27

27

அடுத்த ஆண்டில் மாகாண சபை தேர்தல்- அநுர குமார திஸாநாயக்க

இலங்கை மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி – கஹவத்தையில் நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவர் மேலும் தெரிவிக்கையில் “.. உள்ளுராட்சி மன்ற தேர்தலையும் நடத்துவதற்கும் எதிர்பார்த்துள்ளோம்.

உள்ளுராட்சி மன்றத்திலிருந்து அமைச்சரவை வரை முழு அரச கட்டமைப்பும் பலப்படுத்தப்பட வேண்டும். அதனுடாகவே, நாட்டை கட்டியெழுப்ப முடியும்.

மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் வகையில் எதிர்கால செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்பதை உறுதியளிக்கிறேன்.

அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குப் பலமான நாடாளுமன்ற அதிகாரமும் அவசியமாகும். கடந்த காலங்களில் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மக்கள் மிகுந்த ஆத்திரத்துடன் இருந்தனர்.

குறித்த உறுப்பினர்களின் முறையற்ற செயற்பாடுகள் காரணமாக மக்கள் மத்தியில் அவ்வாறான கோபம் இருந்தது. எனவே, இருந்ததை விட மோசமான நாடாளுமன்றத்தையா அல்லது சிறந்த நாடாளுமன்றத்தையா உருவாக்க வேண்டும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் 25 பேருக்குக் குறைந்த உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவை ஸ்தாபிக்கப்படும்.

எனவே, ஊழலற்றவர்களைக் கொண்டு பலமிக்கதொரு நாடாளுமன்றத்தை உருவாக்குவதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..” என்றார்.

மீனவர் பிரச்சினை – கலந்துரையாட இலங்கை வருகிறது இந்திய குழு !

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இந்திய பிரதிநிதிகள் குழுவினர் நாளை மறுதினம் நாட்டிற்கு வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

12 பேர் கொண்ட குழுவினர் இவ்வாறு நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்குமாறு கோரி இந்திய மீனவர்கள் நேற்றைய தினமும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

 

இந்நிலையில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 12 பேர் கைது !

தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் சம்பவம் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.

இந்நிலையில், தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழக மீனவர்கள் சென்ற ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் – மூவர் வைத்தியசாலையில் அனுமதி !

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தன் பகுதியில் நேற்று (26) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

குறித்த பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் இன்று மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதன் போது முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் அடங்கிய குழு ஒன்று அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் அவர்கள் அந்த தாக்குதலை எதிர்த்தனர்.

இந்நிலையில் திரும்பிச் சென்ற குழு சுமார் 30 பேர் அடங்கிய குழுவினரை அழைத்து வந்து அங்கு பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் மீது மீண்டும் கொலை வெறி தாக்குதலை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த ஒரு பெண் உட்பட மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பெண் அதிதீவிர சிகிச்சை பிரிவிலும் ஏனைய இருவரும் 24 ஆம் இலக்க விடுதியிலும் சிகிச்சை பெற்று வருவதாக அறிய முடிகிறது.

இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

நான் எட்டு ஜனாதிபதிகளை சந்தித்துள்ளேன். ஆனால் அனுர வித்தியாசமாக இருக்கின்றார் – டக்ளஸ் தேவானந்தா

ஜனாதிபதி அனுரவின் அணுகுமுறையிலும் செயற்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனை பொறுத்திருந்து பார்க்கவேண்டும் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்தவர் காத்தார் சின்னக்குளம் பகுதியில் உள்ள கட்சியின் தேர்தல் அலுவலகம் ஒன்றை திறந்து வைத்திருந்தார்.

அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்தப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்கம் ஊடாகவே எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும்.

புதிய நாடாளுமன்றத்தில் கூடிய ஆசனங்களை பெறுவதன் மூலம் ஆட்சி அமைப்பவர்களுடன் நாங்களும் பங்குகொள்வதன் ஊடாக மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது அரசியல் இலக்கை அடைவதற்காக அத்திசையை நோக்கி பயணிக்கலாம் என்ற வகையில் பத்து மாவட்டங்களில் இம்முறை போட்டியிடுகின்றோம்.

இதனூடாக நான்கு அல்லது ஐந்து ஆசனங்களை பெறுவது எமது இலக்காக உள்ளது.

இதுவரை நான் எட்டு ஜனாதிபதிகளை சந்தித்துள்ளேன்.

ஆனால் இவர் என்னைவிட வயதில் இளைமையானவர், அவரது அணுகு முறையிலும் செயற்பாட்டிலும் நல்லதொரு மாற்றம் தெரிகிறது. எனினும் அதனைப் பொறுத்திருந்துதான் நாங்கள் பார்க்கவேண்டும்.

நாம் வடக்குக்கிழக்கு தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமை பிரச்சனையை பிரதானமாக முன் வைத்துள்ளோம்.

இந்த தேர்தலில் எமது கட்சி அதிக ஆசனங்களை பெறுவதற்கான வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்திருந்தார். சிலவேளை இந்தசந்தி்ப்பு பலருக்கு புளியை கரைத்திருக்கலாம்.

நாங்கள் இருதரப்புமே ஆயுதபோராட்டத்தின் பின்னர் நாடாளுமன்றம் சென்றவர்கள். அந்தவகையில் ஒரு புரிந்துணர்வு இருதரப்பிற்கும் உள்ளது.

அவர்களது ஆட்சியில் கலந்துகொள்ள போகிறோமா என்ற விடயத்தினை தேர்தலின் பின்னரே தீர்மானிக்கமுடியும்.

இதேவேளை எல்பிட்டியவில் தேசிய மக்கள் சக்தி 15 ஆசனங்களும் எதிர்த்தரப்புக்கள் 15 ஆசனங்களையும் பெற்றுள்ளது.

அவர்கள் பாராளுமன்றிலும் பெரும்பாண்மை எடுப்பதாக சொல்கிறார்கள். அதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஜனாதிபதித்தேர்தலிலும் கணிப்புகள் எல்லாம் பிழைத்து விட்டது. எனவே பொறுத்திருப்போம்.என்றார்.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் – 15 ஆசனங்களை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி!

இன்று (26) நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய,

தேசிய மக்கள் சக்தி – 17,295 வாக்குகள் – உறுப்பினர்கள் 15

ஐக்கிய மக்கள் சக்தி 7,924 வாக்குகள் – உறுப்பினர்கள் 06

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 3,957 வாக்குகள் – உறுப்பினர்கள் 03

பொதுஜன எக்சத் பெரமுன – 2,612 வாக்குகள் – உறுப்பினர்கள் 02

சுயேட்சைக்குழு 1 – 2,568 வாக்குகள் – உறுப்பினர்கள் 02

பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி – 1,350 வாக்குகள் – உறுப்பினர்கள் 01

தேசிய மக்கள் கட்சி – 521 வாக்குகள் – உறுப்பினர்கள் 01

தெவன பரபுர கட்சி – வாக்குகள் 388 – உறுப்பினர்கள் தெரிவாகவில்லை

ஜனசெத பெரமுன – வாக்குகள் 50 – உறுப்பினர்கள் தெரிவாகவில்லை

29 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகளும் 1 சுயேச்சைக் குழுவும் இன்று தேர்தலில் போட்டியிட்டன.

 

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.

 

இன்றைய வாக்களிப்பு 48 நிலையங்களில் இடம்பெற்றதுடன், இம்முறை எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் 55,643 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.