அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சிறுபான்மை கட்சிகளும் உள்ளடக்கப்பட வேண்டுமென ஜனநயாக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சிறுபான்மை கட்சிகளின் பங்களிப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடமும் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
15
15
தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்து இருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும் என நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் எல்ரிரிஈக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் வகித்தவரான எரிக் சொல்ஹைம் தெரிவித்துள்ளார். இலங்கை சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்து உள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் எல்ரிரிஈ இறுதிநேரத்தில் சரணடையும் முடிவை எடுத்தபோது அது மிகவும் காலம் தாழ்த்திய முடிவாகி இருந்தது என்று கூறினார்.
எல்ரிரிஈ தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும் என்ற கோரிக்கை 2009 பெப்ரவரி முற்பகுதியிலேயே தேசம்நெற் இல் வைக்கப்பட்டது. எல்ரிரிஈ சரணடைவதன் மூலமே மனித அவலத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பதை அப்போது வலியுறுத்தி வந்தோம். 2009 பெப்ரவரி அளவில் 2000க்கு உட்பட்டவர்களே கொல்லப்பட்டனர். ஆனால் அதற்குப் பின்னைய நாட்களில் பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டு எல்ரிரிஈ இன் தலைமை கொல்லப்படுகின்ற இறுதி நேரத்திலேயே அவர்கள் சரணடைய முன்வந்திருந்தனர்.
எரிக் சொல்ஹைம் தனது நேர்காணலில் ”நாங்கள் எல்ரிரிஈ யை ஒழுங்குமுறையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும்படி (சரணடையும்படி) கேட்டிருந்தோம். அப்படி நடந்திருந்தால் ஆயிரக்கணக்காண உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும். இந்த யுத்தம் ஐக்கிய நாடுகள் சபை இந்தியா அமெரிக்கா மற்றும் சிலரின் கண்காணிப்புடன் நடைபெற்று இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
தான் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருந்ததாகவும் ஐநா பிரதிநிதிகள் வே பிரபாகரனுடக் தொடர்பில் இருந்ததாகவும் அனால் இரு தரப்பும் வேறு வேறு காரணங்களுக்காக யுத்தத்தை தொடர்ந்தனர் என்றும் எரிக் சோல்ஹைம் குறிப்பிட்டு உள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் மே 17 2009ல் புலிகளுடைய தலைவர்கள் பா நடேசன் எஸ் புலித்தேவன் ஆகியோரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் அவர்கள் சரணடைவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி தன்னிடம் கேட்டதாகவும் தெரிவித்தார். எல்ரிரிஈ சரணடைவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஐசிஆர்சி ஐநா ஆகிய அமைப்புகளையும் கேட்டிருந்ததாகவும் எரிக் சொல்ஹைம் தெரிவித்தார்.
”(எல்ரிரிஈ இன் வேண்டுகோளை) நாங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தினோம். எல்ரிரிக்கு அவர்களுடைய (சரணடையும்) கோரிக்கை மிகத் தாமதமாக வந்ததைத் தெரியப்படுத்தினேன். அவர்கள் சரணடைவதாக இருந்தால் வெள்ளைக்கொடியைத் தூக்கிக் கொண்டு சென்று சரணடையும்படி கூறினேன். ஆனால் சிறிது நேரத்தின் பின் அவர்கள் இறந்துவிட்ட செய்தியைக் கேள்விப்பட்டேன்” என எரிக் சொல்ஹைம் எல்ரிரிஈ, க்கும் தனக்குமான கடைசி உரையாடல்கள் பற்றிக் குறிப்பிட்டார்.
ஆனால் எரிசொல்ஹைம் எல்ரிரிஈ சரணடைய முன்வந்துள்ளனர் என்ற தகவலை இலங்கை அரசில் உள்ள யாரிடம் தெரிவித்தார் என்பதை வெளியிட மறுத்துள்ளார். மேலும் இந்த சரணடையும் பேச்சுவார்த்தையில் வேறு சிலரும் தொடர்புபட்டு இருந்ததாகவும் கூறியுள்ள சொல்ஹைம் அவர்களின் பெயரையும் வெளியிட மறுத்துள்ளார்.
”யுத்தத்தை மீள ஆரம்பிப்பதற்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்காது. யுத்தத்தில் விருப்பம் இல்லை என்பதை புலம்பெயர் தமிழர்களுக்கு சொல்கிறேன். ஆனால் தமிழர்களின் உரிமைக்கு சர்வதேச சமூகத்திடம் பாரிய ஆதரவு உண்டு” எனவும் எரிக் சொல்ஹைம் தெரிவித்தார். இலங்கை ஊடகங்கள் தன்மீது பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை வைத்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
‘இந்தியா இந்தோனேசியா மலேசியா நாடுகளில் உள்ள சிறுபான்மையினருக்கான உரிமைகளை இலங்கையும் வழங்க முன்வர வேண்டும்’ என்றவகையிலும் எரிக் சொல்ஹைம் கருத்து வெளியிட்டு இருந்தார். ”தென்னிந்திய மாநிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களுக்குப் பல உரிமைகள் உள்ளது. அரசியல் உரிமைகளுக்குப் பலமான ஆதரவு உள்ளது. ஆனால் யுத்தத்தை மீய ஆரம்பிக்க ஆதரவு இல்லை. இதுவே நோர்வேயின் நிலைப்பாடு. இதுவே உலகில் உள்ள பெரும்பாலான அரசுகளின் நிலைப்பாடும்” எனவும் சொல்ஹைம் தெரிவித்தார்.
தற்போது ஜநா வினால் உருவாக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவையும் வரவேற்று எரிக் சொல்ஹைம் கருத்து வெளியிட்டார்.
இலங்கைத் தமிழர்களின் வரலாறு காணாத இந்த அழிவையும் அவலத்தையும் நிறுத்தியிருக்கக் கூடிய மட்டுப்படுத்தி இருக்கக் கூடிய வாய்ப்புகள் தமிழ் அரசியல் தலைமைகளிடமும் புலம்பெயர்ந்த தமிழ் தலைமைகளிடமும் இருந்தது. ஆனால் இவர்கள் தமிழ் மக்களின் அவலத்தை இன்னமும் தூண்டி விடுவதன் மூலம் சர்வதேச கவனத்தை திருப்பலாம் என்று வன்னி மக்கள் கொல்லப்படுவதற்கு துணை போயினர்.
இப்போது எந்த அரசாங்கத்திற்கு எதிராக இத்தலைமைகள் கடந்த 30 வருடமாக ஆயுதம் ஏந்திப் போராடினார்களோ அந்த அரசாங்கம் மனித உரிமைகளை மீறிவிட்டதாக கோசமிடுகின்றனர். ஆனால் அம்மக்களுக்கு வலிந்து தம் தலைமையைத் திணித்து இந்த அழிவை ஏற்படுத்தியதில் தமக்குள்ள பங்கு பற்றி மெளனமாகவே உள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகாலம் (சுதந்திரம் அடைந்தது முதல்) எதிரியாக கருதப்பட்ட வந்த அரசிடம் நியாயம் கேட்கும் தமிழ் தலைமைகள் தங்கள் தலைமைத்துவத்தின் வக்கற்ற அரசியலை தொடர்ந்தும் செய்வதற்காக தங்கள் தலைமையை தொடர்ந்தும் தக்க வைக்க இலங்கை அரசு மீது முழுப்பழியையும் போட்டுவிட்டு தாங்கள் தப்பிக்க இலங்கை அரசின் மனித உரிமை மீறலுக்குப் பின் தாங்கள் பதுங்கிக் கொள்கின்றனர்.
வெள்ளம் வருமுன் அணைகட்டப்பட வேண்டும். மனித உரிமைகள் மீறப்படமுன் அதனை தடுப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் அர்த்தமற்றது.
அமெரிக்க யுத்தக் கப்பல் பேர்ள் ஹார்பர் எல்.எஸ்.டி. 52 திருகோணமலைக்கு வருகை தந்துள்ளது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (13) காலை 11.00 மணியளவில் இக்கப்பல் திருகோணமலை சீனக்குடா அஷ்ரப் இறங்கு துறையில் நங்கூரமிட்டுக் கொண்டது. இதில் 800 படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பசுபிக் பிராந்திய கடற்படைக்குச் சொந்தமான இக்கப்பல் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் தடவை. திருகோணமலைக்கு வருகை தந்த இக்கப்பல் நாளை வெள்ளிக்கழமை (16) வரை தரித்து நிற்கும். இக்கப்பலில் வந்தோர் திருகோணமலையில் பல வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
திருகோணமலை கடற்படைத்தள வீதியில் அமைந்துள்ள மெதடிஸ்த சிறுவர் இல்லத்திற்கு சென்ற இவர்களுள் ஒரு பகுதியினர் அச்சிறுவர் இல்லத்திற்கு வேண்டிய வர்ணங்களை பூசியதோடு துப்புரவுப் பணிகளிலும் ஈடுபட்டனர். மற்றொரு குழுவினர் திருகோணமலையின் வடக்கே அமைந்துள்ள திரியாய் கிராமத்திற்கு சென்று திரியாய் தமிழ் மகா வித்தியாலயத்தில் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டனர். திருகோணமலைக்கு வந்துள்ள படையினரை இலங்கை கடற்படையினர் வரவேற்று இவ் இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். திருகோணமலையில் இவர்கள் சமூக அபிவிருத்தி வேலைகள், மருத்துவ முகாம்கள், என்பனவற்றை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொக்கட்டிச்சோலை பகுதியிலுள்ள கடலேறிக்கருகில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கியொன்றும் மெகசின் ஒன்றும் 20 ரவைகளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு பொலிஸார் நேற்று முன்தினம் மாலை நடத்திய தேடுதலின் போதே இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலணை வைத்தியசாலையில சுருக்கிட்ட நிலையில் மரணமான மருத்துவமாது ச.தர்சிகாவின் மரணம் தொடர்பாக அவ்வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டொக்ரர் பிரியந்த செனவிரட்னவை கைது செய்து நேற்று (14-07-20100) நீதிமன்றில் முற்படுத்துமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் ஆர்.வசந்தசேனன் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். மேற்படி பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகள் நேற்று ஊர்காவற்றுறை நீதவான் நிதிமன்றில் நடைபெற்றது. மரணமான தர்சிகாவின் சகோதரி, வேலணை வைத்தியசாலையில் கடமையாற்றிய தாதி உத்தியோகத்தர்கள், சம்பவ தினத்தன்று சடலம் மீட்கப்பட்ட விடுதி அறைக்கதவை உடைத்துத் திறந்தவர்கள் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.
இதன்படி தர்சிகாவின் மரணம் தொடர்பாக சந்தேகம் உள்ளதாகவும், டொக்ரர் பிரியந்த செனவிரட்னவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறும் பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார். அத்துடன் தர்சிகாவின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வைத்தியப் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 24ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, மருத்துவமாது தர்சிகாவின் கொலை தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வுப் பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்த மரணம் தொடர்பாக பலர் வாக்குமூலமளிக்க முன்வந்த போதிலும், பொலிஸார் அவற்றைப் பெற மறுத்துவிட்டதாகவும், அதனால் இது தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் கையளிக்கப்பட வேண்டும் எனவும் நேற்று பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அவர் அனுப்பியுள்ளார்.
நேற்று (14 June) கிளிநொச்சியில் ஜனாதிபதி கலந்து கொண்ட அமைச்சரவைக் கூட்டமும், பொதுமக்கள் மத்தியில் உரையாற்றும் நிகழ்வும் நடைபெற்றுள்ளது. முற்பகல் வேளையில் அமைச்சரவைக் கூட்டம் இரணைமடுக் குளத்திற்கருகே அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்ட இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது. தமிழ்ச்செல்வனின் இல்லம் என்றும் விடுதலைப் புலிகளின் அரசியல் செயலகம் என்றும் ஊடகங்களில் வெளிவந்திருந்த போதும், உண்மையில் அது நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான கட்டடம் ஆகும் தற்போது அது கிளிநொச்சி மாவட்ட இராணுவத் தலைமையகமாகவுள்ளது.
பிற்பகல் கிளிநொச்சியில் பொதுமக்கள் மத்தயில் ஜனாதிபதி உரைநிகழ்த்தினார். ஆனால், பொதுமக்கள் அனைவரும் அக்கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை என கிளிநொச்சி மக்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும் அரச ஊழியர்கள் மற்றும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே இதில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தவேளை, பொதுமக்கள் ஏ-9 பாதையுடாக பயணிப்பது தடைசெய்யப்பட்டிருந்ததாகவும் பலத்த பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்ததாகவும் கிளிநொச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வன்னிப்பிரதேசத்தில் அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், நாட்டு மக்கள் எல்லோருமே ஒன்று தான் அனைவருக்கும் அனைத்தும் கிட்ட வேண்டும் எனவும் ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் கொழும்பிற்கு வெளியே கூட்டப்பட்ட முதலாவது கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
வடமராட்சியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு அவரது உடமைகள் கொள்ளையிடப்பட்டு உள்ளன. 13-07-2010 வடமராட்சி இமையாணன் கிழக்கு, உடுப்பிட்டியில் முற்பகல் 11 மணியளவில் 40 வயதான திருமணமாகாத பெண்ணான ஜெயகௌரி என்பவரது சடலம் வல்வெட்டித்துறை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இவரை கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்த (July 11 2010) காணவில்லை என அயலவர்களினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று இவரின் சடலம் கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
இவரின் தலையில் அடிகாயங்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவரது விட்டிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டி, கைத்தொலைபேசி மற்றும் இவரது நகைகள் யாவும் கொள்ளையிடப்பட்டுள்ளன. இவரது நான்கு சகோதரர்கள் வெளிநாட்டிலுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவரது கொலை தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது இடைக்கிடையே பெய்து வரும் மழை காரணமாக வன்னியில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். கூரைகளற்ற வீடுகளிலும் தறப்பாள் கூடாரங்களிலும் வசிக்கும் மக்கள் மழை பெய்யும் போது பெரும் அவலங்களுக்கு உள்ளாகின்றனர். கூரைகளற்ற வீடுகளின் உள்ளேயும், தறப்பாள் கூடாரங்களுக்குள்ளும் மழைநீர் புகுந்து விடுவதால் சிறுகுழந்தைகள், வயோதிபர்கள் உள்ள குடும்பங்கள் பெரும் துன்பங்களை அனுபவிக்க நேரிடுகின்றது. அவர்களது நிவாரண உணவுப்பொருட்களும் மழையில் நனைந்து நாசமாகின்றன.
முன்னர் மீள்கடியேற்றப்பட்ட மக்கள் தற்காலிகக் கூடாரங்களை அமைத்துக்கொள்ள பன்னிரண்டு கூரைத் தகரங்கள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு அவை வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை. எதிர்வரும் பருவமழைக்கு முன்பாக இம்மக்களுக்கான வீடுகள் ஒழுங்கமைக்கப்படா விட்டால் பாரிய அவலங்களுக்கு அவர்கள் முகம் கொடுக்க வேண்டிவரும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.