இலங்கையின் நிலைவரம் நாளுக்கு நாள் மோசமடைந்து செல்வதாகவும், உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் நேற்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
சிவிலியன்கள் மீதான தாக்குதல் குறித்து அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் சுயகட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டியது இன்றியமையாததென அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் இறுதி நிலப்பரப்பு முற்றுகையிடப்பட்டதாக அரசாங்கத் தரப்பு வெளியிட்டுள்ள செய்திகளைத் தொடர்ந்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிவிலியன்களை மனித கேடயமாக புலிகள் பயன்படுத்துவதாக வெளியான தகவல்கள் குறித்து பிரித்தானியா உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மோதல் தவிர்ப்பு வலயத்திற்குள் படையினர் பிரவேசித்துள்ளதாகவும், சிவிலியன் பாதுகாப்பு குறித்து பிரித்தானிய அரசாங்கம் பெரும் கவலை கொண்டுள்ளதாகவும் அமைச்சர் மிலிபாண்ட் குறிப்பிட்டுள்ளார்.
முன்னொருபோதும் இல்லாதவாறு யுத்த நிறுத்தத்தின் அவசியம் அதிகரித்துள்ளதாகவும், சிவிலியன்கள் அபாயகரமான வலயத்திலிருந்து சுதந்திரமாக வெளியேற தேவையான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்