“இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள வெடிபொருட்கள், கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகள் ஆரம்பமாகு’மென மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இதன்படி முதற்கட்டமாக மன்னார் மாவட்டத்திலும், இரண்டாம் கட்டமாக வவுனியா மாவட்டத்திலும், மூன்றாம் கட்டமாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டத்திலும் மீள்குடியேற்றப் பணிகள் நடைபெறுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள சுமார் ஒரு இலட்சம் மக்களை தற்காலிகமாக குடியமர்த்த செட்டிக்குளம் பிரதேசத்தில் நான்கு நிவாரண கிராமங்கள் உருவாக்கப்படுகின்றன. இரண்டு கிராமங்களின் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு சகல வசதிகளுடன் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு நிவாரண கிராமங்களின் வேலைகள் நடைபெற்று வருகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் மிகவிரைவில் மீள்குடியேற்றம் நடைபெறவுள்ளது. சிலாவத்தை, நானாட்டான் பகுதியிலேயே முதலில் மீள்குடியேற்ற வேலைத்திட்டங்கள் நடைபெறும் மடு மற்றும் பிரதேசங்களிலும் படிப்படியாக மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெறும். ஏ32 வீதி, ஏ9 வீதி திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பூநகரி பாலத்தைக் கட்டுவதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றது எனவும் அமைச்சர் மேலும் கூறினார்