16

16

இலங்கையில் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதில் கியூபா அரசாங்கம் கவனம் !

இலங்கையில் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதில் கியூபா அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக இலங்கைக்கான கியூபா தூதுவர் அன்த்ரேஸ் மாசெர்லோ கொன்சாலெஸ் கொரிடோ தெரிவித்துள்ளார்

 

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கியூபா அரசாங்கத்தின் வாழ்த்துக்களையும் சேர்த்துக் கூறும் போதே பிரதமர் அலுவலகத்தில் கியூபா தூதுவர் இதனைக் தெரிவித்துள்ளார்

 

இதேவேளை இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையிலான ஏறக்குறைய 65 வருட கால இராஜதந்திர உறவை மேலும் வலுப்படுத்துதல், கியூபாவின் உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட நிறுத்தப்பட்ட நுளம்பு ஒழிப்பு திட்டங்களை மீள ஆரம்பித்தல், இலங்கையில் உள்ள பயிற்சி நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு மருத்துவ மற்றும் விளையாட்டு கல்விக்கான புலமைப்பரிசில்களை வழங்குதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது

 

மேலும் கடந்த சில வருடங்களில் கியூபா பொருளாதார ரீதியாக சவால்களை எதிர்கொண்ட போதிலும், கியூபாவின் தொடர்ச்சியான ஆதரவிற்கு தனது நன்றியைத் தெரிவித்த பிரதமர் , கியூபா பிரதமருக்கு இலங்கை விஜயம் செய்ய உத்தியோகபூர்வ அழைப்பையும் விடுத்திருந்தார் .

 

இதில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன மற்றும் கியூபா அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

உலகில் எங்கோ நடக்கும் மக்கள் படுகொலைகள் நம் மனசாட்சியை பாதிக்கவில்லை என்றால் உலகம், உலகமே இல்லை. “- நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்

உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. அதாவது, ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான நோபல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு, தென்கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கவித்துவமான மொழி நடையில் வரலாற்றுடன் தொடர்புப்படுத்தி எழுதியமைக்காக அவருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. தென்கொரியாவைச் சேர்ந்த முதல் பெண் எழுத்தாளர் நோபல் பரிசு பெறுவதால், அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் தனது பேஸ்புக் பக்கத்தில், “நமது நவீன வரலாற்றின் வலிமிகுந்த காயங்களைக் கடந்து ஒரு சிறந்த இலக்கியப் படைப்பை உருவாக்கியுள்ளது. இது கொரிய இலக்கிய வரலாற்றில் ஒரு மகத்தான சாதனை மற்றும் ஒட்டுமொத்த மக்களுக்கும் தேசிய கொண்டாட்டத்திற்கான காரணம்” எனப் பதிவிட்டுள்ளார்.

”ஹான் காங் ஒரு சிறந்த நாவலாசிரியர் ஆவார். இந்த உலகளாவிய அங்கீகாரத்திற்கு அவர் மிகவும் தகுதியானவர்” என பச்சிங்கோவின் கொரிய-அமெரிக்க எழுத்தாளர் மின் ஜின் லீயும், “ஒரு கொரிய நாவலாசிரியர் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வெல்ல வேண்டும் என்றால், அது ஹான் காங்காக இருக்க வேண்டும்” என்று தென்கொரிய எழுத்தாளர் சுங்-இல் கிம்மும் “கொரியாவின் கடந்தகால வரலாற்றை மறைக்கவும் சிதைக்கவும் முயற்சிக்கும் முட்டாள்தனத்தை இந்தப் பரிசு வென்றுள்ளது” தென் கொரிய எழுத்தாளர் கிம் போ-யங்கும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள தென் கொரிய எழுத்தாளரான ஹான் காங், இதுகுறித்த சந்தோஷத்தை ஊடகங்களிடம் பகிர்ந்துகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அவர், தனது தந்தையிடம் சில கருத்துகளைக் கூறியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது. அதன்படி ஹான் காங்கின் தந்தையும் எழுத்தாளருமான ஹான் சியுங்-வோன், “ ‘போர் உக்கிரமடைந்து, ஒவ்வொருநாளும் மக்கள் கொல்லப்பட்டு வரும் நிலையில், நாம் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும் அல்லது செய்தியாளர் சந்திப்பு எப்படி நடத்த முடியும்?’ என என் மகள் என்னிடம் கேள்வி எழுப்பினார்.

உக்ரைன் மற்றும் காஸாவில் நடைபெற்று வரும் போர், தன் மகளைத் தொந்தரவு செய்துள்ளது. ’உலகில் எங்கோ நடக்கும் மக்கள் படுகொலைகள் நம் மனசாட்சியை பாதிக்கவில்லை என்றால் உலகம், உலகமே இல்லை. நாம் ஒரு மனித உலகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறினால், நமது குரல்கள் எவ்வளவு பலவீனமாகவும் சிறியதாகவும் தொலைவில் இருந்தாலும் அதற்கான நமது பொறுப்புகளை நாம் கைவிட முடியாது’ என தன் மகள் தன்னிடம் தெரிவித்தார்.

 

வெகுஜன மனிதர்கள், துயரத்தில் இருக்கும்போது ஓர் எழுத்தாளராக தனக்கு தார்மீக பொறுப்பு இருப்பதாக அவள் உணர்கிறாள். ஆரம்பத்தில் இதைக் கொண்டாடுவதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், பின்னர் ஒரே இரவில் தன் மனதை மாற்றிக் கொண்டார்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிகரிக்கும் இணையதள மோசடி குழுக்களின் எண்ணிக்கை !

இலங்கையில் வெளிநாட்டவர்களால் நடத்தப்படும் இணையதள மோசடி குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

 

தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர்,”நாங்கள் இங்கே ஒரு தனித்துவமான சூழ்நிலையை அனுபவித்தோம்.ஸ்கேனிங் முகாம். இவை முகாம்களாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது இலங்கைக்கு ஒரு புதிய போக்கு. 2024ஆம் ஆண்டு தான் இந்த முகாமின் நிலை தெரியவந்தது. இந்த முகாமில் என்ன நடக்கிறது என்றால், அவர்கள் ஒரு தனி இடத்தை தேர்வு செய்கிறார்கள், அவர்களுக்கு அறை வசதியுடன் கூடிய விசாலமான இடம் தேவை. இவர்கள் வெளியே செல்ல அனுமதி இல்லை. இலங்கையர்கள் மியான்மரில் சிக்கியுள்ளனர் என்றால் அதே நிலைதான் இங்கும் நிலவுகிறது” என்றார்.

 

இணையவழி மோசடி தொடர்பில் சுமார் 300 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

மேலும், 500 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 300 கணினிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

இணையவழி மோசடியை மேற்கொள்ளும் நபர்களுக்காக இடங்களை வழங்குபவர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் தாக்கல் செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

வரி செலுத்தாமல் இருக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் -அமைச்சர் விஜித ஹேரத்

நாட்டில் பாரியளவில் வரி செலுத்தாமல் இருக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பாரிய வர்த்தகர்கள் பலரும் கோடிக்கணக்கில் அரசாங்கத்துக்கு வரி செலுத்தாமலிருக்கின்றனர். விரைவில் அவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

நாட்டில் பாரிய வர்த்தகர்கள் பலரும் கோடிக்கணக்கில் அரசாங்கத்துக்கு வரி செலுத்தாமலிருக்கின்றனர்.

 

இவ்வாறு செலுத்தப்படாமல் இருக்கும் பாரிய தொகையைப் பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விரைவில் அதனை செய்ய நாம் எதிர்பார்த்துள்ளோம்.

 

இந்த விவகாரத்தில் நபர்கள் தொடர்பான தராதரம் இன்றி நடவடிக்கை எடுப்பதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. அது முறையான வழிமுறைக்கமைய முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வற் வரியில் மோசடி செய்தமைக்காக பிரபல வர்த்தகர் அர்ஜூன் அலோசியஸூக்கு 6 மாத கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மக்களுக்கு 13 ஆவது திருத்தச்சட்டமும் அதிகாரப்பகிர்வும் அவசியமாக இல்லை – ரில்வின் சில்வா

வடக்கு மக்களுக்கு 13 ஆவது திருத்தச்சட்டமும் அதிகாரப்பகிர்வும் அவசியமாக இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

 

தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள இந்த வசனங்களை பயன்படுத்தி வருகின்றன என ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

 

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ”வடக்கில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. யாழ்ப்பாணத்தில் ஓரளவு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளக் கூடிய வசதிகள் உள்ள போதிலும் கிளிநொச்சி, வவுனியா அல்லது முல்லைத்தீவில் வாழும் மக்கள் மிகவும் கஷ்டமான வாழ்கையையே வாழ்கின்றனர்.

இங்குள்ளவர்கள் கல்வி முதல் அனைத்து விடயங்களையும் பெற்றுக்கொள்வதில் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். இந்த மக்கள் மிகவும் வறுமைக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். அங்குள்ள மக்களின் வாழ்கை முள்ளின் மேல் உள்ளது. பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி தேடுவதே அவசியமாக உள்ளது.

காணி முரண்பாடுகள் நீண்டகாலமாக உள்ளன. யுத்தக்காலத்தில் தமது காணியை கைவிட்டு வெளியேறி மக்கள் யுத்தம் நிறைவடைந்து சென்ற போது அந்த காணிகளை வேறு நபர்கள் கைப்பற்றி குடியேறியுள்ளனர்.

அரசாங்கம் தலையீடு செய்து அந்தப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. பிரச்சினைகள் அவ்வாறுள்ளன.

ஆனால், இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்காத வடக்கின் தமிழ் அரசியல் தலைவர்கள், தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள 13ஆவது திருத்தச்சட்டம் மற்றும் அதிகாரப்பகிர்வு போன்ற வசனங்களை பயன்படுத்திக்கொண்டனர்.

ஆனால், வடக்கின் அடித்தட்டு மக்களுக்கு 13ஆவது திருத்தச்சட்டம் அவசியமில்லை. அவர்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமில்லை.

 

அவர்களுக்கு விசாயத்தை மேற்கொள்ள நீர் வசதிகளும், அவற்றை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளும், கல்வியும், நல்ல வைத்தியசாலைகளுமே அவசியமாக உள்ளன. எமது நாட்டில் ஒருவர் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அவர் கொழும்புக்கு கட்டாயம் வரவேண்டிய தேவையுள்ளது.

கண் பரிசோதனைகளுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வரவேண்டியுள்ளது. அனைத்தும் கொழும்பை மையப்படுத்தியுள்ளன. இவ்வாறு கொழும்பை மைப்படுத்தியுள்ள அனைத்து விடயங்களும் நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் செல்லும் போது மக்களின் பிரச்சினைகள் தீரும்.

குறிப்பாக எமது நாட்டில் உற்பத்தி பொருளாதார முறைமையொன்று உருவாக்கப்பட வேண்டும். அந்தப் பொருளாதாரத்தின் பங்காளிகளாக அனைத்து பிரதேச மக்களும் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்பதுடன், அந்த பொருளாதாரத்தின் பிரதிபலன்களும் அவர்களுக்கு கிடைக்க வேண்டும்.

 

உற்பத்தி பொருளாதார்ததின் பயன்கள் அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும் போது நாட்டில் தற்போது காணப்படும் பிரச்சினைகளில் பெரும்பான்மையானவைக்கு தீர்வு கிடைத்துவிடும். அதன் ஊடாக அடிப்படை பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி – அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்படும் செய்யப்படும் வங்கி உயர் அதிகாரிகள்!

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய வங்கி அதிகாரிகள் பலர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க  தெரிவித்துள்ளார்.

பிணைமுறி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதிகாரிகள் தொடர்பில் மத்திய வங்கியின் உள்ளக விசாரணைகள் நடத்தப்படுவது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கியின் உள்ளக விசாரணைகள் காரணமாக தாம் அது குறித்து பேசுவது பொருத்தமற்றது எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதிகாரிகளிடம் உள்ளக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற 2025இன் ஆரம்பத்தில்!

உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்வரும் ஆண்டின் முற்பகுதியில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

 

அரசாங்க தகவல் தி ணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே இந்த தகவலை அவர் வெளியிட்டார்.

இரண்டு வாரங்களுக்குள் அரச பங்களாக்களை அரசிடம் கையளிக்க முன்னாள் அமைச்சர்களுக்கு உத்தரவு.

அனைத்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு, எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் அரச பங்களாக்களை கையளிக்காவிட்டால் வழக்கு பதிவு செய்யப்படும் என நீதி, பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் தொழிலாளர் அமைச்சின் செயலாளர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

 

அரசாங்க பங்களாக்களை உடனடியாக கையளிக்குமாறு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு பல நினைவூட்டல்கள் வழங்கப்பட்ட போதிலும், இதுவரை 11 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மாத்திரமே அவற்றை கையளித்துள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சர்களுக்கு, அரசாங்க பங்களாக்களை மீள கையளிப்பதில் பெரும் பின்னடைவு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு 07 பகுதியில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட பங்களாக்களின் எண்ணிக்கை 40 ஆகும், அதன்படி இதுவரை கையளிக்கப்படாத பங்களாக்களின் எண்ணிக்கை 29 ஆகும்.

இதேவேளை, அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்குவது மற்றும் செலவினங்களைக் குறைக்கும் புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான சகல அம்சங்களையும் மீளாய்வு செய்வதிலும் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.