19

19

நிவாரணக் கிராமங்களின் சுகாதாரம்; 64 மருத்துவர், 107 தாதியர்கள் பணியில்

health-care.jpg வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை உடனுக்குடன் பெற்றுக் கொடுக்கவென 64 மருத்துவ அதிகாரிகளையும், 107 தாதியரையும் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சு கடமையில் ஈடுபடுத்தியுள்ளது.

இதேநேரம் வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு நிவாரணக் கிராமத்திற்கும் ஒரு அம்புலன்ஸ் வண்டி வீதம் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதாக அமைச்சின் பொது சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் பாலித மஹீபால நேற்றுத் தெரிவித்தார். உலக காசநோய் தினத்தையொட்டி இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்படித் தகவல்களைத் தெரிவித்தார்.

சுகாதாரக் கல்வி பணியகத்தின் பணிப்பாளர் டாக்டர் சரத் அமுனுகம தலைமையில் பணியகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இச் செய்தியாளர் மாநாட்டில் டாக்டர் மஹீபால மேலும் கூறுகையில்: புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து தப்பி வந்த மக்கள் வவுனியாவில் அமை க்கப்பட்டிருக்கும் நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இக்கிராமங்களில் சுமார் 34 ஆயிரம் பேர் தங்கியுள்ளார்கள்.

இக்கிராமங்களில் தங்கியுள்ள மக்களுக்குச் சிறந்த மருத்துவ சேவையை உடனுக்குடன் பெற்றுக்கொடுக்க வென 64 மருத்துவ அதிகாரிகளையும் 107 தாதியரையும் 19 மருத்துவ மாதுகளையும் 5 மயக்கமருந்து கொடுக்கும் டாக்டர்களையும் 12 பொது சுகாதாரப் பரிசோதகர்களையும் கடமையில் ஈடுபடுத்தியுள்ளோம்.

இவர்கள் வவுனியா பொது வைத்தியசாலை, செட்டிக்குளம் தள வைத்தியசாலை மற்றும் பூவரசங்குளம் ஆஸ்பத்திரி ஆகியவற்றில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள் ளனர். என்றாலும் இந்த டாக்டர்களில் ஒரு தொகுதியினர் தினமும் இந்த நிவாரணக் கிராமங்களுக்குச் சென்று மருத்துவ கிளினிக்குகளையும் நடாத்தும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை இம் மக்களுக்குச் சிறந்த மருத்துவ சேவையைப் பெற்றுக்கொடுப்பதற்கென செட்டிக்குளம் ஆஸ்பத்திரியின் மருத்துவ ஆய்வு கூட வசதிகள் மேம் படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு அங்கு நவீன வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆய்வு கூட வசதியும் ஏற்படுத்த ப்பட்டுள்ளன.

இம்மக்களுக்கு அடுத்த மாதம் முதல் காசநோய் தடுப்புக்கான சிறந்த மருத்துவ சேவையைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் நிமித்தம் அமைச்சு அதிகாரிகளும், உலக சுகாதார ஸ்தாபன பிரதிநிதிகளும், காசநோய்த் தடுப்புக்கான தேசியத் திட்ட அதிகாரிகளும் விரைவில் வவுனியாவுக்கு விஜயம் செய்யவுள்ளனர் என்றார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் மருத்துவ நிபுணர்களான டாக்டர் ஏ. கே. எஸ். பி. டி. அல்விஸ். டாக்டர் அமித பெரேரா, கபில சூரியாராச்சி ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

யாழ். தேவி ஆரம்ப பணிகள் 23ஆம் திகதி ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைப்பு

mahinda-rajapaksha.jpgயாழ்ப்பாணத் துக்கான ரயில் சேவை ஆரம்பிப் பது தொடர்பான பூர்வாங்கப் பணிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் எதிர்வரும் 23 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளன. வடக்கிற்கான ரயில் சேவை ஆரம்பிப்பதற்கான தேசிய செயலகமொன்றை அன்றைய தினம் ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பார்.

யாழ். தேவி சேவையை ஆரம்பிப்பதற்கென தேசிய மட் டத்தில் சகல மக்களினதும் பங்களிப்பு பெறப்பட உள்ளதோடு இதனூடாக யாழ்ப்பாணம் வரையான 37 ரயில் நிலையங்கள் மீளமைக்கப்படவுள்ளன.

இந்தப் பூர்வாங்க பணிகள் இன்று (19) இடம் பெற இருந்தபோதும் தவிர்க்க முடியாத காரணங்களினால் 23 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சு கூறியது.
 
 

புலிகளின் பொலிஸ் நிலையம், வாகனங்கள் பொதுமக்களால் தீ வைத்து எரிப்பு – இராணுவப் பேச்சாளர்

udaya_nanayakkara_brigediars.jpgமுல்லைத் தீவு, புதுமாத்தளன் பகுதியிலுள்ள பொதுமக்களையும், அவர்களது பிள்ளைகளையும் புலிகள் பலாத்காரமாக தூக்கிச் சென்று படையில் இணைத்துக் கொள்ள முயற்சித்ததை அடுத்து பொதுமக்களுக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கடுமையான வாக்குவாதம் பெரும் மோதலில் முடிந்துள்ளது.

இந்தச் சம்பவத்தையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்தப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் பொலிஸ் நிலையத்தையும், வாகனங்களையும் தீவைத்து நாசப்படுத் தினரென்று புலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்த பொது மக்கள் தெரிவித்ததாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

பொதுமக்கள் தமது கட்டுப்பாட்டை மீறியதையடுத்து ஆயுதங்களுடன் அங்கு விரைந்த புலிகள் பொதுமக்களை இலக்கு வைத்து சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் கொல்லப்பட்டும், பாடுகாயமடைந்தும் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் நேற்றுக் காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பிரிகேடி யர் மேலும் தகவல் தருகையில், புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொதுமக்களின் நலனை கருத்திற் கொண்டு அரசாங்கம் பாதுகாப்பு வலயத்தை அறி வித்தது. தற்பொழுது பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் புலிகள் ஆக்கிரமித்துள்ளனர்.

புதுமாத்தளன் பிரதேசத்திலுள்ள பொதுமக்களையும், அவர்களது பிள்ளைகளையும் யுத்தத்தில் ஈடுபடுத்துவதற் காக பலாத்காரமாக தூக்கிச் செல்லும் வகையில் நேற்று முன்தினம் இரவு 9.00 மணியளவில் புலிகள் முயற்சித்துள்ளனர். தங்களது பிள்ளைகளை கொண்டு செல்ல வேண்டாம் என்றும் அங்குள்ள பொதுமக்கள் புலிகளை கேட்டுள்ளனர்.  அந்தப் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் முறைப்பாடு செய்வதற்காக அந்தப் பிரதேசத்திலுள்ள புலிகளின் பொலிஸ் நிலையத்தை நோக்கி விரைந்துள்ளனர். அங்கிருந்த ஒரு சில புலிகளின் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்று பின்னர் அது கலவரமாக விஸ்வரூபம் எடுத் துள்ளது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் புலிகளின் பொலிஸ் நிலையத்தையும், இரண்டு வான் மற்றும் இரண்டு மோட் டார் சைக்கிள்களையும் தீவைத்து நாசப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து ஆயுதங்கள் ஏந்திய சுமார் 60 புலிகள் அந்தப் பிரதேசத்திற்கு விரைந்து நிலைமையை கட்டுப் படுத்த முயற்சித்துள்ளனர். நிலைமை கட்டுப் பாட்டை இழந்ததையடுத்து அங்கு கூடியிருந்த பொது மக்களை இலக்கு வைத்து சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். புலிகளின் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டும், படுகாயமடைந்தும் உள்ளனர். அந்தப் பிரதேசத்திலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்திற்கு முன் பாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தை அடுத்து அந்தப் பிரதேசத்திலிருந்து 1565 பொதுமக்கள் காட்டு வழியாகவும், கடல் ஏரி வழி யாகவும் தப்பி இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நேற்று வந்தடைந்துள்ளனர். இந்த பொதுமக்களே இந்தச் சம்பவத்தினை விபரித்ததாக இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

தங்களுக்கு உணவு எதுவும் வேண்டாம், எங்களை உடனடியாக விடுவியுங்கள் என்று ஐ. சி. ஆர். சி. பிரதிநிதி களிடம் பொதுமக்கள் வேண்டியதாகவும் அந்தப் பொது மக்கள் தெரிவித்துள்ளனர். அரசாங்கம் அறிவித்துள்ள மோதல் தவிர்ப்பு பிரதேசத்தில் ஊடுருவியுள்ள புலிகள், படையினருடனான மோதல்களில் கொல்லப்பட்ட புலிகளின் சடலங்களை அங்கு அடக்கம் செய்துவிட்டு அவற்றை வீடியோ படம் எடுத்து படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களையே தாம் அடக்கம் செய்வதாக உலகில் பொய்ப் பிரசாரம் செய்யும் முயற்சியொன்றை மேற்கொண்டு வருகின்றனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொதுமக்களைக் காப்பாற்றும் நடவடிக்கையாகவே முல்லைத்தீவு கடற்கரைப் பிரதேசத்தில் மோதல் தவிர்ப்பு பிரதேசத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. மக்களோடு மக்களாக இங்கு ஊடுருவியுள்ள புலிகள் அங்கு தமது உறுப்பினர்களின் சடலங்களை புதைத்துவிட்டு, அவர்கள் படையினரால் கொல்லப்பட்ட பொதுமக்கள் என வீடியோக்கள் மூலம் உலகுக்கு பொய்த்தகவல் வழங்குகின்றனர்.

அத்துடன் பொதுமக்கள் அமைத்துள்ள குடிசை களுக்கு மத்தியில் பதுங்கு குழிகளை அமைந்துள்ளனர். மேலும் தமது கனரக ஆயுதங்கள் மற்றும் கனரக வாகனங்கள் ஆகியவற்றையும் இந்த மோதல் தவிர்ப்பு பிரதேசத்திலேயே புலிகள் பதுக்கி வைத்துள்ளனர் என்றும் பிரிகேடியர் மேலும் கூறினார்.

தபால் மூல வாக்களிப்புக்கான 5379 விண்ணப்பங்கள் நிராகரிப்பு – தேர்தல் திணைக்களம் தகவல்

election_ballots.jpgமேல் மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கென 35ஆயிரத்து 424 அரச ஊழியர்கள் தகுதி பெற்றுள்ளனர். 5ஆயிரத்து 379; விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமனசிறி தெரிவித்தார்.

தபால் மூலம் வாக்களிப்பதற்கென சுமார் 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து தாக்கல் செய்யப்பட்டிருந்த 3,038 விண்ணப்பங்களும் கம்பஹா மாவட்டத்தில் இருந்து தாக்கல் செய்யப்பட்டிருந்த 1,102 விண்ணங்களும் களுத்துறை மாவட்டத்தில் இருந்து தாக்கல் செய்யப்பட்டிருந்த 1,239 விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார்; இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் இருந்து 15ஆயிரத்து 789 பேரும் களுத்துறை மாவட்டத்தில் இருந்து 10ஆயிரத்து 926 பேரும், கொழும்பு மாவட்டத்திலிருந்து 8ஆயிரத்து 699 பேரும் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். தபால் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 2ஆம் 3ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது. 

தப்பிச் செல்லும் பொது மக்கள்மீது தாக்குதல் நடத்த சூசை உத்தரவு – கடற்படைப் பேச்சாளர் தகவல்

navy_spokesman_dasanayaka.jpgமுல்லைத் தீவு புதுமாத்தளன் பிரதேசத்திலிருந்து 31 படகுகளில் தப்பிச் சென்ற  பொது மக்கள்மீது தாக்குதல் நடத்துமாறு கடற்புலிகளின் தலைவர் சூசை கடற்புலிகளுக்கு உத்தரவு பிறப்பித்தமை புலிகளின் தகவல் பரிமாற்றத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் டீ.கே.பி. தஸநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு கெப்டன் டீ.கே.பி. தஸநாயக்க  மேலும் கூறியதாவது

புதுமாத்தளன் பிரதேசத்தில் இடம்பெயர்ந்தோருக்காக எம்.வி. பின்தான் என்ற கப்பலில் உணவுப் பொருட்கள் இறக்கப்படடுக்கொண்டிருந்த நேரம் சிறுவர்களைக் கடத்திச் செல்லும் முயற்சியில் புலிகள் ஈடுபட்டனர். தமது பிள்ளையைக் கடத்திச் செல்லும் முயற்சியைத் தடுத்த பெற்றோரையும் பிள்ளையையும் புலிகளின் பொலிஸார்  சுட்டுக் கொன்றதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் புலிகளின் பொலிஸ் நிலையத்துக்கு தீ வைத்து பொலிஸாரையும் தாக்கியுள்ளனர்.

இதன் பின்னர் அங்கு வந்த 60 க்கும் அதிகமான புலிகள் பொது மக்களைக் கண்மூடித்தனமாகத்  தாக்கியுள்ளனர். இதனால் பலர் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர். அங்கிருந்த ஐ.நா. பிரதிநிதியின் முன்னிலையிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது,  எமக்கு உணவு வேண்டாம். எங்களை இங்கிருந்து வெளியேற அனுமதியுங்கள் என பொது மக்கள் அந்த ஐ.நா. பிரதியிடம் மன்றாடிக் கேட்டுள்ளனர்.

அதன்பின்னர் அந்த மக்கள் 31 படகுகளில் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குத் தப்பிச்செல்ல முயன்றபோது படகுகளைப் பின்தொடாந்து நான்கு படகுகளில் வந்த கடற்புலிகளின் தலைவர்களான மாறன், இனியவன், ரங்கன் மற்றும் அழகன் ஆகியோர் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கான உத்தரவை கடற்புலிகளின் தலைவரான சூசையே விடுத்திருந்தார்.

உடனடியாக கடற்படையினர் மேற்கொண்ட பதில் தாக்குதலில் அந்த நான்கு படகுகளும் தப்பிச் சென்றன. இப்படகுகளில் வந்த 550 பேர் பருத்தித்துறை முனைப் பிரதேசத்தில் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர் என்றும் கெப்டன தஸநாயக்க தெரிவித்தார்

ஆயுதங்களை களையாவிட்டாலும் பரவாயில்லை பொதுமக்கள் வெளியேற அனுமதியுங்கள் – புலிகளுக்கு அரசு கோரிக்கை

people-_flee.jpgபுலிகள் ஆயுதங்களை களையாவிட்டாலும் பரவாயில்லை அவர்களை எமது படையினர் கவனித்துக்கொள்வார்கள்  அவர்கள் பலவந்தமாக தடுத்து வைத்துள்ள மக்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வர இடமளிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தகவல் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

புலிகளிடம் சிக்கியுள்ள மக்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நாளாந்தம் அரசகட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தருகின்றனர். வடக்கில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான நடவடிக்கைகள் சிறந்த முறையில் இடம்பெறுவது இதன் மூலம் புலனாகிறது.

ஜனவரி முதல் இதுவரை 45 ஆயிரத்து 519 பேர் விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தந்துள்ளனர். நேற்றைய தினம் மட்டும் 1567 பேர் வந்துள்ளனர். அவர்கள் கூறும் கருத்துக்களைக் கேட்டால் அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டங்கள் கஷ்டங்கள் அனைத்தும் அரசாங்கத்தினாலல்ல என்பது நன்கு தெளிவாகின்றது.

மக்கள் பெரும் எண்ணிக்கையில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வர தொடர்ந்தும் முயற்சித்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் அனைவரையும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பான முறையில் அழைத்து வருவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஆயுதங்களை கீழே வைக்குமாறு புலிகளை அரசு கேட்டுக்கொண்டது. அதேபோன்று உலக நாடுகளும் கேட்டுக்கொண்டன. எனினும் புலிகள் அதற்கு செவிமடுக்கவில்லை. இருப்பினும்; ஆயதங்களைக் களைந்தால் தீர்வுத்திட்டம் முன்வைப்பதில் கவனம் செலுத்தும் நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளதென அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

அந்தமான் – நிகோபார் தீவுகளில் தடுத்து வைத்துள்ளோரை விடுவிக்க தூதரகம் முயற்சி

கடந்த இரு தினங்களில் மேலும் 15 இலங்கை மீனவர்கள் இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் மீன்பிடித் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் லால் தெரிவித்தார். இவர்களின் மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 51 இலங்கை மீனவர்களை விடுதலை செய்வது குறித்து ஆராய சென்னை பிரதி உயர் ஸ்தானிகராலய குழுவொன்று நேற்று அங்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பணிப்பாளர் கூறினார். இது தொடர்பாக வினவியபோது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இதுவரை 121 இலங்கை மீனவர்கள் சென்னை விசாகப்பட்டிணம் மற்றும் அந்த மான், நிகோபார் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தாகவும் கூறினார்.

தெவிநுவர பகுதியில் இருந்து இரு படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். பேருவளையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற ஐவர் நேற்று முன்தினம் இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தவிர ஏற்கனவே கைது செய்யப்பட்ட 31 மீனவர்கள் விசாகப் பட்டிணத்தில் தடுத்து வைக்கப் பட்டுள்ளதோடு சென்னையில் 24 பேர் தடுத்து வைக் கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்ய இந்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளதோடு மேற்படி இலங்கை மீனவர்கள் விரைவில் இலங்கை திரும்ப உள்ளனர்.

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சென்னை பிரதி உயர் ஸ்தானிகராலய பிரதிநிதிகள் அத்தீவு உயரதிகாரிகளுடன் பேசி இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவசியமற்ற பதவி நியமனங்கள் உடன் நிறுத்தப்படவேணடும் -மகாணசபைகளுக்கு அரசு உத்தரவு

l-yaappa-abayawardana.jpg அவசியமற்ற வகையில் புதிய  நியமனங்கள் வழங்குவதை உடன் நிறுத்த வேண்டுமென அரசாங்கம் மாகாணசபைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் நியமனங்கள்  இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தேர்தல் நெருங்கிவரும் வேளையில் அவசியமற்ற நியமனங்களை வழங்கி குறுகிய அரசியல் இலாபம் பெற சில அரசில்வாதிகள் முயல்வதால் அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

ஒலிவாங்கியில் கூறப்படாதவற்றை ஊடகங்களில் வெளியிடத் தடை-சபாநாயகர் எச்சரிக்கை

parliament.jpgஉத்தியோக பூர்வமாக ஒலிவாங்கி முடுக்கிவிடப்படாத வேளையில் உறுப்பினர் ஒருவர் பேசிய விடயத்தையோ, பிரசுரிக்க வேண்டாம் என கூறப்பட்ட விடயத்தையோ பிரசுரித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம் ஊடக நிறுவனத்திற்காக வழங்கப்படும் பாராளுமன்ற அனுமதியும் ரத்துச் செய்யப்படும் என சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்கபண்டார நேற்று அறிவித்தார்.

அத்துடன் ஆளும் தரப்பினரோ, எதிர்த்தரப்பினரோ பாராளுமன்றத்தை ஆயுதமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபா நாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார தலைமை யில் கூடியது. வழமையான சபை நடவடிக்கைகளின் பின்னர் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ண, நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் ஐ.தே.க. குழுக் கூட்டத்தில் குளறுபடிகள் நடந்ததாக ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டிருந்தன என்று கூறியதுடன், வேண்டுமென்றே தவறான தகவல்கள் வழங்கப்பட்ட தாகவும், நடக்காத ஒரு விடயம் நடந்துவிட்டதாக ஆளும் தரப்பு உறுப்பினர்கள் சபையில் தெரிவித்து ஊடகங் களூடாக பிரசாரம் செய்யப்பட்டது என்று குற்றம் சுமத்தினார்.

எதிர்த்தரப்பு பிரதம கொரடா ஜோசப் மைக்கல் பெரேரா ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பியதுடன் பாராளுமன்ற கட்டட தொகுதியில் ஐ.தே.க குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சில காரசாரமான விவாதங்களும் இடம்பெற்றன. எனினும் அவற்றை திரிவுபடுத்தி சபையில் நடந்த விடயத்தை எடிப் செய்யப்படாத இறுவெட்டுக்களை அனுப்பி ரூபவாஹினியூடாக ஒலிபரப்பினார்கள் என குற்றம் சாட்டினார்.

அமைச்சர் ஜகத் புஷ்ப குமார எம்.பியே பாராளுமன்றத்தில் தவறான செய்தியை பரப்பிவிட்டார் என லக்ஷ்மன் செனவிரட்ண எம்.பி குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜகத் புஷ்பகுமார நான் ஒருபோதும் எதிர்க் கட்சித் தலைவருக்கு அடித்து விட்டார்கள் என கூறவில்லை. கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஐ.தே.க. எம்.பி ஒருவர் அவரது தொலைபேசியினூடாக எனக்கு தகவலைத் தந்தார்.

“எதிர்க் கட்சித் தலைவர் எந்நேரத்திலும் தாக்கப்படலாம். இங்கு நிலமை மோசமடைந்து கொண்டு வருகிறது” என்றார். எனினும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்குரிய கடமையாக கருதி இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை சபாநாயகருக்கு அறிய த்தந்தேன் அவ்வளவுதான் என்றார்.

கட்சிக்குள் உட்பூசல்கள் இருக்கின்றன. அதனை ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன. ஏன் எமது கட்சிக்குள் இப்படி உட்பூசல்கள் இருப்பதாக ஊடகங்கள் வெளி யிடவில்லையா? ஏன் அரச ஊடகம் மட்டும்தானா இந்த விடயத்தை வெளிப்படுத்தின. ரணில் விக்கிரமசிங்கவின் மாமாவின் பத்திரிகை கூடத்தானே இதற்கு முக்கிய த்துவம் கொடுத்திருக்கிறது. என சபை முதல்வர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.“நடக்காத விடயம் ஒன்றை பாராளுமன்றத்தினுள் நடந்ததாகக் கூறி அதற்கு பிரசாரம் பெற்றுக்கொடுப்பது தான் தவறு என்கிறேன்” என எதிர்க்கட்சி பிரதம கொரடா ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.

இவ்வாறு இரண்டு தரப்பினருமே செய்திருக்கிறார்கள்” என சபாநாயகர் தெரிவித்தார். ‘இல்லை’ ‘இல்லை’ என ஜோசப் மைக்கில் கூறியபோது “நானும் எதிர்க் கட்சி பிரதம கொரடாவாக இருந்திருக்கிறேன்” என சபாநாயகர் தெரிவித்ததுடன் ஐ.தே.க. எம்.பி தயாசிறி ஜயசேகர எழுந்து நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டம் தொடர்பாக பேசினார். அவருக்கு ஒலி வாங்கி வழங்கப்படவில்லை. அமைச்சர் ஜகத் புஷ்பகுமார ஒழுங்குப் பிரச்சினை எழுப்பியதால் அவருக்கே ஒலிவாங்கி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஜகத் புஷ்ப குமாரவுக்கும், தயாசிறி ஜயசேக்கரவுக்கும் இடையே வாக்குவாதங்கள் நடைபெற்றன. ஒலிவாங்கிகள் வழங்கப் பட்டிருக்கவில்லை.

சபாநாயகர் லொக்குபண்டார சான்றுப்படுத்தப்பட்ட இலங்கை முகாமைத்துவ கணக்காளர் நிறுவக சட்ட மூலத்தை சமர்ப்பித்து பேசுமாறு அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு அழைப்பு விடுத்தார். ஒலிவாங்கி அமைச்சர் பந்துலவுக்கு வழங்கப்பட்டிருந்தது. எனினும் அவருக்கு பேசமுடியாதவாறு சபையில் வாக்குவாதங்கள் நடைபெற்றன.

இந்த சந்தர்ப்பத்திலேயே சபாநாயகர் மேற்படி அறிவித்தலை விடுத்தார். இதனைத் தொடர்ந்து சட்டமூலம் தொடர்பான விவாதம் ஆரம்பமானது.

மாலைதீவின் பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு செயலாளருடனும் படைத் தளபதிகளுடனும் சந்திப்பு!

gotabhaya_fonseka_met.png இலங்கை வந்துள்ள மாலைதீவின் பாதுகாப்பு அமைச்சர் அமீன் பைசல் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா,  மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் எட்மிரல் வசந்த கரன்னாகொட ஆகியோரை  சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளருடனான சந்திப்பு பாதுகாப்பு அமைச்சிலும், இராணுவத் தளபதியுடனான சந்திப்பு இராணுவத் தலைமையகத்திலும் கடற்படைத் தளபதியுடனான சந்திப்பு கடற்படைத் தலைமையகத்திலும் நடைபெற்றது.
 
இலங்கை – மாலைதீவின் உறவு தொடர்பாக பாதுகாப்புச் செயலாளருடனான சந்திப்பின் போது விரிவாக ஆராயப்பட்டது. வன்னியில் பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்து வரும் மனிதாபிமான இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் நாளுக்கு நாள் படிப்படியாக அடைந்து வரும் வெற்றிகள் தொடர்பாக இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா மாலைதீவு பாதுகாப்பு அமைச்சரிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி பொது மக்களின் நிலைமைகள், அவர்களை பாதுகாப்பாக மீட்டெடுக்க பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் என்பன தொடர்பாகவும் இராணுவத் தளபதி மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான குழுவினரிடம் விளக்கமளித்துள்ளார். இதேவேளை, மாலைதீவு இராணுவ வீரர்களுக்கு இலங்கை இராணுவத்துடன் இணைந்ததாக சிறப்பாக பயிற்சிகள் வழங்கப்படுவதற்கும், அதற்கான சந்தர்ப்பத்தை இராணுவத் தளபதி வழங்கி வருவதற்காகவும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் அமீன் பைசல் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பாக இலங்கையின் தற்போதைய இராணுவத் தளபதியிடமிருந்து நிறைய விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.