சர்வதேச யுத்த ஒழுங்கு விதிகளை மீறி அப்பாவி பொது மக்கள் தங்கி இருக்கும் பாதுகாப்பு வலயத்தினுள் மறைந்திருந்தபடி புலிகள் படையினர் மீது தாக்குதல்களை நடாத்துவதாகப் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது குற்றஞ்சாட்டினார்.புலிப் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து சவப்பெட்டிக்குள் அடக்கம் செய்யும் இறுதித் தருணம் நெருங்கிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சவப்பெட்டிக்கு இறுதி ஆணி அடிக்கும் இவ்வேளையில் புலிகள் பாரிய தாக்குதலை நடத்த முயற்சிக்கலாம். அதனால் முன்னெச்சரிக்கையோடு பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். புலிப் பயங்கரவாதம் காரணமாக மூன்று தசாப்தங்கள் பின்னடைந்த இந்நாட்டை இரண்டு மூன்று மடங்காக துரித மாக அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.