ருபெல்லா தடுப்பு மருந்து தொடர்பாகத் தவறான கருத்துக்களைப் பரப்பி தேசிய தடுப்பு மருந்து வழங்கல் திட்டத்திற்கு ஊறு விளைவிக்க வேண்டாம் என்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) யின் மாத்தறை மாவட்ட எம்.பி. ஜினதாச கித்துலேகொடவின் கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மாத்தறையில் ருபெல்லா தடுப்பு மருந்து பெற்ற மாணவி உயிரிழந்தமைக்கு அம்மாணவியின் உடலில் காணப்பட்ட ஒவ்வாமையே காரணம். மாறாக குறித்த தடுப்பு மருந்து தரம் குறைந்ததோ, காலம் கடந்ததோ அல்ல.
இதனை உலக சுகாதார ஸ்தாபனத்தின் மருத்துவ நிபுணர்களும் உறுதிப்படுத்தியுள்ளார்கள். அவர்கள் இவ்விடயம் தொடர்பாக நடாத்திய விசாரணை மற்றும் பரிசோதனை தொடர்பான அறிக்கையை எமக்குக் கையளித்துள்ளனர். அதனை ஜனாதிபதியிடம் கையளித்திருக்கிறேன். அந்த அறிக்கையின் பிரதியை விரைவில் தருகின்றேன். ருபெல்லா தடுப்பு மருந்து இற்றைவரையும் இந்நாட்டில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இப்படியான சம்பவம் ஏற்பட்டது இதுவே முதல் தடவையாகும்.
இத்தடுப்பு மருந்து பெற்ற 25 மாணவிகள் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படக் காரணம் ஒருவர் உயிரிழந்ததால் ஏற்பட்ட உளரீதியான தாக்கமேயாகும். இதனையும் மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்றார்.