March

March

ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை !

ராகுல் காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த சூரத் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இதில் ராகுல் காந்தி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் சமயத்தில் ராகுல் காந்தி நாடு முழுக்க பிரசாரம் செய்தார். அந்த காலகட்டத்தில் ராகுல் காந்தி அகில இந்தியா காங்கிரஸ் தலைவராக இருந்த நிலையில், அவரது தலைமையில் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொண்டது. அந்த தேர்தலில் காங்கிரஸ் மிக மோசமாகத் தோல்வியடைந்து ஒரு பக்கம் இருந்தாலும், அப்போது பிரசார சமயத்தில் பல்வேறு சர்ச்சைகளும் இருந்தன.
ராகுல் காந்தி மக்களவை தேர்தலுக்காகக் கர்நாடக மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது மோடி என்ற பெயர் கொண்ட அனைவரும் ஒரே போல இருப்பதாகக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, அதன் பிறகு சர்ச்சைக்குரிய வார்த்தையைக் குறிப்பிட்டார். இது அப்போதே மிகப் பெரியளவில் சர்ச்சையானது. மோடி என்ற பெயர் வைத்துள்ள அனைவரையும் ராகுல் காந்தி அவமதித்து விட்டதாகப் புகார்கள் எழுந்தன.

கிரிமினல் அவதூறு வழக்கு
இந்த விவகாரத்தில் தான் அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடப்பட்டது. மோடி என்ற பெயர் கொண்ட அனைவர் குறித்தும் ராகுல் காந்தி அவதூறாகப் பேசியுள்ளதாகவும் ராகுல் காந்தி மோடி சமூகத்தையே இழிவுபடுத்திவிட்டதாகவும் குஜராத் பாஜக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான புர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தீர்ப்பு
நான்கு ஆண்டுகளாக இந்த கிரிமினல் அவதூறு வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடைசியாக ராகுல் காந்தி கடந்த அக். 2021இல் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த வழக்கில் கடந்த வாரம் தான் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இந்த வழக்கில் தான் இன்று தீர்ப்பளிக்கப்படும் என்றும் தீர்ப்பு அளிக்கும் போது ராகுல் காந்தி நீதிமன்றத்தில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார். அதன்படி ராகுல் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஓரின சேர்க்கையாளர்களுக்கு 10 ஆண்டு சிறை அல்லது மரண தண்டனை – உகாண்டா அறிவிப்பு!

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள் தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகி றார்கள். அவர்களை சில நாடுகள் அங்கீகரித்து அதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன.

அதே வேளையில் சில நாடுகளில் ஓரினச் சேர்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஓரின சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாபடி ஓரின சேர்க்கையாளர் என அடையாளப்படுத்தப்படுவது குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

இந்த சட்டத்தின் கீழ் கடும் விதி மீறல்களில் ஈடுபடும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். ஏற்னவே உகாண்டா உள்பட 30-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் ஒரே பாலின உறவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது உகாண்டாவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான புதிய நடவடிக்கையாக சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓரினச் சேர்க்கையை ஊக்குவிப்பது, அதில் ஈடுபடுவதற்கான திட்டம் தீட்டுவது ஆகிய வற்றுக்கு இச்சட்டம் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

IMFஇன் முதலாவது ஊழல் வழக்கு விசாரணை இலங்கையிடம் !

சர்வதேச நாணய நிதியம் நிதியுதவி அளிப்பதாகவும், பிணை எடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக ஊழலுக்கு ஆளான ஆசிய நாடுகளின் முதல் வழக்கில் இலங்கையின் நிர்வாகத்தை மதிப்பிடுவதாகவும் கூறுகிறது.

மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்ளும் திவாலான தேசத்திற்கு உதவுவதற்காக பிணை எடுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை $3bn (£2.44bn) பெற உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, நாட்டிற்கு உடனடியாக $333m (£272m) கொடுத்து, அதன் கடனை நிலையான நிலைகளுக்குக் கட்டுப்படுத்த உதவும்.

எவ்வாறாயினும், உயரும் வாழ்க்கைச் செலவுகள், 36% வரையிலான உயர் வருமான வரிகள் மற்றும் மின் கட்டணங்களில் 66% அதிகரிப்பு ஆகியவற்றால் நசுக்கப்படும் மில்லியன் கணக்கான இலங்கையர்களுக்கு IMF நிதி உடனடியாக உதவாது .

பொருளாதார முறைகேடு மற்றும் கொவிட் தொற்றுநோயின் தாக்கம் காரணமாக கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கைக்கு அத்தியாவசிய இறக்குமதிகளுக்கான டொலர்கள் பற்றாக்குறையாக இருந்தது , ஏழு தசாப்தங்களில் இலங்கை  அதன் மோசமான நிதி நெருக்கடிக்குள் தள்ளியது.

இந்த வேலைத்திட்டத்தின் மூலம் 7 ​​பில்லியன் டொலர்களை ஒட்டுமொத்த நிதியுதவியை பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எவ்வாறான போதும், பிணை எடுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஊழலுக்கு ஆளான ஒரு ஆசிய நாடு முதல் வழக்கில் இலங்கையின் ஆட்சியை மதிப்பிடுவதாகவும் IMF கூறியுள்ளது.

இளவயது திருமணங்கள் : வெளித்தெரியாத பக்கங்கள்

சமூக அடிக்கட்டுமானத்தின் மிக முக்கிய அளவீடு அச்சமூகத்தில் பெண்களின் நிலை. அதனால் தான் பெண்களுடைய கல்வி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் தமிழ் சமூகத்தில் பெண்களின் நிலை வரலாற்றுக்கு முந்திய காலத்திலும் சரி, கடந்து வந்த போராட்ட காலத்திலும் சரி அதற்குப் பிந்தைய காலத்திலும்; சரி இப்போதும் சரி கீழான நிலையிலேயே உள்ளது. உலகத்தில் 100 மில்லியன் பெண் குழந்தைகள் பதினெட்டு வயதுக்கு முன்னரேயே திருமணமாகின்றனர். இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டமே இளவயதுத் திருமணங்கள் கூடுதலாக இடம்பெறும் மாவட்டமாக உள்ளது.

 

பிபிசி செய்திகளின் படி கிழக்கு மாகாணத்தில் இளவயதுத் திருமணங்கள் 14 வீதத்தில் இருந்து 22 வீதமாக அதிகரித்துள்ளது. உலகில் இளவயதுத் திருமணங்கள் அதிகம் நடைபெறும் பகுதியாக தெற்காசியா காணப்படுகின்றது. இலங்கையில் இந்நிலை மோசமானதாக இல்லாவிட்டாலும் சில சமூகங்களில் இது பெரும் பிரச்சினையாகவே உள்ளது. இலங்கையில் திருமணவயது 18 ஆக இருந்த போதும் 12 வீதமானவர்கள் 18 வயதுக்கு முன்பாக திருமணம் செய்கின்றனர். இவர்களில் இரண்டு வீதமானவர்கள் பதினைந்து வயதை எட்ட முன்பே திருமணம் செய்கின்றனர் என Protecting Environment andChildren Everywhere (PEaCE)  அமைப்பு தெரிவிக்கின்றது. ஆணாக இருந்தால் என்ன பெண்ணாக இருந்தாலென்ன கல்வி இன்றியமையாதது. ஆனால் ஒரு பெண்ணுக்குரிய கல்வி அச்சமூகத்தின் அடிக்கட்டுமானத்தைப் பலப்படுத்தி சமூகத்தின் நாட்டின் பொருளாதாரத்தை வளம்படுத்தி ஏற்றத்தாழ்வுகளை மிகக்குறைக்கும்.

 

பெண்களுடைய தலைமையில் நாடுகள் பொருளாதார முன்னேற்றத்தையும் சிறந்த நிர்வாகத்தையும் கொண்டிருந்தன. ஜேர்மனியில் ‘மம்’ என்று பிரியமுடன் அழைக்கப்பட்ட அஞ்சலா மேர்க்கல், நியூசிலாந்தில் ஜசின்டா ஆர்டன், பின்லாந்தில் சான மரின் போன்றவர்கள். சிறுமி கிரேற்ரா துன்பேர்க் சுற்றாடல் பாதுகாப்புக்காக குரல் எழுப்பி உலகத் தலைவர்களையே சற்றுத் திரும்பிப் பார்க்கச் செய்தார். ஆனால் இலங்கையில் இளவயது திருமணங்கள் அதிகமாக நிகழும் பகுதிகளில் வடக்கு மாகாணமும் முன்னிலையில் உள்ளது.

தேசம் திரை காணொளியில் மேலதிக விடயங்கள்

உலகின் மகிழ்ச்சியான நாடு தரவரிசைப் பட்டியலில் நாத்திகர்கள் அதிகமாக வாழும் பின்லாந்து முதலிடம். – காரணம் ஏன் தெரியுமா..?

உலகின் மகிழ்ச்சியான நாடு’ தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து முதலிடம் வகிப்பதாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் எந்த அளவு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்; அதற்கான சூழல் எந்த அளவு இருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு மகிழ்ச்சியான நாடுகளை தரவரிசைப்படுத்தி அதனை அறிக்கையாக வெளியிடுவதை ஐ.நா. வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

அந்த அடிப்படையில் தற்போது வெளியான அதன் அறிக்கையில், மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையும், அதற்கான காரணங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, ஐரோப்பிய நாடான பின்லாந்து தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. டென்மார்க் 2-வது இடத்தையும், ஐஸ்லாந்து 3-வது இடத்தையும், இஸ்ரேல் 4-வது இடத்தையும், நெதர்லாந்து 5-வது இடத்தையும் பிடித்துள்ளன. ஸ்வீடன், நோர்வே, ஸ்விட்சர்லாந்து, லக்செம்பர்க், நியூசிலாந்து முறையே 6 முதல் 10 வரையிலான இடங்களைப் பிடித்துள்ளன.

கனடா 13-வது இடத்தையும், அமெரிக்கா 15-வது இடத்தையும், ஜெர்மனி 16-வது இடத்தையும், இங்கிலாந்து 19-வது இடத்தையும், பிரான்ஸ் 21-வது இடத்தையும் பிடித்துள்ளன. சிங்கப்பூர் 25-வது இடத்தையும், ஐக்கிய அரபு அமீரகம் 26-வது இடத்தையும், சவூதி அரேபியா 30-வது இடத்தையும் பிடித்துள்ளன.

ஜப்பான் 47-வது இடத்தையும், பிரேசில் 49-வது இடத்தையும், சீனா 64-வது இடத்தையும், நேபாளம் 78-வது இடத்தையும், பாகிஸ்தான் 108-வது இடத்தையும், இலங்கை 112-வது இடத்தையும், மியான்மர் 117-வது இடத்தையும், வங்கதேசம் 118-வது இடத்தையும், இந்தியா 126-வது இடத்தையும் பிடித்துள்ளன. கடைசி இடமான 137-வது இடத்தை ஆப்கனிஸ்தான் பிடித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகளான பின்லாந்து , சுவீடன்,  டென்மார்க், நோர்வே, போன்ற நாடுகள் தொடர்ந்து இந்த பட்டியலில் இடம்பிடித்து வருகின்றன. இதே நாடுகளில் தான்  நாத்திகம் பற்றிய கருத்தாடல்களை கொண்டவர்கள் அதிகமாக காணப்படுவதுடன், நாத்திக கருத்துக்களை  அல்லது மத சகிப்புத்தன்மையை கொண்டவர்களும் அதிகமாக வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் பின்லாந்து மக்களின் வாழக்கை பற்றியும் நோக்குதல் அவசியமாகிறது. பின்லாந்தை விட சிறந்த காலநிலையை கொண்ட பல நாடுகள் இருக்கின்றன, பணக்கார நாடுகள் பல இருக்கின்றன, மக்கள் தொகை அதிகமாகவோ, குறைவாகவோ உள்ள நாடுகள் பல இருக்கின்றன. ஆனால் ஏன் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து இருக்கின்றதுப் என்பதைக் காணலாம்.

இயற்கை சூழல் 

அங்கு பல பழமையான காடுகள், பளிங்கு போல தெளிவான ஏரிகள், வன விலங்குகள் இருக்கின்றன. காற்றிலும் நீரிலும் மாசு மிகக் குறைவு. இங்குள்ள மக்கள் எப்போதும் இயற்கைவளங்கள் சூழ்ந்த பகுதியிலேயே வசிக்க விரும்புகின்றனர். வீட்டுக்குள் அடைந்து கிடைப்பதை அவர்கள் விரும்புவதில்லை, இதுவும் மகிழ்ச்சிக்கான ரகசியங்களில் ஒன்று.

ஒற்றுமை

மிகவும் சுதந்திரமான மற்றும் நிதானமான வாழ்க்கை முறையை மக்கள் பின்பற்றுகின்றனர். இறுக்கமான சட்டங்கள் இல்லை என்றாலும் மிகவும் அமைதியான நாடாக இருக்கிறது பின்லாந்து.

பின்லாந்து கலாச்சாரம் மற்றொரு காரணம். மக்கள் போட்டிப்போடுவதை விட ஒன்றாக இணைந்து செயல்படுவதே ஊக்குவிக்கப்படுகிறது.

திணிக்கப்படாத கல்வி முறை

பின்லாந்து மக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாக இருக்க காரணம் அங்கு குற்றங்கள் மிகக் குறைவு என்பதுதான். மேலும் பின்லாந்தின் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட கல்வி முறை மற்றோரு காரணம்.

பின்லாந்தின் பள்ளி அமைப்பு ஐரோப்பியாவில் மிக உயர்ந்ததாக கருதப்படுகிறது. இது இளைஞர்கள் அதிக வாய்ப்புகளை உருவாக்க வழிவகுக்கிறது. மேலும் பின்லாந்தில் சிறந்த மருத்துவ அமைப்பும் இருக்கிறது. இவை அனைத்தும் இணைந்து இங்குள்ள மக்கள் உயர்தரமான வாழ்க்கையை அனுபவிக்க உதவுகிறது.

சமத்துவமான கல்வி முறை

பின்லாந்து மக்கள் மகிழ்ச்சிக்கான மிக முக்கிய காரணமாக கருதப்படுவது ஏற்றதாழ்வுகள் இல்லாமை தான். வேற்றுமைகளைக் கடந்து சமத்துவத்தை முன்னிருத்தும் போது மக்கள் எப்படி மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதற்கான உதாரணமாக பின்லாந்து திகழ்கிறது.

சமூகத்தின் எந்த பொருளாதார பின்னணியில் இருந்து வருபவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றது.

சகிப்புத்தன்மையுடைய மதக்கட்டமைப்பு 

மகிழ்ச்சி சுட்டெண்ணில் முதலிடம் வகிக்கும் பின்லாந்து உலகில் நாத்திகர்கள் அதிகம் வசிக்கும் நாடாகவும் உள்ளது. அதே நேரம் மதம் தொடர்பான சகிப்புத்தன்மை இந்த நாட்டு மக்களிடம் அதிகமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

இளவயது திருமணங்கள் வெளித்தெரியாத பக்கங்கள்!

சமூக அடிக்கட்டுமானத்தின் மிக முக்கிய அளவீடு அச்சமூகத்தில் பெண்களின் நிலை. அதனால் தான் பெண்களுடைய கல்வி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் தமிழ் சமூகத்தில் பெண்களின் நிலை வரலாற்றுக்கு முந்திய காலத்திலும் சரி, கடந்து வந்த போராட்ட காலத்திலும் சரி அதற்குப் பிந்தைய காலத்திலும்; சரி இப்போதும் சரி கீழான நிலையிலேயே உள்ளது. உலகத்தில் 100 மில்லியன் பெண் குழந்தைகள் பதினெட்டு வயதுக்கு முன்னரேயே திருமணமாகின்றனர். இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டமே இளவயதுத் திருமணங்கள் கூடுதலாக இடம்பெறும் மாவட்டமாக உள்ளது. பிபிசி செய்திகளின் படி கிழக்கு மாகாணத்தில் இளவயதுத் திருமணங்கள் 14 வீதத்தில் இருந்து 22 வீதமாக அதிகரித்துள்ளது. பிபிசி இது பற்றி பதிவு செய்த செய்தியின் காணொலி:

உலகில் இளவயதுத் திருமணங்கள் அதிகம் நடைபெறும் பகுதியாக தெற்காசியா காணப்படுகின்றது. இலங்கையில் இந்நிலை மோசமானதாக இல்லாவிட்டாலும் சில சமூகங்களில் இது பெரும் பிரச்சினையாகவே உள்ளது. இலங்கையில் திருமணவயது 18 ஆக இருந்த போதும் 12 வீதமானவர்கள் 18 வயதுக்கு முன்பாக திருமணம் செய்கின்றனர். இவர்களில் இரண்டு வீதமானவர்கள் பதினைந்து வயதை எட்ட முன்பே திருமணம் செய்கின்றனர் என Protecting Environment andChildren Everywhere (PEaCE) அமைப்பு தெரிவிக்கின்றது.

ஆணாக இருந்தால் என்ன பெண்ணாக இருந்தாலென்ன கல்வி இன்றியமையாதது. ஆனால் ஒரு பெண்ணுக்குரிய கல்வி அச்சமூகத்தின் அடிக்கட்டுமானத்தைப் பலப்படுத்தி சமூகத்தின் நாட்டின் பொருளாதாரத்தை வளம்படுத்தி ஏற்றத்தாழ்வுகளை மிகக்குறைக்கும். பெண்களுடைய தலைமையில் நாடுகள் பொருளாதார முன்னேற்றத்தையும் சிறந்த நிர்வாகத்தையும் கொண்டிருந்தன. ஜேர்மனியில் ‘மம்’ என்று பிரியமுடன் அழைக்கப்பட்ட அஞ்சலா மேர்க்கல், நியூசிலாந்தில் ஜசின்டா ஆர்டன், பின்லாந்தில் சான மரின் போன்றவர்கள். சிறுமி கிரேற்ரா துன்பேர்க் சுற்றாடல் பாதுகாப்புக்காக குரல் எழுப்பி உலகத் தலைவர்களையே சற்றுத் திரும்பிப் பார்க்கச் செய்தார். ஆனால் இலங்கையில் இளவயது திருமணங்கள் அதிகமாக நிகழும் பகுதிகளில் வடக்கு மாகாணமும் முன்னிலையில் உள்ளது.

யுத்தம் ஏற்படுத்திய வடுக்களும் – அதனால் ஏற்பட்ட வறுமையும், பாடசாலை இடைவிலகல்களும் அதன் நீட்சியாக ஏற்பட்டுள்ள சமூகப் பிறழ்வுகளும் ஏராளமானவை. இதன் இன்னுமொரு வடிவமே இளவயது திருமணங்களாகும்.

கல்வியை தொடர வேண்டிய சிறுமிகள் பலர் திருமண வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டு அவர்களுடைய எதிர்கால கனவுகள் முழுமையாக சிதைக்கப்பட்டு பாடசாலையில் கற்க வேண்டிய காலத்தில் மகப்பேற்று வைத்தியசாலைகளை நாடும் அவலம் தமிழர் பகுதிகளில் அதிகரித்து வருகின்றது.

மேலும் சிறுவயது திருமணங்கள் மூலம் ஆரோக்கியமற்ற எதிர்கால தலைமுறை ஒன்று தோன்றுவதற்கான அபாயமும் காணப்படுவதுடன் – எச்.ஐ.வி மற்றும் பால்வினை நோய்கள் பரவல், இளவயது தம்பதியினரிடையே மன உளைச்சல் மற்றும் இளவயது விவாகரத்துக்கள் என்பனவும் அடுத்தடுத்து நமது சமூகங்களில் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.

தனது 18ஆவது வயதில் திருமாணமாகி 24ஆவது வயதில் கணவன் வேறொரு உறவை ஏற்படுத்த இரு கைக்குழந்தைகளுடன் விவாகரத்து வழக்கை எதிர்கொண்டுள்ள தர்சி :

பெற்றோரை எதிர்த்து காதலித்தவனைக் கரம் பிடித்த தர்சியின் கரங்களை காதலித்தவனும் கைவிட தர்சி போன்ற நூற்றுக்கணக்கான இளம்பெண்கள் வாழ்க்கை மிகச் சீர்குலைத்துள்ளது. இதில் உள்ள பிரச்சினை தர்சி போன்ற பெண்கள் எதிர்நோக்குகின்ற வாழ்க்கைப் போராட்டம் மட்டுமல்ல. தர்சிக்கு இரு கைக் குழந்தைகள் உள்ளனர். இவ்வாறான குழந்தைகள் பெற்ற குழந்தைகளின் எதிர்காலம் மிகக் கேள்விக்குறியாகின்றது. குழந்தைகளுக்கு இளவயதில் ஏற்படுகின்ற துன்பியல் அனுபவங்கள் அவர்களது உடல், உள, மூளைத்திறன் வளர்ச்சியில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இது ஈழத் தமிழர்கள் எவ்வாறான சமூகத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்தப் போகின்றனர் என்ற கேள்வியையும் எழுப்புகின்றது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இளம் பெண், பதினெட்டு மாதக் குழந்தையாகவே தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர். வயதான வளர்ப்புத் தந்தை அவருடைய உடலூனமுற்ற மகள் இவர்களுடன் தன் மூன்று குழந்தைகளையும் தனியாக வளர்த்து வருகின்றார். பல பொறுப்புக்களில் இருந்தவர். இளவயதில் 2009 யுத்த முடிவில் திருமணமாகி அது பத்துநாட்களே நீடித்த வரலாற்றையும் பின் மறுதிருமணமாகி நடந்ததையும் விபரிக்கின்றார்:

முக்கியமாக அண்மைய நாட்களில் தமிழர் நிறைந்து வாழும் பகுதிகளில் போதைப்பொருள் பாவனையும் – வாள்வெட்டு கலாச்சாரமும் அதிகரித்துள்ளது. இது ஒருபக்கம் இருக்க பாடசாலை மாணவிகள் பலர் தென்னிந்திய சினிமா மோகத்தாலும் – வறுமையின் நிமித்தமும் பாடசாலை கல்வியை இடைவிட்டு மேற்குறிப்பிடப்பட்ட சமூக சீர்கேடுகளில் ஈடுபடுவோருடன் காதல் ஏற்பட்டு வாழ்க்கை பற்றிய அனுபவம் – புரிதல் ஏதுமற்ற வயதில் பாடசாலை கல்வியை கைவிட்டு திருமண வாழ்க்கை ஒன்றினுள் நுழைகின்றனர்” என வடக்கில் சிறுவர் விவகாரம் தொடர்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் அரச அதிகாரி ஒருவர் தேசம்நெட்டிடம் கூறியிருந்தார்.

இவ்வாறான ஒழுக்கப் பிறழ்வான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களின் குடும்பப் பின்னணி அவர்களுடைய நடத்தையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. வறுமை, கல்வியில் போதாமை, பாரம்பரிய வழமைகள், உள்நாட்டு யுத்தம், திருமணத்திற்கு முன்னதான உடலுறவு என்பன இளவயதுத் திருமணங்களுக்கு காரணமாகின்றன. இளவயதில் திருமணமாகும் ஒரு வகையில் அவர்களுமே குழந்தைகளாக உள்ள பிராயத்தில் தாய்மை அடைகின்ற போது இந்த இளம் தம்பதியினருக்கு கல்வியறிவு போதாமை இருக்கும். அதனால் அவர்கள் நிரந்தரமான தொழிலைக் கொண்டிருப்பதில்லை. அதனால் பொருளாதார ரீதியாக எப்போதும் பலவீனமாக இருப்பார்கள்.

இளவயதில் திருமணமாகி தன்னுடைய இரு குழந்தைகளோடு முல்லைத்தீவு தேங்காடு பகுதியில் வாழும் பெண் தன்னிலையை சொல்கின்றார்:

மேலும் இளவயதுத் திருமணங்கள் பெரும்பாலும் விவாகரத்திலேயே முடிவடைவதால் இந்த இளம் பெண்கள் கல்விப் போதாமையோடு தங்கள் காலில் நிற்பதற்கான தொழில் வாய்ப்புகளும் இன்றி பொருளாதாரத்தில் மற்றையவர்களில் தங்கியிருக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்:

இவ்விளம் பெண்களை உருவாக்குபவர்கள், இந்நிலைக்குத் தள்ளுபவர்கள் யார் என்பது முக்கியமானது. தற்போது சஜித் பிரேமதாஜவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதம அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வெற்றிவேல் ஜெயந்திரன் பல பதின்மம் கடந்த இளம்பெண்களை ஏமாற்றி, அவர்களின் இளமையை அவர்களிடம் இருந்து பறித்து அவர்களின் வாழ்க்கையைச் சீரழித்துள்ளார். ஜெயந்திரனால் அவர்களுக்கு நான்கு பிள்ளைகளும் உண்டு. அதிலொரு பிள்ளையை ‘வைப்பாட்டிக்கு பிறந்தவள்’ என்று தானே திட்டியும்’ வருபவர். ஜெயந்திரனின் இந்நிலைக்கு அவருடைய தந்தையும் ஒரு காரணம். இரு திருமணங்களையும் அதற்கும் மேற்பட்ட திருமணத்திற்கு அப்பாலான உறவுகளையும் கொண்டிருந்தவர். அதனை ஜெயந்திரனே தன்னுடைய நூலில் பதிவு செய்தும் உள்ளார். இப்போது அவருடைய வழியில் நச்சுச் சுழற்சியாக ஜெயந்திரன் இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கின்றார்.

இவ்வாறு ஜெயந்திரன் வைப்பாட்டி என்றும் சொல்லும் பெண் ஜெயந்திரனோடு தன்னுடைய பதின்மம் கடந்த வயதில் பத்து ஆண்டுகளுக்கு முன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இப்பெண் தன்னுடைய மிக இளவயதிலேயே தந்தையை இழந்தார். தந்தை தவறாக இனம்காணப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். பின்நாட்களில் அவர்களுடைய வறுமையையும் ஆண் ஆளுமைகள் இல்லாததையும் அவர்கள் சாதிய அடிப்படையில் ஒடுக்கப்பட்ட சமூகம் என்பதையும் பயன்படுத்தி ஜெயந்திரன் அவரைக் கவர்ந்தார். இவர்களுடைய மகளை இன்று வைப்பாட்டிக்கு பிறந்தவள் என்று ஜெயந்திரன் தானே சொல்லித் திரிகின்றார். இவ்வாறான ஒரு நச்சுச் சூழற்சியை இன்று தாயக மண்ணில் பல குடும்பங்களிலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இவ்விளம் பெண்கள் இன்று எதிர்கொள்கின்ற இதே பிரச்சினையை அவர்களுடைய பிள்ளைகள் அடுத்த 15 ஆண்டுகளில் எதிர்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இதுவொரு நச்சுச் சூழலாக தமிழ் சமூகத்தை சீரழித்துக் கொண்டிருக்கின்றது.

இவ்வாறான நச்சுச் சுழற்சியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டவர் தன்னுடைய அனுபவத்தை தேசம்நெற்றுடன் பகிர்கிறார்: அம்மாவுடைய விருப்பத்திற்கு மாறாக, என்னுடைய 22ஆவது வயதில் நான் சட்டத்தரணியான என் தந்தையைச் சந்தித்தேன். என்னுடைய தந்தை “நீங்கள் யார்?” என்று என்னைக் கேட்டார். அந்த வலி என்னை மிகவும் வருத்தியது. அவர் அதனைத் தொடர்ந்து “நீங்கள் இன்னாரின் பிள்ளையா? அவருடைய மகளா? இவருடைய மகளா?” என்றெல்லாம் கேட்ட போது கண்கள் குளமானது. கூடுமானவரை கண்ணீரை அடக்கிக் கொண்டேன். குரல் தளர்ந்து “நான் உங்களுடைய மகள்” என்று அறிமுகப்படுத்தினேன். இந்தத் துர்ப்பாக்கியம் வேறொருவருக்கும் வரக்கூடாது. நானும் அழுதேன். அவரும் அழுதார். அவரை நான் அப்பா என்று ஒரு நாளும் அழைத்ததில்லை. என்னுடைய அம்மாவின் கடின உழைப்பினாலும் முயற்சியினாலும் நான் இன்றைய நிலையை அடைந்தேன். என்னுடைய குடும்பப் பெயரைக்கூட அம்மாவின் பெயரையே வைக்க விரும்புகிறேன்” என்றார் அவர். அப்பெண் இன்று சில பட்டங்களைப் பெற்றதுடன் அதற்கேற்ற தொழிலை தேடிக்கொண்டு இன்று இன, மத, சாதி பேதமில்லாமல் ஜேர்மனியில் சமூக சேவையில் ஈடுபட்டு உள்ளார். அந்த வாய்ப்பை அவரின் தாயார் வழங்கியிராவிட்டால் இவருடைய வாழ்வும் அந்த நச்சுச் சுழற்சிக்குள் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கும். அந்த நச்சுச் சுழற்சிக்குள் இன்னுமொரு குழந்தை சிக்கிவிடக்கூடாது என்பதற்காக இன்று கடுமையாகப் போராடி வருகின்றார்.

பதின்மத்தை எட்டாத மூன்று குழந்தைகள் தங்கள் கல்விக்காக பிச்சை ஏந்தும் நிலையை ஏற்படுத்தியதற்காக இச்சமூகத்தில் உள்ள நாம் அனைவருமே வெட்கித் தலைகுனிய வேண்டும். ஆனால் நாம் என்ன செய்கின்றோம்? இவர்கள் வாழ்கின்ற சில பத்து மைல்களுக்கு அப்பால் சன நடமாட்டமே இல்லாத ஆனையிறவில் 27 ஆடியில் பல கோடி செலவில் நடராஜர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. எமது இளம் பெண்கள் நிர்கதியாகி வருவது பற்றி எவ்வித கரிசனையும் இல்லாமல் அவர்களை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தும் சமூகம் நடராஜர் சிலையை நிறுவி தமிழ் பாரம்பரியத்தையும் கலாச்சார விழுமியத்தையும் காப்பாற்றலாம் என்ற மாயையில் வாழ்கின்றது.

அதேபோல் புங்குடுதீவு மக்களால் பெரும்பாலும் கைவிடப்பட்ட அந்த மண்ணில் ஸ்ரீ ராஜேஸ்வர் அம்மன் – கண்ணகை அம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம் பல கோடி செலவில் இவ்வாண்டு யூன் 25 இல் மேற்குநாடுகளில் வாழ்பவர்களின் விடுமுறைக் காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாலயத்தில் சில கட்டிடங்கள் கட்டப்பட்டு பின் இடிக்கப்பட்டு பல கோடி வீணடிக்கப்பட்டு இன்னும் பல கோடி செலவழிக்கப்பட்டு விழா நடத்தப்பட இருக்கின்றது. கும்பாபிஷேகம் முடிவடைந்து வெளிநாட்டவர்கள் தத்தம் நாடு திரும்பிய பின் அம்பாளுக்குத் துணையாக கட்டாக்காலி மாடுகள் தான் அங்கு மிஞ்சும். அங்குள்ள வறுமையில் வாடுகின்ற ஒடுக்கப்பட்ட சமூகங்களை முன்னேற்றி அவர்களுக்கு வாழ்வாதாரம் அளித்து அங்குள்ள இளம்பெண்களை பலப்படுத்தி அந்த மண்ணை மக்களைக் கட்டி எழுப்பாமல் கும்பாபிஷேகம் செய்து தமிழ் பாரம்பரியத்தையும் கலாச்சார விழுமியத்தையும் காப்பாற்றலாம் என்ற மாயையில் தான் புங்குடுதீவு புலம்பெயர்ந்த சமூகமும் வாழ்கின்றது.

இவர்களுக்காகப் போராடியவர்கள் வறுமையில் உழல்கின்றனர். அவர்களுடையது மட்டுமல்ல அவர்களின் குழந்தைகளின் எதிர்காலமும் இருட்டில் தான். கும்பாபிஷேகம் முடிந்து வெளிநாட்டவர்கள் கிளம்ப கண்ணகை அம்மனும் இருட்டில் தனிமையில் வாழவேண்டும். வேண்டுமானால் எலக்ரிக் அணையா விளக்கைப் போட்டு மைக்கில் தேவாரமும் போட்டுவிடுவார்கள். கட்டாக்காலி மாடுகளுக்குத் தான் அம்பாள் அருள்பாலிக்க வேண்டும்.

இந்த நிலையில் மகளிர் தினமான மார்ச் 8, 2023 கிளிநொச்சி திருநகர் பகுதியில் இயங்கி வரும் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஏற்பாட்டில் சிறுவயது திருமணங்களுக்கு எதிராகவும் – அது தொடர்பான விழிப்புணர்வை பாடசாலை மாணவர்களிடையேயும் கிளிநொச்சி மக்களிடையேயும் ஏற்படுத்தும் நோக்குடன் கிளிநொச்சி நகரிலுள்ள கிளி. மத்திய மகாவித்தியாலயத்தின் முன்பாக அமைதிவழி கவனயீர்ப்பு செயற்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

கவனயீர்ப்பு செயற்பாட்டு ஏற்பாட்டு குழு சார்பில் திருமதி ஹம்சகௌரி சிவஜோதி கருத்து தெரிவித்த போது ”சிறுவயது திருமணங்கள் பற்றி எங்கேயோ நடந்ததாக கேள்விப்பட்ட காலம் போய் நமது பக்கத்து வீடுகளில் கூட அடுத்தடுத்து நடைபெறும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. சிறுவயதுத் திருமணங்கள் ஆக்கப்பூர்வமான சமூகத்தை அன்றி மன உளைச்சலுக்குள்ளான சமூகத்தை உருவாக்குகின்றது. 16 வயதுக்கு கீழான பிள்ளைகள் கூட திருமணம் செய்து கொள்ளும் அபத்தமான சூழல் நமது பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இருந்த போதும் 15 வயதுக்கு கீழானோர் திருமணம் செய்யும் போது அது துஷ்பிரயோகமாக கருதப்பட்டு நீதிமன்றத்தீர்ப்புக்கு விடப்படுகின்ற போதும் 16-19 வயதுக்கு இடையான வயதுடைய பெண்கள் இந்த கட்டாய – விருப்பத்துடன் இளவயது திருமணங்களுக்குள் நுழையும் போது இலங்கையின் சட்டங்கள் அதற்கு எதிரான எந்த நடவடிக்கையையும் எடுப்பதற்கான வரைபுகளை கொண்டிருப்பதாக தெரியவில்லை. இலங்கையில் 19 வயது அதாவது பாடசாலை கல்வி பூர்த்தியாகும் வரை மாணவர்கள் திருமண வாழ்க்கைக்குள் தள்ளப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

இந்த கவனயீர்ப்பு செயற்பாட்டின் போது” சிறுவயது திருமணங்கள் சட்டரீதியான துஷ்பிரயோகம்”, “புத்தகப்பை சுமக்கும் வயதில் கருப்பை சுமப்பதா..?” “தாயோடு செல்லும் வயதில் பேரரோடு செல்வதா” போன்ற வசனங்களை தாங்கிய பதாகைகளை பங்குபற்றியிருந்தவர்கள் தாங்கியிருந்தனர்.

இது தொடர்பில் அரசியல் சமூக செயற்பாட்டாளர் த ஜெயபாலன் கருத்துத் தெரிவிக்கையில்: ஆணோ, பெண்ணோ இருபத்தியைந்து வயதிற்கு முன் திருமணம் செய்வதை முற்றாகத் தவிர்க்க வேண்டும். பதின்ம வயதில் காதல்கொள்வதில் தவறில்லை. ஆனால் அவர்கள் தங்கள் உறவின் எல்லையை தெரிந்திருக்க வேண்டும். அந்த எல்லைக்கோட்டை திருமணம் வரை தாண்டக்கூடாது. ஆணும் பெண்ணும் இருவருமே ஒரு நிரந்தர வேலையை உறுதிப்படுத்திய பின்னரேயே திருமண பந்தத்திற்குள் நுழைய வேண்டும். அதன் பின் தங்கள் உறவு நீண்டகாலம் நிலைக்கும் என்ற உறுதி ஏற்பட்ட பின்னரேயே அவர்கள் குழந்தையைப் பெற்றெடுப்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். அதுவே ஆரோக்கியமான சமூகத்திற்கு அத்திவாரம். அதனை உறுதிப்படுத்த இளம்பெண்களை கல்வியில் பொருளாதாரத்தில் வளப்படுத்த வேண்டும். சமூகத்தின் வளங்கள் அனைத்தும் அதற்கே முதலீடு செய்யப்பட வேண்டும். எம்முடைய இளம்பெண்கள் கல்வியில் முன்னேறினால் அவர்கள் பொருளாதாரத்தில் தன்னிலை அடைவார்கள். அவர்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் ஸ்தீரணமான குடும்பத்தை உருவாக்குவார்கள். அதுவே தமிழர்களின் பாரம்பரியத்தையும் கலாச்சார விழுமியங்களையும் இன்னும் செழிப்புறச் செய்யும். தமிழ் வாழ வேண்டுமானால் எம் தமிழ் பெண்கள் சுயகௌரவத்தோடு வாழவேண்டும்” எனத் தெரிவித்தார்.

“தேசிய பாடசாலைகளுக்கு மட்டும் ‘ பேச்சு ஆங்கிலம்’ கற்பிக்க ஏற்பாடு ” – இலங்கையின் இலவச கல்வியை அங்கவீனமாக்குகிறதா கல்வி அமைச்சு ?

ஆங்கில மொழியின் விசேட மற்றும் முக்கியத்துவத்தை கருத்திற் கொண்டு, அனைத்து தேசிய
பாடசாலைகளிலும் மார்ச் 30 முதல் தரம் ஒன்றிலிருந்து ‘ பேச்சு ஆங்கிலம்’ கற்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, 6-9 மற்றும் 10-13 வரையான அனைத்து பாடசாலை பாடத்திட்டங்களையும் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்படும். இதற்கான முன்னோடித் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்றார்.

2030 ஆம் ஆண்டளவில் கல்வித்துறை தொடர்பான உலகளாவிய நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான சவாலை வெற்றிகொள்ள அமைச்சு செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை பலராலும் விமர்சிக்கப்படும் ஒரு சூழல் உருவாக்கியுள்ளது.

தேசிய பாடசாலைகள் ஏற்கனவே அதிகப்படியான பௌதீக வளங்ளும் – ஆசிரிய வளங்களும் அதிகமாக கொண்டு காணப்படும் நிலையில் ஒப்பீட்டளவில் அடிப்படை கல்வி தொடங்கி பல விடயங்களில் பின்தங்கிய கிராமத்து பாடசாலைகளுக்கு கிடைக்கும் ஆசிரிய வளங்களும், பௌதீக வழங்களும் மிகச்சொற்பமானவையே. பெரும்பாலான தேசிய பாடசாலைகளில் இருந்து வெளியேறும் மாணவர்களுடன் ஒப்பிடும் போது கிராமப்பகுதிகளில் இருந்து வெளியேறும் பெரும்பாலான மாணவர்கள் அடிப்படை ஆங்கில அறிவு கூட இல்லாமலேயே வெளியேறும் துர்பாக்கிய நிலை இலங்கையில் காணப்படுகையில் கல்வி அமைச்சர் தேசிய பாடசாலைகளுக்கு மட்டுமே பேச்சு ஆங்கில பாடசாலையை வழங்கவுள்ளோம் என அறிவித்துள்ளமையானது பிற்போக்குத்தனமான கல்வி அமைப்பொன்று இங்கு காணப்படுவதையே உறுதிசெய்கிறது.

இலங்கையின் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் வெள்ளை ஆடைகளை வழங்குவதன் நோக்கம் சமத்துவத்தை போதிப்பதேயாம் என கூறி பெருமைப்பட்டுக்கொள்ளும் இதே கல்வி அமைச்சு தான் இன்று தேசிய பாடசாலைகளுக்கு மட்டுமே பேச்சு ஆங்கிலத்தை கற்பிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த திட்டம் தொடர்பில் யாழ்ப்பாண கிராமப்பாடசாலை ஒன்றின் அதிபரிடம் வினவிய போது “முதற்கட்டமாக தேசிய பாடசாலைகளில் பேச்சு ஆங்கில திட்டத்தை நடைமுறைப்படுத்தி பின்பு அதன் வெற்றி தோல்விகளை நோக்கி சீரமைத்து பின்பு அனைத்து பாடசாலைகளிலும் பேச்சு ஆங்கில திட்டத்தை அறிமுகம் செய்ய கல்வி அமைச்சு திட்டமிட்டிருக்கலாம். இந்த தேசிய பாடசாலைகள் – தேசிய பாடசாலைகள் அல்லாத பாடசாலைகள் என பாடசாலைகளை வகை நிர்ணயம் செய்வதே மோசமான செயலாகத்தான் நான் பார்க்கிறேன். இது பாடசாலை மாணவர்களிடமும் – அவர்களின் பெற்றோரிடமும் தேசிய பாடசாலைகள் தரமானவை என்ற எண்ணம் வந்தமையே இன்றைய கிராமிய பள்ளிக்கூடங்களின் வீழ்ச்சிக்கு காரணமாகியுள்ளது. இந்த நிலையின் ஒரு வடிவமே அண்மையில் யாழ்.நீர்வேலியில் மாணவர்கள் இல்லாததால் பாடசாலை ஒன்று இழுத்து மூடப்பட்ட சம்பவமாகும். இந்த கல்வி முறைமையே மாணவர்களிடம் நீ உயர்ந்த தேசிய பாடசாலையில் படிக்கிறாய் – நீ கீழான கிராம பாடசாலையில் படிக்கிறய் என்ற ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியுள்ளது.” எனக்கூறி விசனம் வெளியிட்டிருந்தார்.

ஒரு உடலின் வளர்ச்சி என்பது அனைத்து அங்கங்களும் சமனாக வளர்வதேயாகும். தனித்து ஒரு சில உடல் அங்கங்கள் மட்டும் அதிகப்படியாக வளருமாயின் அதனை நோய் நிலை என்போம். இலவசக்கல்வி அனைவருக்கும் சமனாக கிடைப்பதேயாம். தனித்து தேசிய பாடசாலைகளுக்கு மட்டுமே பேச்சு ஆங்கிலத்தை கற்பிப்போம் என்பதும் – அதனால் ஆங்கிலம் தெரிந்த சமுதாயம் ஒன்று உருவாகும் என கல்வி அமைச்சு எதிர்பார்ப்பதும் அந்த நோய் நிலைக்கு ஒப்பானதே !

Silicon Vally Bank, Signature Bank, First Republic Bank, Credit Suisse, … அடுத்தது எந்த வங்கி? ஆனால் ரஷ்யாவின் எந்த வங்கியும் சிக்கலில் சிக்கவில்லை!!!

சிலிக்கன் வலி பாங்க், சிக்னேர்சர் பாங்க், பெஸ்ற் ரிபப்ளிக் பாங்க், கிரடிஸ் சுவிஸ் அடுத்தது எந்த வங்கி? ஆனால் ரஷ்யாவின் எந்த வங்கியும் சிக்கலில் சிக்கவில்லை!!!

வினை விதைத்தவன் வினையறுப்பான் என்பது போல் தற்போது வரிசையாக மேற்கு நாடுகளின் வங்கிகள் சரிந்து வீழ்கின்றது. இது வங்கிகளின் வீழ்ச்சி மட்டுமல்ல டொலர் நாணயத்தினதும் அமெரிக்காவினதும் வீழ்ச்சியை கட்டியம் கூறி நிற்கின்றன. முதலாளித்துவத்தின் முதகெலும்பாக இருக்கும் வங்கிகள் முறிந்து வீழ்வது முதலாளித்துவத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கும். அமெரிக்கா எப்படியாவது ரஷ்யாவை இல்லாமல் பண்ணுவதற்கு பல்வேறு முயற்சிகளையும் எடுத்து, ரஷ்யாவின் எல்லை நாடுகளை நேட்டோவில் இணைத்துக்கொண்டது. அதன் தொடரச்சியாக உக்ரைனையும் நேட்டோவில் இணைக்க முயற்சித்ததை அடுத்து, ரஷ்யா தன் படைகளை உக்ரைனுக்கு அனுப்பி, ரஷ்யர்கள் வாழும் பகுதிகளைக் கைப்பற்றியது.

நீண்ட காலமாக ஈடாட்டத்தில் இருந்த கிரடிட் சுவிஸ் வங்கி (Credit Suisse) மார்ச் 19 வீழ்ந்து கொண்டிருக்கையில், அதனை அரச மயப்படுத்துவதா என்ற கேள்வி எழுந்த நிலையில், யுபிஎஸ் (UBS) வங்கி கிரடிட் சுவிஸ் வங்கியை இன்று $3.25 billionக்கு வாங்கியதன் மூலம் வீழ்ச்சி தற்போது ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

அதே சமயம் வங்கி வீழ்ச்சிக்கு சம்பந்தம் இல்லாமல் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் மரியோபோல் பகுதிக்கு ரஷ்ய அதிபர் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். மார்ச் 18இல் ரஷ்ய அதிபருக்கு போர்க் குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் ‘முடிந்தால் புடுங்கிப் பாருங்கள்’ என்ற தோரணையில் விளாடிமீர் பூட்டின் உக்ரைனின் மரியப்போல் பிரதேசத்துக்கு விஜயம் செய்திருந்தார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துவிட்டது என்று தங்கள் சரிந்து விழும் செல்வாக்கை தூக்கி நிறுத்த முன்னாள் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனும் போர் முழக்கம் இட்டு ‘பொங்கு நேட்டோ’ நடாத்தினர். உக்ரைனை தங்கள் ஆயத தளபாடங்களால் நிறைத்து ரஷ்யாவுக்கு பாடம் புகட்டி, தங்கள் செல்வாக்கை மீளக் கட்டியெழுப்பலாம் என நினைத்தனர். ஆனால் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மண் கவ்வினார். அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. அவரைத் தொடர்ந்து ‘உக்ரைனுக்கு போய் போராடுங்கள்’ என்று அறிக்கை விட்ட லிஸ் ரஸ் பிரதமரானார். அவருடைய ஆட்சியும் 44 நாட்களில் கவிழ்ந்தது.

ரஷ்யாவை மண்டியிட வைக்க பொருளாதாரத் தடைகள், வங்கிப் பரிமாற்றங்களில் கட்டுப்பாடுகள், ஏனைய நாடுகளையும் ரஷ்யாவோடு வர்த்தகம் செய்ய தடை விதித்தனர், நிறுவனங்களையும் ரஷ்யாவில் இருந்து வெளியேற நிர்ப்பந்தித்தனர். ரஷ்யா இதுவரை இவையெல்லாவற்றையும் கொசுக்கடியென தட்டிவிட்டு நகர்ந்து கொண்டிருந்தது. ரஷ்யா உக்ரைனுக்குள் நுழைந்து சில வாரங்களுக்கு முன் ஓராண்டு ஆன நிலையில் ரஷ்யா குறிப்பிடத்தக்க அளவான பொருளாதார நெருக்கடிகள் எதற்கும் முகம்கொடுக்கவில்லை.

தங்களுக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்று செய்த பொருளாதாரத் தடைகள் மற்றும் திருகுதாளங்கள் எல்லாம் சொந்த செலவில் தங்களுக்கு தாங்களே சூனியம் வைத்த கதையாகியது. உக்ரைன் யுத்தத்தை நேட்டோ நாடுகள் நெய்யூற்றி ஆயதங்களை உக்ரைனில் குவித்து தூண்டிவிட, நேட்டோ நாடுகளில் எரிபொருள், உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலையேற்றம் ரொக்கற் வேகத்தில் உயர்ந்தது.

நேட்டோ நாடுகளில் மக்கள் விலையேற்றத்திற்கு எதிராகவும் சம்பள உயர்வு வேண்டியும் வீதிகளில் இறங்கிப் போராடினர். விலையேற்றம் எகிறிக்கொண்டு சென்ற போதும் மக்கள் வேலைக்குச் செல்லவோ மேலதிக வேலைகளைச் செய்யவோ விரும்பவில்லை. அதனால் நிறுவனங்களில் பணி செய்வதற்கு தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இதனைச் சமாளிக்க மக்களுக்கு மேலும் மேலும் நெருக்கடிகளை வழங்கி அவர்களது உழைப்பைச் சுரண்டுவதற்காக தொடர்ந்தும் நேட்டோ நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டிவீதத்தை அதிகரித்தன. இதன் மூலமாவது மக்களை கூடுதலாக வேலை செய்ய நிர்ப்பந்தித்தனர்.

ஆனால் நேட்டோ தலைவர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக வட்டிவீதம் அதிகரித்ததால் வங்கிகள் ஏற்கனவே முதலீடு செய்த இணைப்பு பத்திரங்களின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. ஆயினும் அவர்களின் புதிய முதலீடுகளுக்கு கூடிய லாபம் இடைக்கும். மேலும் வங்களின் வரன்முறையற்ற குறுகிய லாபநோக்கம் மட்டும் கொண்ட ஆபத்தான வியாபாரச் செயற்பாடுகளாலும் சில வங்கிகள் கடுமையான ஆபத்தை எதிர்நோக்கின. மேலும் அமெரிக்காவின் பிற்கொயின் நிறுவனம் எப்ரிஎஸ் (FTS) திவாலானது போன்றவற்றால் சில வங்கிகளிலும் அது தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் வங்கிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே எப்போதும் மிக நெருக்கமான உறவும் இருந்து வருவதால் வங்கிகளின் ஊழல் வெளியே பெரும்பாலும் கொண்டு வரப்படுவதில்லை.

இந்தப் பின்னணயில் தான் மார்ச் 10, 2023 அன்று முதலாவதாக சிலிக்கன் வலி வங்கி திவாலானது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல சிலிக்கன் வலி வங்கி ஏனைய வங்கிகளின் நிலையை வெளியுலகிற்குக் காட்டிக்கொடுத்தது. அமெரிக்காவும் அதன் நேட்டோ நாடுகளும் உடனடியாக அதன் ஆபத்தையுணர்ந்து 2008 லீமன் பிரதேர்ஸ், ரோயல் பாங்க் ஒப் ஸ்கொட்லன்ட்டுக்கு நடந்தது மீளவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தது. அமெரிக்கா டொலர்களை அச்சிட்டு வங்கிகளைக் காப்பாற்ற பில்லியன் கணக்கில் வங்கிகளுக்கு நிதியை வழங்கியது.

ரஷ்யாவை நொருக்குவோம் உக்ரைனில் இருந்து ரஷ்யாவை விரட்டுவோம் என்ற அமெரிக்க அரசின் ரீல்களை எல்லாம் நம்பிய அமெரிக்கர்கள், வங்கிகள் எல்லாம் ஸ்தீரமாக உள்ளது, வாடிக்கையாளரின் வைப்பீடுகள் பாதுகாக்கப்படும் என்பதை நம்பவில்லை. அமெரிக்க அரசை நம்ப மறுத்து வங்கிகளின் நடைமுறையில் நம்பிக்கையிழந்த வாடிக்கையாளர்கள் தாங்கள் வைப்பிட்டிருந்த நிதியை வெளியே எடுத்தனர். 2008இல் வங்கிகளில் நம்பிக்கையிழந்தவர்கள் வங்கிகளுக்கு முன் வரிசையில் நின்று தங்கள் பணத்தை பெற வேண்டியிருந்தது. தற்போது வாடிக்கையாளர்கள் இணைய வங்கி முறைமூலம் பட்டன்களை அழுத்தி தங்கள் பணத்தை மாற்றினர்.

வழமையாக வாடிக்கையாளர்கள் வைப்பிடும் தொகையை வங்கிகள் நிரந்த மூதலீடுகளுக்குப் பயன்படுத்திவிடுவார்கள். நாளாந்த வங்கி நடைமுறைக்கு மொத்த வைப்பீட்டில் 10 வீதம் மட்டுமே சுழற்சிக்கா வைத்திருப்பார்கள். வழமையாக வாடிக்கையாளர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் பணத்தை மீளெடுப்பதில்லை. ஆனால் வங்கி மீது நம்பிக்கையீனம் ஏற்பட்டால் வாடிக்கையாளர்கள் எல்லோருமே பணத்தை அந்த விங்கியில் இருந்து மீளப்பெறவே முயற்சிப்பார்கள். சிலிக்கன் வலி வங்கி சிக்கலில் இருப்பதை சில முதலீட்டாளர்கள் மணந்து பிடித்ததும், அது சில மணி நேரங்களுக்குள்ளாகவே வங்கியின் நிதிக்கையிருப்பை வறளச் செய்தது. உடலுக்கு குருதிச் சுற்றோட்டம் எவ்வளவு முக்கியமோ வங்கிகளுக்கு பணச்சுற்றோட்டம் மிக மிக முக்கியம். பணத்தை வைப்பிட்டவர்கள், முதலிட்டவர்கள் தாங்கள் தேவைப்படும் போது பணத்தை மீளப்பெற முடியாவிட்டால் – வங்கியின் கையிருப்பில் பணம் இல்லாவிட்டால் அந்த வங்கி மரணத்தைச் சந்திக்கும். அதுவே சிலிக்கன் வலி வங்கிக்கு நிகழ்ந்தது.

இதுவொரு டொமினோ அபக்ற் (domio effect). மார்ச் 10இல் சிலிக்கன் விலி வீழ்ந்ததும், அடுத்து சிக்னேச்சர் பாங்க், அடுத்து பெஸ்ற் ரிபப்ளிக் பாங், நாளை காலை (மார்ச் 20) காலை பங்குச் சந்தைகள் திறப்பதற்கு முன் கிரடிட் சுவிஸ் பாங்கை பாதுகாக்க சுவிஸ் அரசும் நேட்டோ நாடுகளும் கடும் முயற்சியில் இறங்கியது. கிரடிட் சுவிஸை அரசுடமையாக்கி வைப்பீட்டாளர்களையும் முதலீட்டாளர்களையும் பாதுகாக்க வேண்டும், இல்லாவிட்டால் ஒட்டுமொத்த வங்கிகளின் எதிர்காலமும் கேளவிக்குறியாகும். ஆனால் வங்கி அரசுடமையாக்கப்பட்டால் அது முதலாளித்தவ பொருளாதாரத்திற்கு கொள்கை அடிப்படையில் வீழ்ந்த மிகப்பெரும் அடியாக இருந்திருக்கும். ஆனால் கிரடிட் சுவிஸ் வங்கியின் போட்டியாளரான யுபிஎஸ் (UBS) வங்கி கிரடிட் சுவிஸ் வங்கியை ($3.25 billion) வாங்கி வங்கிகளின் வீழ்ச்சியை சற்றுத் தள்ளிப் போட்டுள்ளது. யுபிஎஸ் – UBS, கிரடிட் சுவிஸை மட்டும் வாங்கவில்லை. கிரடிட் சுவிஸ் வங்கிக்கு கடந்த பல ஆண்டுகளாக இருந்த நெருக்கடியையும் சேர்த்தே வாங்கியுள்ளது. யுபிஎஸ் – UBS, கிரடிட் சுவிஸ்க்கு ஏற்பட்ட பிரச்சினையை மேவிவருமா அல்லது வந்த வெள்ளம் நின்ற வெள்ளத்தையும் கொண்டு போனது போல் ஆகுமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அடுத்தது எந்த பாங்க் வீழ்ச்சியடையும் என்பது காலையில் எழும்போது தான் தெரியவரும். ஏற்கனவே குறிப்பிட்டது போல் முதலாளித்துவத்தின் முதுகெலும்பு வங்கிகள். வங்கிகள் மீது மக்கள் நம்பிக்கையிழந்தால் அவர்கள் காட்டாற்று வெள்ளம்போல் பாய்ந்து தங்கள் முதலீட்டை வைப்பீட்டை மீளப்பெறத் துடிப்பார்கள். வங்கிகளின் கையிருப்பு வறளும். வங்களின் குருதிச் சுற்றோட்டம் பணச் சுழற்சி. வங்கியில் பணம் இல்லாவிட்டால் எமக்கு ஒக்ஸிஜன் இல்லாத நிலைமை தான். அதற்காக பணத்தை அச்சடித்து வங்கிகளை நிரப்பினால் பணத்தின் பெறுமதி சடுதியாக வீழ்ச்சியடையும். டொலர் வீழ்ச்சியடையும். அதற்கும் அமெரிக்காவின் வீழ்ச்சிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. டொலரும் அமெரிக்காவும் ஒன்றுதான்.

லூட்டன் (பிரித்தானியா) பொதுப் பூங்காவில் தமிழ் கடைக்காரரின் உடல் மீட்பு! கொலையா? தற்கொலையா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை!

யாழ் சாவகச்சேரி சரசாலையைச் சேர்ந்த கந்தசாமி பிரபாகரன் (39) என்ற கடைக்காரர் ஒருவரின் உடல் மார்ச் 17ம் திகதி லூட்டன் எல்யூ 1 (LU1) என்ற பகுதியில் உள்ள பொதுப் பூங்காவில் கண்டெடுக்கப்பட்டதாக தேசம்நெற்க்கு தெரிய வருகின்றது. தனது கடைக்கு பொருட்களை வாங்குவதற்கு மொத்தக் கொள்வனவாளர்களிடம் சென்றவர் மார்ச் 17ம் திகதி சடலமாக மீட்கப்பட்டதாக கொல்லப்பட்டவரின் சகோதரருக்கு நெருக்கமான நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இது பற்றி தேசம்நெற்குத் தெரியவருவதாவது பிரபாகரன் மார்ச் 17 காலம் தாழ்த்தி காலையுணவை முடித்துக்கொண்டு கடைக்கு பொருட்களைக் கொள்வனவு செய்ய, அங்குள்ள மொத்தக் கொள்வனவு நிலையத்துக்கு செல்வதாகக் கூறி வெளிக்கட்டுள்ளார். பிரபாகரன் நீண்ட நேரமாக வராததினாலும்; தொலைபேசிக்கு பதிலளிக்காததாலும்; மற்றையவர்களுக்கும் தொடர்புகொண்டு விசாரித்தும் பதிலில்லாத நிலையில், அவருடைய மனைவி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். பொலிஸார் பின்னர் இவருடைய தொலைபேசியின் சிக்னலைக்கொண்டு அது இருக்கும் இடத்தை அடைந்துள்ளனர். அன்றைய தினம் இரவு பிரபாகரனின் உடல் தூகிடப்பட்டநிலையில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டது என அந்நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

பிரபாகரன் கந்தசாமி எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியாவுக்கு வந்தவர். யாழ் சாவகச்சேரியில் ஓரளவு வசதியான வர்த்தகக் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவருடைய சகோதர் அதற்கு முன்னரேயே லண்டன் வந்தவர். அவர் கடையை நடத்தி வந்தார். அதன் பின் பிரபாகரனும்; ஒரு கடையை ஆரம்பித்தார். பிரபாகரன் ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி அவருக்கு நான்கு வயதில் ஒரு குழந்தையும் ஒன்றரை வயதில் ஒரு கைக் குழந்தையும் உண்டு. குடும்பம் மிகவும் நெருக்கமாகவும் அன்பாகவும் இருந்ததாகவும் தற்கொலை செய்வதற்கான எந்தக் காரணமும் குடும்பத்தில் இருக்கவில்லை என்றும் அக்குடும்பத்திற்கு நெருக்கமான மற்றொருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

பிரபாகரனின் உடல் கண்டெடுப்பதற்கு சிறிது காலம் முன்பாக அவர் கெபாப் (Kebab) உணவகமொன்றுக்கு சென்றிருந்ததாகவும் அங்குள்ளவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்ததாகவும் பிரபாகரனின கடைக்கு அருகில் கடை நடாத்திவரும் இன்னுமொரு கடைக்காரர் தேசம்நெற்குக்குத் தெரிவித்தார். இச்சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளானவருக்கு குறிப்பிடத்தக்க அளவு காயங்கள் ஏற்பட்டதாகவும் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டு இருந்ததாகவும் அக்கடைக்காரர் மேலும் குறிப்பிட்டார். இது தொடர்பாக தேசம்நெக்கு மேலும் ஒரு உறுதிப்படுத்தப்பட முடியாத தகவலும் கிடைத்தது. அதன்படி பிரபாகரன் தாக்குதலுக்கு உள்ளானவர்களைச் சந்தித்து வழக்கில் இருந்து வெளியேறுவதற்கு பேச்சுவாரத்தையில் ஈடுபட்டதாகவும் செல்லப்படுகிறது. இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

இளம் குடும்பஸ்தரான உயிரிழந்த பிரபாகரன், சாவகச்சேரியில் பல உதவித்திட்டங்களை மேற்கொண்டுவந்ததாகவும் அவர் மிகுந்த சமூக அக்கறை கொண்டவர் என்றும் தெரியவருகின்றது.

சில ஊடகங்கள் இதனை ஒரு படுகொலை என்று தீர்க்கமானதாக செய்தி வெளியிட்டுள்ளதுடன் அப்படுகொலை ஹரோவில் வெறிச்சோடிய பகுதியில் நடைபெற்றதாகவும் ஹெரோ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவருக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் முற்றிலும் தவறான செய்தியை வெளியிட்டுள்ளனர்.

பிரபாகரனின் மரணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் லூட்டன் பொலிஸார் எவ்வித தகவல்களையும் யாருடனும் பரிமாற வேண்டாம் என குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளதாக தேசம்நெற்றுக்கு தெரியவருகின்றது. பிரேத பரிசோதணையின் பின்னரேயே இம்மரணம் தொடர்பில் வேறு யாரும் தொடர்புபட்டுள்ளனரா என்பதை பொலிஸாரல் உறுதிப்படுத்தக் கூடியதாக இருக்கும். இம்மரணம் தொடர்பில் லூட்டன் பொலிஸார் எவ்வித அறிக்கையும் வெளியிட்டதாகத் தெரியவில்லை.

தலிபான்களின் மீள் வருகையால் ஆப்கானிஸ்தானில் மூடப்பட்ட 50 சதவீத செய்தி நிறுவனங்கள் !

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பெண்களுக்கு எதிராக தலிபான்கள் கொண்டு வந்த கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு பிறகு 53 சதவீத பத்திரிகையாளர்கள் வேலை இழந்துள்ளதாக அந்நாட்டின் பத்திரிகையாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 50 சதவீத செய்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக 200 வழக்குகள் பதிவானதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.