June

June

“மொழி அல்லது மத அடையாளம் கொண்ட அரசியல் கட்சிகளை பதிவு செய்வதை தடைசெய்ய வேண்டும்.” முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

பௌத்த மதத்தை விமர்சிக்கும் உரிமை இங்கு எவருக்கும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பௌத்த மதத்தை விமர்சிக்கும் உரிமை இங்கு எவருக்கும் கிடையாது.

மொழிகளும் மதங்களும் வேறுப்பட்டாலும் ஒவ்வொரு மதங்களையும் மதிக்க மனிதர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

இதன் ஊடாக அரசியல் செய்ய பலரும் முயற்சிக்கிறார்கள். கடந்த காலங்களில் எல்லாம் இதுபோன்ற பல வரலாறுகள் காணப்படுகின்றன.

என்னைப் பொறுத்தவரை மொழி அல்லது மத அடையாளம் கொண்ட அரசியற் கட்சிகளை பதிவு செய்வதை தடைசெய்யும் வகையில் அரசமைப்பில் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.

தேர்தல் ஆணைக்குழுவும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது மட்டுமே இவ்வாறான வெறுப்புப் பிரசாரங்களின் ஊடாக அரசியல் செய்யும் கலாசாரத்தை நாட்டிலிருந்து இல்லாது செய்ய முடியும்.

 

வெறுப்புப் பிரசாரங்களை செய்யும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து அடிப்படைவாதிகளால் நிதி அனுப்பப்படுகிறது.

 

இதனைக் கண்டறிந்து முதலில் அரசாங்கம் நிறுத்த வேண்டும். புலனாய்வுப் பிரிவினர் இதனைக் கண்டறிய வேண்டும்.

நல்லிணக்கம், ஜனநாயகம், மனிதாபிமானத்தை உறுதிப்படுத்தினாலேயே ஒரு நாட்டை முன்னேற்ற முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டார்.

மீண்டும் 300 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ உதவிகளை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்கா!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் திகதி போர் தொடுத்தது.

இந்தப் போர் தொடங்கி ஓராண்டையும் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள், தளவாட உதவிகளைச் செய்து வருகின்றன.

இந்நிலையில், உக்ரைனுக்கு புதிதாக சுமார் 300 மில்லியன் டொலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. இதில் ராக்கெட் லாஞ்சர்கள், பீரங்கிக்கான வெடிமருந்துகள் ஆகியவையும் இத்தொகுப்பில் அடக்கம். அதிபர் ஜோ பைடன் இதற்கு ஒப்புதல் அளிக்க முடிவு செய்துள்ளார்.

இதேவேளை அமெரிக்கா தொடர்ந்தும் வழங்கும் போர்த்தளபாட உதவிகளே உக்ரைன் மீதான போருக்கான காரணம் என ரஷ்யா குற்றச்சாட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

திருடப்படும் வங்கித் தகவல்கள் – அன்ரோயிட் பயனாளர்களுக்கு எச்சரிக்கை!

கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கக் கூடிய 101 அண்ட்ரோய்ட் செயலிகளில் ஸ்பின்ஓகே(sipnok) என்னும் உளவு மென்பொருள் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

இதன் மூலம் உலகின் பல்வேறு நாடுகளில் பலரது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கித் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த 101 செயலிகளில் “Noizz, zapya, share, VFly, MVbit, Biugo, Cashzine, Fizzo, Novel, Cash Em, Tick, Watch to Ean, Crazy drop gaming ஆகிய 10 செயலிகளை மட்டும் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த செயலிகள் மூலம் பயனர்களுக்கு தெரியாமலேயே அவர்கள் தகவல்கள் திருட்டுப் போக வாய்ப்புள்ளதால் இவற்றை உடனே அழித்துவிட(uninstall) வேண்டும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் பிளே ஸ்டோரில் இருக்கும் செயலிகளை கண்காணிக்கும் பணியில் பல்வேறு உளவு மென்பொருள் நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட்டுவருவதாக கூறப்படுகிறது.

 

 

“வட்டி வீதக் குறைப்பின் நன்மைகள் மக்களுக்குக் கிடைக்கும்.” – மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால்

இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதக் குறைப்பின் நன்மைகள் மக்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

 

இலங்கை மத்திய வங்கி (CBSL) தனது பணவியல் கொள்கை நிலைப்பாட்டை தளர்த்தியுள்ளதால், உரிமம் பெற்ற வணிக வங்கிகளின் (LCBs) வணிகங்களுக்கான கடன் வட்டி வீதத்தைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மதியவங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இன்று (01) மதியவங்கியின் நாணயக் கொள்கை மீளாய்வை அறிவிப்பதற்காக கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர்,

நாணய மதிப்பு அதிகரிப்பு, எரிபொருளின் விலை போன்றவற்றால் பணவீக்கம் எதிர்பார்த்ததை விட மிகவும் முன்னேற்றமடைந்த இலக்கு வரம்பை நோக்கி நகர்வதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைக் கருத்தில் கொண்டு, மத்திய வங்கி பண நிலைமைகளைத் தளர்த்துவதற்கான தீர்மானத்திற்கு வந்ததுடன், கொள்கை வீதங்களில் வலுவான சீர்திருத்தத்தை மேற்கொண்டது எனவும் தெரிவித்தார்.

 

”மத்திய வங்கியானது கடந்த மூன்று வருடங்களின் பின்னர் முதன்முறையாக வட்டி வீதங்களைக் குறைத்து, நிலையான கடன் வசதி வீதம் (SLFR) மற்றும் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) என்பன முறையே 14.00 வீதம் மற்றும் 13.00 வீதமாகக் குறைத்துள்ளது.

 

 

பணவீக்கம் எதிர்பார்த்ததை விட வேகமாக குறைதல், பணவீக்க அழுத்தங்கள் படிப்படியாக குறைதல் மற்றும் பணவீக்க எதிர்பார்ப்புகளை மேலும் நிலைப்படுத்தல் ஆகியவற்றுக்கு ஏற்ப பண நிலைமைகளை எளிதாக்கும் முயற்சியில் புதன்கிழமை (மே 31) நடைபெற்ற மத்திய வங்கியின் நாணய வாரிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மத்திய வங்கி இந்த வருடத்தில் இதுவரை நிகர அடிப்படையில் 1,671 மில்லியன் அமெரிக்க டொலர்களை சந்தையில் இருந்து கொள்வனவு செய்துள்ளது.

 

அதேவேளையில் மே மாதத்தில் மாத்திரம் 662 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

ஜூலை மாத இறுதிக்குள் பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்திற்குக் குறைக்க முடியும் என்றும் மத்திய வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதேவேளை, பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்த வருடம் ஓகஸ்ட் அல்லது செப்டெம்பர் மாதத்திற்குள் செலுத்துவதற்கு இலங்கை எதிர்பார்க்கிறது.” என தெரிவித்தார்.

 

யாழ்ப்பாணத்திற்கு குடிநீரை கொண்டு வருவதில் அரசியல்வாதிகள் அசமந்த போக்கு – சி.வி.கே.சிவஞானம் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணத்திற்கு குடிநீரை கொண்டு வருவதில் அரசியல்வாதிகள் அசமந்த போக்காக செயற்படுவதாக வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று  புதன்கிழமை இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், குடிநீர் விநியோகம் தொடர்பாக கருத்துரைக்கும் போதும் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டுவதற்கான வேலை திட்டங்கள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக குழாய்கள் புதைக்கப்பட்டு வருகின்றது

ஆனால் புதைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களின் ஊடாக தற்போது காற்றுக் கூட வருகிறதோ தெரியவில்லை. அரசியல்வாதிகள் யாரும் யாழிற்கான குடிநீர் பிரச்சினை தொடர்பில் கதைத்ததாக இல்லை.

அண்மையில் நான் புதிதாக கடமையேற்ற ஆளுநரிடமும் இந்த விடயம் தொடர்பில் பேசியுள்ளேன். எனவே குடிநீரை கொண்டு வருவதற்கு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கனவே நாங்கள் வடக்கு மாகாண சபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி தீர்மானத்தை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி இருந்தோம்.

அந்த கிடப்பில் கிடக்கின்ற அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த ஒருங்கிணைப்பு குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்” தெரிவித்தார்.

பெட்ரோலுக்காக மீண்டும் வரிசை – அமைச்சர் காஞ்சன விஜேசேகர

நாட்டில் பல பாகங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகளில் காத்திருக்கும் நிலை மீண்டும் ஏற்பட்டிருந்தது.

இந்தநிலையில், எரிபொருள் விநியோகம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மக்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இது தொடர்பில் அமைச்சர் கஞ்சன மேற்குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அத்தோடு எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷிடம் இருந்து பெற்ற கடனை செலுத்த தயார் – மத்திய வங்கி ஆளுநர்

பங்களாதேஷிடம் இருந்து இலங்கை பெற்ற பெற்ற 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை ஒகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதத்திற்குள் செலுத்துமென என இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை 2021 ஆம் மே மாதத்தில் பங்களாதேஷிடம் இருந்து 200 மில்லியன் டொலரை கடனாகப் பெற்றுக்கொண்டது.

பெற்ற கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நாடு கடனைத் திருப்பிச் செலுத்தத் திட்டமிடப்பட்டது, ஆனால் அதைச் செய்யத் தவறிவிட்டிருந்தது.

இதேவேளை ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத்தில் குறித்த கடனை செலுத்திவிடுவோம் என பங்ளாதேஷுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம் எனவும் அவர் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

நதாஷா எதிரிசூரியவுக்கு உதவிய குற்றச்சாட்டில்புருனோ திவாகர் கைது !

நதாஷா எதிரிசூரியவுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட புருனோ திவாகரவை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நதாஷா எதிரிசூரியவுக்கு உதவிய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

 

குறித்த நபர் யூடியூப் சேனலை நடத்தி மத சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அறிக்கைகளை பரப்புவதற்கு ஆதரவளித்துள்ளதாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

“பௌத்தத்தை அவமதித்தால் மட்டுமே கைது செய்கிறீர்கள். ஏனைய மதங்களை அவமதித்த ஞானசார தேரவை கைது செய்ய மாட்டீர்களா..? – சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க

பௌத்தத்தை அவமதித்தமைக்காக நடாசாவை கைதுசெய்யமுடியும் என்றால் ஏனைய மதங்களை அவமதித்த ஞானசாரரை ஏன் கைதுசெய்ய முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

நடாசா பௌத்தத்தை உள்நோக்கத்துடன் பௌத்தைஅவமதித்தமைக்காக கைதுசெய்யப்பட்டார் அவரை கைதுசெய்ய முடியும் என்றால் இஸ்லாமிய மதத்தை அவமதித்த தேவாலயங்களையும் கிறிஸ்தவவழிபாட்டு இடங்களையும் மசூதிகளையும் எரியூட்டிய ஞானசார தேரர் உட்பட ஏனைய பலரை ஏன் கைதுசெய்ய முடியாது என முன்னாள் ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

முஸ்லீம்கள் தமிழ் பிரஜைகளிற்கு எதிரான வெறுப்புணர்வுபேச்சுக்கள் நடாசாவின் வார்த்தைகளை விடதீயநோக்கம் கொண்டவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

மருத்துவர் ஷாபிக்கு எதிராக பொய்களை தெரிவித்து நாடு முழுவதும் அதனை பரப்பி நல்லமனிதரின் வாழ்க்கையை அழித்த அயோக்கியர்களிற்கு என்ன நடந்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி குற்றவாளிகளை கைதுசெய்து தண்டிப்பதற்கு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு இன்னமும் காலம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

அவ்வாறு அவர் செயற்பட்டால் அதுவே உண்மையான ஜனநாயக நாடாக காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இலங்கை பௌத்தர்களாகிய நாங்கள் பௌத்தகொள்கைகளை நேர்மையாக பின்பற்றினால் இன்றுள்ளது போல நாடு குழப்பத்தில் காணப்படாது எனவும் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பௌத்தம் உயர்ந்த மதிப்பை பெறவேண்டியது அவசியம் ஆனால் ஏனைய அனைத்து மதங்களும் சமமான முக்கியத்துவத்தை பெறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

விமல் வீரவங்சவிடம் இழப்பீடு கோரி மேன்முறையீடு !

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவிடம் இருந்து பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இழப்பீடு கோரி மேன்முறையீடு செய்த்துள்ளார்.

 

அண்மையில் விமல் வீரவன்சவினால் எழுதி வெளியிடப்பட்ட புத்தகம் தனக்கும் இராணுவத்திற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து அவர் இவ்வாறு செயற்பட நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

“9 மறைக்கப்பட்ட கதை” என்ற நூலை விமல் வீரவன்ச வெளியிட்டிருந்தார்.

குறித்த புத்தகம் , காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னணியில் உள்ள இரகசியங்களை அம்பலப்படுத்த எழுதப்பட்டது என அவர் தெரிவித்திருந்தார்.

காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டங்களின் பின்னணியில் உள்ள இரகசியங்களை வெளிப்படுத்தத் தவறினால் எதிர்காலத்தில் மிகவும் பாரதூரமான நிலைமைக்கு நாடு செல்ல வழிவகுக்கும் எனவும் வீரவன்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.