01

01

உலக யுத்தத்திற்கு மத்திய கிழக்கு தயாராகின்றது! : த ஜெயபாலன்

கிரிமினல் மோசடிக் குற்றவாளியான இஸ்ரேலின் ஆட்சித் தலைவர் பென்ஜமின் நெத்தன்யாகு தன்னுடைய பதவியைத் தக்க வைக்க, ஆரம்பித்த காஸாவுக்கு எதிரான இனப்படுகொலை யுத்தம் உலக யுத்தமாக மாறுகின்றது. யுத்தம் நிறுத்தப்பட்டால், தான் ஆட்சியில் இருக்க முடியாது; என்பதை நன்கு உணர்ந்த மேற்கின் நண்பனான பென்ஜமின் நெத்தன்யாகு லெபனானோடும் ஈரானோடும் வலிந்த மோதல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அமெரிக்க அரசின் முழு ஆதரவையும் பெற்றுள்ள, இஸ்ரேலுடைய இராணுவ பலம் மத்திய கிழக்கில் யாரையும் அடித்து வீழ்த்தும் அசுரபலம் கொண்டது. ஆனால் ஒரே காலகட்டத்தில் இஸ்ரேல் பல யுத்த முனைகளை ஆரம்பித்து இருப்பதும், அமெரிக்க, பிரித்தானிய அரசுகளின் ஆதரவைத் தவிர ஏனைய நாடுகளிடம் இருந்து இஸ்ரேல் அந்நியப்பட்டு நிற்பதும் இஸ்ரேலுக்குப் பாதகமான அம்சங்கள்.

மத்திய கிழக்கில் தங்களுடைய நலன் பேண, இஸ்ரேல் 1948 இல் உருவாக்கப்பட்டதையடுத்து பலஸ்தீன மண் திறந்த வெளிச்சிறைச்சாலையாகியது. இஸ்ரேலுடைய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராக ஹமாஸ் மற்றும் ஈரானின் முழுமையான ஆதரவோடு இயங்கும் ஹிஸ்புல்லா, பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக தொடர்ச்சியாகப் போராடி வருகின்றது. இஸ்ரேல் உருவாக்கப்பட்டது முதல் இஸ்ரேல் தொடர்ச்சியாக பலஸ்தீன மக்களின் நிலத்தை அபகரித்து வருகின்றது. இஸ்ரேல் உருவாக்கப்பட்டது முதல், இப்பிரச்சினை மத்திய கிழக்கில் அமைதியின்மையை ஏற்படுத்தி, மத்திய கிழக்கை ஒரு யுத்தப் பிரதேசமாக வைத்ததுள்ளது. காலத்துக்குக் காலம் யுத்த மேகங்கள் கூடுவதும், கலைவதும் வழமையாகிவிட்டது. அமெரிக்க ஆயுத நிறுவனங்களுக்கு பழம் நழுவிப் பாலில் வீழ்ந்த கொண்டாட்டம்.

ஹமாஸ் – ஹிஸ்புல்லா அமைப்புகள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக தாக்குதலைத் தொடுத்து 1,200 பேர் வரையானவர்களை ஓக்ரோபர் 7, 2023 தாக்குதலில் படுகொலை செய்தது. இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஆகிய ஆங்கிலிக்கன், மற்றும் கத்தோலிக்க நாடுகள் தீவிர முனைப்புடன் முஸ்லீம்களான பலஸ்தீனியர்களை கடந்த ஓராண்டாக இனப்படுகொலை செய்து வருகின்றது. இஸ்ரேல் செய்வது இனப்படுகொலை என தென்னாபிரிக்க அரசு இஸ்ரேலுக்கு எதிரா சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து, கணிசமான வெற்றியையும் பெற்றது.

இஸ்ரேலின் முஸ்லீம் மக்களுக்கு குறிப்பாக பாலஸ்தீன மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் மேலும் விரிந்து, பாலஸ்தீனம், லெபனான் மற்றும் ஈரானுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

ஈரானின் நெருக்கத்துடன் இயங்கும் ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் நன்கு திட்டமிட்ட பேஜர் தாக்குதலைத் தொடுத்து ஹிஸ்புல்லாவின் தலைமையை பலீனப்படுத்தியது. அடுத்த சில தினங்களில் கடந்த 30 ஆண்டுகளாக ஹிஸ்புல்லாவுக்கு தலைமை தாங்கிய ஹஸ்ஸன் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்டார். காஸாவில் கடந்த ஒரு வருடத்தில் சிறுவர், பெண்கள் உட்பட அமெரிக்க, பிரித்தானிய அரசுகளின் ஆதரவுடன் இயங்கும் இஸ்ரேல், நூறாயிரம் பேர்வரை படுகொலை செய்தது. தற்போது இஸ்ரேல் ஈரானையும் யுத்தத்திற்குள் இழுத்துவிட்டுள்ளது. ஒக்ரோபர் முதல்நாள் ஈரான், தனது நண்பனான ஹசன் நஸ்ரல்லாவின் இழப்புக்கு பழிவாங்கும் வகையில் ஈராக் மீது 200 வரையான ஏவுகணைகளை எய்து தாக்குதலை நடத்தியுள்ளது.

இச்சம்பவமானது, மத்திய கிழக்கில் 3வது யுத்தம் ஆரம்பிக்கப் போகின்றது என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் நேற்றைய தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பதிலடி வழங்கும் என பென்ஜமின் நெத்தன்யாகு தலைமையிலான வலதுசாரிக் கூட்டமைப்பு சூளுரைத்துள்ளது. அதே போல் பாலஸ்தீனத்தில் குழந்தைகளையும் பெண்களையும் ஹிட்லரிலும் மோசமாகப் படுகொலை செய்து ஹொலக்கோஸ்டை நடத்தும் இஸ்ரேலும் அதற்கு முழு ஆதரவு வழங்கும் அமெரிக்க, பிரித்தானிய அரசுகளுக்கும் இதனை உடனடியாக நிறுத்தாவிட்டால் நிலைமைகள் பாரதூரமாக அமையும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானிய அரசுக்கு மிக நெருக்கமான பல்கலைக்கழகக் கலாநிதியொருவர் குறிப்பிடுகையில், ஈரான் தாக்கப்பட்டால் அமெரிக்காவும் அதில் ஈடுபட்டால் இஸ்ரேல் தாக்கப்படுவதுடன் மத்திய தரைக்கடலால் நடைபெறும் பெற்றோலியம் உட்பட்ட வர்த்தகங்கள் நிகழமாட்டாது என்றும் மேற்கினதும் உலகினதும் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்னும் சில நாட்களில் மூன்றாம் உலக யுத்தமொன்றை நோக்கி உலகம் செல்வதைக் காணக்கூடியதாக இருக்கும். இதனால் உலகம் பெரும் பொருளாதார நெருக்கடியொன்றைச் சந்திக்கக வாய்ப்புள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து போட்டியிடவுள்ளது – நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து போட்டியிடவுள்ளதாகவும் முதன்மை வேட்பாளராக க.அருந்தவபாலனை நிறுத்த தீர்மானித்துள்ளதாக அக் கட்சியின் தலைவர் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இந்த தகவலை தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

தமிழ் தேசிய கட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிட விரும்பினோம். ஆனால் அவர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என ஊடகங்களுக்கு அறிவித்துள்ளனர். அதனால் நாங்கள் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளோம்.

வடக்கு தவிர்ந்து கிழக்கிலும் போட்டியிட தீர்மானித்துள்ளோம். சிறிய கட்சிகள் சிலவற்றை இணைந்து போட்டியிடுவது தொடர்பில் பேச்சுக்களை நடத்துகிறோம்.

 

நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். ஆனாலும், கட்சியின் வளர்ச்சிக்காக நான் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட்டு இருப்பேன்.

 

எமது கட்சியின் முதன்மை வேட்பாளராக அருந்தவபாலனை நிறுத்த தீர்மானித்துள்ளோம். அவர் தென்மராட்சி மக்களுக்கு சேவை செய்ய கூடியவர்.

 

அவரை நிறுத்தவது தொடர்பில் மத்திய குழுவில் பேசி முடிவெடுத்துள்ளோம். அவர் என்னை சந்திக்க வரும் போது , அவருடன் நேரில் பேசி அது தொடர்பில் அறிவிப்போம்.

 

அதேவேளை, சட்டத்தரணி மணிவண்ணனும் எமது கட்சியில் போட்டியிடுவார். எமது கட்சி வேட்பாளர்களின் பின்னணிகள் மற்றும் கல்வி தகமை தொடர்பில் ஆராய்ந்து, தகமை உடையவர்களையே வேட்பாளராக நிறுத்துவோம்.

 

தமிழரசு கட்சியில் சுமந்திரன் கேட்கிறார் என்பதற்காக அவருடன் சேர்ந்து செல்ல முடியாது. தமிழ் தேசியத்தை ஒட்டி நாங்கள் பொது வேட்பாளரை நிறுத்திய போது அதற்கு எதிராக செயற்பட்டவர். அப்படி தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்பட்டவருடன் இணைந்து பயணிக்க முடியாது.

 

அவருடைய கோரிக்கை அவரின் தனிப்பட்ட நன்மைக்காக தான் என நினைக்கிறேன் என்றார்.

குழந்தைகளுக்கே உரித்தான சிறுவர் உலகை மீண்டும் வெல்வதே எமது மறுமலர்ச்சிப் பணிகளின் இறுதி இலக்கு – சிறுவர் தின வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க!

குழந்தைகளுக்கே உரித்தான சிறுவர் உலகை மீண்டும் வெல்வதே எமது மறுமலர்ச்சிப் பணிகளின் இறுதி இலக்கு என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க  சர்வதேச சிறுவர் தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

உலகம் சிறுவர்களுக்கானது, அவர்களின் உலகத்தை நம் கரங்களினால் உருவாக்குவோம் என்றும் ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட சிறுவர் தினச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கையில், ஏழ்மை, போசாக்குக் குறைபாடு, சுகாதாரம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, சமூக வாய்ப்புகளில் ஏற்றத்தாழ்வு, போதைப்பொருள், அத்துடன் தொழில் நுட்பத்தின் தவறான பயன்பாட்டிற்கு பலியாவது போன்றன இந்த மிலேனியத்தில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்களாக நாம் அடையாளம் கண்டுள்ளோம்.

மேலும், சிறுவர்களின் உளவியல் சமூக வளர்ச்சியைத் தடுக்கும் சமூக விளைவுகள் மற்றும் மன அழுத்தம் நிறைந்த பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வி முறைகள் போன்ற தாக்கங்களில் இருந்து தற்போதைய தலைமுறைச் சிறுவர் சமூகத்தை விடுவித்து பிள்ளைகளுக்கே உரித்தான சிறுவர் உலகை மீண்டும் அவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதே நமது மறுமலர்ச்சிக் காலப் பணியின் முக்கிய குறிக்கோளாகும்.

உடலாலும், உள்ளத்தாலும் ஆரோக்கியமான சிறுவர்களின் தலைமுறையை உருவாக்குவதன் மூலம், எதிர்கால உலகை வெல்லும் சுதந்திரமான கற்பனைத்திறன் கொண்ட கனிவான மற்றும் உன்னதமான மனிதர்கள் உருவாக்கப்படுவதாக நாம் நம்புகிறோம்.

அதற்கு அவசியமான பொருளாதார சுதந்திரம் மற்றும் மனித நேயம், பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றைக் கொண்ட சமூகத்தை உருவாக்குதல் மற்றும் இயற்கை வளங்கள் நிறைந்த சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் தேவையான அரசியல் மாற்றத்தை நமது முன்னுரிமைப் பணியாகக் கருதி செயற்படுத்த அர்ப்பணிப்போம்.

அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு நாம் அனைவரும் பொறுப்புடன் செயற்படுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் 2024இல் இருந்து விலகுகிறேன் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என வன்னி தேர்தல் மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். தன்னுடைய முகநூல் பக்கத்தில் இது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ள பதிவு வருமாறு..,

தாயக உறவுகளுக்கு இனிய வணக்கம்!

 

கடந்த 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் அதிகூடிய வாக்குடன் மக்களின் விருப்பத்துக்கு அமைய பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டு இருந்தேன்.

அன்று தொடக்கம் இன்றுவரை என்னால் முடிந்த அளவு தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வந்திருக்கின்றேன்.

அத்துடன் எனது பிரதேசங்களில் தமிழ் மக்கள் எதிர் நோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வுகளையும் என்னால் இயன்றவரை வழங்கியும் மக்களின் போராட்டங்களிலும் பங்கு பற்றி இருக்கின்றேன்.

வன்னி மாவட்டத்தில் தேவையான என்னால் முடிந்த பல அபிவிருத்தி திட்டங்களையும் நான் முன்னெடுத்து இருக்கின்றேன்.

தமிழ் மக்கள் எனக்கு இவ்வளவு காலமும் வழங்கிய ஆதரவிற்கும் கௌரவத்திற்கும் நான் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்கின்ற நோக்கத்திற்காக இம்முறை நடைபெறுகின்ற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்பதை அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியத்தருகிறேன். அதே நேரம் தமிழர்களின் உரிமைக்காக தொடர்சியாக நான் உழைத்துக் கொண்டிருப்பேன் என்பதை உறுதியாக கூறுகின்றேன்.

எனக்கு தொடர்ச்சியான ஆதரவை இவ்வளவு காலமும் நல்கிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகளை தெரிவிப்பதுடன் தொடர்ந்தும் உங்களோடு நான் பயணிப்பேன் என்பதையும் கூறிக் கொள்கின்றேன்.

நன்றி

இ.சாள்ஸ் நிர்மலநாதன்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

என குறித்த பதிவில் தெரிவித்துள்ளார். இதேவேளை முன்னதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து தான் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயப்படுத்தும் திட்டத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க..?

நஷ்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயப்படுத்தும் திட்டத்தைத் கைவிடவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பேரவை தலைவர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். தனியார் மயப்படுத்தும் முன்னைய அரசாங்கத்தின் திட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைவிடவுள்ளது.

 

சுற்றுலாத்துறையின் அவசியத்தை கருத்திற்கொள்ளும் போது தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் எயர் லைன்ஸ், நாட்டிற்கு சொந்தமானதாக காணப்பட வேண்டும். இதன் காரணமாக ஸ்ரீலங்கன் எயர் லைன்ஸ் விமான சேவையை தனியார் மயப்படுத்தப்போவதில்லை. எனினும் அதன் முகாமைத்துவத்தினை சீர்செய்வதற்கான திட்டமொன்று முன்வைக்கப்படும். என தேசிய மக்கள் சக்தியின் பேரவை தலைவர் அனில் ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

நீக்கப்படும் முன்னாள் அமைச்சர்கள், ஜனாதிபதிகளின் சலுகைகள் – மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்து !

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் எம்.பிக்களின் பாதுகாப்பு மற்றும் இதர அரச சேவைகள் நிறுத்தப்பபடும் என அநுர தலைமையிலான அரசாங்கம் தெரிவித்து அதனை படிப்படியாக நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் இந்த பாதுகாப்பு சேவை நீக்கப்படுவது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து தெரிவித்துள்ளார்.

தாம் பிரமுகர்களின் பாதுகாப்பை விரும்பும் நபர் அல்ல எனவும், பிரமுகர்களின் பாதுகாப்பை நீக்கினால் பிரச்சினையில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (30) தெரிவித்துள்ளார்.

தான் எந்த தவறும் செய்யாத காரணத்தினால் எவரும் தம்மை கொல்லவோ அடிக்கவோ முயற்சிக்க மாட்டார்கள் என நம்பிக்கையுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒருவர் மனநலம் குன்றியவர்போல நடந்து கொண்டால் மட்டுமே இதுபோன்ற வன்முறைகள் சாத்தியமாகும் என்றார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படாத நிலையில், அமைச்சர்கள் உள்ளிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த காவல்துறை அதிகாரிகளே மீள அழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை திணைக்களம் நேற்று முன்தினம்(29) தெளிவுபடுத்தியுள்ளது.

ஐ.தே.க சிறிகொத்த கட்சித் தலைமையகத்திற்கு முன்பாக போராட்டம் !

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் களமிறங்க வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று சிறிகொத்த கட்சித் தலைமையகத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் கெஸ்பேவை தொகுதி அமைப்பாளர் உபுல் மலேவன தலைமையிலான குழுவினரே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டால் ஐக்கிய தேசியக் கட்சியானது, எஞ்சியிருக்கும் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பல தலைவர்களை இழக்கக்கூடும் என்றும் இவர்கள் தெரிவித்திருந்தனர்.

எனவே, யானை சின்னத்திலேயே பொதுத் தேர்தல் உள்ளிட்ட எதிர்வரும் தேர்தல்களில் கட்சி களமிறங்க வேண்டும் என்றும் இவர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலில் சாதகமான பதில் கிடைத்தமையால், போராட்டம் நிறுத்தப்பட்டது.