April

April

2127 பேர் படையினரிடம் தஞ்சம்

udaya_nanayakkara_brigediars.jpgபுலிகள் பிடியிலிருந்து தப்பிவந்த 2127 பொது மக்கள் பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார். படையினரின் பாதுகாப்பை நாடி தப்பி வரும் பொது மக்களின் எண்ணிக்கை தற்பொழுது மீண்டும் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கமைய 65,189 பொதுமக்கள் இதுவரை இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

503 குடும்பங்களைச் சேர்ந்த 2127 பொது மக்கள் வருகை தந்துள்ளனர். 429 ஆண்கள், 779 பெண்கள், 327 சிறுவர்கள் மற்றும் 592 சிறுமிகள் இவர்களில் அடங்குவதாகவும் பிரிகேடியர் மேலும் குறிப்பிட்டார்.

இத்தாலி பூகம்பத்தில் 150க்கும் அதிகமானோர் பலி

italyearthquake.jpgஇத்தாலியின் மத்திய பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் இதுவரை 150க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதாகவும் குறைந்தது 1500 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் ரோமுக்கு வடகிழக்கே உள்ள பழங்கால நகரான ல அக்விலா நகருக்கு அருகில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தின் காரணமாக அருகில் இருந்த பல மலைக் கிராமங்கள் சேதங்களுக்கு உள்ளாயின.

ல அக்விலா நகரில் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த பல கட்டிடங்கள் இந்த நிலநடுக்கத்தில் அழிந்து போயின. அதன் இடிபாடுகளில் சிக்கி உயிருடன் இருப்பவர்களை மீட்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நில நடுக்கத்தின் காரணமாக பல்லாயிரக்கணக்காணவர்கள் வீடுகளை இழந்துள்ளனர் என்றும், இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனவும் இத்தாலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அமரர் ஜெயராஜ் பாராளுமன்ற உரை நூல் இன்று ஜனாதிபதியிடம்…

jayaraj.jpgஅமரர் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாந்துபுள்ளேயின் பாராளுமன்ற உரைகள் அடங்கிய நூல் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடம் கையளிக்கப்படவுள்ளது. ஜெயராஜ் பெர்ணாந்துபுள்ளே யின் மனைவி டாக்டர் சுதர்சினி பெர்ணாந்துபுள்ளே இந்த நூலை அச்சிட்டுள்ள தோடு அன்னாரின் முதலாவது நினைவு தினத்தை முன்னிட்டு இந்த நூல் வெளியிட்டு வைக்கப்படுகிறது.

மறைந்த அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாந்துபுள்ளே 1989ம் ஆண்டில் இருந்து 2005ம் ஆண்டு வரை நிகழ்த்திய பாராமன்ற உரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. அன்னாரின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று விசேட நினைவு முத்திரையொன்றும் வெளியிடப்படவுள்ளது.

ராகுல் டிராவிட் உலக சாதனை

_rahuldravid.jpgகிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் அதிக அளவு காட்சுகளை பிடித்த விக்கெட் கீப்பர் அல்லாத வீரர் என்ற பெருமையை ராகுல் டிராவிட் பெற்றுள்ளார்.

திங்கட்கிழமை நியூசிலாந்து அணிக்கு எதிராக வெலிங்டன் நகரில் நடைபெற்ற போட்டியில், அந்நாட்டு ஆட்டக்காரர் டிம் மெக்கிண்டோஷ் அடித்த பந்தை காட்ச் பிடித்த போதே இந்தச் சாதனையை அவர் படைத்தார்.

இது டெஸ்ட் போட்டியில் அவர் பிடிக்கும் 182 வது காட்ச்சாகும். ஆஸ்த்ரேலியாவின் மார்க் வாஹ் அவர்களின் சாதனையை அவர் முறியடித்திருந்தார்.

பாதுகாப்பு வலயத்தில் ஐ.சி.ஆர்.சி. தனது பணிகளைத் தொடர்கிறது

முல்லைத் தீவில் புதுமாத்தளன் பகுதியில் அமைந்துள்ள மக்கள் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் செஞ்சிலுவைச் சர்வதேசகுழு தனது மனிதாபிமானப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.அந்த அமைப்பின் பேச்சாளர் செய்தி ஏஜென்ஸி ஒன்றுக்கு இத்தகவலை நேற்றுத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதியில் உள்ள மக்களுக்குமான மனிதாபிமானப் பணிகளை நாம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். இந்தப் பணிகளை முன்னெடுக்க நூற்றுக்கு மேற்பட்ட தொண்டர்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் புதுமாத்தளன் பகுதியில் இருந்து மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்கள். அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் எமது பணியாளர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளனர்  என்றார் அவர்.

வெடிபொருட்கள் அகற்றப்பட்டதும் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றம் – அமைச்சர் ரிசாட்

badurdeen.jpg“இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள வெடிபொருட்கள், கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகள் ஆரம்பமாகு’மென மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இதன்படி முதற்கட்டமாக மன்னார் மாவட்டத்திலும், இரண்டாம் கட்டமாக வவுனியா மாவட்டத்திலும், மூன்றாம் கட்டமாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டத்திலும் மீள்குடியேற்றப் பணிகள் நடைபெறுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள சுமார் ஒரு இலட்சம் மக்களை தற்காலிகமாக குடியமர்த்த செட்டிக்குளம் பிரதேசத்தில் நான்கு நிவாரண கிராமங்கள் உருவாக்கப்படுகின்றன. இரண்டு கிராமங்களின் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு சகல வசதிகளுடன் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு நிவாரண கிராமங்களின் வேலைகள் நடைபெற்று வருகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் மிகவிரைவில் மீள்குடியேற்றம் நடைபெறவுள்ளது. சிலாவத்தை, நானாட்டான் பகுதியிலேயே முதலில் மீள்குடியேற்ற வேலைத்திட்டங்கள் நடைபெறும் மடு மற்றும் பிரதேசங்களிலும் படிப்படியாக மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெறும். ஏ32 வீதி, ஏ9 வீதி திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பூநகரி பாலத்தைக் கட்டுவதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றது எனவும் அமைச்சர் மேலும் கூறினார்

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் முஸ்லிம்களை தமது நண்பர்களாக கருதி அணுக வேண்டும் – ஒபாமா

globe-news.jpgதுருக்கியின் நிலைப்பாடானது முஸ்லிம் நாடுகளுக்கு முக்கிய சமிக்ஞையொன்றை வெளிப்படுத்துவதாகவும் ஐரோப்பாவில் அந்நாடு உறுதியாக நிலைபெற்றிருப்பதற்கு களம் அமைத்துத் தருவதாகவும் உள்ளதென அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார். அமெரிக்காவுக்கும் துருக்கிக்குமிடையிலான உறவுகளை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு கட்டமாக அந்நாட்டுக்கு இரு நாள் விஜயத்தை மேற்கொண்டு சென்றுள்ள பராக் ஒபாமா, துருக்கியின் ஸ்தாபகர் அதாதுருக்கின் ஞாபகார்த்த ஸ்தலத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட நாடொன்றுக்கு ஜனாதிபதி பதவியேற்ற பின் ஒபாமா விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான துருக்கியின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக அவர் கூறினார்.  துருக்கிக்கு விஜயம் செய்வதற்கு முன்பு ஞாயிற்றுகிழமை பராகுவேயில் உரையாற்றிய ஒபாமா, அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் முஸ்லிம்களை நண்பர்களாகவும் அயலவர்களாகவும் அணுக வேண்டும் என வலியுறுத்தினார்.

“அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் முஸ்லிம்களை தமது நண்பர்களாகவும் அயலவர்களாகவும் அநீதி, சகிப்புத்தன்மையின்மை, வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தில் பங்காளர்களாகவும் கருதி அணுகுவதுடன் பரஸ்பர அக்கறை மற்றும் பரஸ்பர கௌரவம் என்பவற்றின் அடிப்படையில் முஸ்லிம் நாடுகளுடன் உறவுகளைக் கட்டியெழுப்ப ஊக்குவிக்கவும் வேண்டும் என ஒபாமா கூறினார். 

அமெரிக்க தூதுவர் பிளக் இராணுவ தளபதியுடன் சந்திப்பு

robert-sekaj01pg.jpgஇலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபட் ஓ. பிளெக் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகாவை திங்கட்கிழமை இராணுவ தலைமையகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது புதுக்குடியிருப்பு மீட்பு மற்றும் வன்னி நிலைமைகள் குறித்து இராணுவ தளபதி அமெரிக்க தூதுவருக்கு விளக்கிக்கூறியுள்ளார். அண்மைய இராணுவ வெற்றிகள் மற்றும் விடுதலை புலிகளின் வீழ்ச்சி தொடர்பில் இராணுவ தளபதி விளக்கமளித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புலிகளின் பல உயர்மட்ட தலைவர்கள் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளதாகவும் இதன் காரணமாக அவர்களால் இதற்கு பின்னர் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்றும் இராணுவ தளபதி அமெரிக்க தூதுவருக்கு விளக்கியுள்ளார்.

அத்துடன் அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வருகின்ற சிவிலியன்களை பராமரிக்கும் செயற்பாடுகள் தொடர்பில் இராணுவத்தினர் சிறந்த தயார் நிலையில் உள்ளதாகவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணி – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரு மாவட்டங்களில் இணைகிறது : ரவூப் ஹக்கீம்

election_ballot_cast.jpgஜனநாயக மக்கள் முன்னணி இம்முறை மேல்மாகாண சபை தேர்தலில் இரு மாவட்டங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். சிறுபான்மை மக்களின் வாக்குகளைச் சிதறடிக்காது களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் உள்ள மக்களின் பிரதிநிதிகளாக தம்மை நிலை நிறுத்தும் பொருட்டு ஒற்றுமையுடன் இத்தீர்மானத்தினை இரு கட்சிகளும் எடுத்ததாக ரவூப் ஹக்கீம் இன்று கொழும்பு ரேணுகா ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிரணியிலுள்ள பல சிறுபான்மைக் கட்சிகளையும் ஒன்றிணைத்து வடக்கு கிழக்கிலும், வடக்கு கிழக்கிற்கு வெளியேயும் சிறுபான்மை இனங்களின் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க நாம் பாடுபடுவோம். அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளால் சிறுபான்மை மக்களின் உரிமை இழக்க நேரிடும் சந்தர்ப்பத்திலிருந்து காப்பாற்றும் முயற்சியில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். இது ஒரு ஆரம்பகட்டமே.

அதேவேளை, பிரதான எதிர்க்கட்சியுடன் 200 சிவில் அமைப்புகள் இணைந்து எதிர்வரும் 7 ஆம் திகதி ‘சுதந்திரத்திற்கான மேடை’ என்ற இயக்கத்தை ஆரம்பிக்கவுள்ளன. இந்த இயக்கத்திலும் இரு கட்சிகளும் இணைந்து செயற்படவுள்ளோம். தேர்தல் சட்டங்களை மறைமுகமாக மாற்றும் முயற்சியில் தற்போது அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே நாடாளுமன்றத்தில் மற்றக்கட்சிகளில் இருந்து உறுப்பினர்களைத் தனது பக்கம் அழைத்து, பதவிகள் வழங்கி, பெரும்பான்மை பலத்தை இன்றைய அரசு தக்கவைத்துக் கொண்டிருக்கின்றது.

வட கொரியாவைக் கண்டிக்க ஐ. நா. எடுக்கும் முயற்சியில் ரஷ்யா, சீனா நழுவல் போக்கு – முடிவேதுமின்றி சபை கலைந்தது

globe-news.jpgவட கொரியா நீண்ட தூர ஏவுகணையைப் பரீட்சித்தமை ஐ.நா வின் தீர்மானத்தை மீறும் செயல் எனக் கண்டித்துள்ள அமெரிக்கா, ஜப்பான், தென்கொரிய ஆகிய நாடுகள் ஐ.நாவில் அங்கம் பெறும் 15 நாடுகளும் இதைக் கண்டிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அவசரமாகக் கூடிய ஐ.நா. வட கொரியாவின் ரொக்கட் ஏவுகணை விடயமாக சில தீர்மானங்களைக் கொண்டுவர ஆலோசனை நடாத்தியது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமெரிக்கா கோரியபோதும் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் இது சம்பந்தமாக மெதுவான போக்கை கடைப்பிடிக்கு மாறுகோரின. ஆறு நாடுகள் கொண்ட விசேட குழு வட கொரியாவுடன் பேச்சு வார்த்தை நடாத்துகையில் இவ்வாறான ஆத்திரமூட்டும் செயல்களில் பியாங் யொங் நடந்துகொண்டமை கண்டிக்கப்பட வேண்டியது என்றும் ஐ.நா. அவசர கூட்டத்தில் அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் தெரிவித்தன.

ஐ.நா.வுக் கான அமெரிக்கத் தூதுவர் சுசானரைஸ் அமெரிக்காவின் ஆழ்ந்த கண்டனத்தை வட கொரியாவுக்குத் தெரிவித்தார். ஜப்பானுடன் இணைந்து வட கொரியாவைக் கண்டிக்க வேண்டிய பொருத்தமான வழிகளை விரைவில் நடைமுறைப் படுத்தவுள்ளதாகவும் சுகானா ரைஸ் சொன்னார்.

ஏவப்பட்ட ரொக்கட் வெற்றிகரமாக விண்வெளியில் சங்கமித்து செய்மதியுடன் செயற்படுவதாக வடகொரியா கூறினாலும், ரொக்கட் விண்வெளியைச் சென்றடைய வில்லை இடையில் தவறி விட்டதாக அமெரிக்காவும் தென் கொரியாவும் கூறின.

பிரான்ஸ் இந்த விடயத்தில் 15 நாடுகளும் ஒன்று பட வேண்டுமெனக் கோரியதுடன் ரஷ்யா, சீனா என்பன விரைந்து செயற்படல் அவசியம். வடகொரியாவை காப்பாற்ற ஐ.நா. வில் அங்கம் வகிக்கும் நாடுகள் செயற்படக்கூடாது எனத் தெரிவித்தது. வட கொரியாவின் செயல் ஐ.நா. வின் தீர்மானங்களை மீறும் செயல் எனத் தாங்கள் நம்பவில்லையென சீனா, ரஷ்யா என்பன கூறின. வட கொரியாவுக்கெதிராக பொருளாதாரத் தடைகள் கொண்டுவரப்படும்போது சீனா, ரஷ்யா என்பன எதிர்த்து வாக்களிக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. முடிவுகள் எதுவுமின்றி சபை கலைந்தது.