவம் கூட்டத்தின் முடிவில் எனக்கு ஏற்படும். அதில் நித்தியானந்தன் எவ்வித மாயவித்தையையும் மேற்கொள்ளவில்லை. தான் உரையாற்றுவதற்கு முன்னர் அதற்கான ஆய்வுகளில் மூழ்கி தன்னைத் தயார்படுத்தியிருப்பார். தன்னுடைய உரையைக் கேட்போரின் நேரத்தை அவர் மிகவும் மதிப்பவர். அதனால் தான் அதற்கான முன் தயாரிப்போடு புதிய தகவல்களோடும் புதிய பார்வையோடும் அவர் கூட்டத்திற்கு வருவார்.

இவ்வாறான ஒரு பின்னணியில் 1997இல் நானும் ‘தேசம்’ என்ற சஞ்சிகையை ஆரம்பித்தேன். புலம்பெயர் தேசத்தில் குறிப்பாக லண்டனில் நீண்டகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகையாக இணைய ஊடகமாக (தேசம்நெற்) தற்போது காட்சி ஊடகமாகவும் (தேசம்திரை) வந்துகொண்டிருக்கின்றது. 2000ம் ஆண்டு காலகட்டங்களில் லண்டனில் புலிகளுக்கு ஆதரவில்லாத தரப்பினரால் நடத்தப்படும் கூட்டங்கள் என்றால் அது தேசம் நிகழ்த்தும் கூட்டமாகமே இருந்த காலம். தேசத்தின் ஆரம்ப நாட்களில் நித்தியானந்தனின் உணர்வுபூர்வமான ஆதரவு மிகக் காத்திரமானது. தேசத்தின் கூட்டங்களுக்கு தலைமை தாங்குவது, உரை நிகழ்த்துவது, நூலாய்வுகளை மேற்கொள்வது என நித்தியானந்தன் மிகுந்த ஆதரவை வழங்கி வந்தவர். தேசம் ஏற்பாடு செய்த சண்முகதாசனின் நூல் அறிமுகவிழா, மலேசியத் தமிழ் இலக்கியம் – மாநாடு, யாழ் பொதுசன நூலக எரிப்பு நினைவு நிகழ்வு, மற்றும் பல அரசியல் கலந்துரையாடல்களில் மு நித்தியானந்தனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

நான் எனது வாழ்வின் பிந்திய காலத்தில் எனது நாற்பத்து ஒன்பதாவது வயதிலேயே கலைமாணிப் பட்டத்தை முடித்து முதகலை மாணிப் பட்டத்தை முடித்து ஆசிரியரானவன். எனக்கு தேடலையும் ஆர்வத்தையும் தூண்டியதுடன் எனது தேடலுக்கு இரையூட்டியது புலத்தில் இடம்பெற்ற கலை, இலக்கிய, சமூக, பொருளாதார, அரிசியல் கூட்டங்கள் அங்கு நடைபெறும் விவாதங்கள் தர்க்கங்கள். எனது எழுத்தாற்றலையும் கூட நான் புலத்திலேயே வளர்த்துக்கொண்டேன். எனக்கு தமிழில் இருந்த ஆளுமையே அதனை ஆங்கிலத்திற்கும் மாற்றிக்கொள்ள உதவியது. என்னுடைய தேடலின் வளர்ச்சியில் நித்தியானந்தனின் பங்கும் கணிசமனது.

நித்தியானந்தனேடு நெருக்கமான சிலரை கடுமையாக விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டியிருந்ததால் நித்தியானந்தனோடு ஒரு முரண்பாடு ஏற்பட்டது. இருந்த போது 2016இல் “வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால்வரை ” என்ற என்னுடைய நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு காத்திரமான விமர்சன உரையை வழங்கி இருந்தார். அந்நூலில் இஸ்ரேலிய மொசாட் படைகள் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி அளித்ததைக் குறிப்பிட்டு இருந்தேன். அதுபற்றி மற்றுமொரு ஆய்வாளர் கேள்வி எழுப்பிய போது என்னால் உடனடியாக அந்த தகவல் மூலத்தை குறிப்பிட முடியவில்லை. ஆனால் நித்தியானந்தன் எந்தப் புத்தகம் அது யாரால் எழுதப்பட்டது என்பதை அவ்விடத்தில் உடனடியாகவே சுட்டிக்காட்டினார்.

ஒரு மாணவனின் கல்வியியல் ஆளுமையில் அவன் ஆசானின் கல்வியியல் ஆளுமை மிகுந்த தாக்கத்தைச் செலுத்தும். ஒரு பேராசானாக நித்தியானந்தன் தன்னுடைய உரைகளுக்கு மேற்கொள்ளும் தயாரிப்புக்கள் எங்களிலும் துளித்துளியாக தாக்கத்தைச் செலுத்தி உள்ளது. மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கல்வி என்பது ஒரு அனுபவம். அது ஒப்பீட்டளவில் நிரந்தரமான மாற்றத்தை மனிதர்களின் நடத்தையில் பழக்கத்தில் ஏற்படுத்தும். அவ்வாறான மாற்றத்தை நித்தியானந்தன் என்னில் ஏற்படுத்தி இருந்தார். அவருக்கு இந்றைய நாளில் எனது பிறந்த தின வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் எனது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

“எனக்குத் தெரியும் நான் ஒரு திறமையானவன் என்று ஏனென்றால் எனக்குத் தொரியும் எனக்கு ஒன்றும் தெரியாது என்று – ‘I know that I am intelligent, because I know that I know nothing” என்று சொன்னவர் தத்துவமேதை சோக்கிரட்டிஸ். அப்படித்தான் நித்தியானந்தனும் அவருக்கு ஒன்றுமே தெரியாது. அதனால் அவர் 75 வயதிலும் இளமையோடு தேடுகின்றார். தேடிக்கொண்டே இருக்கின்றார். தன் அறிவுக் கண்களைத் திறந்து வைத்து எமது அறிவுப் பசியையும் ஆற்றுகின்றார்.

நானும் சில கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருக்கின்றேன். எனக்கு விடை தெரியாத கேள்விகள் சிலவற்றுக்கு விடையை அறிய ஆவலாக இருக்கின்றேன். கேள்விகளில் முட்டாள்தனமான கேள்விகள் இல்லையென நம்ப விரும்புபவன் நான். அதனால் இதனை கேட்டுவிட வேண்டும் என நினைக்கிறேன்.

கேள்வி ஒன்று: எனக்கு தெரிந்தவரை நித்தியானந்தன் ஒரு இடதுசாரி. மனிதத்தை மனித நேயத்தை மதிப்பவர். அப்படியிருக்கையில் இடதுசாரிக் கருத்துக்களில் ஆர்வம்கொண்டவர்கள் எந்த அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்தனர்? வே பிரபாகரனை தலைவராக ஏற்றனர்? இது வே பிரபாகரனின் ஆளுமையா? இடதுசாரிகளின் ஆளுமையின்மையா? கருத்தியல் தோல்வியா?

கேள்வி இரண்டு: இன்றைய பவள விழாவிற்கு 25 ஆண்டுகளுக்கு முன் 50வது பிறந்ததின விழா கொண்டாடப்பட்டிருந்தால், அது இவ்வாறு அமைந்திருக்க வாய்ப்பேயில்லை. இது கருத்தியல் சமரசமா? அல்லது கருத்தியல் அம்னீசியாவா?

மு நித்தியானந்தன் ஒரு சிறந்த ஆய்வாளர் விமர்சகர். அவருடைய பவளவிழாவில் ஒரு கேள்வியை முன் வைக்காமல் நிகழ்வை முடிவுக்கு கொண்டுவருவது பூரணத்துவத்தைத் தராது என்பதற்காக மட்டுமே இக்கேள்விகள்.

 

நேட்டோ அமைப்பில் 31 ஆவது நாடாக இணைகிறது பின்லாந்து !

நேட்டோ அமைப்பில் 31 ஆவது நாடாக பின்லாந்து இணைய இருக்கிறது என நேட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் அறிவித்து இருக்கிறார். உலகின் மிகப்பெரிய இராணுவ கூட்டமைப்பாக நேட்டோ அமைப்பு இருக்கிறது. வரும் மாதங்களில் பின்லாந்தை தொடர்ந்து ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் இணைய இருக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேட்டோவில் சேரத்துடிக்கும் பின்லாந்து; வரவேற்கும் நேட்டோ... எச்சரிக்கும்  ரஷ்யா! | Russia warning Finland about its idea of joining NATO - Vikatan

“இது ஒரு வரலாற்றுப்பூர்வமான வாரம். நாளை முதல், பின்லாந்து கூட்டமைப்பின் முழு நேர உறுப்பினர் ஆகிறது. நேட்டோ தலைமையகத்தில் முதல் முறையாக நாளை நாங்கள் பின்லாந்து கொடியை ஏற்ற இருக்கிறோம். பின்லாந்து பாதுகாப்பு, ஆர்டிக் பாதுகாப்பு மற்றும் நேட்டோ அமைப்பு முழுவதிற்கும் நல்ல நாளாக இருக்கும்,” என்று ஸ்டால்டன்பர்க் தெரிவித்துள்ளார்.

பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைய ஆட்சேபனை இல்லை என கடைசி நாடாக துருக்கி நாளை கையெழுத்திட இருக்கிறது. இந்த நிலையில், இது தொடர்பான ஆவணங்களை அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி அந்தோனி ப்ளிங்கனிடம் துருக்கி ஒப்படைக்க இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் ஃபின்லாந்து அதிபர் சௌலி நினிஸ்டோ மற்றும் பாதுகாப்பு துறை மந்திரி அண்டி கைகொனென் மற்றும் வெளியுறவு துறை மந்திரி பெக்கா ஹாவிஸ்டோ ஆகியோர் கலந்து கொள்கின்றனர். “இது எங்களுக்கு பெருமை மிக்க தருணம் ஆகும். சந்திப்பின் போது, ரஷ்யாவின் தொடர் சட்டவிரோத நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டு வரும் உக்ரைனுக்கு அதிக ஆதரவு அளிக்க நேட்டோவை வலியுறுத்துவதே பின்லாந்துக்கு மிக முக்கிய குறிக்கோள் ஆக இருக்கும். ஐரோப்பா மற்றும் அட்லாண்டிக் பகுதி முழுக்க பாதுகாப்பை பலப்படுத்தவே நாங்கள் நினைக்கிறோம்,” என்று ஹாவிஸ்டோ தெரிவித்துள்ளார்.

“அரசாங்கத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் 20 ஆண்டுகள் சிறை.”- இலங்கையின் ஜனநாயகத்திற்கு சாவுமணியாக வருகிறது பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய சட்டமூலம் !

“பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் இம்மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.” என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

விரைவில் பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய சட்டமூலம் நாடாளுமன்றில்! தினேஷ்  குணவர்தன - தமிழ்வின்

இது தொடர்பான சட்டமூலம் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடிய பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் பல தரப்பினரும் ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்கள், “

பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்கிற புதிய சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டம் 40 வருடங்களுக்கு மேலாக நாட்டிலே அமுலில் இருக்கின்றது. ஆறு மாத காலத்திற்காக ஒரு தற்காலிக சட்டமாக கொண்டுவரப்பட்டு பின்னர் சில வருடங்களுக்கு பிறகு 81 ஆம் ஆண்டு அது நிரந்தரமான சட்டமாக மாற்றப்பட்டது.

மிகவும் மோசமான ஒரு சட்டம் பலராலே அப்படியாக விமர்சிக்கப்படுகின்ற சட்டம் அதை நீக்குவதாக. தற்போதைய  ஜனாதிபதியே பிரதமராக இருந்தபோது 2017 ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.

அதற்கு பிறகு தான் பயங்கரவாத தடை சட்டத்தை மாற்றி பயங்கரவாத  தடுப்புசட்டம் வர்த்தமானியில்  பிரசுரிக்கப்பட்டது. அது  மக்கள் பிரதிநிதிகளோடும் பொது அமைப்புகளோடும் கலந்துரையாடப்பட்டு அந்த வேளையிலே பல தவறுகளை சுட்டிக்காட்டி  பல திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

2018 ம்ஆண்டு  குண்டு வெடிப்பை சாட்டாக காட்டி அதனை நிறைவேற்றாமல் கைவிட்டார்கள். இப்பொழுது கொண்டுவந்திருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம். பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு ஒப்பானது அல்ல. இப்பொழுது இருக்கின்ற பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை விட மோசமானதாக காணப்படுகின்றது.” என தெரிவித்திருந்தார்.

இதே நேரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அவர்கள் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.  மேலும்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பயமுறுத்துவதாகவும், சட்டமூலத்தை தோற்கடிக்க அனைத்து பிரஜைகளும் ஒன்றிணைய வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அழைப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No description available.

இதே நேரம் இன்றைய தினம் இங்கிலாந்திலுள்ள இலங்கையர்களின் இணைவில் இலங்கையில் அமுலுக்கு வரவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட மூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அது அரசின் காட்டுமிராண்டித்தனமான போக்குக்கு வழிவகுக்கும் எனவும் வலியுறுத்தி லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

இதே வேளை ராஜபக்சக்களுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை அடுத்து ராஜபக்சக்களின் இடத்தை பிடித்துக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெரமுண குழுவினருடன் இணைந்த வகையில் மக்கள் போராட்டத்தை அடக்கும் – ஜனநாயக உரிமைகளை பறிக்கும் – இன்னுமொரு மக்கள் போராட்டம் எப்போதும் ஏற்பட இடம்கொடுக்ககூடாது எனும் எண்ணத்தோடு செயற்படுவதையே தொடர்ச்சியாக அவதானிக்க முடிகின்ற நிலையில் இதன் நீட்சியே இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம். இதுவரை காலமும் தமிழர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் மட்டுமே எதிராக அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த பயங்கரவாத சட்டம் புதிய திருத்தப்பட்ட சட்ட மூலத்தினூடாக பெரும்பான்மை சிங்களவர்களுக்கு எதிராகவும் திரும்பியுள்ளது.  குறிப்பாக வேகமாக சிங்கள இளைஞர்களிடையே பரவி விரும் ஜே.வி.பி கட்சியினரின் புரட்சிக்கருத்துக்களையும், அரகலய போராட்டங்களில் ஈடுபடும் சிங்கள இளைஞர்களையும் இந்த புதிய சட்ட மூலம் இலக்கு வைக்கின்றது என்பதே உண்மை .

அரசுக்கு எதிரான அரகலயாக்களின் போராட்டத்தில் பல்கலைகழக மாணவர்களின் பங்கு அதிகமாக இருந்த நிலையில் பல்கலைகழக மாணவர்களுக்கு எதிரான கடுமையான நிபந்தனைகளை அரசு கடுகதியில் செயற்பாட்டுக்கு கொண்டு வந்தததுடன் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்களின் கல்வி இடைநிறுதப்படும் என அறிவித்திருந்ததுடன் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ரணில் அரசாங்கம் கைது செய்திருந்தததுடன் அரகலய போராட்டங்களில் ஈடுபட்டடிருந்த பல இளைஞர்களையும் கூட ரணில் அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்ததது. இது சிங்களவரிடையே முதன்முறையாக பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிரான மனோநிலையை உருவாக்கியிருந்ததது என்பதையும் அவதானிக்க முடிகின்றது.

இதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணம் வந்திருந்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே “பயங்கரவாத  தடைச்சட்டத்தினை முன்னிலைப்படுத்திய போராட்டத்துக்கு யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் முழுமையான ஆதரவை எதிர்ப்பார்த்து நிற்பதாக கூறியிருந்தார்.

 

புதியபயங்கரவாத சட்டமூலம் தென்னிலங்கையரிடையே பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ள அதே நிலையில் இலங்கையில் ஜனநாயக போராட்டங்களை அடக்கப்படுவதற்கான ஒரு பாரிய சதியாகவே இதனை கொள்ள வேண்டியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட் போது “ இது ஒரு பயமுறுத்தும் சட்டமூலம் மற்றும் இந்த நாட்டின் அனைத்து குடிமக்களும் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இந்த விதத்தில் இன்று நாங்கள் இங்கு பேசுவது போல் சுதந்திரமாக பேச முடியாது. ஜனநாயகத்திற்கு இடமில்லை, அவர்கள் நம் அனைவரையும் கைது செய்வார்கள். மீண்டும் அரகலய அல்லது புரட்சி மூலம், நாம் ஏதாவது செய்ய வேண்டும்.” என அவர் கூறியிருந்ததது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் அச்சமான சூழலை தெளிவாக வெளிக்காட்டுகின்றது.

இதே நேரம் “அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முகப்பு புத்தகத்தில் கருத்துக்கள் பதிவிடுவதும் பயங்கரவாத செயற்பாடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறான செயற்பாடுகளுக்கு 20 வருட கால சிறை தண்டனை விதிக்கப்படலாம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பயங்கரவாதத்திற்கு எதிரானதல்ல, ஜனநாயகத்திற்கு எதிரானது, ஆகவே இதனை ஏற்பதா இல்லையா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும்.” என தெரிவித்து சஜித் பிரேமதாஸ தரப்பும் குறித்த சட்டமூலத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளது.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை காட்டிலும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பாரதூரமானது.’பயங்கரவாதம்’ என்ற சொற்பதத்திற்கு நீண்ட வரைவிலக்கணம் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த வரைவிலக்கணம் ஒன்றுக்கொண்டு முரண்பட்டதாக உள்ளது.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் 3(2) உறுப்புரையில் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்,சட்டவிரோதமான முறையில் ஒன்று கூடல், தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தல் மற்றும் குழுக்களில் இணைதல் என 13 விடயங்கள் பயங்கரவாத செயற்பாடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விடயங்கள் சிறந்தது தானே என ஒரு தரப்பினர் குறிப்பிட முடியும். நடைமுறையில் உள்ள தண்டனை சட்டக்கோவையின் பிரகாரம் இவ்விடயங்களுக்கு தண்டனை வழங்க முடியும்,பயங்கரவாத செயற்பாடாக அடையாளப்படுத்த வேண்டிய தேவை இல்லை.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கடந்த காலங்களில் சட்டமாக்கப்பட்டிருந்தால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டிருப்பார்கள்,ஆகவே பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டம் என்பது விசம் கலந்த ஜஸ்கிறீம் என்று குறிப்பிட வேண்டும்.” என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளன.

“பயங்கரவாத தடைச் சட்டம் சிங்களவருக்கும் எதிராக திசைமாறும் போதுதான் அதனுடைய தீவிரத்தன்மையையும் – இன்னுமொரு பக்கத்தையும் சிங்களவர்கள் புரிவார்கள்.” என முன்பு தமிழ்த்தலைமைகள் கூறியதை இன்று தென்னிலங்கை படிப்படியாக உணர ஆரம்பித்துள்ளது என்பதே நிதர்சனம்.

 

ஜப்பானின் முயற்சிகள் வெற்றி பெறுமா? – இதயச்சந்திரன்

ஆசியாவில் சீனாவிற்கு எதிரான அணிசேர்ப்பில், குவாடில் (QUAD)அங்கம் வகிக்கும் ஜப்பான் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியா வந்த ஜப்பானிய பிரதமர், சீனா-ரஷ்யாவிற்கு எதிராக அணிதிரள வேண்டிய அமெரிக்காவின் தேவையைக் கூறினார். ஆனால் இந்தியா அதற்குப் பதிலளிக்கவில்லை.

SCO மாநாட்டிற்கு ஜூலையில் இந்தியா வருகிறார் சீன அதிபர்.
அங்கு எல்லைப்பிரச்சினை பேசப்படுமா?. ரூபாய்- யுவானில் இருதரப்பு வர்த்தகம் குறித்தான இணக்கம் ஏற்படுமா?. அல்லது QUAD மீதான சீனாவின் அதிருப்தி பற்றி விவாதிக்கப்படுமா? . இவைகளும் இருதரப்பின் நிகழ்ச்சிநிரலில் உள்ளடக்கப்படலாம்.

அதாவது ஷாங்காய் கூட்டமைப்பில் (SCO)பேசப்படும் சகல விடயங்களையும் ஜப்பான் உன்னிப்பாக அவதானிக்கும் என்று கணிப்பிடலாம்.

QUAD என்பதும் ஒரு வகையில் BRI போன்ற Regional Connectivity திட்டந்தான்.
தற்போது அமெரிக்க டொலர் கடன் பத்திரங்களை அதிகம் (1 ரில்லியன்) வைத்திருப்பது ஜப்பான்.
சீன உட்பட பல நாடுகள் இப்பத்திரங்களை விற்கத் தொடங்கியுள்ளன.
டொலர் index உம் வீழ்ச்சியடைகிறது.

அதேவேளை தம்மிடமுள்ள Bond களை விற்றால் அமெரிக்காவின் கோபத்திற்கு உள்ளாகலாம் என்கிற பயம் ஜப்பானுக்கு.

இந்திய உட்பட பல நாடுகள் டொலரின் வர்த்தகம் செய்யாமல் தமது சொந்த நாணயத்தில் செய்ய ஆரம்பித்திருப்பதால் டொலரில் உள்ள சொத்துக்களுக்கும், அந்நிய செலாவணிக் கையிருப்பிற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதென ஜப்பான் தென்கொரியா போன்ற நாடுகள் அச்சமடைகின்றன.

1944 இல் டொலரை மையப்படுத்திய உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உருவாக்கம் இடம் பெற்றது. டொலரிற்கு ஆபத்து ஏற்படுகையில், இந்த நிதிமையங்களும் ஆட்டங்காணும்.

அதனை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகக் கணிக்கப்படும் ஜப்பானும் கவலையுடன் கவனிக்கும்.

மேற்குலகின் அரசியல், பொருளாதார, படைத்துறை ஆதரவு இருந்தாலும், ஆசியாவில் தனக்கான ஆதரவு நாடுகளைத் திரட்ட வேண்டிய அவசியம் ஜப்பானிற்கு உண்டு.

‘தென்சீனக்கடல் பிராந்தியத்தில் சீன விரிவாக்கத்திற்கு எதிராக அணிதிரள்வோம்’ என்கிற முழக்கத்தை முன்னிறுத்தி, தென்கொரியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளோடு இணைய முயற்சிப்பது போன்று, இந்துசமுத்திரப் பிராந்திலும் அதே சீன விரிவாக்கத்தைக் காட்டி இந்தியாவுடன் அணிசேர ஜப்பான் துடிக்கிறது.

இந்தியாவிலிருந்து திருக்கோணமலைக்கு எண்ணெய் குழாய் போடுவதன் ஊடாகவோ அல்லது இலங்கைக்கு நிதிஉதவி அளிப்பதன் மூலமோ இந்தியா-ஜப்பான்- இலங்கை என்கிற பிராந்திய இணைப்பினை உருவாக்கிவிட முடியுமென ஜப்பான் நினைக்கிறது.

அந்த நினைப்பு குறுகிய கால ஆயுள் கொண்டது என்பதனை மத்திய கிழக்கில் நடக்கும் மாற்றங்கள் புரிய வைக்கும்.
அது பற்றி அடுத்த பத்தியில் பார்ப்போம்.

-இதயச்சந்திரன்
1/4/2023