14

14

சங்கு சின்னத்தில் போட்டியிட்ட அரியநேத்திரனுக்கு எதிராக தேர்தல்கள் ஆணையம் சட்டநடவடிக்கை எடுக்க தீர்மானம்!

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமது தேர்தல் பிரசார வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய அரியநேத்திரன் உட்பட மூவருக்கு எதிராக சட்ட சடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

மூன்று ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தல் பிரசார வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்படி வண. பத்தரமுல்லே சீலரதன தேரர் சரத் கீர்த்திரத்ன, மற்றும் பி.அரியநேத்திரன் ஆகியோரே அந்த மூன்று வேட்பாளர்களுமாவர்.

இந்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அத்தகைய குற்றத்திற்கான அபராதம் ரூ. 100,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது பிரசார நிதி அறிக்கைகளை சமர்ப்பிக்க நேற்று (13) நள்ளிரவு வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பி. அரியநேத்திரன் சங்கு சின்னத்தில் பொதுவேட்பாளராக போட்டியிட்டிருந்தார்.

டப்ளியு.எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர், அர்ஜூன அலோசியஸ்சுக்கு 06 மாத சிறை !

வெட் வரி ஏய்ப்பு தொடர்பில் டபிள்யூ.எம். மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 6 மாத கால சிறைத்தண்டனை விதித்துள்ளது.

 

2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபா வெட் வரியை செலுத்தாமைக்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.

 

உரிய வரியை செலுத்துமாறு கடந்த வருடம் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

 

இந்த வழக்கு இன்று (14) கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க முன்னிலையில் அழைக்கப்பட்டது.

 

அப்போது உரிய தொகையை செலுத்தாததால், பிரதிவாதிகளுக்கு எதிராக நீதிமன்றம் இந்தத் தண்டனை விதித்தது.

என்னை கட்சியை விட்டு அகற்ற முயற்சிக்கிறார்கள் ஆனாலும் தமிழரசுக்கட்சியை விட்டு நான் விலகமாட்டேன் – யாழ்ப்பாணத்தில் சிவஞானம் சிறீதரன்!

நான் இலங்கைத் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறி விடுவேன் எனப் பலர் கூறுகிறார்கள். நான் ஒருபோதும் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறமாட்டேன். என்னைக் கட்சியை விட்டு வெளியேற்றுவதற்கு பலர் முயற்சி செய்கின்றார்கள். ஆனால், நான் கடைசி வரை போராடுவேன். நாங்கள் இந்தத் தேர்தலில் குறைந்தபட்சம் 15 நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்ற வேண்டும்.

 

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ். தந்தை செல்வா மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“தமிழர்களுக்கு இணைந்த வடக்கு – கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை அடிநாதமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கட்சியே இலங்கைத் தமிழரசு கட்சி. அதனுடைய கொள்கை பிறழாது, அதனுடைய தாகம் தீராது, அதனுடைய அடிப்படை மாறாது எங்களுடைய கட்சி இப்போதும் நிலையான பயணத்தைச் செய்து வருகின்றது.

 

தற்போது நாட்டிலேயே மாற்றம் பற்றி அதிகம் பேசப்பட்டு வருகின்றது. தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றமானது ஒரு மாயையாக இருக்கலாம். அல்லது நீண்ட பயணத்தினுடைய ஒரு தொடக்கமாகக் கூட இருக்கலாம். ஆனால், அது நல்லதாக இருந்தால் நாங்களும் அவர்களோடு கைகோர்க்கத் தயாராகவுள்ளோம் என்பதை தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்.

 

சிங்களத் தலைவர்கள் இதயசுத்தியோடு தமிழர்களுக்கான அரசியல் தீர்வைத் தருவார்களா என நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.

 

25 வருடங்களாக கிடப்பில் இருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி, 2004ஆம் ஆண்டு தமிழீழத்தின் தேசியத் தலைவர் பிரபாகரனின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் வெளியே வந்தது. அந்தக் கட்சியினுடைய பாரம்பரியம் 2004 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை மீண்டும் ஒரு புதுப்பொலிவைப் பெற்றுப் பயணம் செய்து வருகின்றது.

 

நாம் குறைந்தபட்சம் 15 நாடாளுமன்ற ஆசனங்களை எடுக்க வேண்டும். அவ்வாறு பெற்றால் எங்களுக்கான மாற்றத்தைத் தரும் களமாக அது மாறும். அதிலிருந்து நாம் பின்வாங்கினால், எங்களுடைய மக்கள் சரியான முடிவுகளை எடுக்கத் தவறினால் நாங்கள் தோற்றுப் போன இனமாக மாறிக்கொண்டே போவோம்.

 

பலர் நான் கட்சியை விட்டு வெளியேறி விடுவேன் எனக் கூறுகின்றார்கள். நான் ஒருபோதும் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறமாட்டேன். என்னைக் கட்சியை விட்டு வெளியேற்றுவதற்குப் பலர் முயற்சி செய்கின்றார்கள். ஆனால், நான் கடைசி வரை போராடுவேன். பகிரங்கமாகச் சொல்கின்றேன் ஒரேயொரு கட்சி அரசியல் அது இலங்கைத் தமிழரசுக் கட்சியே.

 

நான் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்ற போதும் வழக்கை எதிர்கொண்டு வருகின்றேன். எனது கட்சிக்காரர்களே நான் தலைவராகச் செயற்படக்கூடாது என வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளார்கள். அத்தனை சவால்களையும் தாண்டி இந்தக் கட்சியில் இருக்கின்றேன்.

 

ஒரு கட்சியாக ஒருங்கிணைய வேண்டும். அலைபாயக்கூடாது. நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றபோதுதான் வரலாற்றின் வெற்றிகள் எங்களைத் தேடி வரும். இயற்கையும் வரலாறும் ஒரு காலமும் தவறுவிடாது.

 

அண்மை காலங்களிலே என் மீதான சேறுபூசல்கள் மிகப்பெரிய அளவிலே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மதுபான சாலைக்கான சிபாரிசு கடிதத்தைச் சிறீதரன் எம்.பி. வழங்கினார் என்று பலர் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.

 

என் மீதான தவறான தகவல்களைப் பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்காகப் பொலிஸ் நிலையத்திலே முறைப்பாடு செய்துள்ளேன். வழக்கைத் தொடர்ச்சியாகவும் நடத்தவுள்ளேன். நான் இந்த விடயத்தை விடப்போவதில்லை.

 

நான் மதுபான சாலைக்கான சிபாரிசுக் கடிதத்தை நான் வழங்கியிருந்தால் அதனை வெளிப்படுத்தவும். அதனை வெளிப்படுத்தாமல் வெறுமனே ஊகங்கள் அடிப்படையில் எழுதுவதைத் தவிருங்கள். உண்மைகளை எழுதுங்கள்.

 

அரசியலில் உள்ளவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த காலத்தில் அரசியலுக்குள் வந்தவன் நான். என்னுடைய அரசியல் அரசியல் பயணம் என்பது வெறும் பஞ்சு மெத்தைக்குள் வந்ததல்ல. நான் கல்லிலும் முள்ளிலும் நடந்து வந்தவன்.

நான் மதுபான சாலைக்கான சிபாரிசுக் கடிதத்தைக் கொடுத்தவனும் அல்லன், இனிமேல் கொடுக்கப் போறவனும் அல்லன். என்னுடைய இனத்துக்கு விரோதமான, என்னுடைய கட்சிக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டேன் என்பதை இங்கு பகிரங்கமாகச் சொல்ல விரும்புகின்றேன்.

என்னுடைய கட்சியைச் சேர்ந்தவர்களே என்னைப் பற்றி தவறாக எழுதுகின்றார்கள். சிலர் சொல்லுவதைக் கேட்டு மோசமாக எழுதினார்கள். அவை எல்லாவற்றையும் கடந்து வந்து பொறுமையோடும் நிதானத்தோடும் என்னுடைய அரசியலை மேற்கொண்டு வருகின்றேன்.” – என்றார்.

தொடரும் இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் – காசாவின் அகதிகள் முகாம் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் பலி – நூற்றுக்கணக்கானோர் காயம் !

மத்திய காசாவில் உள்ள பலஸ்தீனியர்களுக்குப் புகலிடமாக பயன்படுத்தப்படும் பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல்  நடத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலானது  (13.10.2024) காசாவின் நுசிராத் முகாமில் உள்ள தளம் மீதே நடாத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கணக்காணோர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் வடக்கு இஸ்ரேலில் உள்ள இராணுவ தளத்தை குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பு ஆளில்லா விமான தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் நான்கு வீரர்கள் கொல்லப்பட்டதுடன், 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

டெல் அவிவ் மற்றும் ஹைஃபா இடையே அமைந்துள்ள பகுதியில் உள்ள இஸ்ரேலிய தற்காப்புப் படைகளின் கோலானி படைப்பிரிவின் பயிற்சி முகாமை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழன் அன்று தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட்டில் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆயுதக் குழுவின் ஊடக அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் !

யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு முன்பாக வலி வடக்கு சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்,சாராயத்தை விற்று எமக்கு வாய்க்கரிசி போடாதே வீரியம் குறைப்பதும் சாராயம் காரியம் கெடுப்பதும் சாராயம் மதுவை ஒழிப்போம் மாண்பை காண்போம் உள்ளிட்ட பல வாசகங்கள் அடங்கிய அட்டைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவகெங்கா சுதீஸ்னரிடம் மகஜர் ஒன்றும் வழங்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற சமயம் அப் பகுதியில் ஏராளமான பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சட்டத்தரணி நடராஜர் காண்டீபன், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சங்கு புனிதமானது கிடையாது – தமிழ்மக்களிடம் மன்னிப்பு கோரும் தமிழ் பொதுக்கட்டமைப்பு !

நாணயமானவர்களுக்கும் , கறைபடியாதவர்களுக்கும் தேச திரட்சிக்காக உழைப்பவர்களுக்கும் மக்கள் வாக்களிக்க வேண்டும் என பொதுக்கட்டமைப்பை சேர்ந்த நிலாந்தன் தெரிவித்துள்ளார் . யாழ் . ஊடக அமையத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ( 13 ) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார் .

 

மேலும் தெரிவிக்கையில் ,

தமிழ் மக்கள் பொதுச்சபை ஜனாதிபதி தேர்தலை கையாண்ட போன்று , மற்றைய தேர்தல்களை கையாள முடியாததால் நாடாளுமன்ற தேர்தலில் விலகி இருக்கின்றது . ஜனாதிபதி தேர்தலில் பாவித்த சங்கு சின்னத்தை பாவிக்க வேண்டாம் என கோரினோம் . கட்சிகள் விரும்பி இருந்தால் சங்கு சின்னத்தை எடுக்காது இருந்து இருக்கலாம் . அதனையும் மீறி எடுத்துள்ளார்கள் .

சங்கு சின்னத்திற்கும் , தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் , பொது கட்டமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை . தமிழ் மக்கள் பேரவையின் கூர்ப்பாகவே தமிழ் மக்கள் பொதுச்சபையாகும் . பொதுச் சபை அடுத்த கூர்ப்புக்கு போன பின்னரே தேர்தல்களை எதிர்கொள்ள முடியும் . தமிழ் மக்கள் பொதுச்சபை ஜனாதிபதி தேர்தலில் தேச திரட்சியை எதிர்பார்த்து , அதில் வெற்றியும் பெற்றோம் . அது சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புடன் மீள சிதறியுள்ளது . நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் பலம் தமிழ் மக்கள் பொதுச்சபையிடம் இல்லாததால் , அதில் இருந்து விலகி இருக்கிறோம் . எனவே மக்கள் நாணயமானவர்களுக்கும் கறைபடியாதவர்களுக்கும் தேச திரட்சிக்காக மக்கள் வாக்களிக்க வேண்டும்.

சங்கு சின்னம் புனிதமானது இல்லை. அதற்கு யாரும் உரிமை கோர முடியாது . அது ஒரு பொது நிலைப்பாட்டிற்கான குறீயிடு. பொதுக்கட்டமைப்பில் இருந்த பலர் வெளியில் நிற்கும் போது சிலர் மட்டும் அதனை பயன்படுத்துவது அறமில்லை . சங்கு சின்னத்திற்கு , நாடாளுமன்ற தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடுபவர்கள் மட்டும் உழைக்கவில்லை . பலரின் உழைப்பு அதில் உண்டு . தேர்தல் பிரச்சாரத்திற்கு பலர் முன்னரங்கில் வந்து உழைக்காமல் பின்னின்று உழைத்தவர்களும் உண்டு . தேச திரட்சியை உருவாக்க முயன்று வெற்றி கண்டு சில நாட்களில் அது சிதறுண்டு போயுள்ளது . அதற்காக நாம் மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம் . அத்துடன் பொதுக்கட்டமை தற்போது இல்லை என தெரிவித்தார்.

இறந்த இலங்கை தமிழ் அகதியின் உடலை புதைக்க நிலம் இல்லாமல் இலங்கை தமிழ் அகதிகள் போராட்டம்!

இந்தியாவில் பாலக்காடு என்ற இடத்தில் இலங்கை அகதிகள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

குறித்த போராட்டமானது நேற்றையதினம்(13) பாலக்கோடு கேசர்குளி சாலையில் இடம்பெற்றுள்ளது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கேசர்குளி அருகே உள்ள சாமன்கொட்டாய் பகுதியில் 80 குடும்பங்களை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு போதுமான இடவசதி இல்லாததால் வேறு பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய குடியிருப்புக்கள் கட்டித் தர நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவர்களின் கோரிக்கையை ஏற்று கேசர்குளி அருகில் உள்ள சாமன்கொட்டாய் பகுதியில் புதிய குடியிருப்புக்களை கட்டிய தமிழக அரசு இப்பகுதியில் குடிநீர், சாக்கடை கால்வாய், சுடுகாடு உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் கடந்த மார்ச் மாதம் இலங்கை அகதிகளை இம்முகாமில் குடியமர்த்தியுள்ளது.

 

கடந்த 7 மாதங்களாக இது குறித்து பல முறை தமிழக முதலமைச்சருக்கும், மாவட்ட அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்தும் அரசு எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இந்த முகாமை சேர்ந்த ரூபன் (வயது55) என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

இவரது உடலை அடக்கம் செய்ய இடம் இல்லாததாலும், பழைய முகாமில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்ல வழியில்லாததாலும் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முடியாததால் மயானத்திற்கு இடம் கேட்டு பாலக்கோடு-கேசர்குளி சாலையில் 100-க்கும் மேற்பட்டோர் இன்று திரண்டு வந்து திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.