தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள் நடத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. மேலதிகமாக சுமார் 400 இ.போ.ச பஸ்களும் 20 ரயில்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதோடு கூடுதலான தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
இதன்படி இன்று முதல் பதுளை, ஹட்டன், மஹவ, ரம்புக்கனை, காலி ஆகிய பகுதிகளுக்கு மேலதிக ரயில் சேவைகள் நடத்தப்படவுள்ளன. இது தவிர அநுராதபுரம், மட்டக்களப்பு, கண்டி, மாத்தறை, திருகோணமலை ரயில் சேவைகளுக்கு மேலதிக ரயில் பெட்டிகளை இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியது.
பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்கு மட்டுமன்றி மீண்டும் கடமைக்கு திரும்புவதற்காகவும் மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. விசேட ரயில் சேவை எதிர்வரும் 19ம் திகதி வரை இடம்பெறும்.
இதேவேளை, பண்டிகையை முன்னிட்டு 400 மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இ.போ.ச கூறியது. பதுளை, கண்டி, ஹட்டன், பொலன்னறுவை, ஹங்குரங்கெத்த, காலி, மாத்தறை, ஹம்பாந் தோட்டை உட்பட கொழும்பிலிருந்து நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் மேலதிக பஸ் சேவைகள் இன்று (8) முதல் ஈடுபடுத்தப்பட வுள்ளதாக இ.போ.ச பிரதி பொது முகாமையாளர் பி.ஏ. லிவினிஸ் கூறினார்.
இது தவிர சுதந்திர வர்த்தக வலயங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தமது சொந்த இடங் களுக்குச் செல்வதற்காகவும் விசேட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. சுதந்திர வர்த்தக வலயங்களில் இருந்து அநுராதபுரம், ஆனமடுவ போன்ற பகுதிகளுக்கு விசேட இ.போ.ச பஸ்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன.
ரயில் சேவையுடன் இணைந்ததாக கூட்டு பஸ் சேவையொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா கவும் அவர் கூறினார். இதன்படி பொல்கஹ வல, குருணாகல் போன்ற பிரதான ரயில் நிலையங்களுக்கு அருகில் இருந்து விசேட இ.போ.ச பஸ் சேவைகள் நடத்தப்படவுள்ளன.
இதேவேளை, பண்டிகையை முன்னிட்டு கூடுதலான தனியார் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபை கூறியது. கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக் குச் செல்லவும் திரும்பி கொழும்பு வரவும் மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. 20ம் திகதி வரை மேலதிக பஸ் சேவைகள் நடத்தப்படவுள்ளன.
மட்டு., வவுனியாவுக்கு விசேட ரயில்
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவிற்கும் மட்டக்களப்பிற்கும் புதிதாக இரு ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது-
இதன்படி கொழும்பிலிருந்து வவுனியாவிற்கு புதிதாக கடுகதி ரயில் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த யாழ்தேவி ரயில் தினமும் காலை 5.45 மணிக்கு கொழும்பிலிருந்து ஆரம்பமாகி காலை 9.10 மணிக்கு அநுராதபுரத்தையும் 9.40 மணிக்கு மதவாச்சியையும் 10.07 மணிக்கு வவுனியாவையும் சென்றடையும். மீண்டும் பிற்பகல் 3.30 மணிக்கு வவுனியாவிலிருந்து புறப்படும் யாழ்தேவி ரயில் இரவு 8.35 மணிக்கு கொழும்பை வந்தடையும். இந்த ரயில் பொல்கஹவல, குருணாகல், மஹவ, அநுராதபுரம், மதவாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நிறுத்தப்படும்.
இதேவேளை கொழும்பு-மட்டக்களப்புக் கிடையில் புதிதாக உதயதேவி ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 10.30 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படும் இந்த ரயில் 3.16 மணிக்கு கல்லோயாவையும் 6.30 மணிக்கு மட்டக்களப்பையும் வந்தடையும். இந்த ரயில் சேவையுடன் இணைந்ததாக கல்லோயா விலிருந்து தினமும் 3.20 மணிக்கு ரயில் சேவை யொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது 5.00 மணிக்கு திருகோணமலையை வந்தடையும். மீண்டும் இந்த ரயில் காலை 7.45 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து பயணமாகி பிற்பகல் 3.40 மணிக்கு கொழும்பை வந்தடையும். இந்த ரயில் பொல்கஹவல, குருணாகல், மஹவ, கலாவெவ, கெகிராவ, கல்ஓயா, ஹிங்குரா கொட, பொலன்னறுவை, மன்னம்பிட்டிய, பூனானை, வாழைச்சேனை, ஏறாவூர் ஆகிய ரயில் நிலையங்களில் மாத்திரம் நிறுத்தப்படும்.