முடிச்சு அவிழ்க்கப்படாத உயிர்த்த ஞாயிறு தாக்குதல் !
ஆறு ஆண்டுகளுக்குப் பின் முன்னைய ஆட்சியாளர்களுடன் தொடர்பில்லாத அரசு உருவாகியுள்ளதால் இவ்விசாரணைகள் நியாயமான முறையில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனாலும் முன்னைய ஆட்சியாளர்கள் கைது செய்யப்பட்ட பிள்ளையானை சந்திக்க எடுக்கின்ற முயற்சிகள் நிலைமைகள் எவ்வளவு சிக்கலானதாகி இருக்கின்றது என்பதை வெளிப்படுத்துகின்றது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் காலை 8.45 மணியளவில் கட்டுவாப்பிட்டி, சியோன் மற்றும் கொச்சிக்கடை தேவாலயங்களையும் கொழும்பில் உள்ள மூன்று ஹோட்டல்களையும் இலக்கு வைத்து வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், அதே நாளில் தெமட்டகொட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தெஹிவளையில் உள்ள தங்கும் விடுதியில் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன. இத்தாக்குதலில் வெளிநாட்டவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உட்பட 270இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் 500இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இவ்வாண்டு ஞாயிறு அன்றுக்கு முன்னதாக குற்றவாளிகள் பற்றிய அறிக்கையை ஜனாதிபதி விசாரணைக் குழு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கையளிக்கும் என்பதாலும் தேசிய மக்கள் சக்தி அரசு இத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர் என்று குற்றம்சாட்டப்பட்ட பிள்ளையானைக் கைது செய்து விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளதாலும் இந்த ஈஸ்டர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தாக்குதல் இடம்பெற்று 6 வருடங்கள் கடந்துள்ள நிலையில், மேற்படி தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட சமய நிகழ்வுகள் இடம் பெற்றன. இதன் பிரதான நிகழ்வு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித்தின் தலைமையில் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள், வௌிநாட்டுத் தூதுவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் பங்ககேற்றனர். இதேவேளை, தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலை 8.45 மணிக்கு அனைத்து மத ஸ்தலங்களிலும் மணி அடிக்கப்பட்டு, 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.









