06

06

இலங்கையர் இப்போதும் புகலிடம் கோரி விண்ணப்பிக்க முடியும் மீளாய்வு அறிக்கையில் ஐ.நா.

இலங்கையின் பாதுகாப்பு நிலைவரம் முன்னேற்றமடைந்திருக்கின்ற நிலையிலும் இலங்கையைச் சேர்ந்த புகலிடம் கோருவோர்கள் தற்போதும் அதனைக் கோருவதற்கான தகைமையைக் கொண்டிருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய அரசாங்கம் புகலிடம்கோரும் இலங்கையரின் விண்ணப்பங்களை பரிசீலிப்பதில்லை. இடைநிறுத்தியிருந்தது. அகதிகளுக்கான ஐ.நா. முகவர் நிலையம் (யூ.என்.எச்.சி.ஆர்.) நாடுகளுக்கான தனது ஆலோசனையை புதுப்பிக்கும்போது தனது தீர்மானத்தை மீளாய்வு செய்வதாக அவுஸ்திரேலிய அரசு கூறியிருந்தது.

இதேவேளை,தனது மீளாய்வு செய்யப்பட்ட வழிகாட்டுதல்களை நேற்று இரவு ஐ.நா. வெளியிட்டுள்ளது. அதில் பெண்கள், சிறுவர்கள் உட்பட இலங்கைச் சமூகத்தின் சில பிரிவுகள் விசாரணைக்குட்படுத்தப்படும் அபாயம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கலாபூசணம் புன்னியாமீன் இன் ‘சர்வதேச நினைவு தினங்கள்’ : முனைவர் மு. இளங்கோவன்

cover-03-1.jpgஇலங்கை மத்திய மலைநாட்டில் தலைநகர் கண்டி மாநகருக்கு அண்மையில் அமைந்துள்ள சிற்றூரில் பிறந்து வாழ்ந்துவரும் கலாபூசணம் புன்னியாமீன் அவர்கள் என் நெஞ்சங் கவர்ந்த எழுத்தாளர். உலக அளவில் நினைவுகூரப்பட வேண்டிய செய்திகளை இவர் இணையதளங்களில் எழுதியமை கண்டு வியந்துபோனேன். இணையத்தால் இணைந்தவர்கள் நாங்கள்.

தமிழில் இதுவரை 170 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். 1960 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் நாள் பீர்மொகமது, சைதா உம்மா ஆகியோரின் புதல்வராகப் பிறந்த இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமானிப் பட்டம் பெற்றவர். மேலும்,  ஊடகத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றவர். கல்லூரி ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கி, கல்லூரி முதல்வராகவும், பின்பு மத்திய மாகாண கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளராகவும், மத்திய மாகாண கலாசார அமைச்சின் உதவிப் பணிப்பாளராகவும் பணியாற்றி 45 வயதிலேயே ஓய்வுபெற்றவர். இவர், தற்போது முழுநேர ஊடகவியலாளராகவும், எழுத்தாளராகவும், சிந்தனைவட்ட வெளியீட்டகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார் என்பதறிந்து மகிழ்கிறேன்.

1970களில் சிறுகதை மூலம் இலக்கியத்துறையில் நுழைந்த இவரின் முதலாவது நூல் 1979 ஆம் ஆண்டில் “தேவைகள்” எனும் தலைப்பில் வெளிவந்தது. அன்றிலிருந்து இன்றுவரை சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், பல்கலைக்கழக மாணவர்களுக்கான அரசறிவியல் நூல்கள், தரம் 05 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்கள், க.பொ.த.சாதாரண தரம்; மற்றும் உயர்தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்கள், ஆய்வு நூல்கள்….. என பலதுறை சார்ந்த 170 இற்கும் அதிகமான நூல்களைத் தமிழில் எழுதி, வெளியிட்டுள்ளார். இவரின் சிறுகதைகள் தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் தாமரை, தீபம், கணையாழி, கலைமகள் போன்ற இலக்கிய ஏடுகளிலும் இடம்பெற்றுள்ளன. இவரின் ஆக்கங்கள் பல்கலைக்கழக மட்டத்தில் பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த பத்தாண்டு காலமாக இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் திரட்டி அவற்றை ஈழத்து முன்ணணித் தேசிய ஏடுகளுள் ஒன்றான ‘ஞாயிறு தினக்குரலில்’ எழுதி வருகின்றார். அவற்றைத் தொகுத்து இதுவரை 15 தொகுதிகளாக நூலுருப்படுத்தியுள்ளார். தேசிய, பன்னாட்டு நிலையில் பலவற்றை ஆவணப்படுத்திவரும் இவரின் இப்பணி ஈழத்து இலக்கியப் பயணத்தின் இமயமாகத் திகழ்கின்றது.

இலங்கையில் தமிழ்மொழி மூல நூல்களை வெளியிடுவதில் வெளியீட்டுப் பணியகங்கள் குறைவு என்பதை உணர்ந்து ‘சிந்தனைவட்டம்’  எனும் பெயரில் பதிப்பகம் ஒன்றை உருவாக்கி இதுவரை 320 இற்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை இவர் வெளியிட்டுள்ளார். இந்த வெளியீட்டுப் பணியகத்தினூடாக நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் பயன்பெற்றுள்ளனர்.

பயிற்றப்பட்ட கணித,  அறிவியல் ஆசிரியையான எம். எச். எஸ். மஸீதாவின் அன்புக் கணவரான இவருக்கு சஜீர் அகமது,  பாத்திமா சம்ஹா ஆகிய இரண்டு மக்கட் செல்வங்கள் உள்ளனர்.

‘சர்வதேச நினைவு தினங்கள்’ எனும் தலைப்பில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைத் தேசிய, சர்வதேச அச்சு ஊடகங்களிலும், இணைய ஊடகங்களிலும் இவர் எழுதியுள்ளார். அவற்றைத் தொகுத்து நான்கு தொகுதிகளாக நூலுருப்படுத்தி வெளியிடும் இம் முயற்சி இவரின் தமிழ் எழுத்துப் பணியின் மற்றுமொரு பரிமாணத்தை எடுத்துக் காட்டுகின்றது. இவரின் முயற்சிகள் வெற்றிபெற மனதார வாழ்த்துகின்றேன்.

http://muelangovan.blogspot.com/

P.M.PUNIYAMEEN
P.Box 01
POLGOLLA
Srilanka.

cover-01.jpg

cover-02.jpg

cover-03.jpg

cover-04.jpg

சல்மான்கான்களின் வருகையால் பிச்சைக்காரர்கள் கொல்லப்படுகின்றனர் பாராளுமன்றத்தில் எம்.பி. சுனில் ஹந்துநெத்தி

இலங்கைக்கு சல்மான்கான்கள் வருவதால் கொழும்பில் பிச்சைக்காரர்கள் கொல்லப்படுகின்றார்கள். வறுமையை ஒழிப்பதற்குப் பிச்சைக்காரர்களை ஒழித்துப் பயனில்லையென்று ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி. யான சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வரவுசெலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; சட்டத்தின் ஆதிக்கத்தை அரச கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் பயன்படுத்த வேண்டும். ஆனால், அண்மைய சம்பவங்கள் வேறுமாதிரியாகவுள்ளன. கொழும்பில் பிச்சைக்காரர்கள் கொங்கிறீட் கட்டைகளால் தாக்கிக் கொல்லப்படுகின்றனர். தற்போது கொழும்பில் கொங்கிறீட் கட்டைக் கொலைக் கலாசாரம் ஆரம்பமாகியுள்ளது.

இந்தியாவிலிருந்து சல்மான்கான் படம் தயாரிக்க வரும் போதுதான் இந்தப் பிச்சைக்காரர் கொல்லப்படும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. பிச்சைக்காரர்கள் இன்று சுதந்திரமாக பிச்சையெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. சல்மான்கான் வருவது பிரச்சினையல்ல. ஆனால், “பிச்சைக்கான்’கள் கொல்லப்படுவதுதான் பிரச்சினை.

அவசரகால சட்டம் 132 வாக்குகளால் நிறைவேற்றம் – பட்ஜட் குழுநிலை விவாதமும் நிறைவேறியது

parliament.gifஅவசரகால சட்டம் நேற்று சபையில் 132 வாக்குகளால் நிறைவேறியது. பிரேரணைக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 32 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஆளும் கட்சி பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததுடன் ஐ. தே. க., தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜ. தே. முன்னணி ஆகியன எதிராக வாக்களித்தன.

ஐக்கிய தேசியக் கட்சி கண்டி மாவட்ட எம். பி. அப்துல் காதர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிப்பதற்கான விவாதம் நேற்றுக்காலை ஆரம்பமானதுடன் விவாதத்தின் முடிவில் ஜனநாயக தேசிய முன்னணி எம். பி. விஜித ஹேரத் வாக்களிப்புக்கு கோரினார். இதனையடுத்து வாக்களிப்பு நடைபெற்றதுடன் 100 மேலதிக வாக்குகளால் அவசரகால சட்டம் சபையில் நிறைவேறியது.

இதேவேளை; வரவு செலவுத் திட்டக் குழுநிலை மீதான விவாதமும் 131 வாக்குகளால் சபையில் நிறைவேறியது. ஆதரவாக 131 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன் ஐ. தே. க. எம். பி. அப்துல் காதர் ஆதரவாக வாக்களித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஜ.தே. முன்னணி ஆகியன நடுநிலை வகித்ததுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற்றம். யாழ். அரசாங்க அதிபருக்கு அறிவுறுத்தல்

யாழ். குடாநாட்டின் அதிஉயர் பாது காப்பு வலயங்களில் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட விருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் எம். பி. திஸாநாயக்க தெரிவித்தார். அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை, பாதுகாப்பு அமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி மேற்கொள்ளுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஷ¤க்கு அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாகவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.

யாழ். தெல்லிப்பளை, கோப்பாய் மற்றும் யாழ். குடாநாட்டின் மேற்குப் பிரதேசங்களில் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலேயே மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சின் அதிகாரிகள் அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது, அங்கு அரசாங்க அதிபருடன் நடந்த கலந்துரையாடலின் போதே அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரதேசங்களில் மக்களை மீள்குடியேற்றுவது குறித்து அரச அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் செயலாளர் திஸாநாயக்க கூறினார்.

இதன்படி யாழ். குடாநாட்டின் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற்றத்தை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அனுமதி அரச அதிபருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் அது தொடர்பான கலந்துரை யாடல்களை தற்போது ஆரம்பித்திருப் பதாகவும் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உபய மதவளவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, யாழ். குடாநாட்டின் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பான கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அது குறித்து விரைவில் சாதகமான பதில் கிடைக்குமென்ற நம்பிக்கையிருப் பதாகவும் கூறினார். அரச அதிபர் கே. கணேஷ் இவ்விடயம் தொடர்பில் யாழ். பாதுகாப்புக்கு பொறு ப்பான கொமாண்டர் மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவுடன் கலந்துரையாடி வருகின்றார். அப்பகுதிகளில் தற்போது நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறு அறிவித்தல் வரை யாழ்.அரச அதிபராக கணேஷ்

imalda.jpgபொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுச் செயலாளரின் அறிவுறுத்தலுக்கமைய யாழ்.அரச அதிபராக கே.கணேஷ் மறு அறிவித்தல் வரை கடமையாற்றுவார். இந்த அறிவுறுத்தல் நேற்றுக் கிடைத்த தாக யாழ்.செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
 
கடந்த ஜூன் 30 ஆம் திகதியுடன் அரச அதிபர் கே.கணேஷ் ஓய்வுபெறுவதாக இருந்ததையடுத்து யாழ்.அரச அதிபராக முல்லைத்தீவு அரச அதிபராக பணியாற்றிய திருமதி இமெல்டா சுகுமார் பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சால் நியமிக்கப்பட்டிருந்தார். ஜூலை முதலாம் திகதி இமெல்டா பதவியேற்க இருந்த நிலையில் முதல்நாள் இரவு பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரிடம் இருந்து கிடைத்த அறிவுறுத்தலின் பேரில் அவர் பதவியேற்கவில்லை.

இதேசமயம் யாழ்.அரச அதிபராக கே.கணேஷ் தொடர்ந்து அந்தப் பதவியை வகித்துவருகிறார்.மறுஅறிவித்தல்வரை கடமையாற்றுவார் என்ற அறிவிப்பு நேற்று வெளிவந்துள்ளது.

முல்லைத்தீவு முஸ்லிம்கள் சொந்த இடங்களை பார்வையிட ஏற்பாடு

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களை தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவதற்கு முன்னதாக அவர்களை தாம் வாழ்ந்த பிரதேசங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று காண்பிக்க உள்ளதாக மாவட்ட செயலகம் கூறியது.

வடக்கில் இருந்து 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் புத்தளம், அநுராதபுரம், குருநாகல் மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 67 குடும்பங்களைச் சேர்ந்த 250 பேர் இடம் பெயர்ந்துள்ளமை பதிவு செய்யப்பட்டுள்ளதாக திட்டப் பணிப்பாளர் எஸ். ஸ்ரீரங்கன் கூறினார். இவர்களுள் 23 குடும்பங்களைச் சேர்ந்த 92 பேர் கடந்த வாரம் கரைதுறைப்பற்றில் மீள் குடியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கான செயலகத்தினூடாக இதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.

ஆனால், முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் கடந்த 20 வருடங்களாக தமது சொந்த இடங்களுக்கு சென்றிராததாலும் சிலர் அங்கு செல்ல தயங்குவதாலும் முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை இந்த மாதத்திற்குள் சொந்த இடங்களுக்கு நேரில் அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நேற்று பாராளுமன்றத்திற்கு விஜயம்

p.jpgஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ நேற்று மாலை பாராளு மன்றத்துக்கு விஜயம் செய்தார். வரவு செலவுத் திட்ட குழுநிலை மீதான விவாதம் மற்றும் அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதம் ஆகியன நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றன.

பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்குள்ள ஜனாதிபதியின் அலுவலகத்தில் அமர்ந்து மேற்படி விவாதங்களைச் செவிமடுத்தார். ஜனாதிபதி பாராளுமன்றத் துக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்ததையடுத்து நேற்றிரவும் பெருமளவிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகி இருந்தனர்