13

13

மட்டு. மாவட்டத்தில் – ஒரு இலட்சத்து 40,000 ஏக்கரில் பெரும்போக நெற் செய்கை

paddy-field.jpgஇலங்கையின் அதிக நெல் உற்பத்தியைத் தரும் நான்காவது மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட இடை வெளிக்குப் பின்னர் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் டொக்டர் ஆர். ருஷாங்கன் தெரிவித்தார்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய கொக்கொட்டிச்சோலை, வவுணதீவு, வெல்லாவெளி, செங்கலடி, கிரான், வாகரை ஆகிய பிரதேசங்களிலேயே அதிகமான விவசாயிகள் பெரும்போக நெற் செய்கையில் ஈடுபடவுள்ளனர். வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் இம்முறை 13 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை பண்ணப்படவுள்ளது. இது தொடர்பாக ஆராயும் உயர் மட்ட மாநாடு வவுணதீவு பிரதேச செயலக மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் வெள்ளி மாலை நடைபெற்றது.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன், மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் டொக்டர் ஆர். ருஷாங்கன், கிழ க்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரட்ணம் உட்பட அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், விவசாய அதிகாரிகள், விவசாய சங்கங்களின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இம் மாவட்டத்தில் அடுத்த மாத ஆரம்பத்தில் பெரும்போக நெற் செ ய்கை ஆரம்பமாகி எதிர்வரும் 2011ல் மார்ச் மாத இறுதிப் பகுதியில் அறுவடை நடைபெறும்.

ஒட்டுசுட்டான் செங்கல் உற்பத்தியை இரட்டிப்பாக்க அரசு நடவடிக்கை

ஓட்டுசுட்டான் செங்கல் உற்பத்தியை இரட்டிப்பாக்கி அதன் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. செங்கல் உற்பத்தித் துறையை துரிதமாக மேம்படுத்தும் பொருட்டு ஐம்பது தொழிலாளர்களை உடனடியாக இணைத்துக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தான் ஆலோசனை வழங்கியுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானிலுள்ள செங்கல் உற்பத்தி சூளையை சென்று பார்வையிட்ட ஆளுநர் அதன் செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளார்.  தற்பொழுது, நாளொன்றுக்கு 8000 செங்கல்கள் உற்பத்தி செய்யப்படுவதுடன் 23 தொழிலாளர்களே சேவையில் ஈடுபடுவதாகத் தெரிவித்த அவர்,  தற்பொழுது இதன் உற்பத்தியை இரட்டிப்பாக்கி, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் அதிகரிக்கத் தான் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப் பிட்டார்.

செங்கல் உற்பத்தியை மீள ஆரம்பிப்பதற்காக வட மாகாண சபை 20 இலட்சம் ரூபாவை ஏற்கனவே வழங்கியதாகத் தெரிவித்த அவர் தற்பொழுது இதன் செயற்பாடுகள் திருப்தியாகக் காணப்படுகிறதென்றார்.  வட மாகாணத்தில் இந்திய அரசின் உதவியுடன் 50 ஆயிரம் வீடுகளை கட்டும் பணிகளுக்கு இங்கிருந்தே செங்கற்களை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.

இதன் மூலம், இந்தப் பிரதேச தொழிலாளர்கள் மேலும் நன்மையடைபீயவுள்ளனர் என்றும் சுட்டிக் காட்டினார். ஆளுநரின் வழிகாட்டலில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரின் நேரடி கண் காணிப்பின் கீழ் கைத்தொழில் திணைக்களத்தின் கூட்டிணைப்பின் மூலம் இதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

1312 கைதிகள் நேற்று விடுதலை

0010.jpgசர்வதேச கைதிகள் தினத்தையொட்டி நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வந்த 1312 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொது மன்னிப்புத் திட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலுமுள்ள சிறைச்சாலைகளிலிருந்து இவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 37 பேர் பெண்களாவர் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் வீ. ஆர். த சில்வா நேற்றுத் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் சிறிய குற்றங்கள் புரிந்து சிறைத்தண்டனை அனுபவித்து வந்தோரே இவ்வாறு விடுவிக்கப்பட்டு ள்ளனரெனவும், நேற்றுக்காலை, பல்வேறு சிறைச்சாலைகளிலும் இக்கைதிகள் விடுவிப்பு நிகழ்வு இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார். நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்ட கைதிகள் தினத்தை சிறப்பாக்கும் வகையில் விசேட நிகழ்வொன்று கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெற்றது.

பிரதமர் டி. எம். ஜயரத்னவின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன் அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் இதில் கலந்துகொண்டதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

50பேர் கொண்ட அமெரி. வர்த்தக குழு அடுத்தவாரம் வருகை – முதலீடு குறித்து ஆராய வடமாகாணம் செல்ல ஏற்பாடு

அமெரிக்காவிலிருந்து 50 பேர் கொண்ட வர்த்தகத் தூதுக் குழுவொன்று இலங்கை வரவுள்ளது. அடுத்த வாரம் இலங்கை வரவுள்ள இவர்கள் வட மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். வட மாகாணத்திற்கு அழைத்துச் செல்லப்படும் இவர்களுக்கு இலங்கையின் முதலீடு தொடர்பாக விளக்கமளிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் அமெரிக்க வர்த்தகத் தூதுக் குழு வட பகுதியில் முதலீடுகள் செய்வது குறித்தும் ஆராயவுள்ளது. இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த தூதுக் குழு இலங்கைவரவுள்ளது என்றார். வட பகுதிக்கு விஜயம் செய்யவுள்ள அதிகமான வர்த்தகர்களைக் கொண்ட வெளிநாட்டு உயர் மட்டத் தூதுக்குழு இதுவாகும் என்றார்.

வடக்கில் முதலீட்டுத் துறையை மேம்படுத்தும் பொருட்டு அரசாங்கம் தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்களையும், செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

வடக்கை நோக்கி வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இவர்களுக்குத் தேவையான ஹோட்டல்கள், தங்குமிட, உணவு உட்பட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்க வேண்டியுள்ள நிலையில் இதற்காக உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

தற்பொழுது அதிகமான நிறுவனங்கள் முதலீடு செய்து தமது பணிகளை ஆரம்பித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.