விடுதலைப் புலிகளுடனான போர் வெற்றியின் ஒரு வருட பூர்த்தி விழா நாளை வெள்ளிக்கிழமை (June 18 2010) கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்காக கொழும்பில் விசேட போக்கு வரத்து வசதிகள் எற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக நாளைக் காலை 5மணி முதல் விழா நிறைவடையும் வரை போக்குவரத்து ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விழா நிகழ்வுகளை முன்னிட்டு கொழும்பின் சில வீதிகள் பாதுகாப்பு நடைமுறைக்காக மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. போர் வெற்றிவிழா நிகழ்வில் ஒன்பதினாயிரம் படையினர் பங்கேற்கவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதில் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். போர் வெற்றியின் முதலாம் ஆண்டு வெற்றிவிழா கடந்த மேமாதம் அரசாங்கத்தால் கொண்டாடப்படவிருந்த நிலையில் தென்பகுதியில் பெய்த கடும் மழை, வெள்ள அழிவு காரணமாக அது பிற்போட்டப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.