பெண்களுக்கான அரசியல் களத்தை வலுப்படுத்துவதற்காக யாழ்.மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கும் பெண்களை முன்வருமாறு மகளிர் அபிவிருத்தி நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
யாழ்.மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிக மிகக் குறைவாகவே உள்ளது. பொருளாதார, சமூக மேம்பாடு என்று பல துறைகளிலும் தமது திறமையை வெளிப்படுத்தும் பெண்கள் அரசியலிலும் ஈடுபாடு காட்டி தமது அரசியல் நிபுணத்துவத்தினூடாக மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும் சேவையை வலுவூட்டுவது அவசியம்.
இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பெண்கள் மிக இலகுவாக 59 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டனர். எமது பிரதேசத்திலும் அரசியல் ஆர்வம் கொண்ட பெண்கள் இத் தேர்தல் களத்தில் பங்குபற்றி எமது அரசியல் ஈடுபாட்டை வெளிப்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு ஈடுபடுபவர்களுக்குத் தேவையான அறிவூட்டல்கள், ஆலோசனைகளை வழங்க மகளிர் அபிவிருத்தி நிலையம் தயாராகவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் எமது நிலையத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.