June

June

ஐ.சீ.சீ. ருவன்டி-20 தொடரில் பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பியது!

_dilshan_.jpgஐ.சீ.சீ.  ருவன்டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்குபற்றுவதற்காக இங்கிலாந்துக்குச் சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சற்று நேரத்துக்கு முன்னர் நாடு திரும்பினர்.

கட்டுநாயக்க, விமானநிலையத்தில் வந்திறங்கிய குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை அணி வீரர்களை இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் வரவேற்றனர். ருவன்டி-20தொடரின் இறுதிப் போட்டியில் கடந்த 21ஆம் தகதி பாகிஸ்தானை எதிர்த்தாடிய இலங்கை அணி சம்பியனாகும் வாய்ப்பை இழந்து ரண்ணர்அப் எனும் 2ஆவது ஸ்தானத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

முழுமைபெறாத அரசியலமைப்பு சபைக்கு “அரசியல் யாப்பில் ஒருபோதும் இடம்கிடையாது

06arliament.jpgமுழுமை பெறாத அரசியலமைப்புச் சபைக்கு அரசியல் யாப்பில் ஒருபோதும் இடம் கிடையாது.அரசியலமைப்பின்படி 17வது திருத்தத்திற்கு அமைய, அரசியலமைப்புக்குப் பத்துப் பேரைத் தெரிவு செய்ய வேண்டும். இதில் ஒருவரின் பெயர் பிரச்சினை யாக உள்ளதால் சபையை ஸ்தாபிக்க முடியாது என்று அரசாங்கத்தின் பிரதம கொரடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்றுக்காலை 9.30 இற்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார தலைமையில் கூடியது. வழமையான நிகழ்வுக்குப் பின்னர் வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் சற்று சூடுபிடித்தே காணப்பட்டது. பொலிஸ் மாஅதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் ஆகியோரின் நியமனம் தொடர்பாக பிரேமசிறி மானகே எம். பி. கேள்வி எழுப்பினார்.  இந்தக் கேள்விக்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன பதிலளிக்கையில்:- அரசியலமைப்புச் சபையை ஸ்தாபிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை விளக்கினார். இதன் போது, சபாநாயகர் தமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சியின் பிரதம கொரடா ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.

அப்போது, இல்லாத ஒரு சபைக்குத்தான் நான் தலைவர். இல்லாத அதிகாரத்தை நான் சிருஷ்டித்துச் செயற்படுத்தவா என்று சபாநாயகர் திருப்பிக்கேட்டார். இதன்போது, ஆளுந்தரப்பு, எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் சூடான வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டனர்.
இந்த கருத்துப் பரிமாற்றத்தின் போது பார்வையாளர்கள் வரிசையில் பாடசாலை மாணவர்கள் நிரம்பியிருந்தனர். அவர்களுக்காவது அமைதியைப் பேணுங்கள் என்று சபாநாயகர் உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.

பின்னர், தேர்தல் ஆணையாளர் தொடர்பாகவும் மேற்கண்டவாறான ஒரு கேள்வியை பிரேமசிறி மானகே எம். பி. தொடுத்திருந்தார். அதற்கும் விளக்கமளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும்வரை ஆணையாளர் ஓய்வு பெற முடியாது என உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கியிருப்பதாக சுட்டினார். வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் நிறைவடைந்ததும், முற்பகல் 11 மணிக்கு சபை ஒத்திவைக்கப்பட்டது. அப்போது, ஜே. வி. பி. உறுப்பினர் சுனில் ஹந்துந்நெத்தி சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றை முன்வைத்து உரையாற்றினார்.

‘தேர்தல் நடத்தாது ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்கும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் கிடையாது’ – ஐ. தே. க. பொய் பிரசாரமென அரசாங்கம் குற்றச்சாட்டு

ஜனாதிபதித் தேர்தல் நடத்தாது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பதவியில் நீடிக்க வைக்கும் திட்டமெதுவும் அரசாங்கத்திற்கோ ஜனாதிபதிக்கோ கிடையாது என அமைச்சர் டளஸ் அலஹபெரும கூறினார். இது தொடர்பாக ஐ. தே. க. தெரிவித்து வரும் குற்றச்சாட்டுகளில் எதுவித உண்மையும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (23) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

தேர்தல் நடத்தாது சர்வாதிகார ஆட்சி நடத்த அரசாங்கம் தயாராவதாக ஐ. தே. க. கடந்த சில தினங்களாக குற்றஞ்சாட்டி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கிறது. அத்தகைய திட்டமெதுவும் அரசுக்குக் கிடையாது.

பிரதேச சபைத் தலைவர்களின் சம்மேளனக் கூட்டமொன்றில் ஐ. தே. க. நகர சபைத் தலைவர் ஒருவரே போட்டியின்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தெரிவு செய்ய வேண்டுமென பிரேரணை கொண்டு வந்துள்ளார். அது அவர்களின் ஜனநாயக உரிமையாகும் என்றார். இங்கு கருத்துத் தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. கூறியதாவது,

தோல்வி என்பது ஐ. தே. க. வுக்கு மட்டுமே உரித்தான ஒன்றாக மாறியுள்ளது. அதனால் தேர்தல்களில் தமக்கு ஏற்படும் தோல்வியை மட்டுப்படுத்தவே அந்தக் கட்சி தற்பொழுது முயன்று வருகிறது.இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினையை பயன்படுத்தி அரசியல் லாபம் பெற ஐ. தே. க. முயன்று வருகிறது. நிவாரணக் கிராமங்களுக்குச் செல்ல அனுமதிக்குமாறு கோரி புலிகளுடன் தொடர்புடைய ஐ. தே. க. எம்.பி.க்கள் சிலர் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்களிடையே வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் இருந்தால் அவர்களுக்கு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட உள்ளது. ஆனால் இடம்பெயர்ந்த மக்களை அரசியல் துரும்புச் சீட்டாகப் பயன்படுத்தி அரசியல் இலாபம் பெற ஐ. தே. க. முயல் கிறது. 1987 – 1989 களில் இடம்பெற்ற வன்செயல்களின் போது பெருமளவு இளைஞர்களை ஐ. தே.க. அரசு தடுத்து வைத்திருந்தது. ஆனால் அந்த இளைஞர்களை பார்வையிட ஐ. தே. க. அனுமதி வழங்கவில்லை என்றார்.

வவுனியா, வேப்பங்குளத்தில் 46 கிலோ சி.4 வெடிமருந்து கிளேமோர் குண்டுகள் மீட்பு

வவுனியா, வேப்பங்குளம் பிரதேசத்திலிருந்து 46 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த சி-4 ரக வெடிமருந்துகள் சக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட மூன்று புலிச் சந்தேக நபர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய தேடுதல்களின் போதே பொலிஸார் இந்த பெருந்தொகையான வெடிமருந்துகளையும் வெடிபொருட்களையும் மீட்டெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். மேல் மாகாண பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும், வவுனியா பொலிஸாரும் இணைந்தே இந்த பாரிய தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

அதிசக்திவாய்ந்த சி-4 ரக வெடிமருந்துகள் 46 கிலோ, 10 கிலோ எடையுள்ள தற்கொலை அங்கி-01, 3 கிலோ எடையுள்ள தற்கொலை அங்கிகள்-03, 14 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த கிளேமோர் குண்டு-02, அதனை வெடிக்க வைக்க பயன்படுத்தப்படும் கருவிகள், வெள்ளை மற்றும் சிவப்பு நிற வயர்கள், காஸ் சிலின்டர்-01, 2.7 கிலோ எடையுள்ள குண்டுகள்-02, பிளாஸ்டிக் பரல்கள் மற்றும் பெருந்தொகையான வெடிக்கவைக்கும் கருவிகளையும் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும், வவுனியா பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஊவா மாகாணசபை தேர்தலுக்கான வேட்பு மனு ஏற்பு இன்றுடன் பூர்த்தி ஐ.ம.சு.மு., ஐ.தே.க., ஜே.வி.பி. வேட்பு மனு தாக்கல்

uwa_provinces_and_districts.pngஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று நண்பகல் 12.00 மணி வரை ஏற்கப்படவுள்ளதோடு இன்று பிற்பகல் தேர்தல் ஆணையாளர் தேர்தல் நடத்தப்படும் திகதியை அறிவிக்க உள்ளதாக தேர்தல் செயலகம் கூறியது.

பதுளை மாவட்டத்திற்கு ஏழு அரசியல் கட்சிகள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதோடு மூன்று சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. மொனராகலை மாவட்டத்திற்கு 4 கட்சிகளும் 3 சுயேச்சைக் குழுக்களும் நேற்று வரை வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்று மொனராகலை மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்தன. ஐ. ம. சு. கூட்டமைப்பு செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் தலைமையிலான குழுவினர் வேட்பு மனுக்களை கையளித்தனர். அமைச்சர்களான ஆறுமுகம் தொண்டமான் டிலான் பெரேரா, வடிவேல் சுரேஷ் ஆகியோரும் இங்கு பிரசன்னமாகி யிருந்தனர்.

பதுளை மாவட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐ. தே. க. தேசிய மக்கள் நல முன்னணி, தேசப் பற்று மக்கள் முன்னணி, தேசிய அபிவிருத்தி முன்னணி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி, மலையக மக்கள் முன்னணி என்பன வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளன. இது தவிர 3 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் செயலகம் கூறியது,

பதுளை மாவட்டத்திற்கான ஐ. தே. க. வேட்பாளர் பட்டியலை கட்சி முதன்மை வேட்பாளர் உபாலி சமரவீர தாக்கல் செய்தார். ஐ. தே.க.வுடன் தொழிலாளர் தேசிய சங்கம், மேலக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி என்பன இணைந்து போட்டியிடுகின்றன.

மொனரகலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, ஜே. வி. பி., ஐக்கிய சோசலிசக் கட்சி என்பனவும் 3 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்போ ஐ. தே. க. வோ முதலமைச்சர் வேட்பாளர் எவரையும் நியமிக்கவில்லை. இம்முறை தேர்தலில் ஐ. ம. சு. கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளர் எவரையும் நியமிக்காது எனவும் கட்சி கூடி முதலமைச்சரை தெரிவுசெய்யும் என அமைச்சர் டளஸ் அலஹப் பெரும நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார்.

கிளிநொச்சி, ஆனையிறவு முல்லைத்தீவுக்கு மின்சாரம்

சுமார் 400 மின்மாற்றிகளின் துணையுடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஆனையிறவு பகுதிகளுக்கு மின்சாரத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகிறது என மின்சக்தி அமைச்சர் ஜோன் செனவிரட்ண நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு அமைச்சர் மேலும் பேசுகையில்:-

மின்சார உற்பத்தியின் போது பெருந்தொகை பணத்தை செலவிட வேண்டியுள்ளது. மின்சாரத்தை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் போது அலகொன்றுக்கு ஒரு ரூபா 50 சதம் நட்டமேற்படுகிறது. இதன்படி 40 மில்லியன் ரூபாவை தினமொன்றுக்கு நஷ்டமடைய வேண்டியுள்ளது. டீசலை எரிபொருளாகக் கொண்டு மின் உற்பத்தி செய்யப்படுவதாலேயே அதிக உற்பத்தி செலவை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இவற்றுக்கு மாற்டாகவே நிலக்கரியினாலான மின் ஆலையை உருவாக்கி வருகிறோம். முதற்கட்ட வேலைகள் பூர்த்தியாகிக் கொண்டு இருக்கின்றன. இதனு¡டாக 300 மெகாவோட் மின்சாரத்தை பெற முடியும்.

இரண்டாவது கட்டத்தை விரைவிலேயே ஆரம்பிக்கவுள்ளோம். எக்ஸிம் வங்கியூடாக கடனை பெற்றுக் கொண்டு இரண்டாவது கட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனூடாக 900 மெகாவோட் மின்சாரத்தை பெற முடியும். அத்துடன் இலங்கை – இந்திய கூட்டு முயற்சியில் திருகோணமலையில் அரம்பிக்கப்படவுள்ளது. பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த நிலையில் இவ் வருட இறுதியில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. என்றும் அமைச்சர் ஜோன் சென விரட்ன கூறினார்.

யாழ். மேயர் வேட்பாளராக ஆனந்த சங்கரி போட்டி

TULF Leader Anandasangaree Vஜனநாயக தமிழர் தேசிய கூட்டணி யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் வேட்பாளர்களை நிறுத்தவுள்ளது. யாழ்ப்பாணத்தில் உதய சூரியன் சின்னத்திலும் வவுனியாவில் நங்கூரம் சின்னத்திலும் தேர்தலில் குதிக்கும் இந்தக் கூட்டணி, இன்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஜனநாயக தமிழர் தேசிய கூட்டணியின் யாழ். மாநகர சபையின் மேயர் வேட்பாளராக வீ. ஆனந்த சங்கரி நிறுத்தப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

த.வி. கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈ.பி.ஆர்.எல்.எப். (பத்மநாபாஅணி) ஆகிய மூன்று கட்சிகளும் இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.

ஊ.ந.நி.சபை: ஜனாதிபதியிடம் ஒரு கோடி ரூபா கையளிப்பு

வடக்கில் இடம்பெயர்ந்துள்ள ஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்தவர்களினதும் நலன்புரி நிலையங்களிலுள்ளோரினதும் நலன்களை கவனிக்கவென ஊழியர் நம்பிக்கை நிதிய சபை 100 இலட்சம் ரூபாவினை அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளது.

ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் தலைவர் கே. எம். ஏ. கொடவத்த இந்நிதியை நேற்று (23) அலரி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார்.

கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் மாத்திரம் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் 102 கிளைகளில் 2700 பேர் சேவைபுரிந்தனர். தற்போது இடம்பெயர்ந்திருக்கும் இவர்களதும் ஏனைய சிவிலியன் களதும் அத்தியாவசியத் தேவைகளை முன்னெடுப்பதற்கா கவே இந்நிதி நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் பொதுமுகாமையாளர் மங்கல குணரத்ன, செயற்பாட்டுப் பணிப்பாளர் திஸ்ஸ குட்டியாரச்சி உள்ளிட்ட பல அதிகாரிகளும் வைபவத்தில் கலந்து கொண்டனர்.

சட்ட விரோத மது உற்பத்தியை தடுக்க 100 வீத முற்றுகை

ranjith_siyambalapitiya.jpgநாட்டில் மதுபானத்தை ஒழிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாக அரச வருவாய்த் துறை மற்றும் நிதி, திட்டமிடல் பிரதியமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இறக்குமதிக்கான வரியை அதிகரித்துள்ளதுடன், சட்ட விரோத உற்பத்திகளைத் தடுப்பதற்காக 100 வீதம் முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

அதே நேரம், உல்லாச விடுதிகளைத் தவிர, வேறு எவருக்கும் மதுபான விற்பனைக்கான அனுமதிப் பத்திரம் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். வாய்மூல விடைக்கான கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் சியம்பலாபிட்டிய இதனைக் கூறுகையில், குறுக்குக் கேள்வியொன்றை எழுப்பிய ஜே. வி. பி. உறுப்பினர் விமல் ரத்நாயக்க, ‘அமைச்சர், அனுமதிப் பத்திரம் வழங்கவில்லை என்று கூறினாலும், புதிதாக வழங்கப்பட்டுள்ளனவே’ என்றார். இதன் போது அவ்வாறு இருப்பின் விபரங்களைச் சமர்ப்பித்தால், ஒரே நாளில் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். இதற்கமைய நாளைய தினம் தம்மிடம் உள்ள முழு விபரங்களையும் சபையில் சமர்ப்பிப்பதாக விமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சண்டே லீடரில் வெளியிடப்பட்டது பொய்யானதென நிரூபிப்போம் – பாதுகாப்பு செயலரின் சட்டத்தரணி தெரிவிப்பு

விமானப் படைக்கென கொள்வனவு செய்யப்பட்ட மிக்ரக விமானத்தில் நிதி மோசடி இடம்பெற்றிருப்பதாக சண்டேலீடர் பத்திரிகையில் வெளிவந்த செய்தி உண்மைக்குப் புறம்பானதென்பதனால் அதனை மக்கள் முன்னிலையில் நிரூபிப்பதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தயாராக விருப்பதாக அவர் சார்பில் நேற்று (23) நீதிமன்றத்தில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.யு.எம். அலிசப்றி கல்கிஸ்சை மாவட்ட மேலதிக நீதவானிடம் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்பட்ட சேவைகளை பாராட்டும் அதேவேளை, எவ்வாறான முறையில் மன்னிப்புக்கோர வேண்டுமோ அந்த முறையில் மன்னிப்புக்கோர தாம் தயாரெனவும் சண்டேலீடர் பத்திரிகை நிறுவனத்தினர் நீதிமன்றத்தில் நேற்றுக் கூறியதை நிராகரித்துக் கூறும் போதே கோத்தாபய ராஜபக்ஷ சார்பாக ஆஜரான சட்டத்தரணி மேற்கண்டவாறு கூறினார்.

சண்டேலீடர் பத்திரிகையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானதெனக் கூறி சண்டேலீடர் நிறுவனத்திடமிருந்து 100 கோடி ரூபாவை நட்டஈடாகப் பெற்றுத்தருமாறு கோத்தாபய ராஜபக்ஷ வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

கல்கிஸ்சை மாவட்ட மேலதிக நீதவான் மொஹமட் மக்கி நேற்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே சண்டேலீடர் நிறுவனம் மன்னிப்புக்கோர தயாராகவிருப்பதாக கூறிய கருத்தை நிராகரிப்பதாக பாதுகாப்புச் செயலாளர் தரப்பு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

சண்டேலீடர் நிறுவனம் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி சுனில் லங்காதிலக்க, வழக்கின் முதல் முறைப்பாட்டாளர் உயிரிழந்தமையால் இந்த வழக்கை வாபஸ் பெற சண்டேலீடர் நிறுவனம் விரும்புவதாக தெரிவித்தார்.

சண்டேலீடர் நிறுவனத்துக்கும் அந்த நிறுவனத்தைச் சார்ந்த லால் விக்கிரமதுங்க மற்றும் ஊடகவியலாளர் ப்ரெட்ரிக்கா ஜேன்ஸ் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கல்கிஸ்சை மேலதிக மாவட்ட நீதவான் மெக்கி மொஹமட் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீதிமன்றத்துக்கு அவதூறு ஏற்படுத்தாத வகையில் செயற்படுமாறு தெரிவித்தே ஜூலை 09 ஆம் திகதி மேற்படி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேலதிக மாவட்ட நீதவான் நேற்று மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்