December

December

வடக்கில் ஆபிரிக்க பெரும் நத்தைகள் ஜாக்கிரதை – பொன் ஐங்கரநேசன்

வடக்கில் ஆபிரிக்க பெரும் நத்தைகள் ஜாக்கிரதை – பொன் ஐங்கரநேசன்

வடமாகாணத்தில் சில இடங்களில் ஆபிரிக்க பெரு நத்தைகள் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் இலகுவாக இனம்பெருகும் இவை பயிர்களுக்கு பெரும் நாசத்தை ஏற்படுத்தும் என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் செய்தியாளர் சந்திப்பில் பொன் ஐங்கரநேசன் தெரிவித்தார். டிசம்பர் 22 கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ஒரே நத்தையில் ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகள் இருப்பதால் இவை இரண்டுமே முட்டைகளை உருவாக்கக் கூடியவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

5 முதல் 6 ஆண்டுகள் உயிர்வாழும் இந்நத்தைகள் தமது ஆயுள்காலத்தில் 1000 வரையான முட்டைகளையிடும் என்றும் இவற்றை இரையாக உட்கொள்ளும் உயிரினங்கள் இலங்கையில் இல்லை என்றும் ஐங்கரநேசன் சுட்டிக்காட்டினார். தனிப்பட்ட ஒருவர் விளையாட்டாக இங்கு கொண்டுவந்தது தற்போது வினையாகி இருப்பதாகத் தெரிவித்த ஐங்கரநேசன், இந்நத்தைகள் மனிதரைத் தாக்கும் கிருமிகளைக் காவக்கூடியவை என்றும் இவற்றை கைகளால் கையாளமால் பிடித்து உப்புநீரில் அமிழ்த்தி அழிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளின்; பாதுகாப்புச் செலவீனம் – இரண்டு லட்சம் மாணவர்களுக்கு ரூபாய் 6,000 வழங்கும் என்பிபி திட்டத்திற்குப் போதுமானது!

முன்னாள் ஜனாதிபதிகளின்; பாதுகாப்புச் செலவீனம் – இரண்டு லட்சம் மாணவர்களுக்கு ரூபாய் 6,000 வழங்கும் என்பிபி திட்டத்திற்குப் போதுமானது!

 

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட முப்படைகளின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது இது தொடர்பான அறிவிப்பை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிட்டிருந்தார். இந்தச் செலவீனம் இரண்டு லட்சம் மாணவர்களுக்கு ரூபாய் 6,000 வழங்கும் என்பிபி இன் திட்டத்திற்குச் சமனானது என மதிப்பிடப்படுகின்றது. இருந்தாலும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பொலிஸ் பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இது மீளாய்வு செய்யப்பட்டு அதற்கேற்ப அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சீரமைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசியல் பழிவாங்களுக்காக முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது என்று குறிப்பிடுவது அடிப்படையற்றது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது என்று அரசியல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினர் முறையான காரணிகளை குறிப்பிட வேண்டும். ஒட்டுமொத்த மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தியுள்ள பொலிசாருக்காகான வருடாந்த செலவீனத்திற்காக மக்கள் பணத்திலிருந்து ரூ. 1,100 மில்லியன் (வருடாந்தம் ரூ. 110 கோடி – மாதாந்தம் சுமார் ரூ. 9 கோடி) செலவிடப்பட்டமை பிரமுகர் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்க அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவினால் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கு மாத்திரம் வருடாந்தம் ரூ. 326 மில்லியன் செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது. அதற்கமைய மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட பொலிஸாரின் ஒரு பகுதியின் 13ம் திகதி மீள பொலிஸ் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தலையெடுக்கும் மலேரியா – கிளிநொச்சியில் ஒருவர் பாதிப்பு !

மீண்டும் தலையெடுக்கும் மலேரியா – கிளிநொச்சியில் ஒருவர் பாதிப்பு !

இலங்கையில் மீண்டும் மலேரியா நோய் பரவுவதற்கான ஆபத்து ஏற்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் மலேரியா தொற்றுக்குள்ளான ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து இந்த அறிவிப்புவிடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 12ம் திகதி ஆபிரிக்க நாடான கானாவிலிருந்து நாடு திரும்பியவர், காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்தவேளையிலே மலேரியா தொற்று இருப்பது தெரியவந்தது.

இலங்கை மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார தாபனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சுற்றியுள்ள நாடுகளால் இலங்கையில் அவ்வப்போது மலேரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இனங்காணப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஆபிரிக்க நாடுகளிலிருந்து வருவோர் மலேரியா தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். மாலைதீவு தவிர்ந்த கிழக்கு மற்றும் ஆபிரிக்க, தென்னாசிய நாடுகளில் மலேரியா நோய்த் தாக்கம் இன்றும் உள்ளது.

இலங்கையில் இருந்து குறித்த நாடுகளுக்கு பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் இவ்வாறான நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் மருத்துவரை அணுகி குறித்த நாடுகளுக்கு சென்று வந்த விடயத்தையும் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு மோகத்தினால் முகவர்களாக பயணத்தை மேற்கொள்பவர்கள் ஆபிரிக்க நாடுகளுக்கு ஊடாகவும் பயணிக்கின்றனர். இவ்வாண்டு முற்பகுதியில், யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்ஸ் செல்ல முற்பட்டு கானாவில் தங்கியிருந்த போது காய்ச்சல் வந்து அங்கேயே மரணமானார். அவரோடு தங்கியிருந்த மற்றையவர் அதற்கு முன்னரே பயணம் சரிவராது எனத் தெரிந்து நாடுதிரும்பிவிட்டார்.

 

உயிர் பறிக்கும் செல்ஃபி மோகம் !

உயிர் பறிக்கும் செல்ஃபி மோகம் !

செல்ஃபி மோகத்தால் இருவர் உயிரிழந்த சம்பவம் அனுராதபுரத்தில் நேற்று திங்கட்கிழமை பதிவாகியுள்ளது. அநுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்க இரத்தினபுரியிலிருந்து வந்த 18 வயதான மகளும், 37 வயதான தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். காங்கேசந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதிவேக ரயிலின் முன் அநுராதபுரம் நிலையத்திற்கு அருகில் செல்ஃபி எடுக்க முற்பட்டபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

செல்பி மோகத்தால் இலங்கையில் தொடர்ந்தும் விபத்துக்கள் பதிவாகிவருகின்றன. அண்மையில் ஓடும் ரயிலிருந்து புகைப்படம் எடுக்க முயன்ற வெளிநாட்டுப் பெண்ணொருவர் மரக்கிளை மோதி விபத்துக்குள்ளானார்.

2023ஆம் ஆண்டு கிளிநொச்சி ஊடகவியலாளர் நிபோஜன் ரயிலிருந்து காணொலி பதிய முற்பட்டவேளையில் தவறிவிழுந்து உயிரிழந்தார். இவ்வாறான மரணங்கள் தொடர்ச்சியாக ஆங்காங்கே பதிவாகிவருகின்றன.

இதேவேளை கைத்தொலைபேசி பாவித்துக்கொண்டு, பாடல் கேட்டுக்கொண்டு ரயில் கடவையை கடக்க முற்படுதல், நீர் நிலைகள், மலைகள் போன்ற சுற்றுலாத் தளங்களில் அட்வென்ஜர் என்ற பெயரில் புகைப்படங்கள் எடுத்தல் போன்றவற்றால் ஏற்படும் மரணங்களும் தொடர்ந்தும் பதிவாகிவருகின்றன.

இவ்வாறான மரணங்கள் பொறுப்புணர்வுடன் நடப்பதன் மூலம் தவிர்க்கப்பட வேண்டியவை. இதுதொடர்பான விழிப்புணர்வு கருத்துக்கள் சிறுவயதிலேயே பாடசாலைப் பிள்ளைகள் மத்தியில் விதைக்கப்பட வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்த இடங்களில், பொது இடங்களில் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் வழிப்புணர்வு கருத்துக்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.

ஆசிரியர்களைப் பேசி அனுப்பிய அதிகாரியின் நடத்தையைக் கண்டு வெட்கப்பட்ட ஆளுநர் வேதநாயகன்!

ஆசிரியர்களைப் பேசி அனுப்பிய அதிகாரியின் நடத்தையைக் கண்டு வெட்கப்பட்ட ஆளுநர் வேதநாயகன்!

தனக்குக் கீழுள்ள சில அதிகாரிகளின் செயற்பாடுகளைக் கண்டு தான் வெட்கப்படுவதாக வடமாகாண ஆளுநர் நா வேதநாயகன் டிசம்பர் 22இல் தெரிவித்துள்ளார். கரைச்சிப் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற கலாச்சாரப் பெருவிழாவிலேயே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் குறிப்பிடுகையில் வடக்கில் சில அதிகாரிகளை வைத்துக்கொண்டு மக்களுக்கு சேவையாற்றுவது சவால் எனத் தெரிவித்தார். ஆளுநர் என்ன நடந்தது என்பதையும் தனது உரையில் பகிர்ந்து கொண்டார்.

ஆளுநர் வேதநாயகன், தொலைபேசியில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அடுத்த நிலையில் உள்ள ஒருவரை அழைத்து, ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சாதகமாக அணுகுமாறு கேட்டுக்கொண்டிருந்தார். மேலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை அவரிடமே அனுப்பியும் உள்ளார். குறித்த அந்த அதிகாரி தனது அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, ஆசிரியர்களை இரவு 7 மணிக்குத் தான் சந்தித்துள்ளார். அப்போது ஆசிரியர்களை மிக மோசமான முறையில் பேசித் திருப்பி அனுப்பி இருக்கின்றார். “இவ்வாறான அலுவலர்கள் எங்களுடைய மாகாணத்தில் எனக்குக் கீழ் இருக்கின்றார்கள் என்பதை நினைக்கும் போது வெட்கமாக இருக்கின்றது” எனத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், இன்றைய இளையோர் மற்றவர்களை மதிக்கின்ற உதவி செய்கின்ற விழுமியங்களை வெளிப்படுத்துகின்றார்கள் இல்லை எனக் குறைப்பட்டார், தவறுகளை தட்டிக்கேட்க முடியாத நிலை இருக்கின்றது எனத் தெரிவித்தார். வீதிகளில் குப்பை போடுகின்றோம், வெள்ள வாய்க்காலை மறித்து, கட்டிடங்களைக் கட்டுகின்றோம், ஒழுக்கமில்லாத சமூகமாக மாறிவருகின்றோம் என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ஆளுநர் வேதநாயகன். இந்தப் பண்பாட்டு விழாவிலும் பிரதேச செயலக அலுவலர்களே அதிகமாக வந்திருப்பதையும் மக்கள் சமூகம் தராததையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இலங்கையின் பொருளாதாரக் குறியீடுகள் என்பிபி அரசுக்கு சாதகமாக உள்ளது!

இலங்கையின் பொருளாதாரக் குறியீடுகள் என்பிபி அரசுக்கு சாதகமாக உள்ளது!

நிதித் தரநிர்ணய நிறுவனமான பிச் ரேற்றிங் (Fitch Rating) இலங்கையினுடைய கடன்பெறு தகுதியை அதிகரித்துள்ளது. 2022இல் நாட்டினுடைய கடன்களை திருப்பிச் செலுத்த முடியாததால் நெருக்கடிக்கு உள்ளான இலங்கை அதனுடைய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான டொலர் கையிருப்பு இல்லாமல் ஸ்தம்பித்த நிலையிலிருந்தது.

இலங்கையைக் காப்பாற்றுகின்றோம் என்ற பெயரில் சர்வதேச நாணயநிதியம் கடனின் வட்டியையும் முதலையும் தங்களுக்கு சேதமில்லாமல் பெறுவதற்கான, கடன் மீள்செலுத்துகையை மீள்வரைபு செய்து அப்போது ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுடன் உடன்பாடும் எட்டப்பட்டது. அதன் பின் ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு பாதகமில்லாமல் அல்லது மக்களுக்கு வரக்கூடிய நெருக்கடிகளை கூடியவரை குறைத்து இந்த கடன் மீள்செலுத்துகையை மேற்கொள்ள பல ஆடம்பரச் செலவீனக் குறைப்புகளையும், வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்களையும் முன்னெடுத்தமைக்கு தற்போது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி கிட்டியுள்ளது. இதுவரை Issuer Default Rating (IDR), ‘RD’ (Restricted Default) இல் இருந்து ற்கு ‘CCC+’ ற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இலங்கை பெரும்பாலான நாடுள் நிறுவனங்களோடு கடன் மீள்வரைபை மேற்கொண்டுவிட்டது. அதனால் கடன் மீள்செலுத்துகையில் இலங்கைக்கு அதற்கான கால அவகாசம் கிடைத்துள்ளது. 2026இல் இலங்கையின் அந்நியச்செலாவணிக் கையிருப்பு 8.7 பில்லியன் அமெரிக்க டொலராக இருக்கும் என பிச் ரெற்றிங் மதிப்பிடுகின்றது. அத்தோடு அரசின் கடனுக்கும் மொத்த தேசிய உற்பத்திக்கும் உள்ள விகிதம் 90மூ 2028இல் குறையும் என்றும் இதற்கான வட்டிக்கும் மொத்த தேசிய உற்பத்திக்கும் உள்ள விகிதம் 2021 இல் 67மூ இல் இருந்தது 42மூ ற்கு குறையும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் சிசிசி ரேற்றிங்கில் உள்ள நாடுகளில் இவ்விகிதாசரம் 16மூ ஆக இருக்க வேண்டும். இன்னமும் இலங்கையின் இந்த விகிதம் மிக உயர்வாகவே உள்ளது.

அதேசமயம் அரசாங்கத்தின் வருமானத்திற்கும் மொத்த தேசிய உற்பத்திக்குமான விகிதாசாரம் 2023இல் 11மூ ஆக இருந்து 2026இல் 15மூ ஆக உயரும் எனவும் பிச் ரேற்றிங் மதிப்பிட்டுள்ளது. இலங்கையுடைய பொருளாதார வளர்ச்சி 2022இல் 7.4 வீதமாக இருந்து 2023 இல் 2.2 வீதமாகச் சுருங்கியது. 2025 – 26 இல் இது 3.6 முதல் 4.2 வீதமாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. விலைவீக்கம் 2022இல் 67 வீதமாக இருந்து 2025 – 26 இல் 5 வீதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தரவுகளின் அடிப்படையில் புதிய அரசாங்கம் பொருளாதார நிலையில் சரியான பாதையில் இருந்தாலும் அபாயங்கள் முழுமையாகக் கடக்கப்படவில்லை. அதற்கான கால அவகாசமும் புதிய அரசுக்கு இல்லை.

கல்விக்கு ஒரு பிள்ளைக்கு மாதம் 15,000 ரூபாய்; செலவு! தனியார் கல்வி நிறுவனங்களின் முடிவின் ஆரம்பம்!

கல்விக்கு ஒரு பிள்ளைக்கு மாதம் 15,000 ரூபாய் செலவு! தனியார் கல்வி நிறுவனங்களின் முடிவின் ஆரம்பம்!

 

பாடசாலை ஆசிரியர்கள் தனியார் கல்வி நிறுவனங்களில் வகுப்புகளை நடாத்துவதற்கு தடைவிதித்து மேல் மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர்கள் பாடசாலை நேரம் முடிந்த பிறகும், வார விடுமுறை நாட்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் கூடுதல் வகுப்புகளை பல்வேறு வெளி இடங்களில் நடத்தி வருமானம் ஈட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அறிவுறுத்தல்களை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் கல்வி அமைச்சுக்களால் சுற்றறிக்கைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

இந்நடைமுறையை யாழ் மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்பள்ளி கல்விச் செயற்பாட்டாளர் என் சச்சிதானந்தன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். வடக்கில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பயிற்சி நெறிகளை யாழ் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களில் ஆரம்பிப்பதில் முன்நின்ற இவர், இலவசக் கல்வி பெயரளவில் உள்ளதேயல்லாமல் உண்மையில் மூன்று பிள்ளைகளையுடைய குடும்பம் மாதம் 50,000 ரூபாய்களை தனியார் கல்விக்குச் செலவிடவேண்டியுள்ளதாக தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இதே கருத்தை வெளியிட்ட வறணி ஆரம்பப் பாடசாலையின் அதிபர் நாகப்பர் கண்ணதாசன், 9ம் தரம் வரை மாணவர்கள் தனியார் கல்வியை நாட வேண்டிய அவசியம் இல்லை எனத் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்வது கற்பதற்காக என்பதிலும் பார்க்க அதுவொரு கலாச்சாரமாகிவிட்டது.

நேர்காணலை மேற்கொண்ட த ஜெயபாலன், “தமிழ் மாணவர்கள் தனியார் கல்விக்கு இப்பெரும்தொகையைச் செலவழிக்க, இவர்களின் பெற்றோர்கள் செல்வந்தர்களாக வந்துவிட்டார்களா? அல்லது மாணவர்கள் சோம்பேறிகளாக ஆகிவிட்டார்களா?” எனக் கேள்வி எழுப்பினார். தன்னூக்கக் கல்வி முக்கியத்துவம் பெற்றுள்ள இன்றைய காலகட்டத்தில், தெரியாத ஒரு விடயத்தை கற்றுக்கொள்வது என்பது ஒரு பட்டனை அழுத்தும் தொலைவில் இருக்கும் இன்றைய காலத்தில் தனியார் கல்வி ஏன் அவசியம் என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. கல்வியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் தனியார் கல்வி நிறுவனங்கள் இல்லை என்பதைக் கவனிக்க.

இதேவேளை, தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் இறுக்கமான தீர்மானங்களை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மேற்கொண்டிருந்தார். இதன்படி, தரம் 9 மற்றும் தரம் 9 இற்கு கீழப்பட்ட வகுப்புக்களுக்கான தனியார் கல்வி செயற்பாடுகள் மற்றும் குழு வகுப்புக்களை வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் வேளைகளிலும் ஞாயிற்றுக்கிழமை முழு நேரமாகவும் நிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

தனியார் கல்வி நிலைய வாசலில் பெற்றோர்கள் காத்திருப்பதனால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிகளை உரிய முறையில் நிர்வாகிகள் கட்டுப்படுத்த வேண்டும். தவறினால் பொலிஸாரின் உதவி பெற்றுக்கொள்ளப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக கடந்த காலங்களிலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆயினும் அவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தபடவில்லை. புதிய அரசாங்கத்தின் கீழ் இவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

கூகிளும் ஆட்குறைப்புச் செய்கின்றது! இலங்கை அரசும் ஆட்குறைப்புச் செய்ய வேண்டியுள்ளது!

கூகிளும் ஆட்குறைப்புச் செய்கின்றது! இலங்கை அரசும் ஆட்குறைப்புச் செய்ய வேண்டியுள்ளது!

கூகுளின் நிர்வாகப்பிரிவில் பணியாற்றும் 10 சதவீதம் ஊழியர்களை பணி விலக்கு செய்யப் போவதாக கூகுள் அறிவித்துள்ளது. கூகுளின் செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி “நிர்வாகப் பிரிவில் ஆட்குறைப்பு செய்யப்படும் அதேநேரம் சிலரது பணிநிலை வேறு பிரிவுகளுக்கு மாற்றப்படும். இதன் மூலம் கூகுளின் செயல்திறனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்கின்றது கூகுள்.

“கூகுளே உலகமயம்“ என்று சொல்லுமளவுக்கு எந்த விடயமாக இருந்தாலும் கூகுளில் பதில் கிடைத்துவிடும். இந்த நிறுவனத்தில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்காண ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். தமிழ்நாட்டில் பிறந்த தமிழரான சுந்தர் பிச்சை கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பில் உள்ளார். கடந்த வருடம் 2023 இல் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஆல்பபெட் நிறுவனம் 12 ஆயிரம் ஊழியர்களை நீக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையை பொறுத்தவரை கூகுகளை முன்மாதிரியாக கொண்டு அரச துறைகளில் தேவைக்கு அதிகமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அரச ஊழியர்களை பணிநீக்க வேண்டும் எனபது சர்வதேச நாணய நிதியக் கடன் மீள்வரைவு உடன்பாட்டின் நிபந்தனைகளில் ஒன்று. குறிப்பாக 14 இலட்சம் அரச ஊழியர்களை 7 இலட்சமாக படிப்படியாக குறைப்பதன் மூலம் அரச இயந்திரத்தை வினைத்திறனாக செயற்பட வைக்கப்பட வேண்டும் என்பதே இலக்கு. அதுதவிர சிலரது பணிநிலைகளை வேறு பிரிவுகளுக்கு மாற்றலாம். இனிவரும் காலங்களில் இலங்கை டிஜிற்ரைலைசேனை நோக்கி நகரும்போது அரசதுறையில் பணிபுரியும் ஊழியர்களை அதற்கு தயார்படுத்தலாம்.

அவர்களினுடைய கல்வித்திறனை புதிய துறைகளில் உருவாகப்போகும் வேலைகளுக்கு மேம்படுத்தலாம் (upskill). தேவைக்கதிகமாக அரச துறைகளில் ஊழியர்களை பணிக்கமர்த்தி அவர்களுக்கு செய்வதற்கு கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் இல்லாமல் வைத்திருப்பதன் மூலம் மக்களின் வரிப்பணம் விரையமாக்கப்படுவதை தவிர்க்கலாம். அதற்காக இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டின்படி 1500 அரச பணியாளர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. அரச பணியாளர்கள் வேகமான மாற்றம் ஒன்றிற்குள் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஜனாதிபதியின் பல்வேறு தகவல்களிலும் இது வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

 

எளிமையாக இருப்பது வைரலாகும் அளவுக்கு அரசியல்வாதிகளும் மக்களும் கெட்டுப்போனார்களா?

எளிமையாக இருப்பது வைரலாகும் அளவுக்கு அரசியல்வாதிகளும் மக்களும் கெட்டுப்போனார்களா?

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு அநுரகுமார திசநாயக்க ஜனாதிபதியானதிலிருந்து அவரது எளிமையும் ஆடம்பரமற்ற நடவடிக்கைகளும் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஜனாதிபதி ஒருவர் இவ்வாறு மக்களோடு மக்களாக கலந்து வாழ்வது, நடமாடுவது என பொதுமக்கள் எளிதில் அணுகக் கூடிய நபராக இருப்பது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வாதப்பிரதிவாதங்களையும் தோற்றுவித்துள்ளது.

இலங்கை அரசியலைப் பொறுத்தவரை பெரும்பாலும் பிரபுத்துவ, நிலவுடமையாளர்களும் மற்றும் மேல்தட்டு வர்கத்தினரும் அவர்களின் வாரிசுகளுமே மாறி, மாறி அதிகாரத்தில் இருந்திருக்கின்றார்கள். இந்தப்போக்கை இலங்கையில் மட்டுமல்ல தெற்காசியாவிலும் பெரும்பாலான நாடுகளில் காணலாம்.

அநுரகுமார தான் முதல் தடவையாக தரைப் பாதையினூடாக யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதியாவர். சமீபத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுரகுமார நாடு திரும்பும் போது அவர் பயணித்த விமானத்தில் எக்கொனமிக்ஸ் வகுப்பில் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்த பயணிகளுடன் நலம் விசாரித்து அளவளாவியது சுற்றுலாப் பயணிகள் உட்பட பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்து. இந்த சம்பத்தை நேரில் பார்த்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உறவினர்கள் அநுரகுமாரவின் நடத்தையை பாராட்டி சமூகவலைத்தளத்தில் பகிர்ந்திருந்தனர்.

நேற்றைய தினம் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயாரை பார்க்க சென்ற ஜனாதிபதி அநுர மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து தாயாரை பார்வையிட்ட செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் வைரலாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தாயாரைப் பார்ப்பதற்காக, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். இதன்போது பிடிக்கப்பட்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இவ்வாறு அதிகாரத்தின் உச்சத்திலிருக்கும் ஆட்சித் தலைவர்கள் மேற்கு நாடுகளில் தமது அன்றாட வாழ்க்கையில் தமக்கான வேலைகளை அவர்களே செய்வது சர்வ சாதாரணம். குறிப்பாக தமது தனிப்பட்ட குடும்ப தேவைகளுக்காக பொருட்கள் வாங்க செல்லும் அவர்கள், மக்களோடு மக்களாக வரிசையில் காத்து நின்று பணம் செலுத்தும், தமது அலுவல்களை முடிப்பதும் பேசு பொருளாவது இல்லை. ஜேர்மனியின் முன்னாள் கன்சலரின் அங்கேலா மார்க்கல் பேர்லினில் பல்பொருள் அங்காடியில் தானே சென்று பொருட்கள் வாங்குவது தான் வழமை. அதேமாதிரி நெதர்லாந்து ஆட்சியாளர் தானே சென்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவது வழமை. ஆட்சியாளர்கள் மக்களோடு மக்களாக வாழும் போது தான் அவர்கள் மக்களுக்கு என்ன தேவை என்பதையும் அறியக் கூடியதாக இருக்கும்.

இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசியல்வாதிகளும் பெரும்பாலும் அரச மருத்துவமனைகளை நாடுவது இல்லை. மாறாக இவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனைகளையே நாடும் போக்கு காணப்படுகிறது. நாட்டின் – மக்களின் தலைவர்களான பிரதிநிதிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசு மருத்துவமனைகளை நாடாத காரணத்தால் அரச மருத்துவமனைகள் இயங்கும் நிலை பற்றிய அடிப்படை அறிவு இதுவரை ஆட்சியில் இருந்த எந்த அரசியல் தலைவர்களுக்கும் தெரிந்ததில்லை. இது மருத்துவ மாபியாக்கள் இலகுவாக தம் இஷ்டத்துக்கு செயல்படவும் , மருத்துவர்களின் அசட்டையீனங்களுக்கும், மருத்துவசாலை அதிகாரிகளின் அடாவடிகளுக்கும் காரணமாக உள்ளது.

வடக்கில் இடம்பெறும் மருத்துவ மாஃபியாக்களை பற்றி தமிழ்தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் யாருமே மறந்தும் வாய் திறந்தது கிடையாது. ஆர்வக்கோளாறு பாராளுமன்ற உறுப்பினர் ஊசி அர்ச்சுனா மருத்துவ மாபியாக்களை சாடி பாராளுமன்ற ஆசனம் ஒன்றை பெற்றிருந்தாலும் கூட ஆக்கப்பூர்வமான வகையில் மருத்துவமாபியாக்களை அவரால் அம்பலப்படுத்த முடியவில்லை. இதேவேளை தமிழர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து செல்லக்கூடாது, நாட்டில் அதனால் தமிழர் உரிமைகளை பெறுவது சிக்கலாகும் என கூவும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னுடைய மருத்துவ சிகிச்சைக்காக பாராளுமன்ற அமர்வுகளுக்கு விடுப்பு எடுத்து அண்மையில் வெளிநாடு சென்றிருந்ததமையும் இங்கு கவனிக்கத்தக்கது. அவர் மட்டுமல்ல சமீபத்தில் திடீர் நோய் வாய்ப்பட்ட சிவாஜிலிங்கம் கொழும்பில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

எப்படியாயினும் ஜனாதிபதி அநுரகுமாரவின் எளிமையான நடவடிக்கைகள் ஒரு பக்கம் விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது. ஜனாதிபதி தானாகவே கார் கதவை திறந்து கொண்டு இறங்குவது. மக்களை மிக நெருங்கி போய் உரையாடுதல் போன்ற செயற்பாடுகளின் போது ஜனாதிபதியினுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சிக்கலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இமாலயப்பிரகடனத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பு!

இமாலயப்பிரகடனத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பு!
நேற்றைய தினம் கொழும்பு BMICH இல் நடைபெற்ற இமாலாய பிரகடனம் தொடர்பான கலந்துரையாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதேமாதிரியான ஒரு ஆர்ப்பாட்டம் கனடாவில் இமாலய பிரகடனத்துடன் தொடர்புடைய கனடிய தமிழ் கொங்கிரஸ் ஒழுங்கு செய்திருந்த தமிழர் தெருவிழாவில், தென்னிந்தியப் பாடகர் சிறினிவாஸின் இசை நிகழ்ச்சியை குழப்பும் வகையில் நடத்தப்பட்டிருந்தது. கனடாவில் நடந்த ஆர்ப்பாட்டம் இறுதியில் வன்முறையில் முடிந்திருந்திருந்து. கனடா வாழ் புலம்பெயர் தமிழர்களுக்கு தலைகுனிவையும் ஏற்படுத்தியிருந்தது.
என்பிபி அரசாங்கம் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கப் போவதாக திட்டவட்டமாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவித்துள்ளது. இச் சூழலில் இனப்பிரச்சினைக்கும் புதிய அரசியலமைப்பு ஊடாக நிரந்தர தீர்வு காண்பதற்கு ஏதுவான சூழல் அமைந்துள்ளது. இச் சூழலை தமிழர் தரப்பு தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால் ஒரு முக்கியான தருணத்தில் ஈழத்தமிழர் நாட்டிலும் புலத்திலும்; ஒற்றுமையின்றி பல்வேறு குழுக்கள், அமைப்புகள் மற்றும் கட்சிகளாக பிளவுபட்டு நிற்கிறார்கள். தமிழ் மக்களின் நலன்கருதியன்றி சுயநலமாகவும் தன்னிச்சையாகவும் செயற்படுகின்றனர். அப்படியொரு புலம்பெயர் அமைப்பான உலகத் தமிழர் பேரவையும் மற்றும் சிறந்த இலங்கைக்கான பௌத்த சங்கமும் இணைந்து உருவாக்கியதே இமாலய பிரகடனம். இந்தப்பிரகடனம் கடந்த வருடம் நேபாளம் நாட்டில் நாகர்கோட் என்ற நகரில் வைத்து வெளியிடப்பட்டது. இதன் நோக்கம் மற்றும் அவசியம் பற்றி உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்தர் இவ்வாறு கூறுகிறார்.
கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் கண்டுபிடிக்கும் நோக்கத்தோடு பௌத்த குருமாரோடு இணைந்து ஒரு தமிழ்த் தரப்பு இவ்வாறு பிரகடனம் ஒன்றை வெளியிட்டிருப்பது இதுதான் முதல் தடவை.
2009 இல் யுத்தம் மௌனிக்கப்பட்ட, புலிகளுக்கு பின்னான, தமிழ் மக்களின் பேரம்பேசும் பலம் குறைந்து போய்விட்டது. அதனால்தான் தாயகத்துக்கு வெளியில் இருந்து தாயகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் பிரகடனங்களை உருவாக்கும் உரிமையை ஜி.ரி.எஃப் (GTF) எவ்வாறு தன்னிச்சையாக கையிலெடுக்க முடியும் என புலத்திலும் நாட்டிலும் GTF உலகத் தமிழர் பேரவை விமர்சனத்தை எதிர்கொள்கிறது. அதேநேரம் GTF புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தையும் சரி, நாட்டில் வாழும் தமிழ் மக்களையும் முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை எனவும் எதிர்ப்புக்கள் எழுந்திருந்தன.
முதலில் நாட்டில் உள்ள தமிழ்க் கட்சிகள், செயற்பாட்டாளர்கள், நாட்டில் வாழும் பொதுமக்கள், சிவில் சமூக அமைப்புகளுடன் உரையாடியிருந்திருக்க வேண்டும். அதன்பின்னர் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியிலும் இது தொடர்பாக விவாதித்திருக்க வேண்டும். ஆயினும் இனப்பிரச்சினைக்கான இறுதி முடிவை எடுப்பது இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்மக்களே. புலம்பெயர் தமிழர்கள் நாட்டில் வாழும் மக்களின் ஜனநாயக அரசியல் உரிமையில் ஏதேற்சை அதிகாரத்தோடு செயற்பட முடியாது. ஏற்கனவே நடந்த தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் புலம்பெயர் தமிழர்கள் செலுத்திய செல்வாக்கால் தாயகத்தில் வாழ்ந்த மக்கள் பல நெருக்கடிக்களை சந்தித்தமையும் குறிப்பிடத்தக்கது.
இறுதி யுத்ததின் போது கடும் போர்ச் சூழலிலிருந்து மக்கள் வெளியேறினால் தனிநாடு கனவு பலிக்காது என கருதிய புலம்பெயர் தமிழர்கள், அவர்களை வெளியேற்ற வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்தும், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். முள்ளிவாய்க்காலில் பேரவலம் நடந்து கொண்டிருக்க புலம்பெயர் நாடுகளில் அதனை நிறுத்த புலம்பெயர் அமைப்புக்கள் எந்தவிதமான இராஜதந்திர நகர்வுகளையும் செய்யவில்லை. மாறாக இந்த யுத்தத்தை புலிகள் ஆரம்பித்த போது அதனை நெய்யூற்றி வளர்த்துவிட்டவர்கள் புலம்பெயர் தமிழர்களே.
வன்னியில் விழுகின்ற செல்கள் வெளிநாடுகளில் உள்ள தங்களை எதுவும் செய்யாது என்பதாலும் தாங்களும் தங்களது பிள்ளைகளும் பாதுகாப்பாக உள்ளார்கள் என்பதாலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத் தமிழர்களை மரண யுத்தத்திற்குள் வலிந்து தள்ளிவிட்டனர். யுத்தத்தில் போய் களமாடியவர்கள் கால், கைகளை இழந்து தவிக்கின்றனர். இந்த யுத்தத்தைக் காட்டி உழைத்த சிலர் மில்லியனெயர்கள் ஆயினர். யுத்தத்தை பிரைட்ரைஸ் சாப்பிட்டுக் கொண்டு சோபாவிலிருந்து 56 இஞ்சி ரீவியில் பெரிசாகப் பார்த்தவர்கள் தான் இப்ப பெரிய தேசியவாதிகளாக தங்களைக் காட்டிக்கொள்கின்றனர். உணர்ச்சித் தேசியம் பேசுகின்றனர். இப்பவும் இவர்களுக்காக கொஞ்சப் பேர் சாகத் தயாராக இருப்பதாகவே இவர்கள் நினைப்பு.
இவ்வாறான பின்னணியில் யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகளாகியும் யுத்தத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரம் மிகச் சீரழிந்த நிலையில் இருக்கிறது. அபிவிருத்தி மற்றும் மீள் கட்டுமானம் எல்லாம் மந்த கதியில் நடந்து கொண்டிருக்கின்றன. போராடியவர்கள் மறக்கப்பட்டுவிட்டார்கள். போராடத் தூண்டியவர்கள் நாடு திரும்பி தமது தனிப்பட்ட வியாபார முயற்சிகளை செய்கின்றனர். பணத்தை கொட்டி ஹோட்டல்கள் கட்டுகிறார்கள். இப்போது அன்றைய சிங்களப் பேரினவாத அரசு, இன்று அவர்களுக்கு உற்ற நண்பன். விடுதலைப் போராட்டத்தில் பிள்ளைகளை பறிகொடுத்த உயிர்களின் பெறுமதியையிட்டு யாருக்கும் எந்த அக்கறையும் இல்லை.