08

08

அரசின் நிவாரண உதவிகளிலேயே பிரபாகரன் தங்கி வாழ்கிறார்.- அமைச்சர் டளஸ் அழகப்பெரும

dalas_alahapperuma.jpgஅப்பாவித் தமிழ் மக்களுக்காக அரசாங்கம் வழங்கி வரும் நிவாரண உதவிகளிலேயே புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்கி வாழ்கிறார். தேவையேற்படின் எல்.ரீ.ரீ.ஈ. களை 4 நாட்களுக்குள் முற்றாக ஒழிப்பதற்கான ஆற்றல் அரசுக்கும் படையினருக்கும் உண்டு என போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பு, மகாவலி நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை பாதுகாப்புப் படையினர் உலக யுத்த வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தை பதித்துள்ளனர். எமது உண்மையான எதிரிகளான புலிகள் ஒழிந்துள்ள இடத்தை படையினர் கண்டுபிடித்துள்ளபோதும் பொதுமக்களைப் பாதுகாப்பாக மீட்பதற்காக புலிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதில்லை.

புலிகளுக்கு அரசாங்கத்தினால் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களை முடக்கி விட்டால் அவர்கள் இயற்கை மரணத்தை எய்துவார்கள். எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதியின்படி உணவை ஒருபோதும் ஆயுதமாகப் பயன்படுத்தாது.

பயங்கரவாதத்துக்கெதிராக அரசாங்கமும் பாதுகாப்புப் படையினரும் ஈட்டிய கௌரவமான வெற்றியை சர்வதேச சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.

அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு நேற்றுவரை 64147 பேர் வந்துள்ளனர் – அமைச்சர் மஹிந்த

pr-con-02042009.jpgஅரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு நேற்றுவரை 64147 பேர் தப்பி வந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இத்தகவலைத் தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

அரசாங்கம் வழங்கியுள்ள வாகனங்கள் மற்றம் ஏனைய வசதிகளைப் பயன்படுத்தி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் 7556 பொது மக்களை அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் கொண்டுவந்துள்ளது. இவர்களுள் 3488 பேர் நோயாளர்களாவர். ஏனைய 4068 பேரும் நோயாளர்களின் உறவினர்களாவர்.

இடம்பெயந்தேர் தங்கியுள்ள 15  இடைத்தங்கல் முகாம்களுக்கு தொலைபேசி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புது வருடத்துக்கு முன்னர் சகல இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர்களைச் சந்திக்கும் விசேட அறைகள் அமைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.

பிரபாகரன் உடனடியாக சரணடைய வேண்டும். புலிகளுக்கு கடைசி அறிவிப்பு.

thalai.jpgபிரபாகரன் உடனடியாக சரணடைய வேண்டும். பொதுமக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். இதுதான்  கடைசி அறிவிப்பு. என யுத்த தவிர்ப்பு பிரதேசத்தில் படையினர் ஒலிபெருக்கிகளில் மூலம் இன்று அறிவிப்பு விடுத்துள்ளதாக சில சிங்கள இணைய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பயங்கரவாதத்தை முற்றாக துடைத்தெறிவதே கொல்லப்பட்டோருக்கு நாம் செலுத்தும் கெளரவம் – ஜனாதிபதி

mahinda.jpgநாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து ஐக்கிய இலங்கையில் பல்லின மக்களையும் ஒற்றுமையாய் வாழும் சூழலை ஏற்படுத்துவதே பயங்கரவாதத்தால் பலிகொள்ளப்பட்ட தலைவர்களுக்குச் செய்யும் உயர்ந்த கெளரவமாகும். அதற்கெதிரான எத்தகைய அச்சுறுத்தலுக்கும் முகம்கொடுக்கத் தயாரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அமரர் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே பயங்கரவாதத் தாக்குதலுக்குள்ளாகி கொலையுண்ட ஒரு வருட காலத்திற்குள் அதற்குக் காரணமான பயங்கரவாதத்தை முழுமையாகத் தோற்கடிக்க முடிந்துள்ளதெனவும் தெரிவித்த ஜனாதிபதி ஜெயராஜ் உயிருடன் இருந்திருந்தால் இன்றைய வெற்றிகளைக் கண்டு பெருமிதமடைந்திருப்பார் எனவும் தெரிவித்தார்.

அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் சிரார்த்த தினத்தையொட்டி அன்னாரின் பாராளுமன்ற உரைகள் அடங்கிய தொகுப்பு நாலும் ஞாபகார்த்த முத்திரைவெளியீடும் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. சபாநாயகர் உட்பட பெருமளவிலான அமைச்சர்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயை அரசியல் ரீதியாகவன்றி எனது சகோதரனாகவே பார்க்கின்றேன். அரசியல் ரீதியான போராட்டங்களிலும் என்னோடு நெருங்கி செயற்பட்டவர் என அவரைக் குறிப்பிட முடியும். அவர் இல்லாத இத்தகைய நிகழ்வொன்றில் நான் உரையாற்றுவேன் என நான் எதிர்பார்த்ததேயில்லை. இது எமது துரதிர்ஷ்டம்.

அவர் இல்லாத போதுதான் அவர் பற்றிய இழப்பு எமக்கு புலப்படுகிறது. நாடு மீளக்கட்டியெழுப்பப்படும் நிலை யில் அவரின் வெற்றிடம் உணரப்படுகிறது. சட்டக் கல்லூரியில் அவருடனான நெருக்கம் ஏற்பட்டது. விடுமுறையில் எமது ஊருக்கு வருவார். நாம் யாழ்தேவி ரயிலில் யாழ்ப்பாணம் சென்றது ஞாபகத்துக்கு வருகிறது.

மும்மொழிகளிலும் தேர்ச்சியுள்ள அவர் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதிலும் விவாதிப்பதிலும் வல்லவராகத் திகழ்ந்தார். சவாலுக்கு முகங்கொடுக்கக் கூடிய துணிவு, ஆளுமையுள்ள குரல் ஆகியவற்றின் மொத்த உருவமாக அவர் திகழ்ந்தார். பாராளுமன்றத்தில் அனைவரோடும் நெருக்கமும் மிகுந்த அன்பும் கொண்டி ருந்த அவர் 2007 வரவு செலவுத் திட்டத் தின் போது பாராளுமன்றத்தில் மேற் கொண்ட நடவடிக்கை அபாரம். சிலர் கட்சிதாவ முயற்சித்த வேளை சிறந்த தலை வராகவிருந்து செயற்பட்டதை என்னால் நினைவு கூரமுடியும்.

அரசியலில் தீர்மானமெடுக்கும் துணிவு மிக முக்கியமானது. அந்த வகையில் அவ ரது பங்களிப்பு முக்கியமானது. அரசியலில் மட்டுமன்றி நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய சமூக சேவை அளப்பரியது. அவ ரது மரணத்தில் கண்ணீர் செறிந்த ஆயிர மாயிரம் மக்கள் அதற்குச் சான்று. அவர் விட்டுச் சென்ற பணியை அவரது தொகுதி மக்களுக்கு அவரது மனைவி சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தொடருவார் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்

david-milib.jpgஇலங்கையின் நிலைவரம் நாளுக்கு நாள் மோசமடைந்து செல்வதாகவும், உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் நேற்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சிவிலியன்கள் மீதான தாக்குதல் குறித்து அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் சுயகட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டியது இன்றியமையாததென அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் இறுதி நிலப்பரப்பு முற்றுகையிடப்பட்டதாக அரசாங்கத் தரப்பு வெளியிட்டுள்ள செய்திகளைத் தொடர்ந்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிவிலியன்களை மனித கேடயமாக புலிகள் பயன்படுத்துவதாக வெளியான தகவல்கள் குறித்து பிரித்தானியா உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மோதல் தவிர்ப்பு வலயத்திற்குள் படையினர் பிரவேசித்துள்ளதாகவும், சிவிலியன் பாதுகாப்பு குறித்து பிரித்தானிய அரசாங்கம் பெரும் கவலை கொண்டுள்ளதாகவும் அமைச்சர் மிலிபாண்ட் குறிப்பிட்டுள்ளார்.

முன்னொருபோதும் இல்லாதவாறு யுத்த நிறுத்தத்தின் அவசியம் அதிகரித்துள்ளதாகவும், சிவிலியன்கள் அபாயகரமான வலயத்திலிருந்து சுதந்திரமாக வெளியேற தேவையான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

ஒரேநேரத்தில் கூடுதல் பொது மக்கள் வெளியேறி வரலாமென எதிர்பார்ப்பு

badurdeen.jpgபுதுக் குடியிருப்பு- புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரே நேரத்தில் கூடுதலான பொது மக்கள் வெளியேறி அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரலாமென எதிர்பார்க்கப்படுவதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். இவ்வாறு ஒரே நேரத்தில் வரும் கூடுதலான மக்களைத் தங்க வைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கென வவுனியாவில் பாடசாலைகள் உள்ளிட்ட பொதுக் கட்டடங்களைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அரச அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்ததாக அமைச்சர் கூறினார்.

பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறுவதற்கு மக்கள் தயாராகி வருவதாக அரசாங்கத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது. நேற்று முன்தினமும் சுமார் இரண்டாயிரம் பேர் வெளியேறி வந்துள்ளார்கள், என்று தெரிவித்த அமைச்சர் பதியுதீன், ஒரே தடவையில் பெருந்திரளானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.

இவர்களைத் தங்க வைப்பதற்கு நிவாரணக் கிராமங்கள் ஏற்படுத்தப்பட்டு வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகக் கூறிய அமைச்சர் ரிஷாட், சிலவேளை, மக்கள் வருவதற்கு முன்னர் இந்தத் தற்காலிகக் குடியிருப்புகளான வீடுகளை நிர்மாணித்து முடிக்கலாமென்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி முகாம்களிலும் தங்கியுள்ள மக்களின் நலன்கள் குறித்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வவுனியாவில் அரச அதிகாரிகளுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தினார். இதன்போதே, வெளியேறி வரவிருக்கும் மக்களைத் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளை அறிவுறுத்தியிருக்கின்றார்.

புதுக்குடியிருப்புப் பிரதேசத்தைப் படையினர் முழுமை யாகக் கைப்பற்றியுள்ள நிலையில், அடுத்த கட்டமாக பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அங்கிருந்து பொதுமக்கள் முற்றாக வெளியேறியதன் பின்னரே, புலிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடருமெனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த நிலைமையின் தற்போது புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்திலிருந்து மக்கள் வெளியே ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை, அங்குள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ். பி. திவாரட்ன மேற்கொண்டு வருகிறார் என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

சவப்பெட்டிக்கு இறுதி ஆணி அடிக்கும் இவ்வேளையில் புலிகள் பாரிய தாக்குதலை நடத்த முயற்சிக்கலாம் – பிரதமர்

pm-srilanka.jpgசர்வதேச யுத்த ஒழுங்கு விதிகளை மீறி அப்பாவி பொது மக்கள் தங்கி இருக்கும் பாதுகாப்பு வலயத்தினுள் மறைந்திருந்தபடி புலிகள் படையினர் மீது தாக்குதல்களை நடாத்துவதாகப் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது குற்றஞ்சாட்டினார்.புலிப் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து சவப்பெட்டிக்குள் அடக்கம் செய்யும் இறுதித் தருணம் நெருங்கிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சவப்பெட்டிக்கு இறுதி ஆணி அடிக்கும் இவ்வேளையில் புலிகள் பாரிய தாக்குதலை நடத்த முயற்சிக்கலாம். அதனால் முன்னெச்சரிக்கையோடு பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். புலிப் பயங்கரவாதம் காரணமாக மூன்று தசாப்தங்கள் பின்னடைந்த இந்நாட்டை இரண்டு மூன்று மடங்காக துரித மாக அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

புது வருடத்தை முன்னிட்டு விஷேட பஸ், ரயில் சேவை -இன்று முதல் அமுல்

udayathevi.gifதமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள் நடத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. மேலதிகமாக சுமார் 400 இ.போ.ச பஸ்களும் 20 ரயில்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதோடு கூடுதலான தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இதன்படி இன்று முதல் பதுளை, ஹட்டன், மஹவ, ரம்புக்கனை, காலி ஆகிய பகுதிகளுக்கு மேலதிக ரயில் சேவைகள் நடத்தப்படவுள்ளன. இது தவிர அநுராதபுரம், மட்டக்களப்பு, கண்டி, மாத்தறை, திருகோணமலை ரயில் சேவைகளுக்கு மேலதிக ரயில் பெட்டிகளை இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியது.

பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்கு மட்டுமன்றி மீண்டும் கடமைக்கு திரும்புவதற்காகவும் மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. விசேட ரயில் சேவை எதிர்வரும் 19ம் திகதி வரை இடம்பெறும்.

இதேவேளை, பண்டிகையை முன்னிட்டு 400 மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இ.போ.ச கூறியது. பதுளை, கண்டி, ஹட்டன், பொலன்னறுவை, ஹங்குரங்கெத்த, காலி, மாத்தறை, ஹம்பாந் தோட்டை உட்பட கொழும்பிலிருந்து நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் மேலதிக பஸ் சேவைகள் இன்று (8) முதல் ஈடுபடுத்தப்பட வுள்ளதாக இ.போ.ச பிரதி பொது முகாமையாளர் பி.ஏ. லிவினிஸ் கூறினார்.

இது தவிர சுதந்திர வர்த்தக வலயங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தமது சொந்த இடங் களுக்குச் செல்வதற்காகவும் விசேட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. சுதந்திர வர்த்தக வலயங்களில் இருந்து அநுராதபுரம், ஆனமடுவ போன்ற பகுதிகளுக்கு விசேட இ.போ.ச பஸ்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன.

ரயில் சேவையுடன் இணைந்ததாக கூட்டு பஸ் சேவையொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா கவும் அவர் கூறினார். இதன்படி பொல்கஹ வல, குருணாகல் போன்ற பிரதான ரயில் நிலையங்களுக்கு அருகில் இருந்து விசேட இ.போ.ச பஸ் சேவைகள் நடத்தப்படவுள்ளன.

இதேவேளை, பண்டிகையை முன்னிட்டு கூடுதலான தனியார் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபை கூறியது. கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக் குச் செல்லவும் திரும்பி கொழும்பு வரவும் மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. 20ம் திகதி வரை மேலதிக பஸ் சேவைகள் நடத்தப்படவுள்ளன.

மட்டு., வவுனியாவுக்கு விசேட ரயில்

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவிற்கும் மட்டக்களப்பிற்கும் புதிதாக இரு ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது-

இதன்படி கொழும்பிலிருந்து வவுனியாவிற்கு புதிதாக கடுகதி ரயில் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த யாழ்தேவி ரயில் தினமும் காலை 5.45 மணிக்கு கொழும்பிலிருந்து ஆரம்பமாகி காலை 9.10 மணிக்கு அநுராதபுரத்தையும் 9.40 மணிக்கு மதவாச்சியையும் 10.07 மணிக்கு வவுனியாவையும் சென்றடையும். மீண்டும் பிற்பகல் 3.30 மணிக்கு வவுனியாவிலிருந்து புறப்படும் யாழ்தேவி ரயில் இரவு 8.35 மணிக்கு கொழும்பை வந்தடையும். இந்த ரயில் பொல்கஹவல, குருணாகல், மஹவ, அநுராதபுரம், மதவாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நிறுத்தப்படும்.

இதேவேளை கொழும்பு-மட்டக்களப்புக் கிடையில் புதிதாக உதயதேவி ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 10.30 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படும் இந்த ரயில் 3.16 மணிக்கு கல்லோயாவையும் 6.30 மணிக்கு மட்டக்களப்பையும் வந்தடையும். இந்த ரயில் சேவையுடன் இணைந்ததாக கல்லோயா விலிருந்து தினமும் 3.20 மணிக்கு ரயில் சேவை யொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது 5.00 மணிக்கு திருகோணமலையை வந்தடையும். மீண்டும் இந்த ரயில் காலை 7.45 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து பயணமாகி பிற்பகல் 3.40 மணிக்கு கொழும்பை வந்தடையும். இந்த ரயில் பொல்கஹவல, குருணாகல், மஹவ, கலாவெவ, கெகிராவ, கல்ஓயா, ஹிங்குரா கொட, பொலன்னறுவை, மன்னம்பிட்டிய, பூனானை, வாழைச்சேனை, ஏறாவூர் ஆகிய ரயில் நிலையங்களில் மாத்திரம் நிறுத்தப்படும்.

ருபெல்லா தொடர்பாக தவறான கருத்துக்கள்: தடுப்பு மருந்து வழங்கலுக்கு ஊறு விளைவிக்க வேண்டாம் – நிமல்

nimal-sri-pala.jpgருபெல்லா தடுப்பு மருந்து தொடர்பாகத் தவறான கருத்துக்களைப் பரப்பி தேசிய தடுப்பு மருந்து வழங்கல் திட்டத்திற்கு ஊறு விளைவிக்க வேண்டாம் என்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) யின் மாத்தறை மாவட்ட எம்.பி. ஜினதாச கித்துலேகொடவின் கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மாத்தறையில் ருபெல்லா தடுப்பு மருந்து பெற்ற மாணவி உயிரிழந்தமைக்கு அம்மாணவியின் உடலில் காணப்பட்ட ஒவ்வாமையே காரணம். மாறாக குறித்த தடுப்பு மருந்து தரம் குறைந்ததோ, காலம் கடந்ததோ அல்ல.

இதனை உலக சுகாதார ஸ்தாபனத்தின் மருத்துவ நிபுணர்களும் உறுதிப்படுத்தியுள்ளார்கள். அவர்கள் இவ்விடயம் தொடர்பாக நடாத்திய விசாரணை மற்றும் பரிசோதனை தொடர்பான அறிக்கையை எமக்குக் கையளித்துள்ளனர். அதனை ஜனாதிபதியிடம் கையளித்திருக்கிறேன். அந்த அறிக்கையின் பிரதியை விரைவில் தருகின்றேன். ருபெல்லா தடுப்பு மருந்து இற்றைவரையும் இந்நாட்டில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இப்படியான சம்பவம் ஏற்பட்டது இதுவே முதல் தடவையாகும்.

இத்தடுப்பு மருந்து பெற்ற 25 மாணவிகள் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படக் காரணம் ஒருவர் உயிரிழந்ததால் ஏற்பட்ட உளரீதியான தாக்கமேயாகும். இதனையும் மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்றார்.

ஆயூர்வேத சிகிச்சை முறையை பிரபல்யப்படுத்த இலங்கைக்கு வெளிநாடுகள் அழைப்பு!

tissa_karaliyaddda.jpgஇலங்கையின் ஆயுர்வேத வைத்திய முறையை  அவுஸ்திரேலியா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் கியுபா போன்ற நாடுகளில் பிரபல்யப்படுத்த அந்த நாடுகள் அழைப்பு விடுத்துள்ளதாக தேசிய வைத்திய அமைச்சர் திஸ்ஸ கரளியத்த தெரிவித்தார். இந்த அழைப்புக்கள் தோடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே பூர்த்தியடைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலியாவில் நான்கு இடங்களில் ஆயர்வேத சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவற்றின் மூன்றின் ஆரம்பக்கட்ட ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளதாகவும் என அமைச்சின் ஆலோசகர் ஜயசிறி மெண்டிஸ் தெரிவித்தார். அவற்றுக்குத் தேவையான மூலிகைகள் மற்றும் உபகரணங்கள் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இதேவேளை அபுதாபி நகரிலும் எதிர்வரும் 24 ஆம் 25 ஆம் திகதிகளில் ஆயுர்வேத சிகிச்சை முகாம் ஒன்றை நடத்தவும் சிகிச்சை மத்திய நிலையம் ஒன்றை  திறந்து வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.