05

05

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி – சீன கம்யூனிஸ்ட் கட்சி இணைவில் இணையவழி கருத்தரங்கு !

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி , நிர்வாக அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் வகையிலான கூட்டு கருத்தரங்கு ஒன்றை சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து நடத்தியிருக்கிறது.

இணையவழியில் நேற்று (04.11.2020) நடைபெற்ற இந்த கருத்தரங்கு இலங்கையில் உள்ள சீனத்தூதரகத்துடன் ஒன்றிணைந்து பொதுஜன பெரமுனவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

அரசியலில் ஒவ்வொரு கட்டமைப்புக்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பினை மேம்படுத்துதல் மற்றும் மக்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவது குறித்து ஆராய்தல் ஆகியவையே இந்த கூட்டு கருத்தரங்கின் முக்கிய நோக்கம் என்று சீனா தெரிவித்திருக்கிறது.

அதேவேளை இதுகுறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டிருக்கிறார்:

‘ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சீனத்தூதரகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிர்வாக அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான கருத்தரங்கில் பங்குகொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகின்றேன். அரசியல் மட்டத்திலும் மக்கள் மட்டத்திலும் நிறுவனக்கட்டமைப்புக்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். எதிர்காலத்தில் இளைஞர்கள் இதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் இக்கூட்டு கருத்தரங்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜீ.எல்.பீரிஸ், மகிந்த யாப்பா அபேவர்தன, நாமல் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் 18 வயது பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை !

தொடர்ச்சியாக மூச்சு அடைப்பினால் அவதிப்பட்ட 18வயது மாணவி அதனை தாங்கி கொள்ள முடியாமல் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் மணிவண்ணண் நிசாளினி என்ற மாணவியே இவ்வாறு தவறான முடிவெடுத்து தன்னை மாய்த்துக் கொண்டுள்ளார்.

குறித்த மாணவி சுழிபுரம் மத்தியில் வசித்து வருகின்றார். தொடர்ச்சியாக மேற்படி மாணவி மூச்சுவிடுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்துள்ளார். இதன் போது பாடசாலையிலும் மயங்கி வீழ்ந்துள்ளார்.

நேற்றையதினம் குறித்த மாணவி தனக்கு மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளதாக தாயாரிடம் கூறியுள்ளார். அதற்கு தாயார் வைத்தியசாலை செல்வோம் என கூறியுள்ளார். எனினும் தயார் இல்லாத நேரம் பார்த்து தவறான முடிவினை எடுத்துள்ளார். உறவினர்களினால் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த போதும் மாணவி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இறப்பு விசாரணைகளை வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதணையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழர் பகுதிகளில் தற்கொலைகளும் வேகமாக பரவும் நோய்களை போல மலிந்து போய்விட்டது. காதல் தோல்வி, குடும்பப்பிரச்சினை, பெறுபேறுகள் போதாமை, கடன் பிரச்சினை என பல காரணங்கள் இந்தத்தற்கொலைகளின் பின்னணியாக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பாடசாலை மாணவர்களிடையேயும் இது போன்றதான தற்கொலைகள் மலிந்து வருவதை காணக்கூடியதாகவுள்ளது. மாணவர்களுக்கு முறையான உளவியல் கருத்தரங்குகளும் வழிகாட்டலும் பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டியதன் தேவையை இந்த மரணங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

மேலும் மாணவர்களை தைரியமானவர்களாகவும் பிரச்சினைகளை திடமாக எதிர்கொள்வோராகவும் வளர்க்கவேண்டியது குடும்பங்களின் மிகப்பெரிய பொறுப்பு என்பதையும் நமது சமூகத்தினர் விளங்கிக்கொள்ள வேண்டும்.

தமிழர் பகுதிகளில் தொடரும் தற்கொலைகள் தொடர்பான பின்னணியை மையப்படுத்தி எழுதப்பட்ட கட்டுரையை காண இங்கே அழுத்தவும்

( தற்கொலை உளவியல் : த ஜெயபாலன்: http://thesamnet.co.uk/?p=65967 )

இலங்கையில் வேகமெடுக்கும் கொரோனா வைரஸ் பரவல் – ஒரே நாளில் 05 பேர் பலி !

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் இருவர் ஆண்கள் எனவும் மூவர் பெண்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர்கள் கொழும்பு 02, 12, 14, 15 மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் மேலும் 213 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்ட அனைவரும் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை எட்டாயிரத்து 922ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 400ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று மட்டும் 765 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை ஆறாயிரத்து 623 தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்னும் ஐயாயிரத்து 748 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

“அடுத்த ஆண்டும் எம்.எஸ்.டோனி தான் சென்னையின் தலைவர்” – உறுதிப்படுத்தினார் சென்னை அணி உரிமையாளர் என் ஸ்ரீனிவாசன் !

அடுத்த ஆண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எம்.எஸ் டோனி தான் தலைவராக வழிநடத்துவார் என்று அணியின் உரிமையாளர் என் ஸ்ரீனிவாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பான செயல்பாடுகளை நிரூபித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது ஒரு மோசமான ஆண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தோனியை தவிர வேற யாரு... அவர்தான் அடுத்த ஆண்டும் சிஎஸ்கே கேப்டன்... ஸ்ரீனிவாசன் சொல்லிட்டாரு!

மேலும் ருதுராஜ் கெய்க்வாட் இளம் விராட் கோலியை நினைவுபடுத்துவதாக பாப் டூ பிளசிஸ் தெரிவித்துள்ள கருத்தையும் ஸ்ரீனிவாசன் ஆமோதித்துள்ளார்.

ஐ.பி.எல் 2020 சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று அந்த அணியின் தலைவர் டோனி எதிர்பார்க்கப்பட்டார். கடந்த ஒரு ஆண்டாக அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடாத நிலையில் கடந்த ஆகஸ்ட் 15ம் திகதி சர்வதேச போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் ஐ.பி.எல்லில் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை தன்னுடைய மோசமான ஆட்டத்தின்மூலம் அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கினார் டோனி.

அந்த அணி இறுதி போட்டிகளில் சிறப்பாக விளையாடி 12 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இறுதியாக நிலைபெற்றிருந்தது. ஆயினும் அந்த அணியின் தொடர் தோல்விகள் பிளே-ஆப் சுற்றிற்று அணி தகுதிபெறாததற்கு காரணமாக அமைந்தன. மோசமான ஆண்டு இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பான செயல்பாட்டினை நிரூபித்துவந்த நிலையில், இந்த ஆண்டு ஒரு மோசமான ஆண்டு என்பதை ஒப்புகொள்ள வேண்டும் என்று அணியின் உரிமையாளர் என் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு மீண்டும் சிறப்பாக வந்து ஐ.பி.எல்லை விளையாடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே அடுத்த ஆண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டோனி தான் தலைமையேற்று நடத்துவார் என்றும் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். தோனி தன்னிடம் அனைத்து விஷயங்கள் குறித்தும் ஏற்கனவே ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். சிறப்பான ருதுராஜ் கெய்க்வாட் கொரோனா பாதிப்பிலிருந்து ருதுராஜ் மிகவும் தாமதமாக தேறியதாக தெரிவித்துள்ள ஸ்ரீனிவாசன், முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் பாப் டூ பிளசிஸ் ருதுராஜை இளம் விராட் கோலி என்று தெரிவித்துள்ள விமர்சனத்தை ஆமோதித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு சிறப்பான ஒரு வீரரை பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

போராட்டக்களமாக மாறும் அமெரிக்கா – ட்ரம்பின் ஆதரவாளர்கள் தெருவில் இறங்கி போராட்டம் !

அமெரிக்காவில் பல மாகாணங்களில் ஜனாதிபதி  டிரம்ப்பின் ஆதரவாளர்கள் சாலையில் இறங்கி பேரணிகளை நடத்தி வருகிறார்கள். அதேபோல் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியிலும் இவர்கள் பேரணிகளை நடத்தி வருகிறார்கள். தபால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து இவர்கள் பேரணிகளை நடத்தி வருகிறார்கள்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக 160 மில்லியன் வாக்குகள் பதிவாகி உள்ளது. இதுவரை செய்யப்பட்ட வாக்கு எண்ணிக்கையின்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் 72,062,575 மக்கள் வாக்குகளை பெற்றுள்ளார். 50.4% மக்கள் வாக்குகளுடன் பிடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 68,595,653 மக்கள் வாக்குகளை பெற்றுள்ளார். 48% மக்கள் வாக்குகளுடன் டிரம்ப் பின்னடைவை சந்தித்துள்ளார்.

ஜோ பிடன் 264 வாக்குகளுடன் வெற்றியை நெருங்கி உள்ளார். பிடன் வெற்றிபெறுவதற்கு இன்னும் 6 வாக்குகளே தேவை. அதே சமயம் டிரம்ப் 214 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார். டிரம்ப் இந்த தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பு குறைந்துள்ளது.

அமெரிக்காவில் பதிவான 160 மில்லியன் வாக்குகளில் 101 மில்லியன் தபாலை வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. பென்சில்வேனியா, நெவாடா, ஜார்ஜியா, நார்த் கரோலினா, அலாஸ்கா ஆகிய மாகாணங்களில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இங்கு வெளியாகும் முடிவுகள்தான் ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளை தீர்மானிக்கும்.

இதில் பென்சில்வேனியா, ஜார்ஜியா, நார்த் கரோலினா, அலாஸ்கா ஆகிய மாகாணங்களில் டிரம்ப் வெகு சில வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். இந்த நிலையில் டிரம்ப் முன்னிலை வகிக்கும் போதே வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று டிரம்பின் ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதாவது மீதம் இருக்கும் தபால் வாக்குகளை எண்ண கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளனர்.“அது முறைகேடாக பதிவான வாக்குகள், உடனே இந்த மாகாணங்களில் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும்” என்று டிரம்பின் ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதோடு டிரம்ப் முன்னிலை வகித்து வரும் பென்சில்வேனியா, ஜார்ஜியா, நார்த் கரோலினா, அலாஸ்கா ஆகிய மாகாணங்களில் இவர்களை பேரணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு முன் கூடி  வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள்  என்று கோஷம் எழுப்பி வருகிறார்கள். முக்கியமாக பென்சில்வேனியாவில் 20 எலக்ட்ரல் வாக்குகள் இருப்பதால் அங்கு கூடி அதிக அளவில் கோஷங்களை எழுப்பி வருகிறார்கள். இதனால் வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டம் சில இடங்களில் இதனால் கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நெவாடா உள்ளிட்ட சில மாகாணங்களில் தேர்தல் முடிவுகளை மொத்தமாக வாக்கு எண்ணிக்கை முடிந்த பின் அறிவிக்கலாம் என்று முடிவு எடுத்துள்ளனர். கவுண்டி விவரங்களை உடனுக்குடன் அறிவிக்காமல், மொத்தமாக வாக்கு எண்ணப்பட்ட பின் முடிவுகளை அறிவிக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

“உயிர்நீத்த உறவினர்களை நினைவுகூரும் மக்களின் உரிமையை ஜனாதிபதி உறுதிசெய்ய வேண்டும்” – ஜனாதிபதிக்கு பா.உ எஸ்.சிறிதரன் கடிதம் !

தங்களது உறவுகளை நினைவுகூரும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது ,

“கடந்த ஆண்டு ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற சூழ்நிலையிலும், வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் தங்களது உறவுகளை நினைவுக்கூர முடிந்தது. அந்தநிலைமை இந்த ஆண்டும் தொடர வேண்டும்.

மீண்டும் யுத்தம் ஒன்றையோ பயங்கரவாத செயற்பாடுகளையோ விரும்பாத மக்கள், போர்காலத்தில் உயிர்நீத்த தங்களது உறவினர்களை நினைவுகூரும் உரிமையை கொண்டிருக்கின்றனர். அந்த உரிமையை உறுதி செய்வதன் மூலும் சிறந்த தலைவர் என்ற மதிப்பை ஜனாதிபதியால் தமிழ் மக்கள் மத்தியில் பெற முடியும்” எனவும்  எஸ்.சிறிதரன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் மேலும் பரவுவதற்கான ஆபத்து“ – எச்சரிக்கின்றார் வைத்தியர் ஜயருவன் பண்டார !

“கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் மேலும் பரவுவதற்கான ஆபத்து உள்ளமையினால் இன்னும் இரண்டு வருடங்கள் அதனுடன் வாழவேண்டும்“ என சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (04.11.2020)  சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு 400 முதல் 500 வரையிலான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அது மிகவும் மோசமான நிலைமையாகும்.

இதுவரையில் 65 ஆயிரம் பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் பி.சி.ஆர் பரிசோதனைக்கமைய எதிர்வரும் நாட்களில் தொற்றாளர்கள் அதிகரிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவதை தடுப்பதற்காக சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள வழிக்காட்டல்களை பின்பற்ற வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு வேறு வழியே இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு வாக்கும் கண்டிப்பாக எண்ணப்பட வேண்டும்” – ஜோபைடன் ஆதரவாளர்கள் போராட்டம் !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். டிரம்ப் பின்தங்கி உள்ளார். கடும் போட்டி உள்ள மாநிலங்களில் டிரம்ப் முன்னிலை வகித்து வரும் நிலையில், இந்த தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, வாக்குஎண்ணிக்கையை நிறுத்தும்படி வலியுறுத்தி உள்ளார். 3 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக்கோரி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில், வெற்றியை நெருங்கி உள்ள ஜோ பைடன் ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். சில மாநிலங்களில் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஆனால், வாக்கு எண்ணிக்கைக்கு தடை ஏற்படுத்தும் முயற்சியை ஜோ பைடன் ஆதரவாளர்கள் கண்டித்துள்ளனர். ஒவ்வொரு வாக்கையும் கண்டிப்பாக எண்ண வேண்டும் என்று வலியுறுத்தி நியூயார்க்கில் நேற்று ஆர்ப்பாட்ட பேரணி நடத்தினர். 5-வது அவென்யூவில் இருந்து வாஷிங்டன் சதுக்கம் வரை அமைதியாக முறையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதேபோல் மிச்சிகனில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வலியுறுத்தி டிரம்ப் ஆதரவாளர்கள் டெட்ராய்ட்டில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓய்வை அறிவித்தார் மேற்கிந்தியதீவுகள் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் மர்லோன் சாமுவேல்ஸ் !

மேற்கிந்தியதீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டரான மர்லோன் சாமுவேல்ஸ் கடைசியாக 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆடினார். அதன் பிறகு அவருக்கு தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை.

2012 மற்றும் 2016-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மேற்கிந்தியதீவுகள் அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக விளங்கிய அவர் இரண்டு இறுதிப்போட்டியிலும் அதிக ரன் குவித்ததுடன், ஆட்டநாயகன் விருதையும் தனதாக்கினார்.

ஓய்வு முடிவை அறிவித்த வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர்

ஐ.பி.எல்., பிக்பாஷ் மற்றும் பாகிஸ்தான் லீக் போட்டிகளில் ஆடிய சாமுவேல்ஸ் எல்லா வகையிலான போட்டிகளில் இருந்தும் விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.

39 வயதான சாமுவேல்ஸ் 71 டெஸ்ட் போட்டியில் விளையாடி 7 சதம், 24 அரைசதத்துடன் 3,917 ரன்னும், 41 விக்கெட்டும் எடுத்துள்ளார். 207 ஒருநாள் போட்டியில் ஆடி 10 சதம், 30 அரைசதத்துடன் 5,606 ரன்னும், 89 விக்கெட்டும், 67 இருபது ஓவர் போட்டியில் ஆடி 10 அரைசதம் உள்பட 1,611 ரன்னும், 22 விக்கெட்டும் எடுத்து இருக்கிறார்.

இலங்கை, இந்தியா, சீனா பைடனுக்கு ஆதரவு என சுட்டிக்காட்டியுள்ள டிரம்பின் மூத்த மகன் !

அமெரிக்க ஜனாதிபதி பதவியை கைப்பற்றுவது யார் என்பதில் ஜோ பைடன், டிரம்ப் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை ஓட்டுகளில் 270 ஓட்டுகளை வென்றெடுத்தால்தான், அமெரிக்க ஜனாதிபதி நாற்காலியில் ஜோ பைடன் அல்லது டொனால்டு டிரம்ப் அமர முடியும்.

இந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கையின் ஆரம்ப கட்டம் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு சாதகமாக அமைந்தது. அவர் அதிக எண்ணிக்கையிலான தேர்தல் சபை வாக்குகளை பெற்று முன்னேறினார்.

சர்ச்சை கருத்தை பதிவிட்ட டிரம்பின் மூத்த மகன்

இதன்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 264 வாக்குகளையும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு  டிரம்ப் 214 இடங்களுடன் பின்தங்கியுள்ளார்.

இந்நிலையில், அதிபர் தேர்தல் முடிவுகள் கணிப்பு குறித்து, டிரம்பின் மூத்த மகனான, டொனால்டு டிரம்ப் ஜூனியர், சமூக வலைதளத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.  அதில் உலக வரைபடத்தை வெளியிட்டு, அதில் எந்தெந்த நாடுகளில், ஆதரவு உள்ளது என்பதை குறிக்கும் வகையில் டிரம்பின் குடியரசு கட்சியின் நிறமான சிவப்பு நிறத்தால் குறிப்பிட்டிருந்தார். அதேபோல் ஜோ பிடனுக்கு ஆதரவான நாடுகளில் அந்தக் கட்சியின் நிறமான, நீல நிறத்தில் குறிப்பிட்டார்.

இதில் இந்தியா, இலங்கை , சீனா,  நீல நிறத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். பாகிஸ்தானை சிவப்பு நிறத்தில் குறிப்பிட்டிருந்தமையும் நோக்கத்தக்கது.