09

09

“இறுதிப் போட்டிக்கு செல்ல முடியாததை உண்மையிலேயே அவமானம் என கருதுகிறேன்” – கேன் வில்லியம்சன் கவலை !

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறுமா? என்ற சந்தேகம் இருந்த நிலையில் ஆர்சிபி, டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளை வெற்றி கொண்டு பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது.
எலிமினேட்டரில் கேன் வில்லியம்சனின் போராட்டத்தால் பெங்களுரை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 189 ஓட்டங்கள் அடித்தது. பின்னர் 190 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களம் இறங்கியது. அணி வீரர்களான வார்னர் (2), பிரியம் கார்க் (17), மணிஷ் பாண்டே (21) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் வந்த கேன் வில்லியம்சன் வெற்றிக்காக போராடினார். ஆனால் 45 பந்தில் 67 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். இதனால் ஐதராபாத் அணி 172 ரன்களே எடுத்து 17 ஓட்டங்களால் வெற்றியை கோட்டைவிட்டது. அத்துடன் இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாதது அவமானம் என உணர்கிறேன் என்று கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து கேன் வில்லியம்சன் கூறுகையில்
‘‘டெல்லி கேப்பிட்டல்ஸ் மிகவும் சிறந்த அணி. அவர்கள் விளையாடும் அவர்களுடைய ரிதத்தை காண முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். எங்களுக்கு எதிராக ஒன்றிணைந்து விளையாடும் வாய்ப்பை பெற்றனர். சிறப்பாக விளையாடினர்.
போட்டியின் 2-வது இன்னிங்சில் 190 ஓட்டங்கள் அடிப்பது கடினம். எங்களுக்கு தொடக்கத்திலேயே விக்கெட் வீழ்ந்துவிட்டது. இருந்தாலும் மிடில் ஆர்டர் ஓவர்களில் ஓரளவிற்கு பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தோம். எங்களுக்கு இன்னும் கூடுதலாக வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும்.
இறுதிப் போட்டிக்கு செல்ல முடியாததை உண்மையிலேயே அவமானம் என கருதுகிறேன். ஆனால், குறிப்பாக கடந்த மூன்று வாரங்களாக எங்கள் அணி வீரர்கள் விளையாடியதை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது’’ என்றார்.

ஐ.பி.எல்2020 வெற்றியாளர்கள் யார் ..? நாளை மும்பையுடன் மோதுகிறது டெல்லி !

13ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த செப்டம்பர் மாதம் 19ஆந் திகதி தொடங்கியது. தற்போது இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இதில் 8 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. கடந்த 3ஆம் திகதியுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. இதன் முடிவில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து பிளேஆப் சுற்றுக்கு முன்னேறின.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் முறையே 5 முதல் 8ஆவது இடங்களை பிடித்து வெளியேறின.
பிளேஆப் சுற்று 5ஆம் திகதி தொடங்கியது. ’குவாலிபையர்-1’ ஆட்டத்தில் மும்பை அணி 57 ஓட்டங்களால் டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. வெள்ளிக்கிழமை நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி வெளியேற்றியது. நேற்று நடந்த ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் டெல்லி அணி 17 ஓட்டங்களால் ஐதராபாத்தை தோற்கடித்து இறுதி போட்டியில் நுழைந்தது.
இன்று ஓய்வு நாளாகும். இறுதிப்போட்டி நாளை 10ம் திகதி நடக்கிறது. துபாயில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் கோப்பையை வெல்வது யார்? இறுதிப்போட்டியில் மும்பை-டெல்லி அணிகள் நாளை பலப்பரீட்சைமும்பை அணி 6ஆவது முறையாக இறுதிப் போட்டியில் ஆடுகிறது. இதில் 4 தடவை சாம்பியன் பட்டம் பெற்றது. 2013, 2015, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் ஐ.பி.எல் கோப்பையை அந்த அணி கைப்பற்றியது.
2010-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்சிடம் தோற்றது. தற்போது மும்பை அணி 5ஆவது முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.
டெல்லி அணி முதல் முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. ஐ.பி.எல் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றும் வேட்கையில் அந்த அணி இருக்கிறது. ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றப் போவது மும்பையா? டெல்லியா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீசனில் மும்பை அணி 3 முறை டெல்லியை வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் இறுதிப்போட்டியில் விளையாடும். அதே நேரத்தில் டெல்லி அணி மும்பையை பழிதீர்க்க வேண்டும் என்ற ஆக்ரோஷத்தில் ஆடும். இரு அணியிலும் அதிரடியான வீரர்கள் உள்ளனர். இதனால் இறுதிப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை அணியில் குயின்டன் டிகாக், இஷான்கிஷன் (483ஓட்டங்கள் ), சூர்யகுமார் யாதவ் (461ஓட்டங்கள்), ஹர்த்திக் பாண்ட்யா (278ஓட்டங்கள்), போல்லார்ட் (259ஓட்டங்கள்) போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும், பும்ரா (27 இலக்குகள்), போல்ட் (22இலக்குகள்) போன்ற சிறந்த இலக்குகள் உள்ளனர்.
டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 2 சதம், 4 அரை சதத்துடன் 603 ஓட்டங்கள் குவித்து இந்த தொடரில் 2-வது இடத்தில் உள்ளார். மேலும் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (454 ஓட்டங்கள்), ரிஷப் பண்ட் (287ஓட்டங்கள்), ஹெட்மயர் போன்ற சிறந்த துடுப்பாட்டவீரர்களும் , ரபடா (29 இலக்குகள்), நோர்கியா (20இலக்குகள்) போன்ற சிறந்த இலக்குகள் உள்ளனர். சகலதுறைவீரர் வரிசையில் ஸ்டோய்னிஸ் (352 ஓட்டங்கள், 12 இலக்குகள்) என சிறப்பான வீரர்களையும் கொண்டுள்ளது.
இரு அணிகளும் நாளை மோதுவது 28-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 27 போட்டியில் மும்பை 15-ல் டெல்லி 12-ல் வெற்றி பெற்றுள்ளன.

கொரோனா எதிரொலி – ஆர்ஜென்டீன ஜனாபதிபதிக்கு எதிராக மக்கள் போராட்டம் !

அர்ஜென்டினா ஜனாதிபதி ஆல்பர்டோ பெர்னாண்டஸ்க்கு எதிர்ப்பு தெரிவித்து அர்ஜென்டினா மக்கள் ஆயிரக்கணக்கனோர் வீதிகளில் இறங்கி போராடி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால், கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் அர்ஜெண்டினா மக்கள், அந்நாட்டு ஜனாதிபதி ஆல்பர்டோ பெர்னாண்டஸ் அறிவித்துள்ள புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அர்ஜென்டினா தலைநகர் புவெனஸ் ஐரிஸ் நகரில் மத்திய சதுக்கத்தில் சாலைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். கைகளில் தேசிய கொடியுடன் சாலைகளில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், “சுதந்திரம், நீதி மற்றும் அரசியலமைப்பு” என்று விண்ணை பிளக்கும் அளவுக்கு கோஷமிட்டனர்.

முன்னாள் ஜனாதிபதியும்  தற்போதைய துணை ஜனாதிபதியுமான கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னரை ஊழல் வழக்குக்கு உட்படுத்தாமல் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் நடப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். கொரோனா வைரஸ் தடுப்புக்காக போடப்படும் ஊரடங்குக்கு எதிராகவும், நீதி நிவாரணம் கேட்டும் அர்ஜென்டினாவில் மக்கள் போராட்டத்தை நடத்தினர். தலைநகர் புவெனஸ் ஐரிஸ்க்கு மட்டுமல்லாமல், கோர்டோபா, ரொசாரியோ, மார் டெல் பிளாட்டா, மெண்டோசா மற்றும் சான் கார்லோஸ் டி பாரிலோச்சே ஆகிய நகரங்களிலும் பெர்னாண்டஸின் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது.

கொரோனா தொற்று அச்சத்தால் இருவர் தற்கொலை !

உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகின்ற கொரோனா வைரஸ் காரணமாக பல இலட்சக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றாளர்களை பாதுகாப்பதற்கான முயற்சிகளையும் உலக நாடுகள் கனிசமாக மேற்கொண்டு வருகின்றன.

குறிப்பாக இலங்கையில் கொரோனா மூன்றாம் கட்ட பரவல் ஏற்பட்டுள்ளதுடன் நாளுக்கு நாள் தொற்றாளர்களுடைய தொகையும் அதிகரித்த வண்ணமுள்ளது. மேலும்  தற்போது பரவும் வைரஸ் மிக வேகமாக தொற்றக்கூடியது என இலங்கையின் பல்கலைகழக ஆராய்வு முடிவுகளில் கூறப்பட்டிருந்தது.அதே நேரத்தில் கொரோனா வைரஸால் இறப்பவர்களுடைய தொகையும் இலங்கையில் கனிசமாக அதிகரித்துள்ளது. இது மக்களிடையே கொரோனா தொடர்பான அச்சத்தை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக இருவேறு இடங்களில் இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி களுத்துறை – அகலவத்தையை சேர்ந்த (56-வயது) இ.போ.ச பேருந்து சாரதி ஒருவரே இவ்வாறு நேற்று (08) தற்கொலை செய்து கொண்டார்.

நாகொடை வைத்தியசாலை ஊழியர்கள் பலரை அவர் ஏற்றிச் சென்ற நிலையில் கொரோனா தொற்றலாம் என்ற அச்சத்தில் இருந்தார் என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

கம்பஹா – ஜாஎலவை சேர்ந்த (72-வயது) பெண் நேற்று முன் தினம் (07) தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது மூத்த மகளுக்கும் மருமகனுக்கும் முன்னதாக கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட இவர் கவலையில் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மியான்மார் பொதுத்தேர்தல் 2020 – ஆங் சான் சூகியின் கட்சி தொடர்ந்து முன்னிலை !

கொரோனா தொற்றுக்கு மத்தியில் மியான்மாரில் நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. பாராளுமன்றத்தின் இரு அவைகள், அங்குள்ள 7 மாநில சட்டப்பேரவைகள் மற்றும் 7 மண்டலங்கள் என மொத்தம் 1,171 இடங்களுக்கு தேர்தல் நடந்தது.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடத்தப்பட்ட இந்த தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்களித்தனர். இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகி உள்ளன.
மாலையில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வாக்குகள் மற்றும் தபால் ஓட்டுகள் முதலில் எண்ணப்பட்டன. அதன்பின்னர் தேர்தல் நாளன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், அரசு ஆலோசகர் ஆங் சான் சூகியின் (வயது 75) ஜனநாயக தேசிய லீக் கட்சி (என்.எல்.டி) அதிக இடங்களில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
எதிர்க்கட்சிகள் மிகவும் பலவீனமாக இருப்பதால் ஆங் சான் சூகியின் கட்சியே அதிக இடங்களை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டன. ஆனால் ஆளுங்கட்சியும் தேர்தல் ஆணையமும் அதனை நிராகரித்து தேர்தலை நடத்தி முடித்தது குறிப்பிடத்தக்கது.

தோல்வியை ஏற்க மறுக்கும் டொனால்ட் ட்ரம்ப் – “கவலை வேண்டாம்.நாம் வேலை தருகிறோம்” என கிண்டல் செய்த ஜெருசலேம் !

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் தேர்வாகியுள்ளார். அதேபோல், துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ள போதும் அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 20-ம் திகதி தான் முறைப்படி அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். அவர் வெள்ளை மாளிகை செல்வதற்கு இன்னும் 70 நாட்களுக்கு மேல் உள்ளன.
தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் கூட்டாக வெற்றிவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் செயல்திட்டங்களை தெரிவித்தனர்.
அதேசமயம் தோல்வியை ஒப்புக்கொள்ள மீண்டும் மறுத்துள்ளார் டிரம்ப். அத்துடன் தேர்தல் முடிவுகள் குறித்த சந்தேகங்களை சட்டரீதியாக எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். டிரம்பிடம் ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாகவும், விரைவில் வழக்குகள் தொடரப்படும் என்றும் அவரது வழக்கறிஞர் கூறி உள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க தேர்தல் முடிவை ஏற்க மறுத்து டிரம்ப் பிடிவாதம் காட்டுவது அந்த நாட்டில் கொந்தளிப்பான நிலையை உருவாக்கியுள்ளது. உலக நாட்டு தலைவர்கள் அனைவருமே ஜோபைடன் வெற்றியை ஏற்றுக் கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டனர். ஆனாலும் கூட டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுக்கிறார். அவர் அவ்வாறு நடந்து கொள்வது அமெரிக்க மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு முன்பு தேர்தல்களில் பல பிரச்சினைனகள் வந்துள்ளன. ஆனால் எந்த ஜனாதிபதியும்  நடந்துகொண்டதில்லை என சுட்டிக்காட்டி அமெரிக்காவில் பிரபலமான பலரும், சமூக அமைப்பினரும், டிரம்ப் முரண்டு பிடிக்காமல் தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டுஅமனவும் அவர் அமைதியான முறையில் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் கூறி இருக்கிறார்கள்.
டிரம்ப்பின் பிடிவாதத்திற்கு அவரது சொந்த குடும்பத்தில் இருந்தும் கூட எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இது தொடர்பாக அவரது மருமகன் ஹெராடு குல்ஷனர் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது, ‘டிரம்ப்பின் பிடிவாதத்தை அமெரிக்க மக்கள் ஏற்க வில்லை. அவர் தனது தோல்வியை ஏற்றுக் கொண்டு அதிபர் மாளிகையில் இருந்து கவுரவமாக வெளியேற வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இதே நேரம் தேர்தலில் தோல்வியுற்றுள்ள டொனால்டு டிரம்பை கிண்டல் அடிக்கும் வகையில் பாலஸ்தீனத்தில் உள்ள ஜெருசலேம் நகர சபை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், டொனால் டிரம்ப் அவர்களே நீங்கள் ஜனாதிபதி பதவியை இழந்துவிட்டதால் வேலை இல்லையே என்று கஷ்டப்படவேண்டாம். நீங்கள் இங்கு வாருங்கள் எங்கள் நகர சபையில் உங்களுக்கு நல்ல பொருத்தமான வேலை தருகிறோம் என்று கூறி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“துரையப்பா விளையாட்டு மைதானத்தினை  சர்வதேச தரத்தினை ஒத்தவகையில் நாங்கள் புனரமைக்கவுள்ளோம்” – அமைச்சர் நாமல்  ராஜபக்ஷ

“துரையப்பா விளையாட்டு மைதானத்தினை  சர்வதேச தரத்தினை ஒத்தவகையில் நாங்கள் புனரமைக்கவுள்ளோம்” என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல்  ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தினை இன்று (09.11.2020) காலை பார்வையிட்டதோடு குறித்த விளையாட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஆராய்ந்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு பேசிய  அவர்,

“எதிர்வரும் ஆண்டுகளுக்குள் துரையப்பா விளையாட்டு மைதானத்தினை  சர்வதேச தரத்தினை ஒத்தவகையில் மைதானத்தை நாங்கள் புனரமைக்கவுள்ளோம்.வடக்கில் சிறந்த ஒரு உதைபந்தாட்ட மைதானம் ஆக தற்போது யாழ் துரையப்பா மைதானம் திகழ்கின்றது.

b51a36f9 0086 4304 94a6 c8af712f1637

அத்தோடு இலங்கை பூராகவும் உதைபந்தாட்ட கழகங்களை நாங்கள் புதிதாக ஆரம்பிக்க உள்ளோம். அதேபோல யாழ்ப்பாணத்திலும் புதிதாக கழகம் உருவாக்கப்படவுள்ளது. துரையப்பா விளையாட்டு மைதானத்தில் உள்ளக அரங்கில் உடற்பயிற்சி நிலையம் ஒன்றையும் விரைவில் ஆரம்பிப்பதற்கு நாங்கள் எண்ணியுள்ளோம்.

அதனையும் தயார் படுத்துவதன் மூலம் ஏனைய மாவட்டங்களை போல வடக்கு இளைஞர்களும் தமது உதைபந்தாட்ட திறமையை வெளிப்படுத்துவதற்கு இந்த அரசு குறித்த முயற்சிகளை முன்னெடுக்க உள்ளளோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“அமெரிக்காவின் இந்த ஆட்சி மாற்றத்திலிருந்து எமது நாட்டுக்கு பெற்றுக் கொள்ளக்கூடிய அனைத்து நன்மைகளையும் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்” – சஜித்பிரேமதாஸ

அமெரிக்காவினுடைய புதிய ஜனாதிபதியாக ஜோபைடன் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து உலகின் பல பகுதிகளிலுமுள்ள தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக இலங்கையின் எதிர்ககட்சித்தலைவரான சஜித் பிரேமதாஸ குறிப்பிடும் போது “அமெரிக்காவின் இந்த ஆட்சி மாற்றத்திலிருந்து எமது நாட்டுக்கு பெற்றுக் கொள்ளக்கூடிய அனைத்து நன்மைகளையும் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரத்தில் செய்தியாளர்களிடம் கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது,

“அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பிடன் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டிலிருந்து இலங்கைக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன.

அமெரிக்காவின் முன்னாள் அரசாங்கத்தைவிட, தற்போது அமையவுள்ள அரசாங்கத்தால் உலகுக்கு சாதகமான நிலைமை ஏற்படும் என்றே நாம் நம்புகிறோம். இதனை எமது நாடும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அமெரிக்காவுடன் சிறப்பான கொள்கையுடன் நாம் பயணிக்கவேண்டும்.

இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை மேலும் பலப்படுத்த வேண்டும். நாட்டின் இறையான்மையை பாதிக்காத ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும்.அமெரிக்காவின் இந்த ஆட்சி மாற்றத்திலிருந்து எமது நாட்டுக்கு பெற்றுக் கொள்ளக்கூடிய அனைத்து நன்மைகளையும் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் பேசிய அவர், “கொரோனாவினால் இன்று பலரது வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. பல தொழில்கள் முடங்கியுள்ளன.

மீனவர்கள், ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள், சிறுக்கைத்தொழிலாளர்கள், தினமும் உழைப்பவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று ஒட்டுமொத்த நாடே பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்னமும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கிறோம்.

இதுதொடர்பாக எதிர்க்கட்சி என்ற வகையில், ஒட்டுமொத்த மக்களுக்காகவும் நாம் குரல் கொடுப்போம். அதேநேரம், இன்று அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.