July

July

500 பேரின் கண் சத்திரசிகிச்சைக்கான செலவை ஏற்கிறார் சல்மான் கான்

salman.jpgவடக்கு, கிழக்கு மற்றும் வவுனியா நிவாரணக் கிராமங்களில் இருக்கும் கண்ணில் விழிவெண்படலம் படர்ந்துள்ள 500 பேருக்கு தமது சொந்த செலவில் கண் சத்திர சிகிச்சை செய்வதற்கு இந்தியாவின் முன்னணி பொலிவுட் நடிகர் சல்மான்கான் முன்வந்துள்ளார்.

இது விடயமாக நடிகர் சல்மான்கான் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசி மூலம் நேற்றுமுன்தினம் கலந்துரையாடி தமது விருப்பத்தைத் தெரிவித்தார்.  இத்திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கிய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அதற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கேற்ப இந்தியாவின் ஐந்து கண்சத்திர சிகிச்சை நிபுணர்களும், இச்சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்களும் மருந்து பொருட்களும் அடுத்துவரும் இரண்டு மூன்று தினங்களில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன. இக் கண்சத்திர சிகிச்சை கொழும்பு கண்ணாஸ்பத்திரியில் நடைபெறும். அதேநேரம் கண் நோயாளர்களுக்குப் பாவிக்கவென ஒரு தொகை கண்வில்லைகளை வழங்கவும் நடிகர் சல்மான்கான் விருப்பம் தெரிவித்துள்ளார்.

கே.பி.யை நம்பவேண்டாம் அரசை எச்சரிக்கிறார் பொன்சேகா

கே.பி. அல்லது குமரன் பத்மநாதனை நம்பவேண்டாம் என்று முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனநாயக தேசியக்கூட்டணி எம்.பி.யுமான ஜெனரல் சரத் பொன்சேகா அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரான கே.பி. பயங்கரவாதியெனவும் புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகளை அவர் தவறான விதத்தில் வழிநடத்திச் செல்லக்கூடும் என்று அவர் கூறியுள்ளார்.

கே.பி. கைதாகி பல மாதங்கள் கடந்திருக்கும் நிலையில்அவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க அரசு ஏன் தவறிவிட்டது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.முன்னாள் புலித்தலைவருடன் இணைந்து செயற்படுவதற்கான அரசின் ஆர்வமானது பாதுகாப்பு படைகளின் மனநிலையை பாதிக்கச் செய்யும் நடவடிக்கை என்றும் பொன்சேகா கூறியுள்ளார்.

அத்துடன், கே.பி.யை சிறை வைக்கத் தவறியமை வெட்கக்கேடானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனிதர் பெருந்தொகை பணத்தை வைத்திருக்கிறார். இதனால், அவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை அல்லது அவரை சிறைவைக்காமல் அரசாங்கம் சில சமயங்களில் இருக்கலாம். இது வெட்கக்கேடான விடயமாகும்.

ஏனென்றால் பிரிகேடியர்கள், ஜெனரல்கள் போன்ற யுத்த கதாநாயகர்கள் பலர் இன்று சிறையில் உள்ளனர். அதேசமயம் பயங்கரவாதிகள் உல்லாசமாக உள்ளனர் என்று பொன்சேகா டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கூறியுள்ளார்

காலிறுதிப் போட்டிகள் இன்று ஆரம்பம்

ftfa.jpgஉலகக் கிண்ண கால்பந்து போட்டியின் முக்கிய சுற்று இன்று 2 ஆம் திகதி தொடங்குகிறது. இன்றும் நாளையும் நடைபெறும் காலிறுதிப் போட்டிகளில் வெல்லும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இன்று 2 போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் உருகுவேயும் கானாவும் மோதுகின்றன. அடுத்த போட்டியில் பிரேசிலும் நெதர்லாந்தும் மோதுகின்றன. நாளை நடைபெறும் போட்டிகளில் ஆர்ஜென்ரீனா ஜேர்மனி ஒரு போட்டியிலும் ஸ்பெயின் பராகுவே இன்னொரு போட்டியிலும் மோதவுள்ளன.

இந்த அணிகளில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பவை ஆர்ஜென்ரீனா, பிரேசில், ஸ்பெயின், நெதர்லாந்து, ஜேர்மனி ஆகியவைதான். இவை எப்படியும் வென்று விடுமென்ற பொதுவான எதிர்பார்ப்புள்ளது.

இருப்பினும் ஆர்ஜென்ரீனாவும் ஜேர்மனியும் மோதுவதால் ரசிகர்களிடையே பரபரப்பு தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. யார் வென்றாலும் கால்பந்து ரசிகர்களுக்கு ஜாலிதான். ஆனாலும் ஒரு வலுவான அணி வெளியேறுகிறதே என்ற வருத்தமும் கூடவே இருக்கும்.அதேபோல பிரேசில், நெதர்லாந்து போட்டியும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நெதர்லாந்து இந்தத் தொடரில் அசத்தி விட்டது. எனவே, இந்த முறை பிரேசிலுக்கு அதிக நெருக்கடியைக் கொடுக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பெயின் அணியும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. பராகுவேயும் சும்மா இல்லை. எனவே இந்த அணிகளின் மோதலும் தீப்பறக்கும்.முக்கியமாக சொல்ல வேண்டிய அணி கானா. இந்தக் குட்டி அணி சுற்றுப் போட்டிகளிலும் காலிறுதிக்கு முந்தைய சுற்றிலும் அசத்திவிட்டது. எனவே உருகுவேயையும் கானா வென்று புதிய சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு பெரிதும் உள்ளது.

காலிறுதிக்கு வந்துள்ள அணிகளில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரே அணி கானா மட்டுமே. ஐரோப்பாவைச் சேர்ந்த அணிகள் ஸ்பெயின், நெதர்லாந்து, ஜேர்மனி ஆகியவை. மற்ற நான்கு அணிகளும் தென் அமெரிக்காவைச் சேர்ந்தவையாகும். காலிறுதிப் போட்டிகளுக்காக ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

யாழ்., வன்னிக்கு நிரந்தர மின்சாரக்கட்டமைப்பு- ஆரம்ப கட்டத்திற்கு ரூ. 6,376 மில். செலவு

ranawaka.jpgகிளிநொச்சி, சுன்னாகம், வவுனியா பிரதேசங்களை இலக்காகக் கொண்ட மின்சாரத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கென 6,376 மில்லியன் ரூபா நிதி செலவிடப்படவுள்ளதாக மின்வலு, எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க பாராளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார்.

கிளிநொச்சி, சுன்னாகம் வரையிலான முதலாவது மின் இணைப்புத் திட்டத்துக்கு 3276 ரூபா செலவிடப்படவுள்ளது. இரண்டாவது திட்டமான வவுனியா – கிளிநொச்சி வரையிலான திட்டத்துக்கு 3,100 மில்லியன் நிதி செலவிடப்படவுள்ளது

கடமையைப் பொறுப்பேற்கச் சென்றார் இமெல்டா. பதவிக்காலம் நீடிக்கப்பட்டிருப்பதாக கணேஷ் தெரிவிப்பு

imalda.jpgயாழ்ப் பாண மாவட்ட அரசாங்க அதிபர் யார் என்பது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை குழப்பகரமான நிலைமை ஏற்பட்டது. அந்த மாவட்ட அரச அதிபர் கே. கணேஷின் பதவிக்காலம் பூர்த்தியடைந்ததைத் தொடர்ந்து அவரின் இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் நேற்று வியாழக்கிழமை கடமையைப் பொறுப்பேற்கவிருந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால், நேற்றுக்காலை யாழ்.கச்சேரிக்கு திருமதி சுகுமார் சென்றிருந்த போது கே.கணேஷின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டிருப்பதாக அவருக்கு அறிவிக்கப்பட்டது. அரச அதிபர் கணேஷின் பதவிக்காலம் முடிவடைந்ததை முன்னிட்டு நேற்று முன்தினம் புதன்கிழமை அவருக்கு யாழ்.கச்சேரியில் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றிருந்தது. ஆயினும் பதவிக்காலம் நீடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கணேஷ் நேற்று தனது கடமைகளை மேற்கொண்டதாக யாழ்.கச்சேரி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விடயம் குறித்து அரச அதிபரிடம் தொடர்புகொண்ட போது, யாழ்.மாவட்ட அரச அதிபராக மேலும் 6 மாத காலத்துக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் வெளிநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாடு திரும்பிய பின்னர் இது தொடர்பாக அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதேவேளை, இந்த விடயம் தொடர்பாகத் திருமதி சுகுமாரிடம் கேட்டபோது, யாழ்.அரச அதிபராக நியமிக்கப்பட்டிருக்கும் நியமனக் கடிதத்தை பொது நிர்வாக அமைச்சு எனக்கு வழங்கியுள்ளது. ஆனால், ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னரே கடமையைப் பொறுப்பேற்பது தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று கூறினார்.

பகிடிவதைக் குற்றச்சாட்டு:- சப். பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் இடைநிறுத்தம்

பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் சப்ரகமுவ பல் கலைக்கழக மாணவர்கள் 2 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானப்பீடத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரும், முகாமைத்துவபீடத்தைச் சேர்ந்த 2 மாணவர்களுமே இடைநிறுத்தப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தில் புதிய மாணவியொருவரின் தலைமயிரை வெட்டியமை, இன்னுமொரு மாண வரை உடல் ரீதியாகத் தாக்கிய குற்றச்சாட்டுகளின் பேரிலேயே குறித்த மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியும் ஒரு போர்க்குற்றவாளிதான் : ஐ.நாவிடம் புகார் கொடுக்கும் அதிமுக – ஜெயலலிதா.

jaya.jpgமுதல்வர் கருணாநிதியும் ஒரு போர்க்குற்றவாளிதான். அவர்தான் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரை நடத்த முக்கிய காரணம். எனவே ஐ.நா விசாரணைக் குழு இலங்கைக்கு செல்லும்போது அதிமுக குழு ஒன்று அங்கு சென்று கருணாநிதியும் போர்க்குற்றவாளிதான் என்று புகார் கொடுக்கும் எனக் கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இதுதொடர்பாக இன்று ஜெயலலிதா விடுத்துள்ள ஒரு அறிக்கை:

இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டுப் போரில் உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களை ஆராய்வதற்காக, இந்தோனேசியாவின் முன்னாள் தலைமை வழக்கறிஞரின் தலைமையில் மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன் நியமித்து இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளி வந்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபை தலைவரின் இந்த நடவடிக்கை, இலங்கையில் உள்ள தமிழ் இனமும், தமிழ் மக்களும் இன்னமும் அனைத்தையும் இழந்து விடவில்லை என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது.

ஐநா சபையின் பிரதிநிதிகள் குழுவிற்கு நுழைவிசைவு தருவதை இலங்கை அரசு தனது இயல்பிற்கு ஏற்ப மறுத்து வருகிறது. இது இலங்கை அரசின் குற்ற உணர்வை வெளிப்படுத்துகிறது. ராஜபக்ஸ அரசுக்கு மறைக்க எதுவுமில்லை என்றால், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் சுதந்திரமாக இலங்கைக்குள் வர அனுமதித்து, எங்கு வேண்டுமானாலும் செல்ல ஆட்சேபணை தெரிவிக்கக் கூடாது.

பான் கி மூன் அறிவித்துள்ள மூவர் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் இந்தோனேசியா, அமெரிக்கா மற்றும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள். இவர்கள் சுதந்திரமாக இலங்கைக்குள் புக அனுமதிக்கப்பட்டால்,  இந்த மேன்மை மிகுந்த குழு ராஜபக்ஸவால் மறைக்கப்பட்ட அத்துமீறல்களை, மனித உரிமை மீறல்களை, கொடுமைகளை வெளிக் கொணரும் என்பதில் ஐயமில்லை.

விடுதலைப் புலிகளின் தலைமையை தீர்த்துக்கட்டியதை அடுத்து, 19.5.2009 அன்று இலங்கை உள்நாட்டுப் போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், இதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பே, 27.4.2009 அன்று தமிழக முதல்வர் தலைமைச் செயலகம் செல்லும் வழியில், திடீரென்று அண்ணா நினைவிடம் அருகில் தன்னுடைய பிரயாணத்தை நிறுத்தி, இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்.

மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதாக தனக்கு தகவல் கிடைத்து இருக்கிறது என்று அறிவித்தார் கருணாநிதி. கன ரக ஆயுதங்கள் இனி பயன்படுத்தப்பட மாட்டாது என்ற உறுதிமொழியையும் அவர் அளித்தார். பின்னர் உண்ணாவிரதத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார் கருணாநிதி.

மக்கள் முதல்வரை நம்பினார்கள். தமிழக மக்கள் மட்டுமல்ல, இலங்கையில் உள்ள தமிழ் மக்களும் நம்பினார்கள். அப்பாவி இலங்கைத் தமிழர்கள் முதல்வரின் வார்த்தையை நம்பி போர் முடிந்துவிட்டது என்று நினைத்து பதுங்கு குழிகளிலிருந்து வெளியே வந்தனர். அப்போது வானத்தில் வட்டமிட்டிருந்த அதிவேக இலங்கை ஜெட் போர் விமானங்கள் கொத்துக் கொத்தாக குண்டு மழை பெய்தன. இரண்டே நாட்களில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மாண்டனர்!

நேரடியாக போர் நடவடிக்கைகளில் பங்கேற்காத, அப்பாவி மக்களுக்கு எதிராகவோ, அல்லது தனிப்பட்ட நபர்களுக்கு எதிராகவோ திட்டமிட்டு தாக்குதலை திருப்பிவிடும் செயல் போர்க் குற்றமாகும் என சர்வதேச சட்டம் கூறுகிறது.

போர் நிறுத்தம் ஏற்படாத போது, போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாக தெரிவித்து, நிராயுதபாணிகளாக, ஆதரவற்ற நிலையில் இருந்த அப்பாவி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவத்திற்கு இரையாக்கியதன் மூலம், நேரடியாக போரில் பங்கேற்காத, அப்பாவி மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி அவர்களை கொலை செய்ய இலங்கை அரசுக்கு உதவி புரிந்திருக்கிறார் முதல்வர்.

ராஜபக்ஸ சகோதரர்கள் மற்றும் இலங்கை ராணுவத்தில் பணிபுரியும் சிப்பாய்கள் எவ்வாறு போர்க் குற்றவாளிகள் என்று கருதப்படுகிறார்களோ, அதைப் போலவே கருணாநிதியும் ஒரு போர்க் குற்றவாளி தான்.

எனவே, இலங்கைக்கு ஐ.நா. குழுவினர் வரும்போது அதிமுக சார்பில் ஒரு குழுவை அனுப்பி கருணாநிதி குறித்து புகார் தரப்படும். கருணாநிதி போர்க்குற்றம் இழைத்துள்ளார் என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்போம் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

வடக்கில் ஏற்படுத்தியுள்ள சமாதான சூழ்நிலையை குழப்ப சிலர் முயற்சி- அமைச்சர் பசில்

basil.jpgஅரசாங்கம் வடபகுதியில் ஏற்படுத்தியுள்ள சமாதான சூழ்நிலையை தெற்கில் படுதோல்வி அடைந்துள்ள சில அரசியல் கட்சிகள் குழப்புவதற்கு முயற்சி செய்வதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

இப்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்புணர்வுடன் செயற்படுவதுடன் அரசாங்கத்தின் மீள்குடியேற்ற வேலைத் திட்டங்களில் இணைந்து செயற்பட முன்வந்திருப்பதையிட்டு அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேனெனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2010ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தை அரசாங்கத் தரப்பில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் :

சர்வதேச நாணய நிதியம் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டு தான் 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியை வழங்குகின்றது. அவர்கள் எமக்கு எந்த நிபந்தனையும் விதிக்காமல் தான் நிதியுதவி வழங்குகின்றார்கள்.

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆகிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களில் நாம் நிதியுதவி பெறுகின்றோம். நாம் அந்த நிறுவனங்களில் உறுப்புரிமையைப் பெற்றிருப்பவர்கள் என்ற அடிப்படையில் தான் நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ளுகின்றோம். நாம் இந்நிதி நிறுவனங்களிடமிருந்து நிதியுதவியைப் பெற்றுக் கொள்ளுவதற்காக எந்த அரச நிறுவனத்தையும், சொத்தையும் தனியார் மயப்படுத்த மாட்டோம். நாட்டு மக்களுக்கு வழங்குகின்ற நிவாரணங்களையும், மானியங்களையும் குறைக்க மாட்டோம்.  அரச துறையில் ஆட்குறைப்பு செய்ய மாட்டோம் போன்றவற்றை அந்நிறுவனங்களுக்கு தெளிவாகக் கூறி வைத்துள்ளோம். நாம் ஐரோப்பிய ஒன்றியத்திடமும் நிதியுதவி கேட்போம். அதற்காக நாட்டின் இறைமையையும், சுயாதிபத்தியத்தையும், தனித்துவத்தையும் ஒருபோதும் காட்டிக் கொடுக்க முடியாது. இவ்விடயத்தில் ஜனாதிபதி தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்.

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருந்த போது சர்வதேச நிதி நிறுவனங்களில் நிதியுதவி பெற்ற போது நிபந்தனைகளுக்கு உட்பட்டுதான் பெற்றனர். 1980 களில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவியைப் பெற்றுக் கொள்ளுவதற்காக ஐ. தே. க. ஆட்சியாளர்கள் ஹோட்டல் துறை, யுனைட்டட் மோட்டர்ஸ் உட்பட பல அரச நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்தினார்கள்.

1990ம் ஆண்டில் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 30 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாகப் பெற்றுக்கொள்ளவென பசளை மானியத்தை நிறுத்தினார்கள். எஞ்சி இருந்த அரச நிறுவனங்களையும் தனியார் மயப்படுத்திட இணங்கினார்கள். அவ்வாறு நாம் ஒருபோதும் செயற்பட்டது கிடையாது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மக்களின் விருப்பப்படி செயற்படுகின்றது. அதன் காரணத்தினால் தான் எல்லாத் தேர்தல்களிலும் ஜனாதிபதி தலைமையிலான ஐ. ம. சு. மு. அமோக வெற்றிபெற்று வருகின்றது. ஐ. தே. க. மக்களிடமிருந்து தூரமாகி வருகின்றது. மூன்று தசாப்த காலப் பயங்கரவாதத்தை ஒழித்து நாடுபூராகவும் தேசியக் கொடி பறக்கக்கூடிய சூழலை ஏற்படுத்தியுள்ளோம்.
 

தனுனவின் சொத்துக்கள் அரசுடமை

danuna_1.jpgஇராணு வத்துக்கு உபகரணங்கள் கொள்வனவு செய்த ‘ஹைகோர்ப்’ கேள்விப்பத்திர நிதி மோசடி வழக்கில் இரண்டாவது சந்தேக நபரான ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரட்னவுக்கு சொந்தமான இரண்டு வங்கிகளில் ஏழு கணக்குகளில் உள்ள 15 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தையும் 1251 அமெரிக்க டொலர்களையும் அரசுடைமையாக்குமாறு கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதவான் லங்கா ஜயரட்ன றேற்று (30) உத்தரவிட்டார்.

தனுன திலகரட்ன நேற்றுக்காலை 9 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்தே, கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். தனுன திலகரட்னவை இந்த மாதம் 30 ஆம் திகதி காலை 9 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கோரி துண்டுப்பிரசுரங்களை ஒட்டுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சந்தேக நபரான தனுன திலகரட்னவுக்கு இலங்கை வங்கியின் பிரதான கிளையில் நிலையான வைப்பு கணக்குகள் நான்கும், ஹொங்கொங் அன்ட் ஷாங்ஹாய் வங்கியில் சேமிப்பு கணக்கில் 15 இலட்சத்து ஏழாயிரத்து 410 ரூபா பணமும் 1251 அமெரிக்க டொலர்களும் உள்ளன. இந்த கணக்குகளில் உள்ள பணத்தை சந்தேக நபருக்கோ அல்லது அவரது சார்பில் வரும் வேறு எவருக்கோ கையளிக்கக் கூடாது என சம்பந்தப்பட்ட இரு வங்கிகளினதும் நிர்வாகிகளுக்கு மாஜிஸ்திரேட் நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பலமுறை அறிவிக்கப்பட்ட போதிலும் அவ்வாறு அவர் ஆஜராக தவறியதனால் தனுன திலகரட்னவை கைது செய்யுமாறு மாஜிஸ்திரேட் நீதவான் மீண்டும் நேற்று உத்தரவு பிறப்பித்தார். இதேவேளை தனுன திலகரட்னவுக்கு சொந்தமாக ஏனைய சொத்துக்கள் உள்ளனவா என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியல் செய்ய நாம் இங்கு வரவில்லை – சல்மான்கான்

asen.jpg“நாங்கள் நடிகர்கள், கலைஞர்கள் இங்கு நாம் வருவது அரசியல் செய்ய அல்ல அந்த வேலைகளை அரசியல்வாதிகள் பார்த்துக் கொள்வார்கள். நாங்கள் மக்களின் மனங்களை ஆற்றுப்படுத்துபவர்களாக உறவுப் பாலமாக இங்கு வந்திருக்கிறோம். ஐஃபா போன்றதொரு விழாவை இங்கு நடத்துவதன் பின்னணியிலோ படப்பிடிப்பை இங்கு நடாத்துவதன் பின்னணியிலோ எந்தவொரு அரசியலும் இல்லை” என்று சல்மான்கான் கூறினார்.

ஒரு திரைப்படத்தின் படப் பிடிப்புக்காக நாங்கள் பல நாடுகளுக்குச் செல்வோம். அழகிய கடற்கரைகளுக்காக ஒரு நாடு, அழகான மலைப்பிரதேசங்களுக்கு இன்னொன்று என்பதாக அது அமையும். ஆனால் இவையெல்லாம் ஒருங்கே இலங்கையில் இருப்பதால் ‘ரெடி’ திரைப்படத்தின் வெளிப்புறப்படப்பிடிப்பு முழுவதையும் இலங்கையில் நடத்தத்திட்டமிட்டோம் என்றும் சல்மான்கான் கூறினார்.

‘ரெடி’ திரைப்படத்தின் வெளிப்புறப்படப்பிடிப்பு முழுவதும் இலங்கையில் நடைபெறுகின்றது. இது தொடர்பான பத்திரிகையாளர் மாநாடு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது. ரெடி திரைப்படத்தின் கதாநாயகி அசின், திரைப்படக் கூட்டுத்தாபனத் தலைவர் குமார் அபேசிங்க, விஸ்கிராப்ட் நிறுவனத் தலைவர் சபாஷ் ஜோசப், ரெடி திரைப்பட இயக்குநர் அரீஸ் பஸ்மி ஆகியோர் மேற்படி பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

பத்திரிகையாளர் மாநாட்டில் தொடர்ந்து உரையாற்றிய சல்மான் கான், இயற்கையின் வனப்பையெல்லாம் ஒருங்கே, இலங்கை கொண்டிருப்பதாலேயே ‘ரெடி’ திரைப்படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பு முழுவதும் மொரிஷியஸ்ஸிலிருந்து இலங்கைக்கு மாற்றப்பட்டது. இலங்கையில் படப்பிடிப்பு நடாத்தப்படுவது குறித்து பலத்த எதிர்ப்புகள் தமிழகத்தில் எழுந்தன.

ஐஃபா நடாத்தப்படக் கூடாதென்று முன்னதாக பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. எந்தவொரு திரைப்படத்தையும் திரையிடத் தடைவிதிக்கப்பட்டால் அதனால் பாதிக்கப்படுவது தயாரிப்பாளரே. தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படக்கூடாதென்பற்காகவே சில நடிகர்கள் ஐஃபாவைத் தவிர்த்தனர்.

இலங்கையும் எம்மைப்போன்ற கலாசார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. சுமார் 80 இலங்கைத் தொழில்நுட்பக் கலைஞர்கள் எம்முடன் இத்திரைப்படத்தில் பணியாற்றுகிறார்கள். அவர்களின் திறமை எம்மவர்களின் திறமைக்கு எந்த வகையிலும் குறைந்தது இல்லை என்றார்.