April

April

உத்தேச பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தனது எதிர்ப்பை வெளியிடவேண்டும் – சர்வதேச மன்னிப்பு சபை வேண்டுகோள்!

இலங்கையின் உத்தேச பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தனது எதிர்ப்பை வெளியிடவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை மக்களின் உரிமைகளை முக்கியமானவையாக பெறுமதிமிக்கவையாக பைடன் நிர்வாகம் கருதினால் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நிர்வாகத்திற்கு பைடன் நிர்வாகம் தெளிவான செய்தியை தெரிவிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மனித உரிமையின் அனைத்து அளவுகோல்களிலும் தோல்வியடைந்துள்ளது என சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசியாவிற்கான பரப்புரை இயக்குநர் கரொலின் நாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களின் உரிமைகள் மிக முக்கியமானவை என பைடன் நிர்வாகம் கருதினால் இந்த சட்டம் முற்றிலும் மாற்றியமைக்கப்படவேண்டும் அல்லது முற்றாக கைவிடப்படவேண்டும் என்ற செய்தியை ஜனாதிபதி ரணில்விக்கிரமசி;ங்க அரசாங்கத்திற்கு தெரிவிக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நான்கு தசாப்தகாலமாக சிறுபான்மையினத்தவர்களையும் தன்னை விமர்சிப்பவர்களையும் தடுத்துவைத்து சித்திரவதை செய்வதற்காக இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து பைடன் நிர்வாகமும் அமெரிக்க காங்கிரசும் அமைதியாகயிருந்தால் அது மாற்றுநிலைப்பாடுடையவர்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்கும் இலங்கை அரசாங்கத்தின் திறனை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்துள்ள நாஸ் பல தசாப்தகாலங்களாக மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக குரல்கொடுத்துவந்துள்ள இலங்கையின் சிவில் சமூகத்தை அவமதிக்கும் செயலே உத்தேச சட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் அல்லது மோசமான சட்டத்தை மாற்றியமைக்கும் நோக்குடன் அதிகாரிகள் உத்தேச சட்டத்தை கொண்டுவரவில்லை மாறாக அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை இலக்குவைத்து அவர்களை மௌனமாக்கும் நோக்கத்துடனேயே இந்த உத்தேச சட்டம் கொண்டுவரப்படுகின்றது எனவும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசியாவிற்கான பரப்புரை இயக்குநர் கரொலின் நாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை உட்பட உலக நாடுகளின் கல்வி இலக்குகளை எட்டுவதற்கு 97 பில்லியன் டொலர்கள் பற்றாக்குறை – ஐக்கிய நாடுகள் சபை

2030ஆம் ஆண்டு இலங்கை உட்பட உலக நாடுகளின் கல்வி இலக்குகளை எட்டுவதற்கு 97 பில்லியன் டொலர்கள் பற்றாக்குறையாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

2030 ஆம் ஆண்டில் அனைவருக்கும் நியாயமான மற்றும் தரமான கல்வியை வழங்குவதே ஐக்கிய நாடுகள் சபையின் 4 வது இலக்கு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு அல்லது யுனெஸ்கோ இதற்கு 3 டிரில்லியன் டொலர் நிதி தேவை என்று மதிப்பிட்டுள்ளது.

கிழக்கு மற்றும் தெற்காசியா நாடுகளில் கல்வித் தரம் குறைவாக இருந்த போதிலும் இலங்கை முன்னணியில் இருப்பதாக உலக அமைப்பு கூறுகிறது.

2030ஆம் ஆண்டில் இலங்கையின் இடைநிலைக் கல்வி நிலை 81 சதவீதமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கைகள் கூறுகின்றன.

மத்திய, கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில், இடைநிலைக் கல்விக்குத் தகுதியானவர்களில் 60% பேர் பாடசாலைக்கு செல்வதில்லை, இருபது சதவீதம் பேர் ஆரம்பக் கல்வியைப் பெறவில்லை.

அதற்காக 70 பில்லியன் டொலர்கள் ஒதுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

ரஷ்ய தூதரக அதிகாரிகள் தங்களது நாட்டின் உளவுத்தகவல்களை சேகரிப்பதாக நோர்வே குற்றச்சாட்டு!

ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்த போர் தொடங்கிய சில நாட்களிலேயே ரஷ்ய தூதர்கள் தங்களது நாட்டில் உளவு தகவல்களை சேகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் பல நாடுகள் தங்களது நாடுகளில் ரஷ்ய தூதரக அதிகாரிகளுக்கு தடை விதிக்க தொடங்கின.

மேலும் அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கவும் மறுக்கப்பட்டது. இதேபோல் தற்போது ரஷ்யாவின் அண்டை நாடான நோர்வேயிலும் அரங்கேறி உள்ளது. அதாவது நோர்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் ரஷ்ய தூதரகம் செயல்படுகிறது. அங்கு பணிபுரியும் தூதரக அதிகாரிகள் தங்களது நாட்டின் உளவுத்தகவல்களை சேகரிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனை தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாக நோர்வே கருதியது. எனவே அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையிலும் அவர்களது செயல்பாடுகள் ராஜதந்திர நடவடிக்கைகளுடன் பொருந்தவில்லை என நோர்வே முடிவு செய்தது.

இதனையடுத்து நோர்வேயில் உள்ள ரஷ்யாவின் தூதரக அதிகாரிகள் 15 பேரை வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கையை நோர்வே அரசாங்கம் வெளியிட்டது.

இது குறித்து அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி அன்னிகென் ஹூய்ட்பெல்ட் கூறுகையில், “ரஷ்யாவின் உளவுத்துறை நடவடிக்கைகளின் நோக்கத்தை எதிர்ப்பதற்கும், அதன் மூலம் தேசிய நலன்களை பாதுகாப்பதற்கும் இது ஒரு முக்கியமான நடவடிக்கை ஆகும்’ என தெரிவித்தார். கடந்த ஆண்டிலும் இதுபோல 3 தூதரக அதிகாரிகளை நோர்வே வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது. நோர்வே அரசாங்கத்தின் இந்த செயலுக்கு ரஷ்யா நிச்சயம் பதிலடி கொடுக்கும் என ரஷ்யா வெளியுறவு அமைச்சகம் கூறியதாக அந்த நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்தது.

ஓமானில் பாலியல் தொழிலாளர்களாக ஏலம் விடப்பட்ட இலங்கை பெண்கள் – விசாரணைகளை ஆரம்பித்தது ஆரம்பித்தது ஐ.நா !

ஓமானில் இலங்கை பெண்கள் பாலியல் தொழிலாளர்களாக ஏலத்தில் விடப்பட்ட சம்பவம் குறித்து ஐநா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அடிமைத்தனத்தின் தற்போதைய வடிவங்கள் தொடர்பிலான ஐநாவின் விசேட அறிக்கையாளர் டொமொயோ ஒபக்கட்டா மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பில் பெப்ரவரி ஏழாம் திகதி அவர் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

மனித உரிமைகள் மீறல்கள் குறித்து அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் 60 நாட்களிற்குள் பதிலளிக்கவேண்டும் என்ற போதிலும் இதுவரை அரசாங்கம் பதிலளிக்கவில்லை.

ஜனாதிபதிக்கான குறிப்பிட்ட கடிதத்தில் கைச்சாத்திட்டுள்ள இரண்டு விசேட அறிக்கையாளர்களும் ஓமானிற்கு பாலியல் நோக்கத்திற்காக அல்லது தொழில்ரீதியான துஸ்பிரயோகத்திற்காக கொண்டு செல்லப்பட்ட பெண்கள் எதிர்நோக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுற்றுலா விசாவில் ஓமானிற்கு சென்ற 90 பெண்கள்  இலங்கை அரசாங்கத்தின் புகலிட இல்லம் உட்பட புகலிட இல்லங்களில் சிக்குண்டனர் என தமக்கு கிடைத்துள்ளதாக  அவர்கள் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

பல பெண்கள் ஓமானிற்கு பாலியல் நோக்கத்திற்காக அல்லது தொழில்ரீதியான துஸ்பிரயோகத்திற்காக கடத்தப்பட்டுள்ளனர் என தகவல்கள் கிடைக்கின்றன  ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொழில்வாய்ப்பு என்ற போர்வையிலேயே இவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் எனவும் ஐநாவின் அறிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சில பெண்கள் ஏலத்தில் விடப்பட்டனர் தனியார் வீடுகளில் வைக்கப்பட்டு துஸ்பிரயோகங்களிற்கு உட்படுத்தப்பட்டனர் போதுமான உணவோ அல்லது உறங்குவதற்கான வசதிகளோ இருக்கவில்லை எனவும் ஐநாவின் அறிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் நடைபெற்ற சீக்கியப் படுகொலைகளை இனப்படுகொலை என குறிப்பிட்டு கலிபோர்னியா மாகாண சட்டசபையில் தீர்மானம்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984-ம் ஆண்டு ஒக்டோபர் 31-ந் திகதி அவரது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் வன்முறை வெடித்தது. இதில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் சீக்கியர்களுக்கு எதிரான இந்த வன்முறையை இனப்படுகொலை என்று முறைப்படி அங்கீகரித்து இந்தியாவை கண்டிக்க வேண்டுமென அமெரிக்க நாடாளுமன்றத்தை கலிபோர்னியா மாகாண சட்டசபை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த மாகாண சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சீக்கியரான ஜஸ்மீத் கவுர் பெயின்ஸ் என்ற பெண் உறுப்பினர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார். அதை தொடர்ந்து இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு – பாடசாலை சிறுவர்கள் உட்பட 133 பேரை படுகொலை செய்த இராணுவம் !

மியன்மாரில் பெண்கள் மற்றும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடசாலை சிறுவர்கள் உட்பட 133 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் மத்திய சகைன் பிராந்தியத்தில் உள்ள சமூகக் கூடம் ஒன்றின் மீது வான் தாக்குதல் நடத்தியதை மியன்மார் இராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.

பா சி கியி கிராமத்தில் உள்ள இராணுவ ஆட்சியை எதிர்க்கும் ஆயுதக் குழு ஒன்றின் அலுவலகம் திறக்கப்படும் விழா மீது பாதுகாப்புப் படை கடந்த செவ்வாய்க்கிழமை (11) தாக்குதல் நடத்தியதாக இராணுவ பேச்சாளர் சோ மின் டுன் குறிப்பிட்டுள்ளார்.

இதில் கொல்லப்பட்ட சிலர் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிரான போராளிகள் என்றும் சிவில் உடை அணிந்த சிலரும் பலியாகி இருப்பதாகவும் அவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

சமூகக் கூடத்தின் மீது கடந்த செவ்வாய்க்கிழமை காலை போர் விமானங்கள் குண்டுகளை வீசியதாக சம்பவத்தை பார்த்தவர்கள் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். இந்த குண்டுவீச்சுக்குப் பின்னர் உயிர் தப்பியவர்கள் மீது ஹெலியில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்திருக்கும் ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ், “இதனைச் செய்தவர்கள் பொறுப்புக் கூற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

இதனை ஒரு பயங்கரச் சம்பவம் என்று வர்ணித்திருக்கும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் வோல்கர் டுர்க், சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயல் என குறிப்பிட்டுள்ளார்.

மியன்மாரில் 2021 பெப்ரவரியில் ஆட்சியை கைப்பற்றிய இராணுவம் அதன் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான வான் தாக்குதல்களை பயன்படுத்துவதை அதிகரித்துள்ளது.

இராணுவ சதிப்புரட்சிக்கு சகைன் பிராந்தியத்தில் எதிர்ப்பு வலுத்ததோடு அந்த சமூகத்தினர் சொந்த ஆயுதக் குழுவை உருவாக்கி செயற்படுவதோடு சொந்தமாக பாடசாலை மற்றும் மருத்துவ நிலையங்களையும் நடத்தி வருகின்றனர்.

ஒலிம்பிக் போட்டியிலும் , ஆசிய கிண்ண போட்டியிலும் விளையாட இலங்கை அணிக்குத் தடை !

இலங்கையின் ஆடவர் கால்பந்தாட்ட அணி, முக்கியமான இரு போட்டிகளின் தகுதிகாண் சுற்றுகளில் பங்கேற்பதற்கான தகுதியை இழந்துள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனத்துக்கு, சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் (FIFA) அறிவித்துள்ளது.

இலங்கையின் ஆடவர் கால்பந்தாட்ட அணி, 2024 பாரிஸ் ஒலிம்பிக் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான ஆசிய தகுதிகாண் போட்டி மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் 23 வயதுக்குட்பட கத்தார் ஆசியக் கிண்ணத் தகுதிகாண் போட்டி ஆகியவற்றில் பங்கேற்க தகுதி இழந்துள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்புரிமையை, கடந்த ஜனவரி 21 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தியுள்ளது. அதன்படி, அந்தத் தடை நீங்கும் வரை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் எந்தொரு சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டது. விளையாட்டுத்துறை அமைச்சரால் நடத்தப்பட்ட தேர்தலில் மூன்றாம் தரப்பின் தலையீட்டை இடம்பெற்றதாக, இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்வரும் மே 25 ஆம் திகதி குறித்த போட்டிகளுக்கான அட்டவணை தயாரிக்கப்படவுள்ளதாகவும் அதில் இலங்கை ஆடவர் கால்பந்தாட்ட அணி இடம்பெறாது எனவும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளது.

உதயன் (ஆர்.எஸ்.எஸ் இன் ஏஜென்ட்) தமிழர் மத்தியில் புகுந்து தமிழ் தேசியத்தை மதரீதியில் பிரித்து பெரும் அட்டூழியம்!

ஈழத் தமிழர்களை மத ரீதியில் பிரித்து மதப் பிரிவினையைத் தூண்டும் இந்தியாவின் நோக்கத்தை வெற்றிகரமாக செயற்படுத்த தொடங்கியுள்ளது உதயன் பத்திரிகை.

ஏப்ரல் 9ஆம் திகதி உதயன் பத்திரிகை “வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்து பெண்ணின் கழுத்தை நெரித்து அட்டூழியம் புரிந்த மதக்குழு” என்ற தலைப்பில் முன் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த செய்தியோடு தொடர்புபட்ட சபையை சேர்ந்த மக்கள் சிலர் குறித்த செய்தியை கேள்விக்குட்படுத்தி உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கு அன்றைய தினம் சென்றிருந்தனர்.

அங்கு குறித்த செய்தியை எந்த அடிப்படையில் பிரசுரித்தீர்கள் என ஆசிரியர் பீடத்தினருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதுவே நடந்த சம்பவத்தின் சாராம்சம்.

இந்த சம்பவத்தைத் தான் உதயன் பத்திரிகை ஏப்ரல் 10ஆம் திகதி முன்பக்க முழுப்பக்க செய்திகளாக பெருமெடுப்பில் வெளியிட்டுள்ளது.

உதயன் பத்திரிகை நிறுவனத்துக்குள் புகுந்து மதக்குழுவொன்று பெரும் அட்டூழியம் என்று குறிப்பிட்ட அளவுக்கு அங்கு எந்த சம்பவமும் இடம்பெற்றதாக உதயன் தரப்பிலிருந்து வெளியாகியிருந்த காணொலியில் தெரியவில்லை.

குறித்த சபையைச் சேர்ந்த மக்கள் தமது சபையோடு தொடர்புபட்ட செய்தி தொடர்பில் கேள்வி கேட்கவே உதயன் அலுவலகத்துக்கு வந்துள்ளனர்.

வந்தவர்களில் பெரும்பாலோனோர் பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் அவர்களுடன் சில இளைஞர்கள் வந்துள்ளனர்.

வந்தவர்கள் யாரும் எந்த ஆயுதங்களோடோ தாக்குதல் நடத்தும் எண்ணத்துடனோ வந்திருக்கவில்லை.

அவர்கள் சாமானிய மக்கள். ஒரு பத்திரிகை நிறுவனத்தை எவ்வாறு அணுக வேண்டும் என்ற கரிசனை அவர்களிடம் இருந்திருக்க வாய்ப்பில்லை. அதை அவர்களிடம் எதிர்பார்க்கவும் இயலாது.

அவர்கள் போதகரது தூண்டுதலால் வந்திருந்தாலும் கூட அவர்கள் சாதாரண பொதுமக்கள் இந்த சமூகத்தின் ஒரு அங்கம் என்ற தெளிவு ஒரு பத்திரிகை நிறுவனத்திடம் இருந்திருக்க வேண்டும்.

ஒரு ஊடகத்தின் முக்கிய பொறுப்புகளில் ஒன்று அந்த சமூகத்துக்கு அறிவூட்டுவது, அவர்களை வழிநடத்துவது. இந்த இடத்தில் உதயன் தன் கடமையிலிருந்து தவறியுள்ளது.

குறித்த காணொலியில் அந்த மக்கள் எந்த இடத்திலும் தவறான வார்த்தைகளை பிரயோகிக்கவில்லை. யாரையும் தாக்கவில்லை. நிறுவனத்தின் சொத்துக்கு சேதங்களை ஏற்படுத்தவில்லை.

பல பேர் சேர்ந்து சென்று கதைத்தால் தங்கள் கருத்து கேட்கப்படும் என்ற எண்ணம் அவர்களிடம் இருந்திருக்கலாம்.

காணொலியில் ஒரு இடத்தில் ஒரு பெண் “ நீங்கள் கண்டபாட்டுக்கு எழுத ஏலாது” என்று சொல்ல அங்கு நின்ற மூத்த ஊடகவியலாளர் பரமேஸ்வரன் “அதை நீங்க சொல்ல ஏலாது. கோர்ட்டுக்கு போங்க” என்கிறார்.

ஊடகம் என்பது மக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியது. அவற்றை கேள்வி கேட்கும் உரிமை சட்டத்துக்கு முன்னர் மக்களுக்கே உள்ளது.

சாமான்ய மக்களுக்கு சட்டம் தொடர்பில் பூரண அறிவு இல்லை என்ற பலவீனத்தைக் கொண்டு கோர்ட்டுக்கு போ, கேஸ் போடு என்று அடாவடித்தனமாக நடந்து கொண்ட உதயன் தரப்பினர் அந்த மக்களை காட்டுமிராண்டிகள் ரேஞ்சுக்கு சித்தரிக்கின்றனர்.

ஏற்கனவே பிரதேசம் சாதி என கூறுபோடப்பட்டுள்ள இந்த சமூகம் மத ரீதியில் பிளவுபட்டு நிற்பதற்கான மீதமுள்ள வழிகளையும் ஊடகங்கள் திறந்துவிட்டுள்ளன.

முற்றுமுழுதாக, மதப் பிரிவினையைத் தூண்டும் வகையில் திரிபுபடுத்தப்பட்ட இந்த செய்திக்கு கண்டன அறிக்கைகள் வேறு அனல் பறக்கின்றன. அதில் சைவமாகாசபை, உருத்திரசேனை, மறவன்புலவு சச்சிதானந்தன் ஆகியோரின் கண்டன அறிக்கைகள் முன்பக்கத்தில் அடுக்கிவிடப்பட்டுள்ளன. இதிலிருந்தே இது மதப்பிளவைத் தூண்டும் உள்நோக்கத்துடனானது என்பது தெட்டத்தெளிவாகின்றது.

இந்த சம்பவம் தொடர்பான செய்திகளில் உதயன் பயன்படுத்தியுள்ள சொற்கள் மிகக் கீழ்த்தரமானவை. எவ்வாறு தமிழர்களை சிங்களப் பேரினவாதம் பயங்கரவாதிகள் என்று சித்தரித்ததோ அவ்வாறே தன்னுடைய சமூகத்தில் சிறுபான்மையாக உள்ள ஒரு மதச் சமூகத்தின் மீதான தவாறான விம்பத்தை உதயன் கட்டமைக்கின்றது. இதனை சைவமாகாசபை, உருத்திரசேனை, சிவசேனை போன்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் அடிவருடிகள் எண்ணெய் ஊற்றி வளர்த்தெடுக்கப்படாதபாடு படுகின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புபட்டோரின் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை சமூக விரோதிகள் என்றவாறு சித்திரித்துள்ள உதயனின் போக்கு மிகுந்த அடாவடித்தனமானது. உதயன் இவ்வாறு சித்திரிக்குமளவுக்கு எந்தவொரு சம்பவமும் அங்கு இடம்பெற்றதாக காணொளியில் தெளிவாகத் தெரிகின்றது.

இந்த சம்பவத்தின் பின்புலம் பற்றி தெரிந்தோ அல்லது தெரியாமலோ சமூக ஊடகங்களில் கண்டனம் தெரிவிப்போர் இதனை தாறுமாறாக திரிவுபடுத்த தொடங்கியுள்ளனர்.

ஏப்ரல் 8ஆம் திகதி உதயன் தனது முன்பக்கத்தில் “80வயதுப் போதகரால் சிறுமிகள் துஷ்பிரயோகம்” என்று செய்தி வெளியிட்டிருந்தது. அந்த செய்திக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த மக்கள் உதயன் அலுவலகத்துக்குள் அத்துமீறினர் என்ற தவாறான கண்டோட்டத்துடன் சமூக ஊடகங்களில் பலர் கருத்து தெரிவிக்கின்றனர். அவர்கள் ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமூகத்தையும் போதகர்களையும் கீழ்த்தரமாக பதிவிடுகின்றனர். இது மிக அபத்தமானது.

“80வயதுப் போதகரால் சிறுமிகள் துஷ்பிரயோகம்” என்ற செய்தி உண்மை எனின் அது நிச்சயம் பிரசுரிக்கப்பட வேண்டியதே. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் யாழ்.பல்கலைக்கழகத்தில் பாலியல் சேட்டை புரிவோரைக் கண்டுகொள்ளாமல் அவர்களிடம் கட்டுரைகள் வாங்கிப் பிரசுரித்து அவர்கள் புகழ்பாடும் இந்த ஊடகங்கள் இந்த செய்திகளில் மட்டும் தம் பொறுப்புணர்வை வெளிப்படுத்துவது தான் வேடிக்கையாகவுள்ளது.

யாழில் இளம்பெண்களை துஸ்பிரயோகம் செய்த போதைவஸ்துக்களுடனும் தொடர்புடைய ஜெயந்திரன் வெற்றிவேலு சிவாலய ஸ்தாபகராக இருந்தும் யாழ்.ஊடகங்கள் இன்றுவரை அது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

சமூகத்தின் அதிகார மையங்களில் உள்ள தவறுகளைத் தட்டிக் கேட்க வக்கற்ற ஊடகங்கள் தம் அரசியல் மத சார்பு நிலைகளுக்கு ஏற்ப செய்திகளில் வக்கிரத்தைக் கொட்டுவதே அட்டூழியத்தின் உச்ச கட்டம்.

சமானிய மக்களின் மேல் தம் ஊடகப் பலத்தைக் காட்டும் இவற்றின் செயல்கள் மிகுந்த கண்டனத்திற்குரியவை.

பேரினவாதத்தை வளர்த்தெடுக்க  இராணுவம் பொலிஸ் துணை போகின்றது, ஊடக சுதந்திரம் இராணுவம் பொலிஸால் பாதிக்கப்படுகின்றது.

பொலிஸார் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று கூவித் திரிந்த உதயன் இன்று தன்னிடம் செய்தி தொடர்பில் கேட்டு வந்த சாமானிய தமிழ் மக்களுக்கு பொலிஸை வைத்து பூச்சாண்டி காட்டி அனுப்பியுள்ளது என்றால் இவர்களின் தமிழ்த் தேசியப்பற்றும் தமிழ் மக்கள் மீதான அக்கறையும் எத்தகையது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

அன்று எழுக தமிழ் என்ற கோசத்துடன் தமிழ் மக்கள் திரண்டு சென்ற போது தன்னுடைய சுயலாப அரசியலுக்காக புரட்டாதிச் சனிக்கு எள்ளெண்ணெய் எரித்த செய்தி போட்டது தான் உதயனின் ஊடக தர்மம்.

உதயனுக்குச் சென்ற மக்கள் போதகரால் தூண்டுதலில் வந்தார்கள் எனின் அது அவர்களுடைய அறியாமை. ஆனால் இந்தியாவின் ஆர்.ஆர்.எஸ்ஸின் நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று அற்ப சலுகைகளுக்காக இனத்தைக் கூறுபோடும் இந்த ஊடகங்களின் அட்டூழியங்களை அறியாமை என்று கடந்து செல்ல முடியுமா? உதயனின் தலையங்கங்கள் அப்பத்திரிகை ஆர்எஸ்எஸ் இன் ஏஜென்டாக விலைபோய்விட்டதையே காட்டுகின்றது. தமிழ் தேசியத்தைக் கூறு போடவும் பலவீனப்படுத்தவும் கேரளா கஞ்சாவோடு மதவாதம் என்ற அபினையும் இந்திய ஒன்றிய அரசு வடக்கு கிழக்கினுள் நுழைய அனுமதிக்கின்றது.

தமிழ் மக்கள் விழிப்படைந்து இந்த இந்திய பினாமிகளிடமிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொண்டாலொழிய தமிழ் மக்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

தன்சானியாவில் ஒரே ஆண்டில் 42,954 மாணவிகள் கர்ப்பம் !

தன்சானியா நாட்டின் தலைநகர் டோடோமாவில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் கடந்த 2021-2022ம் ஆண்டுக்கான சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின்படி, கடந்த 2021ம் ஆண்டு ஜூலை முதல் 2022 ஜூன் மாதத்திற்கு இடைப்பட்ட ஓராண்டில் நாடு முழுவதும் 42,954 மாணவிகள் கர்ப்பமான நிலையில், பள்ளியை விட்டு இடைநின்றனர். அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரவில்லை.

கருவுற்ற 42,954 பள்ளி மாணவிகளில் 23,009 பேர் மேல்நிலைப் பள்ளிகளையும், 19,945 தொடக்கப் பள்ளிகளையும் சேர்ந்தவர்கள் ஆவர். 2021ம் ஆண்டில் மட்டும் ஆரம்பக் கல்வியை படிக்க வேண்டிய வயதில் உள்ள 82,236 மாணவிகளில் 28 சதவிகிதம் பேர் கர்ப்பமாகினர். இவர்கள் பள்ளிக்கு தொடர்ந்து வரவில்லை. குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், 18 வயது நிரம்பும் முன்பே மாணவிகளுக்கு திருமணம் செய்து வைப்பதாகவும், அல்லது தகாத உறவில் மாணவிகள் கர்ப்பமாவது அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசி பெற வந்த சிறுவன் ஒருவனின் உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்ட தலாய்லாமா மன்னிப்பு கோரினார் !

திபெத்திய பௌத்தமத தலைவரான தலாய்லாமா தன்னிடம் ஆசி பெற வந்த சிறுவன் ஒருவனின் உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் தலாய்லாமா தனது நாக்கை நீட்டியபடியே, என் நாக்கை சுவைக்கிறாயா? என சிறுவனிடம் கேட்டுள்ளார். இதைப்பார்த்த பலரும் தலாய்லாமாவை கண்டித்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தலாய்லாமா தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளதாக அவரது அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. ‘சமீபத்தில் நடந்த நிகழ்வில், ஒரு சிறுவன் தலாய் லாமாவிடம் தன்னை கட்டிப்பிடிக்க முடியுமா? என்று கேட்டது தொடர்பான வீடியோ பரவி வருகிறது. அதில், தனது வார்த்தைகள் காயப்படுத்தியிருந்தால், அதற்காக சிறுவன் மற்றும் அவனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் தலாய்லாமா மன்னிப்பு கேட்க விரும்புகின்றார்’ என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் அடுத்த தலாய்லாமா ஒரு பெண்ணாக இருந்தால் அவர் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என தலாய்லாமா 2019ல் கூறியது சர்ச்சையானது. அதன்பின்னர் தலாய்லாமா மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.