உள்ளுராட்சித் தேர்தலில் கவனித்துக் கொள்ளுங்கள்: குப்பை மேடாக மாறும் நுவரெலியா – பிரதேசங்கள் !

உள்ளுராட்சித் தேர்தலில் கவனித்துக் கொள்ளுங்கள்: குப்பை மேடாக மாறும் நுவரெலியா – பிரதேசங்கள் !

சுற்றுலாத்தலமான நுவரெலியாவிற்கு தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதில் ஏப்ரல் மாத முதலாம் திகதி முதல் முப்பதாம் திகதி வரை வசந்தகால கொண்டாட்டம் நடைபெறுவதால் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இயற்கை எழில் சூழ்ந்த நுவரெலியா தற்போது எங்கும் குப்பை குவியல்களும், பிளாஸ்டிக் கழிவுகளும் நிறைந்து காணப்படுகின்றது. மேலும் அதிகமாக சுற்றுலா பயணிகள் கூடும் மையங்களில் குப்பை தொட்டிகளை வைக்க நடவடிக்கை எடுக்காதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதுடன், இயற்கையும் பாதிக்கப்படுகிறது.

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் உணவை சாப்பிட்டு முடித்துவிட்டு, எஞ்சிய உணவுக் கழிவுகள், மாமிசங்கள், எலும்புத்துண்டுகள், பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள், எளிதில் மக்கிப்போகாத பொலித்தீன் பைகளில் கட்டப்பட்ட சில கழிவுப்பொருட்களை அதே இடங்களில் வீசிவிட்டுச் செல்கின்றனர்.

இவற்றை உட்கொள்ள கால்நடை விலங்குகள் அப்பகுதியை முற்றுகையிடுகின்றன. நாய்கள்,
பறவைகள், மட்டக்குதிரைகள் கழிவுகளை நாலாப்புறமும் இழுத்துச் சென்று போடுவதால் நடைபாதைகள் உட்பட நகரின் பல இடங்களும் மாசுப்படுகின்றது.

இவை அவ்வப்போது குப்பை அதிக கிடக்கும் இடத்தில் இறந்து கிடப்பதும் பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளில் உள்ள மாசடைந்த பொருட்களை உண்பதும் காரணம் என தெரிய வந்துள்ளது.
நுவரெலியாவில் தற்போது அதிக இடங்களில் வீதியோரத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வர்த்தக நிலையங்களில் சேகரித்து கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதன் காரணமாக அதிக சுற்றுலா பயணிகள் கூடும் இடங்களில் புகை மண்டலம் சூழ்ந்தது போல் காட்சி அளிக்கிறது. மேலும் காற்று மாசு ஏற்படுவதோடு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இவற்றை நுவரெலியா மாநகர சபையோ கண்டுகொள்வதில்லை எனவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.

எனவே, சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருகை தரும் இடங்களில் தேவைக்கேற்ப குப்பைத் தொட்டிகளை வைப்பது அவசியம் எனவும் அப்பகுதிகளுக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகள் இதனை கவனத்திற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இது நுவரெலியாவுக்கு மட்டுமல்ல ஏனைய சுற்றுலாத் தலங்களுக்கும் பொருத்தமானது.

இலங்கை தனது பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு சுற்றுலாத்துறை மிக முக்கியமானதாக உள்ளது. அதற்கமைவாக நாடு சுற்றுலாப் பயணிகளை ஈரக்கும் வகையில் கட்டியெழுப்பப்பட வேண்டும். அதே சமயம் உள்ளுர் மக்களின் சுகாதாரமும் வாழ்வியலும் கூட கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். குப்பபைகள் கழிவுகளை ஒழுங்குமுறையில் சேகரித்து பதப்படுத்தி சேதன உரங்களாக பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் போது அதனை எரித்து சுற்றாடலை மாசுபடுத்த வேண்டி அவசியம் என்ன.

இந்த உள்ளுராட்சித் தேர்தல் காலகட்டத்தில் மக்கள் தங்கள் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யக் கூடிய, தங்களுடைய பிரதேசங்களை தூய்மையான ஒளிமயமான பிரதேசங்களாக்கக் கூடியவர்களுக்கு வாக்களித்து பொறுப்பானவர்களைத் தெரிவு செய்ய வேண்டும்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *