வடக்கின் வசந்தம்’ அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மன்னார், முசலி பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஏழு கிராம சேவகர் பிரிவுகளில் இரண்டாம் கட்டமாக 561 குடும்ப ங்கள் எதிர்வரும் 9ஆம் திகதி மீள்குடியேற்றப்படவுள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் கீழ் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி.யின் தலைமையில் மீள்குடியேற்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளன என வடக்கு கிழக்கு அபிவிருத்தி பணிகளுக்கான ஜனாதிபதி செயலக இணைப்பாளர் சந்திரா பர்னாண்டோ தெரிவித்தார்.
மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் மீள் குடியேற்ற நிகழ்வில் கலந்துகொள்வார்.
மன்னார் முசலி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மருதமடு, பூநொச்சிகுளம், பண்டார வெளி, கூலான்குளம், சின்னபுலச்சி பொட் கேணி, அரிப்பு மேற்கு, அரிப்பு கிழக்கு பகுதிகளில் 561 குடும்பங்களைச் சேர்ந்த 2120 பேர் மீளக் குடியமர்த்தப்படுகின்றனர்.
இப்பகுதியில் கிராமசேவகர் அலுவலகம், பாடசாலைகள், கூட்டுறவு கடைகள், தபாலகம், டிஸ்பென்சரி, கிராமிய ஆஸ்பத்திரி, போக்குவரத்து அனைத்தும் அன்றைய தினமே வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மருதமடு பகுதியில் 63 குடும்பங்களும், பூநொச்சிகுளம் பகுதியில் 16 குடும்பங்களும், உட்பட 7 கிராம சேவகர் பிரிவுகளிலும் ஒரே தினத்தில் மீள்குடியேற்றம் செய்யப்படும். மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கு முன்னதாக இம் மக்கள் தமது சொந்த இடங்களை சென்று பார்வையிட்டு மீளக் குடியேற வசதிகள் உள்ளனவா என்று உறுதி செய்துகொண்டனர்.