31

31

அனுர ஆட்சியில் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் நிகழுமா என்பதில் பாரிய சந்தேகம் – ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்

மக்கள் எதிர்பார்த்த மாற்றம் நிகழுமா என்பதில் பாரிய சந்தேகம் இருக்கிறது என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று (31) யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு தேர்தல் வருகிறது, ஒரு மாற்றத்திற்கான தேர்தல் என்று சொல்லப்படுகிறது. அந்த மாற்றத்தின் ஆரம்பம் ஜனாதிபதி தேர்தல் என்று ஜனாதிபதி தேர்தலை கூறுகிறார்கள்.

அது ஒரு வகையிலும் சரியானது தான் எமது நாட்டில் இரு கட்சி ஆட்சி என்று சொல்லப்படும் நிலையில் அந்த இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்த காலத்தில் ஒரு பாரிய மாற்றமாக மூன்றாம் தரப்பு இப்பொழுது ஆட்சியை பிடித்து இருக்கிறது.

அந்த மூன்றாம் தரப்பு யார் என்று நாங்கள் பார்த்தால் ஒரு தடவை அல்ல இரண்டு தடவைகள் ஆட்சியை பிடிப்பதற்காக ஆயுதம் எடுத்து போராடிய தரப்பினர்.

ஒரு மாற்றம் வேண்டும் என்ற நிலையில் யாரிடம் இந்த பொறுப்பை ஒப்படைக்க மக்களுக்கு கிடைத்தது தேசிய மக்கள் சக்தி தான். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த மாற்றம் நிகழுமா என்பதில் பாரிய சந்தேகம் இருக்கிறது என தெரிவித்தார்.

17 தடவைகள் மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைகளை நான் கேட்க மாட்டேன் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

17 தடவைகள் மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போன்ற ஒருவரின் ஆலோசனையை நான் ஒருபோதும் பெறமாட்டேன் என பிரதமர் ஹரிணி அமரசூரிய  தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் அடிப்படையான “மக்கள் ஆணையை” புரிந்து கொள்ளாத ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்பை கற்பிக்க முன்வருவது பெரிய நகைச்சுவை என பிரதமர் கூட்டமொன்றில் விமர்சித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், ரணிலிடம் நான் ஒருபோதும் அறிவுறை பெற மாட்டேன், 17 முறை மக்களால் நிராகரிக்கப்பட்டவர், விடாமல் இன்னும் தொங்கிக் கொண்டிருக்கிறார்.

மக்கள் மாறிவிட்டார்கள் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அரசியலமைப்பை கற்பிக்க முடியும் என்று ரணில் சொல்வது மிகப்பெரிய நகைச்சுவை. அரசியலமைப்பின் அடிப்படையானது மக்களின் ஆணையாகும். இதையும் புரிந்து கொள்ளத் தவறிய ரணிலுக்கு அரசியலமைப்புச் சட்டம் பற்றித் தெரியுமா என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

 

முடிவுகளை எடுக்கும்போது சரியான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், அத்தகைய நடைமுறைகள் ஏற்றுக்கொள்ளப்படாததால் நாடு பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது என்றும் நான் கூறியிருந்தேன்.

மக்களின் கருத்துக்களை கேட்டு, அதிகாரிகளின் கருத்துக்களை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்கிறோம்.அவர்கள் ஆட்சி செய்ததைப் போன்று நாமும் நாட்டை ஆள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கவே இல்லை.

மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்தது அமைப்பை மாற்றுவதற்காகவே தவிர, அவர்களிடமிருந்து பாடம் கற்று அதையே செய்ய அல்ல.அப்படிச் செய்தால் நாளை எங்களை வெளியேற்றுவீர்கள்.

நாங்கள் ரணிலுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் அல்ல. நாங்கள் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்,” என்றார்.

அண்மையில் அரசியலமைப்பு குறித்து பிரதமர் ஹரிணி கற்றுக் கொள்ள விரும்பினால் அதனை கற்றுக்கொடுக்க முடியும் என ரணில் தெரிவித்திருந்தமையை அடுத்து பிரதமர் மேற்கண்டவாறு கருத்துக்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரக்கம் கொண்ட ஒரு புதிய கலாசார இருப்பை உருவாக்க முன்வருமாறு அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். – தீபாவளி வாழ்த்தில் ஜனாதிபதி அனுர குமார!

அஞ்ஞானத்தின் இருளை போக்க மெய்ஞ்ஞானத்தின் ஒளியினால் மட்டுமே முடியும் என்ற தொனியில் தீபங்களை ஏற்றி இலங்கையர்களாக புதிய புரட்சிக்கு வழிவகுப்பதாக இம்முறை தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

உலகளாவிய ரீதியில் இன்றைய தினம் (31.10.2024) கொண்டாடப்பட்டு வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலகவாழ் இந்து பக்தர்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

சுதந்திரத்திற்கு பின்னர் இருளிலிருந்து வெளிச்சத்தை தேடிவந்த இலங்கை மக்கள் தற்போது புதிய எதிர்பார்ப்புக்களை சுமந்து கொண்டிருக்கின்றனர்.

இது மக்களின் பல வருட எதிர்பார்ப்பாகும். இத்தனை நாட்களாக இலங்கையை ஆட்சி செய்தவர்களால் முடக்கி வைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை மலரச் செய்யும் மாற்றத்துக்கான யுகத்தை நாம் ஆரம்பித்துள்ளோம்.

தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு பல காரணங்கள் உள்ளன. 14 வருட வனவாசத்தின் பின்னர் இராமர், இலட்சுமணர், சீதை பிராட்டி மீண்டும் அயோத்திக்கு வருகை தந்தமை மற்றும் கிருஷ்ண பகவான் நரகாசுரனை அழித்தமையை நினைவுகூறும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அஞ்ஞானத்தின் இருளை போக்க மெய்ஞானத்தின் ஒளியினால் மட்டுமே முடியும் என்ற தொனியில் தீபங்களை ஏற்றி இலங்கையர்களாக புதிய புரட்சிக்கு வழிவகுப்பதாக இம்முறை தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம் என மக்களிடம் கேட்டுகொள்கிறேன்.

கலாசார பல்வகைத்தன்மையின் அழகை மெருகூட்டும் வகையில், ஒருவருக்கொருவர் கௌரவம், ஏற்றுக்கொள்ளல் மற்றும் சகோதரத்துவம் என்பவற்றுக்காக கரங்களை நீட்டுவோம்.

பிரித்து வலுவிழக்கச் செய்யப்பட்ட இலங்கை தேசத்தை பிளவுபடாமல் வலுவாக முன்னோக்கிக் கொண்டுச் செல்ல வேண்டிய காலம் உதயமாகியுள்ளது.

அநீதி, வேறுபாடுகள், பிளவுபடுத்தல், வெறுப்புப் பேச்சுகள், வன்முறைகள் என்பதை முழுமையாக துடைத்தெறிந்து சமூகத்தில் வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்வோர் மற்றும் வரப்பிரசாதங்கள் கிடைக்காதவர்கள் என்ற வேறுபாடுகளை முழுமையாக இல்லாது செய்ய முன்வருவோம்.

 

அவ்வாறான, இரக்கம் கொண்ட ஒரு புதிய கலாசார இருப்பை உருவாக்க முன்வருமாறு அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். இந்தத் தீபாவளியில், வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கை என்ற நமது எதிர்பார்ப்பு நனவாக வேண்டுமானால், அதற்கான கலாசார, அரசியல் ரீதியான மனப்பாங்கு மாற்றமும் அவசியமாகும்.

 

தீபாவளி தினத்தில் அனைத்து வீடுகளிலும், நகரங்களிலும் ஏற்றப்படும் ஆயிரக்கணக்கிலான விளக்கின் ஒளிகள் அனைவரினதும் மனங்களில் நட்புறவு மற்றும் ஞானத்தின் ஒளியை பரவச் செய்வதாக அமையட்டும் என பிரார்த்திப்பதோடு இலங்கைவாழ் இந்து பக்தர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்” என வாழ்த்தியுள்ளார்.

குறைக்கப்படும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள்- ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ள கோரிக்கை!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தனக்கு எந்தவித சலுகைகளும் தேவையில்லை எனவும் ஏனைய ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

“ஜனாதிபதிகளின் வீடுகள் அகற்றப்படுகின்றன, எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

நான் அந்த வீட்டில் இல்லை. இது எனக்கு ஒரு பிரச்சனை அல்ல. சந்திரிகா மேடம் வெளியேற்றப்படுவது ஏன்? அந்த வீட்டை அவருக்குக் கொடுங்கள். மனிதாபிமான ரீதியாக இதனை கூறுகிறேன்.

மகிந்த ராஜபக்சவின் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும். போரை முடிவுக்கு கொண்டு வந்தவரை நினைத்து பாருங்கள்.

இன்று எல்லாரும் ஒரே மாதிரி கூக்குரலிடுகிறார்கள். அது இன்னொன்று. இன்று மக்கள் மத்தியில் யாரும் பிரபலமாக இல்லை. பாதுகாப்பு பிரச்சினை இருந்தால், யாருக்கேனும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அதை நிறுத்த வேண்டாம்.

என்னுடைய அனைத்தையும் அகற்றிவிட்டு மற்றவர்களுக்கு வழங்குங்கள்.

தற்போது சம்பளம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சொன்னதைச் செய்யுங்கள், அனைவரின் ஆதரவும் உண்டு. நான் இந்த பாராளுமன்றத்தை பாதுகாக்க வேண்டும் என்றே நினைத்தேன்” என்றார்.

இலங்கைக்கு சீனாவிடமிருந்து 400 மில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகள் !

இலங்கைக்கு 400 மில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகளை வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அண்மைய நாட்களில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி இந்த உதவி வழங்கப்படவுள்ளது.

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் கடந்த 22ஆம் திகதி இலங்கைக்கு 30 மில்லியன் ரூபாவை (100,000 அமெரிக்க டொலர்) நன்கொடையாக வழங்கியது.

அந்த நிதி உதவிக்கு மேலதிகமாக இந்த உதவியும் வழங்கப்படவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் குறிப்பிடுகிறது.

இனிமேல் எந்தவொரு அமைச்சருக்கும் கொழும்பில் வீடுகள் வழங்கப்படமாட்டாது – ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க

எதிர்வரும் பாராளுமன்றத்தில் எந்தவொரு அமைச்சருக்கும் அரசாங்கம் கொழும்பில் வீடுகளை வழங்காது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்கு அவர்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி, மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்

இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான இணைப்பாக தனது பங்கை மாற்றியமைக்கும் அமைச்சரவையும் அரசாங்கமும் நவம்பர் 14ஆம் திகதிக்கு பின்னர் உருவாக்கப்படும்.

மாவட்டத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு அன்றாடம் தீர்வுகளை வழங்குவதற்கு மக்களுக்கு நெருக்கமான மக்கள் தலைவர்களை கட்டியெழுப்புவது அவசியமாகும்.

மக்களிடம் இருந்து தொலைவில் உள்ள தலைவர்கள் அல்ல. வாக்குகளை பெற்று கொழும்பில் இருக்கும் தலைவர்கள் அல்ல.

அதனால்தான் எந்த அமைச்சருக்கும் கொழும்பில் வீடுகள் இல்லை. அரசாங்கம் தரப்போவதும் இல்லை.

கிராமத்திற்கு வாருங்கள், கிராமத்தின் பிரச்சனைகளைப் பாருங்கள். மக்களைத் திரட்டி இந்தப் பணியைச் செய்யுங்கள்.

இலங்கையில் இவ்வாறான அரசாங்கங்கள் உருவாகவில்லை. கிராமப்புற வறுமையை ஒழிப்பதே தேசிய மக்கள் சக்தி அரசின் தலையாய பணியாகும் என்றார்.