19

19

காளி பூஜையில் கலந்து கொண்ட “ஷாகிப் அல் ஹசனை துண்டாக வெட்ட வேண்டும்“ என கொலை மிரட்டல் !

பங்களாதேஷ் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன். சூதாட்டம் தொடர்பாக அவரை அணுகியதை மறைத்ததால் ஓராண்டு தடைபெற்றார். தற்போது அந்த தடை முடிந்ததால் வங்காளதேச அணிக்கு திரும்ப பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இவர் கொல்கத்தாவில் நடைபெற்ற காளி பூஜையில் கலந்து கொண்டார். அதன்பின் தன்னுடைய முகநூல் கணக்கில் நேரடி காணொளி மூலம் முஸ்லீம் உணர்வை புண்படுத்தியதாக மோசின் தலுக்தெர் என்பவர் ஷாகிப் அல் ஹசனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். ஷாகிப் அல் ஹசனை துண்டாக வெட்ட வேண்டும் என அந்த நபர் கோபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பயிற்சி மேற்கொள்ளும் அவருக்கு வங்காள தேசம் கிரிக்கெட் சார்பில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. காளி பூஜைக்கு முன்னதாக நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இது முஸ்லீம்களின் உணர்வை புண்படுத்துவதாக இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டிகளிலிருந்து பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் விலகல் !

இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டியில் இருந்து பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் விலகியுள்ளார். முன்னதாகவே இந்தப்போட்டிகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கூட கொரோனா தொற்றுக் காரணமாக பிற்போடப்பட்ட இப்போட்டிகள் இம்மாதம் 27 ஆம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்நிலையில் LPL போட்டியிலிருந்து பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் விலகியுள்ளார். கண்டி டஸ்கர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த கெயில், சொந்தக் காரணங்களால் விலகுவதாக அறிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற IPL போட்டியில் பங்கேற்ற கெயில், பஞ்சாப் அணிக்காக 7 ஆட்டங்களில் விளையாடி 288 ஓட்டங்களை எடுத்தார்.

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று : பிரேசில், அர்ஜென்டினா அணிகள் வெற்றி !

உலகக் கிண்ணக்  காற்பந்து தகுதிச்  சுற்று போட்டிகளில் பிரேஸில், ஆர்ஜென்டினா அணிகள் வெற்றி பெற்றன. 22ஆவது உலகக் கிண்ணக் காற்பந்துப்  போட்டி கத்தாரில் 2022ஆம் ஆண்டில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கான தென்அமெரிக்க கண்டத்துக்குரிய அணிகளுக்கான தகுதி சுற்று போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். 5ஆவது இடம் பிடிக்கும் அணி ‘பிளே-ஆப்’ சுற்று மூலம் வாய்ப்பை பெற முடியும்.

இந் நிலையில் உருகுவே தலைநகர் மோன்ட் வீடியோவில் நடந்த தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் 5 முறை சம்பியனான பிரேஸில் அணி, 2 தடவை சம்பியனான உருகுவேயை எதிர்கொண்டது.குறித்த போட்டியில் பிரேஸில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தியது.

மற்றொரு போட்டியில்  முன்னாள் சம்பியனான ஆர்ஜென்டினா அணி, பெருவை அதன் சொந்த மண்ணில் சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் பெருவை சாய்த்தது.