June

June

உத்தியோகபூர்வ அழைப்பு கிடைத்தால் தமிழ்க் கூட்டமைப்பு அரசுடன் பேச்சு நடத்தும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

surash.jpgஅரசியல் தீர்வு விடயம் சம்பந்தமாகப் பேச்சு நடத்துவதற்கான எவ்வித அழைப்பும் ஜனாதிபதியிடமிருந்தோ அல்லது அரசாங்கத்திடமிருந்தோ இதுவரை கிடைக்கவில்லை. அழைப்பு விடுக்கப்பட்டால் கூட்டமைப்பு அதனை ஏற்று பேச்சுவார்த்தைக்குச் செல்லுமென கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

எனினும், அழைப்பு கிடைத்ததன் பின்னரே பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படும் விடயங்கள் பற்றி குறிப்பிட முடியுமெனவும் அவர் தெரி வித்தார். ஏற்கனவே, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ¤க்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தனுக்குமிடையில் பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றமை உண்மையே. எனினும், அப்பேச்சுவார்த்தை உத்தியோகப்பற்றற்றதாகவே அமைந்ததுடன் எந்தவித தீர்மானமும் அதன் மூலம் மேற்கொள்ளப் பட்டிருக்கவில்லை யெனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென தெரிவிக்கப்படுகிறதே தவிர அதற்கான அழைப்பை விடுப்பதில் ஏன் இந்தளவு தாமத மேற்படுத்தப்படுகிறதோ எமக்குத் தெரியாதெனவும் அவர் குறிப்பிட்டார்.

அரச ஆஸ்பத்திரிகளில் மருந்துகட்டும் மென்துணிகளுக்கு தட்டுப்பாடு

அரசாங்க ஆஸ்பத்திரிகளில் காயங்களுக்கு மருந்து கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் மென்மையான துணிக்கு நிலவும் தட்டுப்பாட்டைத் துரிதமாக நிவர்த்திப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இத்துணித் தட்டுப்பாட்டை துரிதமாக நிவர்த்திப்பதற்கு தேவையான சகல அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார்.

இதனடிப்படையில் காயங்களுக்கு மருந்து கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் மென்மையான துணியை அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு விநியோகிக்கும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வருடத்திற்கு ஒரு தடவைப்படி கோட்டாவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது இத்துணி உற்பத்தியாளர்களுக்கு அவற்றை அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு விநியோகிக்கவென மூன்று மாதத்திற்கு ஒரு தடவையே கோட்டா வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

காயங்களுக்கு மருந்துகட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் மென்மையான துணியை அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு விநியோகிக்கும் 262 உள்ளூர் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்களை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று அவசரமாக அழைத்து கலந்துரையாடியுள்ளார். இக்கலந்துரையாடலின் போது உற்பத்தியாளர்களின் குறை, நிறைகளையும் அமைச்சர் கேட்டறிந்தார்.

உற்பத்தியாளர்களின் வேண்டுகோளின் படியே கோட்டாவை ஒரு வருடத்திற்கு ஒரு தடவை வழங்குவதாக அமைச்சர் அறிவித்தார். இத்துணி உற்பத்தியையும் அதன் உற்பத்தியாளர்களையும் பாதுகாப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும், ஆஸ்பத்திரிக ளில் இத்துணிக்குத் தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க வேண்டாம் எனவும் அமைச்சர் இச்சமயம் கேட்டுக்கொண்டார்.

முல்லை, கிளிநொச்சி பகுதிகளுக்கு அமைச்சர் பசில், முத்துசிவலிங்கம் விஜயம். அபிவிருத்தி திட்டங்கள், மீள் குடியேற்றம் பற்றி நேரில் ஆராய்வு

basi.jpgவடக்கில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அமைச்சருடன் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் மற்றும் உயரதிகாரிகள் பலரும் இவ்விஜயத்தில் பங்கேற்றதுடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்களுடனும் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.

நேற்றுக் காலை கொழும்பிலிருந்து விசேட ஹெலிகொப்டர் மூலம் வவுனியாவைச் சென்றடைந்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் வவுனியாவில் வவுனியா மாவட்டச் செயலாளரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். அதனை யடுத்து வவுனியா மாவட்டச் செயலாளர் திருமதி சார்ள்ஸ¤டன் நெடுங்கேணிப் பகுதிக்குச் சென்றுள்ள அமைச்சர் நெடுங்கேணிப் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் ‘என்ரிப்’ திட்டத்தையும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் பார்வையிட்டுள்ளதுடன் ‘என்ரிப்’ திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப் படவுள்ள கமநல சேவைகள் திணைக்கள அலுவலகத்திற்கான அடிக்கல்லையும் நாட்டிவைத்துள்ளார்.

அதனையடுத்து நெடுங்கேணி பகுதியில் மீள் குடியேற்ற நடவடிக்கைகளைப் பார்வையிட்ட அமைச்சர், ‘ரியாப்’ வேலைத்திட்ட அலுவலகத்திற்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதுடன் நெடுங்கேணி வைத்தியசாலைக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளையும் நேரில் பார்வையிட்டுள்ளார்.  இதன் போது அங்கு குழுமியிருந்த மக்கள் தமது தேவைகள் குறித்து அமைச்சரின் கவனத்துக்குக்கொண்டு வந்துள்ளனர்.

இதன் பின்னர் முல்லைத்தீவிற்கும் ஒட்டுசுட்டானுக்கும் அமைச்சர் பசில் நேரில் சென்று அங்கு உலக வங்கியின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களைப் பார்வையிட்டார். முல்லைத்தீவு அரச அதிபர் எமல்டா சுகுமாருடன் அம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி மற்றும் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் சம்பந்தமாக அமைச்சர் கலந்துரையாடியுள்ளார். அதன்போது மாவட்டத்திற்கான செயற்திட்ட அறிக்கையொன்றையும் அரச அதிபர் அமைச்சரிடம் கையளித்தார்.

முல்லைத்தீவு கச்சேரியைப் பார்வையிட்ட அமைச்சர் அங்குள்ள அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளார். அதனையடுத்து ஒட்டுசுட்டானுக்குச் சென்றுள்ள அமைச்சர் அங்கு இடம்பெறும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளையும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களையும் பார்வையிட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் சம்பந்தமாக முல்லைத்தீவு அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியுள்ளார். அமைச்சருடனான நேற்றைய இவ் வடக்கு விஜயத்தில் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம், மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிரி, உலக வங்கியின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

முதலமைச்சர்கள் வருடாந்த மாநாடு மாரவிலயில் நாளை ஆரம்பம்

மாகாண முதலமைச்சர்களின் வருடாந்த மாநாடு நாளை 4ம் திகதி வெள்ளிக்கிழமை புத்தளம் மாவட்டத்துக்குட்பட்ட மாரவில நகரில் ஆரம்பமாகின்றது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இம் மாநாட்டுக்கு வடமேல் மாகாண முதலமைச்சர் அதுல விஜேசிங்க தலைமை தாங்குவார். மாகாணங்களின் அபிவிருத்திகள், நட்புறவுகள் சம்பந்தமான முக்கிய விடயங்கள் பலவும் இம்மாநாட்டில் ஆலோசிக்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

IIFA: கொழும்பில் மாற்று வீதிப் போக்குவரத்துகள்

iifa-awards-logo.jpgகொழும்பில் இன்று ஆரம்பமாகவுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோன் தெரிவித்தார். இன்று முதல் நடைமுறைக்கு வரும் விசேட பாதுகாப்புத் திட்டம் எதிர்வரும் 5ம் திகதி வரை அமுலில் இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று பிற் பகல் பொலிஸ் தலைமையகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பதில் பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோன் மேலும் குறிப்பிடுகையில் :-

இந்த திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் வழிகாட் டலில் பெருந்தொகையிலான பொலிஸாரும் அவர்களுக்கு உதவியாக முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

இந்தத் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புக்கோ, விழாவை முன்னிட்ட பாதுகாப்புக்கோ எந்த ஒரு வெளிநாட்டு பொலிஸாரோ, பாதுகாப்பு படையினரே கடமையில் ஈடுபடுத்தப்படவில்லை என்று பதில் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

இந்த விழாவில் கலந்துகொள்ள வருகை தந்துள்ள முக்கிய பிரமுகர்களின் நலனை கருதி சில வீதிகள் அவ்வப்போது மூடப்படும் என்றும், சில வீதிகளுக்கு பதிலாக மாற்று வழிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது என்றும் போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் லக்கி பீரிஸ் தெரிவித்தார்.

மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறே போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். இன்றும் நாளையும் நடைபெறவுள்ள நிகழ்வுகளுக்காக லேக்ஹவுஸ் சுற்றுவட்டம், கொள்ளுப்பிட்டி சந்தி, லிபர்டி சுற்று வட்டம், கிரின்பாத், மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தை, தர்மபால மாவத்தை, எப். ஆர். சேனநாயக்க மாவத்தை, கன்னங்கர மாவத்தை, ஹொட்டன் சுற்றுவட்டம், மெய்ட்லன்ட் கிரசன்ட் பொது நிர்வாக அமைச்சு சந்தி, சீ. ஆர். டி. சந்தி, புலர்ஸ் வீதி ஆகிய வீதிகளின் ஊடாக பிரமுகர்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

5ம் திகதி நடைபெறவுள்ள பிரதான வைபவத்திற்கான காலி முகத்திடல் வீதி, லோடஸ் வீதி, லேக் ஹவுஸ் சுற்றுவட்டம், டி. ஆர். விஜேவர்த்தன மாவத்தை, காமினி சுற்றுவட்டம், மருதானை சந்தி, பஞ்சிகாவத்தை வீதி, சங்கராஜ சுற்று வட்டம், ஆமர் வீதி, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தை ஊடாக சுகததாச உள்ளக அரங்கிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

பதில் பொலிஸ் அதிபராக இளங்ககோன்

பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய வெளிநாட்டுக்கான பயணம் ஒன்று மேற்கொண்டு ள்ளதை அடுத்தே பொலிஸ் நிர்வாக நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

நாவற்குழி பகுதிகளில் நள்ளிரவில் கொள்ளையிடும் கும்பலினால் மக்கள் அச்சம்!

நள்ளிரவு வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையிடும் கும்பல் ஒன்று நாவற்குழி கிழக்கு தச்சன் தோப்பு பகுதிகளில் அண்மைக் காலமாக நடமாடி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இப்பகுதி வீடுகளுக்குள் புகுந்த சிலர் நித்திரையில் ஆழ்ந்திருக்கும் பெண்களின் நகைகளை அபகரித்துக் கொண்டு ஓடிவிடுவதாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான கொள்ளைச் சம்வவத்துடன் தொடர்புள்ளதான சந்தேகத்தின் பேரில் அப்பகுதி இளைஞர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறான நள்ளிரவு கொள்ளைகளில் ஈடுபடும் கும்பல்கள் குறித்த அச்சத்தினால் அப்பகுதி மக்கள் இரவு வேளைகளில் விழித்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சியில் மீட்கப்பட்ட சடலங்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக வவுனியா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கிளிநொச்சி கணேசபுரத்தில் மீட்கப்பட்ட ஐந்து சடலங்களும் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்துள்ளதால் அவை ஆணா, பெண்ணா என கண்டறிய முடியாமலிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சடலங்கள் பெண்களினது என முன்னர் செய்திகள் வெளி வந்த போதிலும் சரியாக அடையாளம் காணமுடியாத நிலையில் சடலங்கள் பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், அவற்றில் இரு சடலங்கள் விடுதலைப் புலிகளின் வரிச்சீருடையுடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மற்றுமொரு சடலத்தில்  இராணுவச் சீருடை போன்ற தன்மை காணப்படுவதாகவும், ஏனைய இரு சடலங்களும் ஆடைகளற்று நிர்வாணமாக காணப்படுவதாகவும். நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட சடலங்களில் ஒன்றின் கால் முறிந்து பனை மட்டைக் கட்டப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  இச்சடலங்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கிளிநொச்சி நீதவான் பெ.சிவகுமார், வவுனியா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி எஸ்.சிறிதரன், கிளிநொச்சி, மாங்குளம் அகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், படை அதிகாரிகள் கணேசபரம் கிராமசேவையாளர் ஆகியோரின் முன்னிலையில் நேற்று இச்சடலங்கள் மீட்கப்பட்டன.

கொழும்பு இந்திப் பட விழா – அனைத்து சூப்பர் ஸ்டார்களும் புறக்கணிப்பு

amitabh-bachchan.jpgஉலகெங்கும் உள்ள தமிழர்களின் தொடர் கோரிக்கைகள், போராட்டங்களுக்கு மதிப்பளித்து கொழும்பு நகரில் நாளை ஆரம்பிக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்வதில்லை என்று இந்தித் திரையுலகின் அனைத்து சூப்பர் ஸ்டார் நடிகர்களும், நடிகைகளும் முடிவு செய்துள்ளதால், கொழும்புப் பட விழா களையிழந்துள்ளதாக இந்தியசெய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் நாளை ஆரம்பமாகி 3 நாட்களுக்கு இஃபா எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில் அமிதாப் பச்சன் உள்ளிட்ட வட இந்திய திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து தமிழர் இயக்கம் களத்தில் இறங்கியது. பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்து இரத்தக்கறையுடன் உள்ள ராஜபக்சே அரசு, தனது சுய இலாபத்துக்காக இந்த விழாவை கொழும்பில் நடத்த அனுமதி கொடுத்துள்ளது. எனவே இதில் இந்திய திரையுலகினர் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று கோரி போராட்டத்தில் குதித்தது தமிழர் இயக்கம். மும்பையில் நூற்றுக்கணக்கான தமிழர்களைத் திரட்டி அமிதாப் பச்சன் வீட்டின் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதேபோல உலகெங்கும் உள்ள பல்வேறு தமிழர் அமைப்புகளும் பாலிவுட்டினர் இதில் கலந்து கொள்ளக் கூடாது என்று கோரி மெயில்களை அனுப்பிக் குவித்தனர். தமிழகத்திலும் திரையுலகினர் யாரும் இதில் பங்கேற்கக்கூடாது என்ற கோரிக்கை வலுத்தது.

இதையடுத்து தமிழ்த் திரையுலகினர் மொத்தமாக, இதில் நாங்கள் யாரும் பங்கேற்க மாட்டோம், யாரும் பங்கேற்கவும் கூடாது. மீறி பங்கேற்றால் அவர்களது படங்கள் எதுவும் தென்னிந்தியாவில் திரையிடப் பட மாட்டாது என்று பகிரங்கமாக அறிவித்தனர்.

இதற்கு முன்பாகவே ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் உள்ளிட்ட தமிழ்த் திரையுலக சூப்பர் ஸ்டார்கள் அனைவரும் பங்கேற்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். தங்களுக்கு அனுப்பப்பட்ட விழா அழைப்பிதழைப் பெறக் கூட இவர்கள் மறுத்து விட்டனர். இதேபோல தமிழர்கள் எங்களுக்கு முக்கியம் என்று கூறி மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, மோகன்லால், தெலுங்கு சூப்பர் ஸ்டார் வெங்கடேஷ், கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் ஆகியோரும் அறிவித்து விட்டனர்.

தொடர் எதிர்ப்பால் உந்தப்பட்ட அமிதாப் பச்சன் தனது குடும்பத்தினர் யாரும் கொழும்பு செல்ல மாட்டார்கள் என்று கூறி விட்டார்.

தற்போதைய நிலவரப்படி அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன்,  ஐஸ்வர்யா ராய், ஷாருக்கான், ஆமிர் கான், காத்ரீனா கைப், தீபிகா படுகோன், ரன்பீர் கபூர், இம்ரான் கான் ஆகியோர் கொழும்பு பட விழாவுக்குச் செல்ல மாட்டார்கள் என்பது உறுதியாகியுள்ளது. விவேக் ஓபராய், லாரா தத்தா ஆகியோர் உள்ளிட்ட ஒரு சில 2ம் நிலை நடிகர், நடிகையர் மட்டுமே இந்த விழாவுக்கு போயுள்ளனர்.

மொத்த சூப்பர் ஸ்டார்களும் விழாவுக்குப் போகாததால் கொழும்புப் பட விழா களையிழந்துள்ளது. தமிழ்நாட்டிலிருந்து எழுந்து சிறிய அளவிலான எதிர்ப்பு உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் பரவி, இந்தியாவின் முக்கிய திரையுலகமான பாலிவுட்டைப் புரட்டி முடக்கிப் போட்டிருப்பதைப் பார்த்து இலங்கை அரசும் அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.

ஆனால் கொழும்பு பட விழாவுக்குப் போனால், தமிழகத்தில் மட்டுமல்லாமல், உலகெங்கும் உள்ள குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களை முழுமையாக பகைத்துக் கொள்ள நேரிடும். அது தங்களது பிசினஸுக்கு பெரும் அடியாக அமையும் என கருதியதால்தான் பாலிவுட் நடிகர், நடிகையர் கொழும்பு விழாவுக்குப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

தமிழ்க் கூட்டமைப்பை விரைவில் ஜனாதிபதி பேச்சுக்கு அழைப்பார் – பீரிஸ்

glpeiris.jpgஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விரைவில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைச் சந்தித்து பேசவிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். இதற்கு முன்னதாக இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வொன்றை எட்டும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக அண்மையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் தான் சந்திப்பொன்றை நடத்தியிருந்ததாகவும் பேராசிரியர் பீரிஸ் கூறினார். எனினும் இது பூர்வாங்க சந்திப்பொன்றாகவே இது அமைந்திருந்ததாகவும் தொடர்ந்தும் பேச்சுகளை முன்னெடுப்பது தொடர்பாக எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.  இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தலைவர்களுடன் பேசத் தயாராக இருப்பதாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையிலேயே அதுபற்றி கேட்டபோது வெளிவிவகார அமைச்சர் இந்த தகவல்களை வெளியிட்டார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுடன் உரையாடும் போதே அவர் இதைத் தெரிவித்தார்.அத்துடன், சகல தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுடனும் அரசாங்கம் விரைவில் பேச்சுகளை ஆரம்பிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.