June

June

வடபகுதி மாணவர்களின் உயர் கல்வி மேம்பாட்டுக்கு விசேட திட்டம்

visvawarnapala.jpgவட பகுதியைச் சேர்ந்த  பாடசாலை மாணவர்களின் உயர் கல்வியை அபிவிருத்தி செய்யும் நோக்கில் விசேட திட்டமொன்றை செயற்படுத்த உயர்கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால தெரிவித்தார்.

வடக்கின் வசந்தம்’ வேலைத் திட்டத்தின் கீழ் 1058 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவிலுள்ள உயர் கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட ஏனைய வசதிகளை அபிவிருத்தி செய்யவிருப்பதாக குறிப்பிட்டார்.

மோதல்கள் காரணமாக வடக்கில் உயர் கல்வியைத் தொடர முடியாத மாணவர்கள் குறித்து விவரம் சேகரிக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு 90.33 மில்லியன் ரூபா செலவில் புதிய விடுதியொன்று அமைக்கப்பட்டிருப்பதுடன் யாழ் உயர் தொழில் நுட்ப நிறுவனத்திற்கு 609.89 மில்லியன் ரூபா செலவில் நிர்வாகக் கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அங்கே கற்பிக்கும் பாடநெறிகளை பலனுள்ளதாக்குவதற்கும் மேலும் புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்துவதற்குமென 30 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன் இதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 14.45 மில்லியன் ரூபா செலவிடப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, வவுனியாவில் 65 மில்லியன் ரூபா செலவில் உயர் தொழில்நுட்ப நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படவிருப்பதாக் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

சர்வ கட்சிக் குழுவில் பங்குபற்ற ஐ.தே.க. ஜே.வி.பி. மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மீண்டும் அழைப்பு

சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவில் கலந்துகொள்ள ஐ.தே.க. ஜே.வி.பி. மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுக்கு; மீண்டும் அழைப்பு விடுக்கவுள்ளதாக  விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சரும் சர்வகட்சிக் குழுவின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார். சர்வகட்சிக் குழுவின் யோசனைகள் எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என்று விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சரும் சர்வகட்சிக் குழுவின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார்.

ஐ.தே.க. சர்வகட்சிக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட சமயம்ää எழுத்து மூலம் பல கருத்துகளை முன்வைத்தது. அந்த கருத்துகள் குறித்து பல தடவைகள் ஆராயப்பட்டு அதில் தேவையானவை மட்டும் எடுத்துக்கொள்ளப்பட்டன. தற்பொழுது இவர்கள் பிரிந்து நிற்கின்றனர். சிறந்த ஒரு தீர்வை முன்வைப்பதற்கு அதிகாரத்தை பகிர்வதற்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும். ஒவ்வொரு கட்சிகளும் பின்வாங்குவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. நெநோ தொழில்நுட்ப வேலைத்திட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் நார ஹேன்பிட்டியிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடை பெற்றது.

இதன் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவி த்தார். அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்:-

சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை பெற்றுக்கொடுப்பதே எமது பிரதான நோக்கமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உரிய தீர்வு முன்வைக்கப்படும். அதிகாரம் பகிரப்படும். அவ்வாறு பகிரப்படாவிடின் தீவிரவாதமும் பிரிவினைவாதமும் திரும்பவும் உருவாகும். பிரபாகரனைப் போன்று பலர் உருவாகலாம்.

இதுவரை 120 அமர்வுகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அமர்வுகளும் பல மணித்தியாலங்கள் நடைபெற்றன. இதற்கு பிரதான காரணம்ää இங்கு நடைபெற்ற சகல கூட்டங்களின் போதும் சகலருக்கும் கருத்து வழங்க இடமளிக்கப்பட்டதேயாகும். கூட்டங்களின்போது பேசப்படும் சகல தகவல்களும் ஹன்சார்ட்கள் போன்று பதிவு செய்யப்பட்டு அடுத்த கூட்டத்திற்கு முன்னர் சமர்பிக்கப்பட்டு தேவையான மாற்றங்களும் வழங்கப்படும்.

வெளிநாடுகளின் தலையீடுகள் இருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர். அதில் எவ்வித உண்மையுமில்லை. தற்பொழுது எமக்கு ஒரு நாடு உள்ளது. அதனை பாதுகாக்க வேண்டும். அதேசமயம் உரிய தீர்வும் வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வடமாகாணத்தில் 11.5 பில்லியன் ரூபா செலவில் 325,000 வீடுகள்

jaffna-000.jpgமூன்று வருட வேலைத்திட்டத்திற்கமைய வடமாகாணத்தில் 11.5 பில்லியன் ரூபா செலவில் புதிதாக 325,000 வீடுகள் அமைக்கப்படும். அதேநேரம், அங்குள்ள 150,000 வீடுகள் புனரமைத்துக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்தி தொடர்பாக, வடக்கின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணிக் குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்திப்பொன்றில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மோதல்களால் பாதிக்கப்பட்ட வடபகுதியின் பெருந்தெருக்கள், மின்சார விநியோகம், வீடுகள், நீர் விநியோகம், விவசாயம், சுகாதாரம் மற்றும் கல்வி அபிவிருத்திகள் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றியும் இச்சந்திப்பின்போது ஆராயப்பட்டதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் டிக்சன் டெல பண்டார, மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன், மாவட்டச் செயலாளர் மற்றும் மீள்குடியேற்றம் மற்றும் மனிதநேய விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோர் கலந்துகொண்டனர்.

வடக்கில் மீட்கப்பட்ட பகுதிகளில் – சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த நடவடிக்கை

வடக்கில் புதிதாக மீட்கப்பட்ட பகுதிகளில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கான முன்னோடி நடவடிக்கைகளை பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு மேற்கொண்ட வருகிறது. அதற்கான திட்டமொன்று தயார்படுத்தப்பட்டுள்ளதுடன் விரைவில் அதிகாரிகள் குழுவொன்று வடக்கிற்கு செல்லவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் டி. திசாநாயக்க தெரிவித்தார்.

அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்து உடனடியாக அப்பிரதேசங்களில் மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகள் சம்பந்தமாக அறிக்கை சமர்ப்பிக்குசுமாறும் சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அரச அதிபர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வடக்கில் புதிதாகக் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் சிவில் நிர்வாகத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- வன்னியில் பல மாவட்டங்களிலிருந்தும் இலட்சக்கணக் கான மக்கள் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரிக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவதற்கு முன் அந்தந்த பிரதேசங்களில் மாவட்டச் செயல கங்கள் பிரதேச செயலகங்கள், கிராம சேவை அதிகாரிகள் அலுவலகங்கள் திறக்கப்படுவது முக்கியம். இதற்கு முன்பதாக சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் மிதி வெடி அகற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இது தொடர்பில் அங்குள்ள உயர் படை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

அதற்கு முன்னோடியாக சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் பாதுகாப்புப் படை அதிகாரிகளுடன் இணை ந்து பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களைப் பார்வையிட வுள்ளனர். இதனையடுத்து படிப்படியாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். எவ்வாறாயினும் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவதற்கு முன்னர் அதற்கு வசதியாக அப்பகுதியில் அரச அலுவலகங்கள் ஏற்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.கனகரட்ணம் கொழும்பு பிரதம நீதிவான் முன் ஆஜர்

tna_mp-kanagarathnm.jpgவடக்கில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வன்னி பாதுகாப்பு வலயத்திற்குள் சிக்குண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. கனகரட்ணம் நேற்று திங்கட்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் (சி.ஐ.டி) கொழும்பு பிரதம நீதிவான் நிஷாந்த அப்பு ஆராச்சி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.

படையினரின் மனிதாபிமான நடவடிக்கையின்போது கடந்த மே மாதம் 21 ஆம் திகதி கனகரட்ணம் எம்.பி.கைதுசெய்யப்பட்டதாக சி.ஐ.டி.யினர் பிரதான நீதிவானுக்கு அறிவித்துள்ளனர். பாதுகாப்புச் செயலாளரது பணிப்பின்பேரில் இவர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பதுடன், விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தமை, பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவி, ஒத்துழைப்பு வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டிருப்பதாகவும் சி.ஐ.டி.யினர் நீதிவானுக்கு விளக்கமளித்துள்ளனர்.

அத்துடன், கனகரட்ணம் எம்.பி. அவசரகாலச் சட்டத்தின் கீழ் பல தவறுகளை இழைத்தமைக்கான குற்றச்சாட்டுகளுக்குரிய தகவல்கள் தெரியவந்திருப்பதாகவும் எனவே, இவரை மேலும் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வேண்டுமென்றும் சி.ஐ.டி.யினர் கொழும்பு பிரதான நீதிவானிடம் கோரியுள்ளனர். இதேநேரம், நீதிவானின் கண்காணிப்புக்கு உட்படுத்தும் பொருட்டே கனகரட்ணம் எம்.பி.யை ஆஜர் படுத்தியதாக சி.ஐ.டி.யினர் தெரிவிக்கவே ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா? என்று பிரதான நீதிவான் அப்புஆராச்சி எம்.பி.யிடம் கேட்டிருக்கிறார்.

இதற்கு கனகரட்ணம் எம்.பி.உணவு, சுகாதரம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுவதாகவும் பிரச்சினைகள் எதுவுமில்லையென்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, நீதிவானின் உத்தரவின் பேரில் கனகரட்ணம் எம்.பி. மீண்டும் சி.ஐ.டி.யினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேநேரம், எஸ்.கனகரட்ணம் எம்.பி.யை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கடந்த பாராளுமன்ற அமர்வின் போது (ஜூன் 10 ஆம் திகதி) சபாநாயகரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான பி.அரியநேத்திரன் தெரிவித்தார். இதற்கென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 6 எம்.பி.க்களது கையொப்பங்களடங்கிய கடிதம் சபாநாயகருக்கு சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சுகாதாரத் துறையில் 2 வருட அபிவிருத்தி; அமெரிக்க நிறுவனம் ரூ.100 கோடி உதவி

சுகாதாரத் துறையில் இரண்டு வருட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக  ‘மெரிகெயார்ஸ்’ எனும் அமெரிக்க அரச சார்பற்ற நிறுவனம் 100 கோடி ரூபா நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இந்நிறுவனத்தின் நிதியுதவியுடன் 35 மில்லியன் ரூபா செலவில் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுவர் பயிற்சி நிலையம் நேற்று முன்தினம் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளதுடன் இதுபோன்ற நிலையங்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, கண்டி, அனுராதபுரம் வைத்தியசாலைகளில் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் இதற்கெனவே மேற்படி நிறுவனம் 100 கோடி ரூபா நிதியை வழங்கவுள்ளது.

கொழும்பு சிறுவர் வைத்தியசாலை வளாக சிறுவர் பயிற்சி நிலையத் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்ட மேற்படி அமெக்க நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி திருமதி லியா ஹில்மி இதற்கான உறுதிமொழி வழங்கியுள்ளார். மெரிகெயார்ஸ் நிறுவனம் கடந்த சுனாமி பேரழிவின் போது இலங்கைக்குப் பல்வேறு விதமான பங்களிப்புகளை வழங்கியதுடன் அதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறைக்குப் பெரும் பங்களிப்புகளைச் செய்து வருகிறது.

எல்பிடிய பெரியாஸ்பத்திரியின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இந்நிறுவனம் 450 மில்லியன் ரூபாவை வழங்கியிருந்தது. இதன் மூலம் ஆஸ்பத்திரி கட்டடங்கள் பல நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிகழ்வில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உரையாற்றியதுடன் சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

பதில் பிரதம நீதியரசராக ஷிராணி பண்டாரநாயக்க- ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

acting_.jpgபதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற சிரேஷ்ட நீதிபதியான ஷிராணி பண்டாரநாயக்க நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். 

பேச்சு, தொடர்பாடலுக்கான ஆங்கில மொழி திறன்களை மேம்படுத்துவதற்கான தேசிய திட்டம்

பேச்சு மற்றும் தொடர்பாடலுக்கான ஆங்கில மொழித் திறன்களை மேம்படுத்துவதற்கான தேசியத்திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. அலரி மாளிகையில் நடைபெற்ற வைபவத்தின் போது பேச்சு மற்றும் தொடர்பாடலுக்கான ஆங்கில மொழிப் போதனைகளை விரிவுபடுத்துவதிலுள்ள பிரச்சினைகளுக்கும், தடைகளுக்கும் தீர்வுகளும் வழங்கப்பட்டன.

இத்தேசியத் திட்ட அங்குரார்ப்பண வைபவத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த், அரசியல் யாப்பு விவகார அமைச்சர் டியூ குணசேகர, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் த சில்வா, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் ஆலோசகர் சுனிமல் பெர்னாண்டோ, அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் கலாநிதி ரஜீவ விஜேசிங்க ஆகியோர் பங்குபற்றிய கலந்துரையாடலொன்றும் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் போது ஆங்கில மொழி பேச்சு மற்றும் தொடர்பாடல் திறன்களை பாடசாலைகள் மட்டத்தில் மேம்படுத்துவதிலுள்ள தடைகளையும், குறைபாடுகளையும் மாகாண கல்வித் திணைக்கள மற்றும் வலயக் கல்விப் பணிமனை அதிகாரிகளும், பாடசாலைகளின் அதிபர்களும் முன்வைத்தனர்.

இவற்றுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சர்களும் மாகாண முதலமைச்சர்களும் உடனுக்குடன் தீர்வுகளை வழங்கினர்.

ஆங்கில மொழிப் பேச்சு மற்றும் தொடர் பாடல் திறன்களை மேம்படுத்தும் தேசியத் திட்டத்தின் கீழ் இந்தியாவின் ஹைதரா பாத்திலுள்ள ஆங்கில மற்றும் பிறநாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில் நாற் பது ஆங்கில ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. இப் பயிற்சியைப் பூர்த்தி செய்துள்ள ஆசிரியர்கள் தயாரித்து ள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சி வழிகாட்டி நூலின் முதல் பிரதியும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

ஆங்கில மொழி பேச்சு மற்றும் தொடர் பாடல் திறன்களை மேம்படுத்தும் திட்டத் தின் கீழ் ஆங்கில ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கவென மைக்ரோ சொப்ட், இன்டெல் மற்றும் மெற்றோ பொலிட்டன் ஆகிய தனியார் நிறுவனங்கள் மடிக் கணனிகளை ஜனாதிபதியிடம் வைபவரீதியாகக் கையளித்தன.

இவ்வைபவத்தில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம உரையாற்றுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது இரண்டு வாக்குறுதிகளை நாட்டு மக்களுக்கு வழங்கினார். அவ்வாக்குறுதிக்கு ஏற்ப பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துக்கட்டி நாட்டை ஐக்கியப்படுத்தியுள்ளார்.

அடுத்த வாக்குறுதிக்கு ஏற்ப மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த விரிவான அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அந்தடிப்படையிலேயே  ‘வாழ்க்கைத் திறன் ஒன்றாக ஆங்கில மொழி’ என்ற தொனிப் பொருளில் ஆங்கில மொழிப் பேச்சு மற்றும் தொடர்பாடல் மேம்பாட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட விருக்கின்றது.

நவீன உலகிற்கு ஆங்கில மொழியின் பேச்சு மற்றும் தொடர்பாடல் அறிவும் தகவல் தொழில் நுட்ப அறிவும் மிகவும் அவசியமானது. இவற்றைக் கருத்தில் கொண்டே ஜனாதிபதி தலைமையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. அடுத்து வரும் பத்து வருடங்களில் நாட்டில் வாழும் சகல ஏழை எளிய மக்களும் ஆங்கில மொழியறிவைப் பெற்றுக் கொள்ள இத்திட்டம் பெரிதும் உதவும் என்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 554 கி.மீ.வீதி அபிவிருத்தி- ‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தில் துரித நடவடிக்கை

basil.jpgமுல் லைத்தீவு மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினாலும், வீதி அபிவிருத்தி திணைக்களத்தினாலும் பராமரிக்கப்படும் வீதிகள் அனைத்தும் 16866 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் இந்த அபிவிருத்தி நடவடிக்கையில் 180 நாள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 156 மில்லியன் ரூபாவும், மூன்று வருட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 16710 மில்லியன் ரூபாவும் செலவிடப்படவுள்ளன. மொத்தம் 554 கிலோ மீட்டர் வீதி இரண்டு கட்டங்களிலும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

வடக்கின் வசந்தம் செயற் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் இத்தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏனைய பிரதான தீர்மானங்களாவன 2006ம் ஆண்டளவில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வீடுகளில் ஒரு வீதத்திற்கு மாத்திரம் மின்சார வசதி இருந்தது.

180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் இதை 15 வீதமாக அதிகரிப்பதற்கும், மூன்று வருட வேலைத் திட்டத்தின் கீழ் எல்லா வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. 2200 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவிருக்கும் இத்திட்டத்தில் மீள்குடியேற்றம் நடைபெறவுள்ள பிரதேசங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

நீர் விநியோகம், தென்னை மற்றும் பனை வளர்ச்சி, இயற்கைப் பசளைப் பயிர்ச் செய்கைக்கு முன்னுரிமை அளித்தல், ஆஸ்பத்திரி மற்றும் பாடசாலைக் கட்டிடங்களைப் புனரமைத்தல் தொடர்பான தீர்மானங்களும் இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன.வட மாகாண ஆளுநர் டிக்ஷன் தால அமைச்சர் ரிசாட் பதியுத்தீன், மாவட்டச் செயலாளர் இமெல்டா சுகுமார், வன்னிக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரி. ஏ. சந்திரசிறி ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்திய மாவோயிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டுள்ளது

இந்திய நடுவணரசு, இந்திய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பயங்கரவாத அமைப்பு என்று கூறி தடை செய்திருக்கிறது.

இந்தத் தடையின் விளைவாக, மாவோயிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களை, அவர்கள் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடாவிட்டாலும் கூட அவர்களை கைது செய்வதற்கு அதிகாரிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது.

இந்தியாவின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளைச் சேர்ந்த ஐந்து மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் இரண்டு நாள் எதிர்ப்பு ஆர்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்ததை தொடர்ந்து, இந்த மாநிலங்களில் அதிகபட்ச உஷார்நிலை பிரகடனப்படுத்தப்பட்ட பின்னணியில் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.