07

07

ஆஸ்திரேலியாவில். நீடிக்கும் அட்டகாசம் – இந்தியர் கார் எரிப்பு

sea.jpgஇந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் இன்னும் நிற்கவில்லை ஆஸ்திரேலியாவில். மெல்போர்ன் நகரில், இந்திய மாணவரின் கார் ஒன்று தீவைத்து எரிக்கப்பட்டது. 22 வயதான விக்ராந்த் ராஜேஷ் ரத்தன் என்பவர் அங்கு படித்து வருகிறார். பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டே படித்து வரும் அவர், தனது சம்பளத்தை சேர்த்து வைத்து கார் வாங்கியிருந்தார். இந்த காரைத்தான் நேற்று இனவெறியர்கள் தீவைத்துக் கொளுத்தி விட்டனர்.

இந்தக் கார் தவிர அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியர்களுக்குச் சொந்தமான வேறு இரு கார்களும் தாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ரத்தன் கூறுகையில், நாங்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. காரில் தீப்பிடித்துக் கொண்டவுடன், அபாய மணி ஒலித்தது. இதையடுத்து நாங்கள் வெளியே வந்து பார்த்தபோது கார்கள் தீயில் எரிந்து கொண்டிருந்தன.

போதைக் கும்பல் செய்த வேலையாக இது இருக்கும் என சந்தேகிக்கிறோம். அவர்கள் அந்தப் பகுதியில்தான் உட்கார்ந்திருப்பது வழக்கம். காரைத் திறக்க அவர்கள் முயற்சித்திருக்கலாம். ஆனால் அதை திறக்க முடியாததால், பெட்ரோலை ஊற்றி காரை தீவைத்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்றார். லூதியானாவைச் சேர்ந்த ரத்தன், ஒரு மாதத்திற்கு முன்புதான் ஆட்டோமோட்டிவ் என்ஜீனியரிங் படிப்பதற்காக ஆஸ்திரேலியா வந்தார்.

சில நாட்களுக்கு முன்புதான் தனது காரை 2500 டாலர் கொடுத்து வாங்கினார். காரை இன்னும் இன்சூரன்ஸ் கூட பண்ணவில்லையாம். விக்டோரியா போலீஸில் இதுகுறித்து புகார் தரப்பட்டுள்ளது. ஆனால் இது இனவெறித் தாக்குதல் இல்லை என்று போலீஸார் கூறுகின்றனர்

ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி நாளை இலங்கை விஜயம்

06bankimoon.jpgஇலங் கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி நாளை மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என இலங்கையிலுள்ள ஜப்பானியத் தூதரகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 12ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் அகாஷி தனது விஜயத்தின்போது அரசாங்க உயர் அதிகாரிகள் மற்றும் எதிர்க்கட்சியினரைச் சந்தித்து மீள்குடியேற்றம், அபிவிருத்தி,  புனரமைப்பு போன்ற விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடவுள்ளார்.

இலங்கைக்கு 18ஆவது தடவையாக விஜயம் செய்யும் அகாஷி தனது விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்ப முன்னர் எதிர்வரும் 11ஆம் திகதி ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றவுள்ளார் என்றும் தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

இடம்பெயர்ந்தவர்களின் விவரம் திரட்டும் பணிகள் அடுத்த வாரம் பூர்த்தி

civiling_fleeng3.jpg26 சமூக நலன்புரி மத்திய நிலையங்களில் தங்கியுள்ள  மக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விவரங்கள் திரட்டும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் பூர்த்தி அடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விபரங்கள் திரட்டும் நடவடிக்கைகள் இம்மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகியது. பிரிந்து. குடும்ப அங்கத்தவர்களை  ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது இதன் 50 வீதப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன

“ஆரம்பத்தில் புலிகளை வெறுத்த பல நாடுகள் கடைசிக் கட்டத்தில் பிரபாகரனைக் காப்பாற்ற முயன்றன. இதுதான் உண்மை” – கோட்டாபய ராஜபக்ஸ

gothabaya7777.jpgகே:  இதற்கு முன்னர் ஒரு நேர்காணலில் பயங்கரவாதம் முற்றாக அழித்தொழிக்கப்படும் என்றும் எல். ரீ. ரீ. ஈ.க்கு கசப்பான ஒரு பாடம் புகட்டப்படும் என்றும் நீங்கள் உறுதியளித்திருந்தீர்கள். இப்போது புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் உங்களது உணர்வுகள் எவ்வாறு உள்ளன?

பதில்: பயங்கரவாதம் முற்றாகத் துடைத்தெறியப்பட்டுள்ளமை மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இது ஒரு பாரிய பிரச்சினையாக இருந்தது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு, சொத்திழப்பு என்பனவற்றை எண்ணிப் பார்க்கின்ற போது, உண்மையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிக்கின்றது.

கே: இதற்கு முன்னர் தீட்டப்பட்ட பாதுகாப்புத் திட்டங்களில் அரசியல் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதுண்டு. முன்னாள் ஜனாதிபதிகள் இந்தத் தலையீடுகளைப் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.  நீங்கள் அவ்வாறான ஒரு தலையீட்டுக்கு முகம் கொடுத்தீர்களா? அல்லது ஜனாதிபதி உங்கள் சகோதரர் என்பதால் உங்களுக்கு அவ்வாறான தலையீடுகள் இருக்கவில்லையா?

பதில்: பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில் மேல் மட்டத்தில் இருந்தும், கீழ் மட்டத்தில் இருந்தும் வரும் பிரச்சினைகளையும், அழுத்தங்களையும் சமாளித்து சரியான முடிவுகளை என்னால் எடுக்கக் கூடியதாக இருந்தது. சரியான தகவல்களை வழங்கியதன் மூலம் நான் ஜனாதிபதியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானேன். இது வெல்லக்கூடிய ஒரு யுத்தம் என்ற நம்பிக்கையை நான் அவர்களுக்கு ஏற்படுத்தினேன். அதற்கு அவர்கள் எல்லோருமே தமது பூரண ஆதரவை வழங்கினர்.

கே: ஆரம்பம் முதல் இறுதிவரை சர்வதேச அழுத்தங்கள் எவ்வாறு அமைந்திருந்தன? நீங்களும், அரசாங்கமும் அவர்களை எப்படி சமாளித்தீர்கள், அவர்களுக்கு சரியான பதிலைக் கொடுத்து இந்த சவாலுக்கு எப்படி முகம் கொடுத்தீர்கள்?

பதில்: இந்தக் கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன்னர் சர்வதேச சமூகம் என்பது என்ன என்பதை முறையாகப் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற ஒரு சில நாடுகளை மட்டும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. ஏனைய நாடுகளையும், குறிப்பாக எம்முடன் நட்பாக உள்ள நாடுகளையும் நாம் சரியாக இனம் கண்டுகொண்டோம். இந்த நட்பு நாடுகள் வரிசையில் இந்தியா முன்னணியில் இருந்தது.

இந்தியாவின் செல்வாக்கு எம்மைப் பொறுத்தமட்டில் முக்கியமானது. ஜனாதிபதி பதவியேற்றவுடன் இந்தியாவுக்குப் பயணமானார். அங்கு அவர் பயங்கரவாதம் பற்றிய தெளிவான மதிப்பீடொன்றை வழங்கினார். இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் அண்மையில் இங்கு விஜயம் செய்தபோது, நான் அது குறித்து அவருக்கு நினைவூட்டினேன்.

அவர் திடுக்கிடும் ஒரு விடயத்தை எனக்குச் சொன்னார். ஒரு சிறிய ராஜதந்திர தவறானது பாரிய அழிவை ஏற்படுத்தக் கூடியது என்பதுதான் அவர் சொன்ன விடயம். 1987ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் பிரபாகரனும், உமாமகேஸ்வரனும் கைது செய்யப்பட்ட போது, அப்போதைய இந்திய அரசாங்கம் இராஜதந்திர ரீதியான அணுகுமுறையைக் கையாண்டிருந்தால், பயங்கரவாதம் இந்தளவுக்கு மோசமான நிலைக்கு வந்திருக்காது என்று அவர் சொன்னார்.

வெள்ளைத் தோல் உள்ள வெளிநாட்டவர் ஒருவர் இங்குவந்து தன்னைப் பெரிதாகக் காட்டிக்கொள்ள முனைகின்றார் என்பதற்காக நாம் அலட்டிக் கொள்ளக்கூடாது. ஏனெனில் இவ்வாறு பெரிதாகக் கூச்சலிடுபவர்களால் எமக்கு எந்த உதவிகளும் கிடைப்பதில்லை. சர்வதேச சமூகத்துடனான உறவுகளை வளர்த்துக்கொள்வதற்காக நாம் மலேஷியா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகளுடனான உறவுகளை மேலும் நெருக்கமாக்கிக் கொண்டோம்.

இந்த நாடுகளின் மூலம் புலிகள் ஆயுதக் கடத்தலில் ஈடுபடுவதை நாம் நன்கு அறிவோம். இந்த நாடுகளில் உள்ள பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரோடு நாம் மிக நெருக்கமாகப் பணிபுரிந்து புலிகளின் ஆயுதக் கடத்ததல்களை முறியடிப்பதில் முழுமையாக ஈடுபட்டோம்.

சீனா, ரஷ்யா என்பனவற்றையும் நாம் முக்கியமாகக் கருதினோம். அதேவேளை பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களையும் கொள்வனவு செய்தோம். இந்த நாடுகளுக்கு ஜனாதிபதி மூன்று தடவைகள் விஜயம் மேற்கொண்டார். இது தவிர பல சந்தர்ப்பங்களில் அந்த நாடுகளின் தலைவர்களோடு தொலைபேசி மூலமும் தொடர்புகொண்டார்.

ஆரம்பத்தில் புலிகளை வெறுத்த பல நாடுகள் கடைசிக் கட்டத்தில் பிரபாகரனைக் காப்பாற்ற முயன்றன. இதுதான் உண்மை. இது எமக்கு நன்றாகத் தெரியும்.

வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் நெருக்குதல்கள் காரணமாகவா, அல்லது எல். ரீ. ரீ. ஈ. உடன் உள்ள நீண்ட கால உறவுகள் காரணமாகவா எம்போன்ற சிறிய அபிவிருத்தி நாடுகள் பற்றி அவர்கள் தீட்டியிருக்கும் பாரிய திட்டங்கள் காரணமாகவா இவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதை நாம் மதிப்பீடு செய்ய முயல வேண்டும்.

அவர்கள் எமக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றங்களை சோடித்தார்கள். நாம் மனிதாபிமான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு முன்பே அவர்கள் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எம்மீது நெருக்குதல் பிரயோகிக்க ஆரம்பித்தார்கள்.
கேள்வி: இந்த இரட்டை வேடம் காரணமாக உங்களதும், ஜனாதிபதியினதும் உயிர்களுக்கு எதிர்காலத்தில் ஆபத்து இருக்கும் என்று கருதுகின்aர்களா?

பதில்: அதற்கான சாத்தியம் உள்ளது. பயங்கரவாதத்தின் தோல்வியால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றவரை எமக்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதும் எமக்குத் தெரியும்.

கே: புலிகளின் தலைவரை ஏன் உயிருடன் பிடிக்க முடியாமல் போனது?

பதில்: ஒரு மோதல் சூழ்நிலையின் கீழ் கடைசி சிவிலியனும் மீட்கப்பட்ட பின்னர் புலிகளின் தலைவர்கள் ஒரு சிறிய பிரதேசத்தில் நிர்க்கதி நிலைக்குள்ளானார்கள். அவர்கள் விரும்பும் பட்சத்தில் சரணடைவதற்கு போதிய கால அவகாசமும் கொடுக்கப்பட்டது.

தயா மாஸ்டர் போன்றவர்கள் காப்பாற்றப்பட்ட மக்களோடு மக்களாக வந்து சரணடைந்தார்கள். இதற்கு மேலதிகமாக ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட புலி உறுப்பினர்களும் சரணடைந்தார்கள். ஆனால் முன்னணித் தலைவர்கள் சரணடைய முன்வரவில்லை. சர்வதேச சமூகம் தங்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு இருந்தார்கள்.

கே: குமரன் பத்மநாதன் என்பவர் பற்றி இப்போது அதிகம் பேசப்படுகின்றதே

பதில்: கடந்த பல வருடங்களாக புலிகளுக்கு பிரதான ஆயுதங்களை கொள்வனவு செய்பவரும், விநியோகித்து வருபவரும் இவர் என்றே கருதப்படுகின்றது. இவர் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக இன்டர்போலினால் தேடப்படுபவர். இவர் மீது போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டும் உள்ளது. இவர் நிதி ரீதியாக புலிகளை ஸ்திரப்படுத்தியவர். இவர் புலிகளின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ளதாக சில இணையத் தளங்கள் குறிப்பிட்டுள்ளன.

சர்வதேச பொலிஸாரால் வேண்டப்படும் ஒரு நபரை சில நாடுகள் ஏன் இன்னும் கைதுசெய்யாமல் இருக்கின்றன என்பதைத் தான் என்னால் புரிந்துகொள்ள முடியாமல் உள்ளது.

கே: இப்போது காவலில் வைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் என்ன?

பதில்: இவர்களுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். புலிகளின் பயங்கரவாதச் செயல்களில் பங்கேற்றதாக இவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் விசாரணைகளும் நடத்தப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கூடியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். கிழக்கு மாகாணத்தில் இது சம்பந்தமான அனுபவம் எமக்குள்ளது.

கிழக்கில் உள்ள புனர்வாழ்வு முகாம்கள் வெற்றிகரமாகச் செயற்படுகின்றன. 30 வருடங்களுக்கு மேலாக புலிகளின் செயற்பாடோடு தொடர்புபட்டிருந்தவர்களுக்கு புனர்வாழ்வளிப்பது என்பது இலகுவான காரியமல்ல.

கே: புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்ட நிலையிலும், எதிர்காலத்தில் உங்களது உயிருக்கு ஆபத்து இருக்கலாம் என்று நீங்கள் கருதுகின்ர்களா?

பதில்: அவ்வாறான அச்சுறுத்தல் எனக்கு இருக்கலாம். ஜனாதிபதி, ஆயுதப் படைகளின் தளபதிகள் ஆகியோருக்கும் இத்தகைய ஆபத்து இருக்கலாம். புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட சகல முன்னணித் தலைவர்களுக்கும் முடிவு கட்டப்பட்ட நிலையிலும் கூட நாம் இந்த ஆபத்தை எதிர்பார்க்க வேண்டிய நிலையில்தான் உள்ளோம்.

ஒருவேளை இந்த ஆபத்து சர்வதேச மட்டத்தில் இருந்து வரலாம். ஏனெனில் எமது நாட்டுக்கு அந்தளவுக்கு சர்வதேச நெருக்குதல் பிரயோகிக்கப்பட்டது. எனவே இதற்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கையாள வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம்.

கே: பொட்டு அம்மானைத் தவிர மற்ற எல்லா புலிகளின் தலைவர்களினதும் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. பொட்டு அம்மான் பற்றி ஏன் எந்தத் தகவலும் இல்லை?

பதில்: கடைசி சில தினங்களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது பெருமளவு புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். நாம் எமது வளங்களுக்கு ஏற்ப அவற்றை அடையாளம் கண்டு பெயர்களை வெளியிட்டோம். பிரபாகரன், பானு, சூசை ஆகியோர் கொல்லப்பட்டுள்ள நிலையில் பொட்டு அம்மானும் நிச்சயம் கொல்லப்பட்டிருப்பார். அவர்கள் இராணுவத்துடனான மோதலில் கொல்லப்பட்டிருந்தால் வித்தியாசமான சூழ்நிலையில் கொல்லப்பட்டிருப்பார்கள். அப்போது அடையாளம் காண்பது கூட சாத்தியப்பட்டிருக்காது.

கே: விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குமா?

பதில்: அது நடைபெற நாம் ஒரு போதும் இடமளிக்கமாட்டோம். 30 வருடங்களுக்கு மேலாக அவர்கள் சேகரித்த பெருந்தொகையான ஆயுதங்களை நாம் கைப்பற்றியுள்ளோம். அவர்களிடம் வேறு ஆயுதங்கள் எஞ்சியிருப்பின் அவற்றையும் தேடிக் கண்டுபிடிக்க நாம் நடவடிக்கை எடுப்போம். எமது படையினரால் சுமார் 20 ஆயிரம் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். பத்மநாதன் போன்ற ஒரு சிலர்தான் இன்னும் ஈழக் கனவு காண்கின்றனர். எனவேதான் அவர்கள் பொய்ப் பிரசாரங்களும் செய்கின்றனர்.

எம்மீது சர்வதேச சமூகம் கொண்டுவந்த அழுத்தத்தை நாம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். எல். ரீ. ரீ. ஈ.க்கு ஆயுதங்கள் வழங்குபவர்கள் மீது அவர்கள் ஏன் அழுத்தங்களைப் பிரயோகிப்பதில்லை? சர்வதேசத்தினூடாகத்தான் குமரன் பத்மநாதன் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அவர் பணம் சம்பாதிக்க போதைப் பொருள் கடத்தலிலும் ஈடுபட்டுள்ளார்.

முழு உலகத்துக்கும் இது தெரியும். எம்மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் சர்வதேச அமைப்புக்களுக்கு சர்வதேச மட்டத்தில் சட்டவிரோத செயல் புரியும் இவர் போன்ற நபர்களைக் கைதுசெய்ய அழுத்தம் பிரயோகிக்க வேண்டிய கடமையும் உள்ளது. எனவே இத்தகைய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நாம் இந்த அமைப்புக்களை வேண்டிக்கொள்கிறோம்.

கே: புலிகளின் ஆதரவாளர்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கை இராஜதந்திர நிலையங்கள் பெளத்த ஆலயங்கள் என்பனவற்றைத் தாக்கி உள்ளனர். இந்த விடயத்தில் அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கை என்ன?

பதில்: அரசாங்கம் என்ற வகையில் நாம் எமது தூதுவர்களை அழைத்து, இது தொடர்பாக விழிப்பூட்டியுள்ளோம். சம்பந்தப்பட்ட அரசுகளுக்கும் எமது தூதரகங்கள் ஊடாக அறிவித்துள்ளோம். ஆனால் அந்த அரசுகளால் இதுவரை இது சம்பந்தமாக எவரையும் சட்டத்தின் முன் நிறுத்த முடியவில்லை.

இவற்றுக்கு நாம் ஒரு முடிவு கட்ட வேண்டும். ஆனால் இந்த சம்பவங்களோடு தொடர்புடைய ஒரு நபரைக் கூட அந்த அரசாங்கங்கள் இன்றும் கைது செய்யவில்லை. இவ்வகையான மனித உரிமை மீறல் குற்றங்களைப் புரிபவர்களை சட்டம் ஒழுங்கு பற்றி வெகுவாகப் பேசும் நாடுகளால் கைதுசெய்ய முடியவில்லை.

ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கவனத்துக்கும் இதை நாம் கொண்டு வந்துள்ளோம். இந்த நாடுகள் மீது ஏதாவது ஒரு வகையில் அழுத்தங்களைக் கொண்டுவருமாறும் நாம் அவரைக் கேட்டுள்ளோம்.

கே: சர்வதேச மட்டத்திலான சில அமைப்புக்களின் பிரதிநிதிகள் அடிக்கடி எமது நாட்டுக்கு விஜயம் செய்கின்றனர். இந்த வெளிநாட்டவர்களின் வருகை பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்: கடந்த சில மாதங்களாக இலங்கையில் சட்டங்களும், விதிமுறைகளும் மறக்கப்பட்ட ஒரு நிலைதான் காணப்பட்டது. இந்த வட்டத்துக்கு வெளியே தான் சம்பவங்கள் நடந்தன. இதற்கு முக்கிய காரணம் இங்கு நிலவிய பயங்கரவாதம். ஆனால் இப்போது இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் இடம்பெறாமல் தடுக்கக் கூடிய ஒருநிலை ஏற்பட்டுள்ளது. சிலர் தாங்கள்தான் இந்த நாட்டை ஆட்சிசெய்வது போலவும் நடந்துகொண்டனர். அவர்கள் எமது உள்நாட்டு விவகாரங்களில் தேவையின்றி தலையிட்டனர்.

அரச சார்பற்ற நிறுவனங்களால் எவ்வித தேசிய அல்லது சர்வதேசக் கட்டுப்பாடுகளும் இன்றி இந்தத் தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களது முடிவுகள் பொறுப்புக்கூறும் மட்டத்துக்கு அப்பால் சென்றது. நாட்டின் சட்ட விதிகளையும், ஒழுங்கு முறைகளையம் பயங்கரவாதம் பலவீனப்படுத்தியிருந்தமை தான் இதற்கு முக்கிய காரணம். இவற்றைக் கண்டும் காணாமல் இருக்கவேண்டிய நிர்ப்பந்த நிலையில் நாம் இருந்தோம். உண்மையில் எமது நாட்டுக்கே உரிய விதிமுறைகளும், ஒழுங்கமைப்புக்களும் இருக்கின்றன. வெகு விரைவில் நாம் இவற்றை மீள நிலைநாட்ட வேண்டும்.

கே: கொழும்பில் இன்னமும் மறைந்திருப்பதாக நம்பப்படும் புலிச் சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க அல்லது இனம்காண எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன?

பதில்: புலனாய்வுச் சேவைகள் மூலமும், பொலிஸார் மூலமும் எமது விசாரணையாளர்கள் நடத்திய விசாரணைகளின் பலனாக கொழும்பில் புலிகளின் வலையமைப்பை ஏற்கனவே எம்மால் தகர்க்க முடிந்துள்ளது. வன்னிக்குத் தப்பிச் செல்ல முயன்றவர்களையும் கூட நாம் கைது செய்துள்ளோம். இந்தப் பணியை பூரணப்படுத்தும் செயற்பாட்டில் உளவுத் துறையினர் தற்போது முழுமையாக ஈடுபட்டுள்ளனர்.

சிவில் வாழ்வை இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் வகையில்தான் நாம் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். புலிகளின் அச்சுறுத்தல், கப்பம் கோரல் என்பனவற்றால் சாதாரண தமிழ் மக்களும் கூட பாதிக்கப்பட்டனர். இராணு வத்தினதும், பொலிஸாரின தும் உதவியோடு இவற்றைத் தீர்த்துக் கொள்வதிலும் அந்த மக்களுக்குப் பிரச்சினைகள் இருந்தன. ஆனால் இப்போது சகல சமூகங்களும் இணக்கமான சமாதானமான ஒரு சூழலில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

கே: இந்த முழுச் செயற்பாட்டிலும் ஊடகங்களின் பங்களிப்பு எவ்வாறு அமைந்திருந்தது?

பதில்: நாம் ஒருபோதும் ஊடகங்களை ஒடுக்க முயலவில்லை. ஒரு நாட்டில் ஊடகம் என்பது மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஊடகத்தின் ஒரு பகுதி இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டது. அதைப் பற்றி மட்டும் தான் நான் பேசுகின்றேன். இவர்கள் உண்மையில் பெரும் தடையாக இருந்தனர்.

மோதல் நிலைமை பற்றி தவறான ஒரு அறிக்கை வெளியிடப்பட்டால் ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ இந்த இலக்கை அடையும் விடயத்தில் மக்களின் ஆதரவைப் பெற்றிருக்க முடியாது. எனவே தவறான அறிக்கைகளும், தகவல்களும் மக்களைச் சென்றடைவதை நாம் தடுக்க வேண்டியிருந்தது. இதனால்தான் சிலவேளைகளில் இவ்வாறானவர்களுக்கு எதிராக நான் பேசவேண்டியிருந்தது.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், யாரையும் நாம் நெருக்குதலுக்கு உட்படுத்தியதில்லை. பிழையான செய்தி அறிக்கைகளை ஏனையயஊடகங்கள் மூலம் திருத்தும் வேலையை மட்டும்தான் நாம் செய்தோம். நாட்டு மக்களுக்கும், பெருமளவுக்கு உலக மட்டத்திலும் சரியான தகவல்களை வழங்கும் பணியை பாதுகாப்புத் துறை இணையத் தளம் மிகச் சிறப்பாகச் செய்தது. நாம் கடமையைத்தான் செய்தோம். ஒரு போதும் தணிக்கை செய்யவில்லை.

தமிழில் ; எம். நெளஷாட் மொஹிடீன்   – நன்றி: தினகரன்

இனப்பகைமைகளை வளர்க்கும் செய்திகள் வெளியிடுவதை தவிருங்கள் ஊடகத் தலைவர்களுக்கு ஜனாதிபதி அறிவுரை

he_speech_ranaviru_.jpgஇனங் களுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்தும் வகை யில் ஊடகங்கள் செய்திகளை வெளியிடவேண்டுமென்றும் பகைமையையும், குரோதத்தையும் வளர்க்கும் விதத்தில் செயற்பட கூடாதெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் உரிமையாளர்கள் மற்றும் பிரதம ஆசிரியர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

சமூகத்தில் தேவையற்ற பிளவுகளைத் தோற்றுவிக்கும் வகையில் எதனையும் எழுதவோ, ஒலிபரப்பவோ வேண்டாமென்று ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறிய ஒரு சம்பவம் கூட ஆத்திரத்தைத் தூண்டும் வகையில் வெளிப்படுத்தப்பட்டால் அதனால் பாரதூர விளைவுகள் ஏற்படும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதனால் நிதானமாக செய்திகளை வெளியிட வேண்டு மென்று கேட்டுக்கொண்டார்.

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் நலன்புரி கிராம ங்களுக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளைத் தெரிந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். அதே நேரம், மீள்குடியேற்றப் பணிகளைத் துரிதப்படுத்தவென 180 நாள் வேலைத் திட்டமொன்றை அரசாங்கம் நடை முறைப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.

இலங்கை தமிழரின் கின்னஸ் சாதனை படத்துக்கு தணிக்கை குழு அனுமதி மறுப்பு

meera-jasmine.jpgஇலங்கை யைச் சேர்ந்தவரும் கனடாவில் வசிப்பவரும் பல கின்னஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரருமான சுரேஷ் ஜோகிம் கின்னஸ் சாதனைக்காக 12 நாளில் எடுத்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டது.

58 கின்னஸ் சாதனை படைத்துள்ள சுரேஷ் ஜோகிம், தனது அடுத்த சாதனையாக 12 நாளில் தமிழ் படம் எடுத்து முடித்து திரையிடும் பணியில் ஈடுபட்டார். “சிவப்பு மழை’ என்ற அப்படத்தில் சுரேஷ் ஜோகிம், மீரா ஜாஸ்மின், சுமன், விவேக் உள்ளிட்டோர் நடித்தனர். வி. கிருஷ்ணமூர்த்தி டைரக்ஷன். விஸ்வநாதன், இந்திரஜித், ஜமாலுதீன் ஒளிப்பதிவு. தேவா இசை. கடந்த மாதம் 23 ஆம் திகதி தொடங்கி 12 நாளில் படத்தை முடித்தனர். தணிக்கைக்காக புதன்கிழமை படம் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த அதிகாரிகள், படத்தில் இடம்பெறும் இலங்கை தமிழர் பிரச்சினை காட்சிக்கு ஆட்சேபம் தெரிவித்ததுடன் சான்றிதழ் தர மறுத்தனர்.

இதுகுறித்து டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, “இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி படத்தில் காட்சி இடம்பெற்றுள்ளது. அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து, மறுதணிக்கை குழுவினருக்கு படம் திரையிடப்படுகிறது. அப்போது, இலங்கை பிரச்சினை பற்றிய காட்சிக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. பிறகு சான்றிதழ் வழங்குவது குறித்து அதிகாரிகள் முடிவு எடுப்பார்கள்’ என்றார்.

யாழ்.மாநகரசபைத் தேர்தலில் பெண்கள் போட்டியிட வேண்டும்

பெண்களுக்கான அரசியல் களத்தை வலுப்படுத்துவதற்காக யாழ்.மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கும் பெண்களை முன்வருமாறு மகளிர் அபிவிருத்தி நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

யாழ்.மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிக மிகக் குறைவாகவே உள்ளது. பொருளாதார, சமூக மேம்பாடு என்று பல துறைகளிலும் தமது திறமையை வெளிப்படுத்தும் பெண்கள் அரசியலிலும் ஈடுபாடு காட்டி தமது அரசியல் நிபுணத்துவத்தினூடாக மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும் சேவையை வலுவூட்டுவது அவசியம்.

இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பெண்கள் மிக இலகுவாக 59 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டனர். எமது பிரதேசத்திலும் அரசியல் ஆர்வம் கொண்ட பெண்கள் இத் தேர்தல் களத்தில் பங்குபற்றி எமது அரசியல் ஈடுபாட்டை வெளிப்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு ஈடுபடுபவர்களுக்குத் தேவையான அறிவூட்டல்கள், ஆலோசனைகளை வழங்க மகளிர் அபிவிருத்தி நிலையம் தயாராகவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் எமது நிலையத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.

முசலி பிரதேச செயலகப் பிரிவில் இரண்டாம் கட்ட மீள் குடியேற்றம் – பசில் எம்.பி தலைமையில் 9ஆம் திகதி வைபவம்

basil.jpgவடக்கின் வசந்தம்’ அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மன்னார், முசலி பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஏழு கிராம சேவகர் பிரிவுகளில் இரண்டாம் கட்டமாக 561 குடும்ப ங்கள் எதிர்வரும் 9ஆம் திகதி மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் கீழ் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி.யின் தலைமையில் மீள்குடியேற்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளன என வடக்கு கிழக்கு அபிவிருத்தி பணிகளுக்கான ஜனாதிபதி செயலக இணைப்பாளர் சந்திரா பர்னாண்டோ தெரிவித்தார்.

மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் மீள் குடியேற்ற நிகழ்வில் கலந்துகொள்வார்.

மன்னார் முசலி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மருதமடு, பூநொச்சிகுளம், பண்டார வெளி, கூலான்குளம், சின்னபுலச்சி பொட் கேணி, அரிப்பு மேற்கு, அரிப்பு கிழக்கு பகுதிகளில் 561 குடும்பங்களைச் சேர்ந்த 2120 பேர் மீளக் குடியமர்த்தப்படுகின்றனர்.

இப்பகுதியில் கிராமசேவகர் அலுவலகம், பாடசாலைகள், கூட்டுறவு கடைகள், தபாலகம், டிஸ்பென்சரி, கிராமிய ஆஸ்பத்திரி, போக்குவரத்து அனைத்தும் அன்றைய தினமே வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மருதமடு பகுதியில் 63 குடும்பங்களும், பூநொச்சிகுளம் பகுதியில் 16 குடும்பங்களும், உட்பட 7 கிராம சேவகர் பிரிவுகளிலும் ஒரே தினத்தில் மீள்குடியேற்றம் செய்யப்படும். மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கு முன்னதாக இம் மக்கள் தமது சொந்த இடங்களை சென்று பார்வையிட்டு மீளக் குடியேற வசதிகள் உள்ளனவா என்று உறுதி செய்துகொண்டனர்.

வடக்கில் வசந்தம்; தெற்கில் டெங்கு அரசு மீது ஐ.தே.க.குற்றச்சாட்டு

நாட்டில் பயங்கரவாதம் போல் டெங்கு பாரிய பிரச்சினையாகியுள்ள நிலையில் இதனை தடுப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லையென ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.  எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் அதன் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் காசிம் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குற்றச்சாட்டினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்;

நாட்டில் வடக்கில் வசந்தம் இடம்பெறுகின்ற அதேநேரம், தெற்கில் டெங்கு நோய் பரவுகின்றது. அதாவது இன்று டெங்கு பிரச்சினை பயங்கரவாதம் போன்று பெரிய பிரச்சினையாக நாடு பூராவுமுள்ளது. இந்நிலையில் இதனை தடுப்பதற்கு அரசாங்கம் தக்க நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இவ்வருடத்தில் முதல் ஐந்து மாதத்தில் 90 பேர் பலியாகி 7,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பயங்கரமான சூழ்நிலையாகும். கேகாலை மாவட்டத்தில் அதிகளவானவர்கள் இறந்துள்ளனர். இதேவேளை, ஏனைய மாவட்டங்களிலும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காததால் டெங்கினால் பலி கொள்ளப்பட்டுள்ளனர்.

எமது சுகாதார அமைச்சர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவராகவுள்ள நிலையில் நாட்டில் டெங்கினால் பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவரது தலைமைத்துவத்துக்கே அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. டெங்கினை ஒழிப்பதற்கு சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் உருவாக்கப்பட்டுள்ள போதும் இது எந்தளவு சாத்தியப்படுமென்பது கேள்விக்குறியாகவுள்ளது. இவர்கள் சகல மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட வேண்டும்.

இதேவேளை, டெங்கிற்குரிய சிகிச்சையளிப்பதற்கு வைத்தியசாலைகளில் மருந்துகள் போதியளவு இல்லை. அத்துடன் இதற்கு சிகிச்சையளிப்பதற்கான அடிப்படை வசதியில்லை. இத்தகைய கஷ்டமான நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்து இந்த அரசாங்கம் செயற்படுகின்றது. 2006 ஆம் ஆண்டு ஆரம்பித்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவ பிரிவு இன்று எதுவித மருத்துவ வசதியுமின்றி செயற்படுகின்றது.

அங்கு 60 மாணவர்கள் கல்வி கற்கவேண்டிய நிலையில் 176 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உரிய வசதிகளை அம்மணவர்கள் பெறமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் இவர்களது பட்டத்தின் மீதே அச்சம் கொள்ளவேண்டியுள்ளது. எனவே எமது கட்சி ஆரம்பித்த இலவசக் கல்வியை பாதுகாக்க அரசாங்கம் முற்படவேண்டுமென்றார்.

இன்று புனித பொசன் தினம்: மிஹிந்தலையில் ஆலோக பூஜை

poson_s.jpgஇன்று புனித பொசன் தினமாகும். மஹிந்த தேரர் இலங்கையில் பெளத்த மதத்தை அறிமுகப்படுத்திய நிகழ்வு இன்றைய தினத்திலேயே இடம்பெற்றது.

இதனை நினைவுகூரும் பொசன் பண்டிகையை முன் னிட்டு லேக் ஹவுஸ் நிறுவ னம், மிஹிந்தலையில் 47வது தடவையாகவும் ஆலோக பூஜை (மின்னொளி ஏற்றல் பூசை) நடத்துகின்றது.

இந்தப் பூஜை நேற்று சனிக்கிழமை ஆறாந் திகதி முதல் திங்கட்கிழமை எட்டாந் திகதி வரை நடை பெறுகின்றது. இன்றைய தினம் இந்து ஆலயங்களில் வைகாசிப் பெளர்ணமி விசேடபூஜைகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.