10

10

புலிகளிடமிருந்து பொது மக்களை மீட்கும் விசேட படை நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படும்- பிரியதர்ஷன யாப்பா

anura-piriyadarshana-yappa.jpgபுலிகளின் பிடியிலிருந்து பொது மக்களை மீட்கும் விசேட படை நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் தொடாந்தும் கூறுகையில்,

பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் அரசின் மனிதாபிமான நடவடிக்கை பாரிய வெற்றி பெற்றுள்ளது. புலிகளிடமிருந்த முழு நிலப்பரப்பும் படையினரால் மீட்கப்பட்டதையடுத்து அவர்கள் இப்போது பாதுகாப்பு வலயத்தில் பொது மக்களை கேடயங்களாகப் பயன்படுத்தி ஒழிந்து வாழ்கின்றனர்.

இந்த அப்பாவித் தமிழ் மக்களை மீட்டு பயங்கரவாதிகளை முற்றாக அழித்து நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் அதனைத் தொடர்ந்த பாரிய அபிவிருத்தியையும் ஏற்படுத்தும் நோக்கில் அரசு விசேட படை நடவடிக்கையை விரைவில் ஆரம்பிக்கும். அது எப்போது எவ்வாறு ஆரம்பிக்கப்படும் என்பதைக் கூறமுடியாது. பயங்கரவாதத்தை ஒழிக்கும் யுத்த நடவடிக்கைகளுக்கு அரசு மிகப் பெரும் தொகைப் பணத்தைச் செலவிடுகின்றது. கடந்த வருடம் 164 பில்லியன் ரூபா செலவிடப்பட்டது. இவ்வருடம் 171 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இராணுவ நடவடிக்கைகளுக்கு இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டாலும் அதன் பலன் நாட்டுக்குக் கிட்டியுள்ளது. மூன்று தசாப்த கால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள புலிகளையும் விரைவில் அழித்து நாட்டில் அமைதியையும் ஜனநாயகத்தையும் ஏற்படுத்துவோம்..யுத்தச் செலவுகளுக்கு மத்தியிலும் பொது மக்களுக்கு அரசு வழங்கும் மானியங்களை நாம் ;குறைத்து விடவில்லை. இவ்வரும் ஏப்ரல் மாதம் வரையில் 25000 மில்லியன் ரூபாவுக்கு உர மானியம் வழங்கியுள்ளோம். 

கடந்த வருடத்தில் எமது நாட்டின் விவசாய உற்பத்திகள் 23 சத வீதத்தால் உயர்ந்துள்ளன. அதனால்தான் உலக பொருளாதா வீழ்ச்சியின் தாக்கத்தை எமது இலங்கை மக்கள் வெகுவாக உணரவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

ராஜபக்சேவை சரித்திரம் மன்னிக்காது: கலைஞர்

karunanithi.jpgஇலங் கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்தக் கோரி சென்னையில் திமுக சார்பில் தமிழர் பேரணி நடைபெற்றது. இந்த பேரணி, மன்றோ சிலையில் தொடங்கி, சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகே முடிவடைந்தது. பேரணி முடிந்தவுடன் பேசிய கலைஞர்,

இந்த போரில் போர் நிறுத்தம் ஏற்பட்டால் ஒரு வேளை ஏற்படாவிட்டால் ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும் என்ன முடிவாக இருக்கும்? அது இங்கே சட்டமன்றத்திலே சில ஆண்டுகளுக்கு முன்பு அம்மையார் ஜெயலலிதா ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினாரே, அந்தத் தீர்மானத்தை போல பிரபாகரனை கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டிப்பதாக இருக்கும்.

இதைத்தான் ஜெயலலிதா, முதல் அமைச்சராக இருந்தபோது தீர்மானமாக முன் மொழிந்து அதை நிறைவேற்றினார்கள். இந்த போரின் முடிவு நமக்கு தோல்வியாக இருந்தால்  தமிழர்களுக்கு தோல்வியாக இருந்தால்  பிரபாகரன் தலைமையிலே உள்ள அந்த புலிகளுக்கு தோல்வியாக இருந்தால்  ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானப்படி இங்கே பிரபாகரனை அழைத்து வந்து தண்டனை கொடுக்க வேண்டும். நான் இப்போதும் கேட்கின்றேன். ராஜபக்சேவுக்கு சொல்கிறேன். சரித்திரத்தை புரட்டிப் பாருங்கள்.

இந்திய சரித்திரத்தில் அலெக்சாண்டர் படையெடுத்து வந்தபோது, அக்ரோணி கணக்கிலே சைனியங்களையெல்லாம் அழித்து  பல நாடுகளை கவர்ந்து  பல பூமிகளை தன்னுடைய காலடியிலே போட்டு மிதித்து வந்தபோது போரஸ் மன்னன் எதிர்ப்பை துச்சமாக கருதி  போரஸ்’ என்று அழைக்கப்பட்ட புருஷோத்தமனை வென்றபோது  பெருந்தன்மையோடு கேட்டான்  உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று  அந்த நிலையிலும் போரஸ் மன்னன்,   என்னை ஒரு மன்னனைப் போல் நடத்த வேண்டும்” என்று சொன்னான். அவனுடைய பெருந்தன்மைக்கு  அலெக்சாண்டரின் பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டாக அலெக்சாண்டர், போரஸ் மன்னனின் வீரத்தை பாராட்டி, தனக்கு நிகராக  தனக்கு சமமாக ஒரு மன்னனாக உட்கார வைத்தான்.

போரின் முடிவு எப்படியிருந்தாலும்  ராஜபக்சே எண்ணுவதைப்போல இருந்தாலும்  நான் தமிழ் மக்கள் சார்பாக சொல்லுகிறேன்  போரின் முடிவில் பிரபாகரனின் படைக்கு அழிவு ஏற்பட்டாலும்  பிரபாகரன் தோல்வியுறுத்தாலும்  போரஸ் மன்னனை அலெக்சாண்டர் நடத்தியதைப்போல் நடத்த முன்வருக என்று ராஜபக்சேவுக்கு நான் எங்கள் தமிழர்களின் நலன் கருதி சொல்லி கொள்கிறேன்.

இது தனிப்பட்ட ஒரு பிரபாகரனுக்காக சொல்லப்படுவதல்ல  கடந்த காலத்திலே ஏற்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் மத்திய அரசு அண்மையிலே வெளியிட்ட கருத்துக்கள்  பிரணாப் முகர்ஜி வெளியிட்ட கருத்தானாலும், குடியரசு தலைவர் வெளியிட்ட கருத்தானாலும், அதைத் தொடர்ந்து சோனியா காந்தி வெளியிட்ட கருத்தானாலும், இந்திய பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்ட கருத்தானாலும்  இந்த கருத்துக்கள் எல்லாம் தமிழர்களை  தமிழ் மக்களை சம அதிகாரம் கொடுத்து அவர்களுக்கு ஆட்சியிலே சம சுதந்திரம் கொடுத்து அவர்களை நடத்த வேண்டும் என்ற கருத்துத்தான் அந்த கருத்தின் அடிப்படையில் என்ன முடிவானாலும் அந்த முடிவை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு ராஜபக்சே நடந்து கொள்வாரேயானால், சரித்திரம் அவரை மன்னிக்காது.

சரித்திர பள்ளத்தாக்கிலே எங்கோ ஒரு மூலையில்தான் அவர் தள்ளப்படுவார். அதை ஞாபகத்திலே வைத்துக் கொண்டு தமிழன், தன்மானம் உள்ள தமிழனாக  தமிழன் தரணி போற்றும் தமிழனாக வாழ  தமிழன் சுயமரியாதை உள்ள தமிழனாக வாழ எங்களை அனுமதியுங்கள் என்று வீரசபத முழக்கமிட்டு பேரணியில் கலந்து கொண்ட லட்சோப லட்சம் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 

மண்ணெண்ணெய் நிரப்பிய இரு பவுசர்கள் மீட்டெடுப்பு

udaya_nanayakkara_brigediars.jpg
முல்லைத்தீவு, விசுவமடு பிரதேசத்தில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் நிரப்பப்பட்டிருந்த இரண்டு பவுசர்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்தின் 57வது படைப் பிரிவினர் இந்தப் பிரதேசத்தில் மேற்கொண்ட பாரிய தேடுதலின் போதே இந்த மண்ணெண்ணெய் பவுசர்களை படையினர் கண்டு பிடித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வன்னி பிரதேசத்தில் உள்ள பொது மக்களுக்காக அரசாங்கம் அனுப்பி வைத்த மண்ணெண்ணெய்களை புலிகள் பலாத்காரமாக எடுத்துச் சென்று மறைத்து வைத்திருந்தமை இதன் மூலம் உறுதிசெய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். குண்டுத் தாக்குதல்களில் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே புலிகள் இந்த பவுசர்களை மிகவும் பாதுகாப்பான முறையில் மறைத்து வைத்திருந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கொலையுடன் தொடர்பென நிரூபித்தால் கட்சியை கலைப்போம் – தே. சு. முன்னணி

ஜே. வி. பி. உறுப்பினரின் கொலையுடன் தேசிய சுதந்திர முன்னணிக்கு தொடர்பு இருப்பதாக ஜே. வி. பி. நிரூபிக்குமானால் தேசிய சுதந்திர முன்னணியை கலைத்து அரசியலிலிருந்து ஒதுங்க தாங்கள் தயாராக இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் உதேசாந்த குணசேகர தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று முன்தினம் (08) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது :-

ஜே. வி. பி. உறுப்பினரான நந்தனபாலகேயின் கொலைக்கும் எமக்கும் எதுவித தொடர்பும் கிடையாது. தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்களே இந்தக் கொலையை செய்ததாக குற்றஞ்சாட்டி அரசியல் இலாபம் பெற ஜே. வி. பி. முயல்கிறது. ஐ. ம. சு. முன்னணியின் வெற்றியை தடுக்கவும் எம்மை அரசியலில் இருந்து ஒதுக்கவுமே ஜே. வி. பி. சதி செய்கிறது.

தமக்கு கிடைக்க உள்ள பாரிய தோல்வியை தடுக்க ஜே. வி. பி. நரபலி கொடுக்க முயன்று வந்தது. அதன் பலனா கவே நந்தன பாலகே சுடப்பட்டுள்ளார். அவரின் மறைவு தொட ர்பாக எமது கவலையைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தக் கொலையுடன் பியசிரி விஜேநாயக்க எம்.பிக்கோ எமது கட்சி மேல் மாகாண வேட்பாளர்களுக்கோ தொடர்பு இருப்பதாக நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவோம். இந்த சம்பவம் தொடர்பாக பூரண விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபரை கோரியுள்ளோம் என்றார்.

வைகோ பேச்சில் உடன்பாடு இல்லை: தா.பா

1102-vaiko.jpgஇலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சில் உடன்பாடு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ஏதேனும் நேர்ந்தால், தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்று சென்னையில் நடந்த கூட்டத்தில் வைகோ பேசியிருக்கிறாரே என்று நெய்வேலி வந்த தா.பாண்டியனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அவர்,  நானும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன். வைகோ அப்படி பேசியிருக்கக் கூடாது. அவரது பேச்சில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. தமிழகத்தில் எப்போதும் அமைதி நிலவ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். 50 ஆண்டுகளாக இலங்கையில் நடந்து வரும் இனச்சிங்கலைத் தீர்க்கத்ததன் விளைவாக, அது இனப் படுகொலையாக அரசு பயங்கரவாதமாக மாறி இருக்கிறது. இனப் படுகொலைக்கு தீர்வு காணாமல் இந்திய அரசு ராணுவ ஆலோசனை மற்றும் போர் தளவாடங்களைக் கொடுத்து உதவுகிறது. இதனல் இந்தியாவின் பெருமையை பாழடித்து விட்டது மத்திய அரசு என்றார்.

தப்பிவரும் சிவிலியன்கள் மீது புலிகள் தொடர்ந்தும் துப்பாக்கி சூடு- லண்டன் ‘கார்டியன்’ பத்திரிகைக்கு ஐ.நா. ஜோன் ஹோம்ஸ் தெரிவிப்பு

sirjohnholmes.jpgபுலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து தப்பிவரும் சிவிலியன்கள் மீது புலிகள் தொடர்ந்தும் துப்பாக்கி சூடுகளை நடத்தி வருவதாக எமக்கு தொடர்ச்சியாக அறிக்கைகள் கிடைத்து வருகின்றன. இவ்வாறு ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் சேர் ஜோன் ஹோம்ஸ் கூறியுள்ளார்.

லண்டனில் வெளியாகும் கார்டியன் எனும் செய்திப் பத்திரிகைக்கு நேற்று முன்தினம் (08) வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

புலிகள் தப்பிவரும் சிவிலியன்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதுடன் அவர்கள் பயணிக்கும் படகுகளையும் தாக்கியழித்து வருகின்றனர். அங்கிருந்து தப்பிச் செல்ல நினைப்பவர்களை தம்முடன் இணைந்து போர் புரியுமாறு புலிகள் வற்புறுத்துகின்றனர். சிவிலியன்கள் தப்பி வருவதனை புலிகள் விரும்பவில்லையென்பது மாத்திரம் நிச்சயம். அப்படியிருந்தபோதும் பல சிவிலியன்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் அங்கிருந்து தப்பி வருகிறார்கள். இது மிகவும் சிக்கலான சூழ்நிலையெனவும் ஹோம்ஸ் கூறியுள்ளார்.

நான் இலங்கைக்கு செல்வதற்கு அந்த அரசாங்கம் அனுமதி தரவில்லை:கலைஞர்

karunanithi.jpgஇலங்கையில் போரை நிறுத்துமாறு கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மன்றோ சிலையில் இருந்து முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக பேரணி தொடங்கியது. இப்பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.  இப்பேரணி சேப்பாக்கத்தில் முடிந்தது.

பின்னார் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி, ’’ ஈழப்பிரச்சனை தொடர்பாக நான் இலங்கைக்கு செல்வதற்கு பலமுறை முயற்சி செய்தேன்.  அதற்கு அந்த அரசாங்கம் அனுமதி தரவில்லை. அதனாலென்ன..உணர்வால், உள்ளத்தால், ஈழத்தமிழர்களை காண்கிறேன்.  இலங்கை தமிழர்களுக்கு காவலர்களாக, தூதுவர்களாக இருப்பவர்களுக்கு நான் தோழராக இருக்கிறேன்” என்று பேசினார்.

இஸ்லாமிய சஞ்சிகையின் பிரதிகள் கல்முனைப் பகுதியில் எரிப்பு

அல்- ஹஸனாத் மாதாந்த இஸ்லாமிய சஞ்சிகையின் 600 பிரதிகள் கல்முனைப் பகுதியில் இனந் தெரியாத குழுவினரால் அபகரிக்கப்பட்டு நேற்றுமுன்தினம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது.

இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் வெளியீடான அல்ஹஸனாத் சஞ்சிகையின் ஏப்ரல் மாத வெளியீடு ‘பல்லின சமூகங்களுக்கு மத்தியில் பண்பாட்டெழுச்சி, எனும் கருப்பொருளில் சிறப்பிதழாக வெளியாகியது. இந்த இதழ்களே அபகரிக்கப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன.

குறித்த சிறப்புப் பிரதிகளை விற்பனை செய்வதற்கென்று அல்ஹஸனாத் தொண்டர்கள் கிழக்கு மாகாணத்திற்குச் சென்றனர். கல்முனை பிரதேசத்தில் சென்று அல்ஹஸனாத் சஞ்சிகையை வீட்டுக்கு வீடாக விற்பனை செய்து கொண்டிருந்த தொண்டர்களிடம் இனந்தெரியாத குழு ஒன்று வந்து அல்ஹஸனாத் சஞ்சிகையை விற்பனை செய்ய வேண்டாம் என்று கூறியதுடன், அதனை தங்களிடம் ஒப்படைக்குமாறும் கேட்டுள்ளனர்.

அதனைக் கொடுக்க மறுத்த தொண்டர்களை தாக்க முற்பட்ட அந்தக் குழு, விற்பனைக்காக வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த 600 பிரதிகளை பலவந்தமாக பறித்தெடுத்து தீயிட்டுக் கொளுத்தியுள்ளது.

ஈழத்தமிழர் குறித்த கொள்கையை இந்தியா மீளாய்வு செய்ய புலிகள் கோருகின்றனர்

p_nadesan.jpgஇந்தியாவில் ஆட்சியமைக்கப்போகும் புதிய ஆட்சியாளர்கள், ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பான தமது கொள்கையை மீளாய்வு செய்யவேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் எதிர்பார்ப்பு வெளியிட்டிருக்கின்றார்.

ஈழத் தமிழ் உறவுகளுக்காக தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் பேரெழுச்சிக்கு தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தலைவர்களே முக்கிய பங்காற்றியுள்ளனர் என்றும் நடேசன் வரவேற்புத் தெரிவித்திருக்கின்றார். இந்தியாவின் “ஹெட்லைன்ஸ் டுடே” பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் அவர்  இதனைத் தெரிவித்துள்ளார். தி.மு.கவினால் ஈழத் தமிழர்களுக்கு உரிய நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லையெனக் குற்றம் சாட்டியுள்ள அவர், இது குறித்து மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் நிலை தொடர்பாக சமீபத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சிக்கு அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் பங்களிப்புச் செய்துள்ளனர். அ.தி.மு.கவின் ஸ்தாபகரான முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஈழத் தமிழர்களின் நலன் மற்றும் சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் வேட்கைக்கு எப்போதும் உறுதியான ஆதரவை வழங்கினார்.

ஜெயலலிதா தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துள்ளதுடன் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நன்கு புரிந்து கொண்டுள்ளார்.சமீபத்தைய அறிக்கையொன்றில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வு குறித்து அவர் கோடிட்டுக் காட்டியிருந்தார். இது மிகவும் நம்பிக்கையளிக்கும் விடயம். இந்தியாவின் புதிய அரசு இலங்கை இனப்பிரச்சினை மற்றும் தமிழர்களின் அபிலாஷைகள் குறித்த தனது கொள்கையை புதிய யதார்த்தங்களின் அடிப்படையில் மீளாய்வு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

தி.மு.க. தமிழ் மக்களுக்கு  அவசியமான வழிவகைகளை  அளிப்பதற்குத் தவறியுள்ளது.  தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்துக்கு எதிராகவும்  அதேவேளை, பட்டினி மற்றும் நோய்க்கு எதிராகவும் போராடுகின்றனர். தி.மு.கவிற்கும் தமிழ்நாட்டின் ஏனைய அரசியல் தலைவர்களுக்கும் இது நன்கு தெரிந்திருக்கும் எனக் கருதுகிறேன்.இவ்வாறு நடேசன் தனது செவ்வியில் மேலும் தெரிவித்தார்

ரத்த ஆறு ஓடும் என சொன்னது ஏன்?: வைகோ விளக்கம்

1102-vaiko.jpgசென்னை யில் ம.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி பொதுச் செயலர் வைகோ, தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என நான் சொன்னது, மத்திய அரசை எச்சரிக்கை செய்யத்தான்.

இந்த வாசகத்தை முதல்வர் கருணாநிதி எத்தனையோ முறை கூறியிருக்கிறார். 1965ம் ஆண்டு ஏற்பட்ட நிலையை மறுபடியும் தமிழகத்தில் ஏற்படுத்தி விடாதீர்கள் என்பதற்காகத் தான் இந்திய அரசை எச்சரித்தேன்.

இப்படியே போனால், இந்திய அரசு மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய் விடும். சோவியத் யூனியன் சிதறுண்டு போகுமென, நான் 1990ம் ஆண்டு திருச்சியில் நடந்த தி.மு.க., கூட்டத்திலே சொன்னேன். சொன்னது போலவே, சோவியத் யூனியனின் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி நாடாக சிதறுண்டு போனது.

ம.தி.மு.க., வன்முறை மேல் நம்பிக்கை இல்லாத இயக்கம். எங்கள் கட்சியில் லட்சக்கணக்கான இளைஞர்கள் இருந்தும், இதுவரை ஒரு சிறிய வன்முறையில் கூட ஈடுபட்டதில்லை. நான் பல முறை கைது செய்யப்பட்ட போதும், அவர்கள் ஒரு கல்லெறி சம்பவத்தில் கூட ஈடுபட்டதில்லை. இனியும் அவர்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள். என்னை கைது செய்யப்போவதாகக் கூறப்படும் வதந்திக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. போலீசார் விசாரணை மேற்கொண்டால், அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

இலங்கைத் தமிழர் பிரச்னை தீர தனி ஈழம் தான் ஒரே தீர்வு என, நாங்கள் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். அதையே தான் இப்போதும் வலியுறுத்துகிறோம். விடுதலைப் புலிகளை தடை செய்த நாடுகள் கூட, “இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ஏழு கோடி தமிழர்கள் வசிக்கும் தமிழகத்தின் சட்டசபையில் இயற்றப்பட்ட இலங்கை போர் நிறுத்த தீர்மானத்தை, மத்திய அரசு குப்பைக் கூடையில் வீசி விட்டது என்றார்.