05

05

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக முன்னாள் இராணுவத்தளபதி நியமிக்கப்படவுள்ளார்.

Mullaitivu_Districtமுல்லைத் தீவு மாவட்ட அரசாங்க அதிபராக முன்னாள் இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சி.ஆர்.டி.சில்வா நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது. முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபராக தற்போது கடமை புரியும் இமெல்டா சுகுமாரை அப்பதவியிலிருந்து விடுவித்து, வடமாகாணசபையில் அவருக்கு பிரதம செயலர் பதவி வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Mullaitivu_Districtவடக்கு கிழக்கு மாகாண ஆளுநர்களாக முன்னாள் இராணுவ அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அரசஅதிபராக ஒரு முன்னாள் இராணுவத் தளபதி நியமிக்கப்படவிருப்பதான செய்தி தமிழ் மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. வெலிஓயா, பதவியா, மகாவலி எச் வலயம் என்பனவற்றை உள்ளடக்கியதாக வன்னியில் அனைத்துப் பகுதிகளையும் சிங்கள மயமாக்கும் நோக்கத்துடன் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என தமிழ்மக்கள் பலருக்கு சந்தேகம் தோன்றியுள்ளது.

கிளிநொச்சியில் சில பகுதிகளுக்கு விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதிகளுக்கு விரைவில் முழுமையான மின்சாரம் வழங்கப்படும் என வடமாகாண மின் அத்தியட்சகர் குகராஜ் தெரிவித்துள்ளார். வடக்கின் வசந்தம் திட்டத்தின் நிதியுதவியின் மூலம் மின்சாரம் விநியோகிக்கும் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இதற்கான ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் கிளிநொச்சி. உருத்திரபுரம் கிழக்கு, பரந்தன், உதயநகர் மேற்கு, உதயநகர் கிழக்கு, கனகபுரம், கணேசபரம், திருநகர் வடக்கு, தொண்டமான் நகர். பாரதிபரம், ஆகிய கிராமங்களுக்கு  இன்னும் இரண்டு மாதங்களில் மின்சாரம்  வழங்கப்பட்டு விடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே வேளையில், மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட இப்பகுதிகளில் போர் நடவடிக்கைகளால் அழிவடைந்த, சேதமுற்ற வீடுகள் இன்னமும் மீளமைக்கப்படாமல் மக்கள் இன்னமும் சிறு கொட்டில்களில் வாழ்ந்து வருகின்றமையும் இங்கு  குறிப்படத்தக்கதாகும்.

வன்னியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் சிவில் நிர்வாக ஒழுங்குகள் கடைப்பிடிக்கப்படவுள்ளன.

Traffic_Police_SLவன்னியில் மீள் குடியேற்றப்பட்டுள்ள பகுதிகளின் போக்குவரத்து ஒழுங்குகள், கண்காணிப்பு நடவடிக்கைகள் இவ்வாரத்திலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளதாக படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். வன்னியில் மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும், சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் வாகனங்களின் ஆவணங்கள் யாவற்றையும் வைத்திருக்க வேண்டும் என்று வீதிகளில் காவல் கடமைகளில் ஈடுபட்டு வரும் இராணுவத்தினர். வாகனப் பயன்பாட்டாளர்களிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.

மீள் குடியேற்ற நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ள பகுதிகளில் சிவில் நிர்வாக நடைமுறைகளை நடைமுறைப்படுத்துவதன் ஒரு கட்டமாக வாகனப் போக்குவரத்து ஒழுங்கு நடவடிக்கைகள் பேணப்படவுள்ளதாகவம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வன்னியில் இறுதிக்கட்டப் போரின் போது, பொது மக்கள் பலர் தங்கள் வாகன அனுமதிப்பத்திரங்கள் ஆவணங்கள் போன்றவற்றை இழந்துள்ளனர். தற்போது மீட்கப்பட்ட வாகனங்கள் சில  உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டும் வருகின்றன. இந்நிலையில் அதன் ஆவணங்களை உடனடியாகப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை  பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

ஜீ.எல்.பீரிஸ் – லியம் பெக்ஸ் சந்திப்பு

gl.jpgவெளி விவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பிரித்தானிய அரசின் பாதுகாப்பு செயலாளர் டாக்டர் லியம் பெக்ஸிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பு  சிங்கப்பூரில் இடம்பெற்றுள்ளது. இதன் போது இலங்கையின் தற்போதைய அபிவிருத்தி நடவடிக்கைகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

இந்த உயர் மட்ட சந்திப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசிற்கும் பிரித்தானியாவின் புதிய அரசாங்கத்திற்கும் இடையிலான முதற் சந்திப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாலித கொஹன தலைமையில் பலஸ்தீன மக்களின் மனித உரிமை மீறல் விசாரணை

palitha-kohona.jpgகைப்பற்றப் பட்ட பிரதேசங்களிலுள்ள பலஸ்தீன மக்களினதும், ஏனைய அரேபியர்களினதும் மனித உரிமைகளை பாதிக்கும் இஸ்ரேலிய நடைமுறை குறித்து விசாரிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபைத் தூதுக் குழுவுக்கு ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி பாலித கொஹன தலைமை தாங்கவுள்ளார்.

இந்த விசேட விசாரணை தூதுக் குழு ஜூன் மாதம் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை எகிப்துக்கும்,  11ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை ஜோர்டானுக்கும், 16ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை சிரியாவுக்கும் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவிலிருந்து 500 பஸ்களை கொள்வனவு செய்ய தீர்மானம்

indian-bus.jpgஇந்தியா விலிருந்து 500 பஸ்களை இ.போ.ச.வுக்குக் கொள்வனவு செய்யவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் எம்.டி. பந்துசேன கூறினார். அடுத்த வருடம் மேலும் 1000 பஸ்கள் கொள்வனவு செய்யப்பட்டு சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மக்களுக்கு சிறந்த சேவை வழங்கும் நோக்குடனும் தனியார் துறைக்குப் போட்டியாக இ.போ.சபையை பலப்படுத்துவதற்காகவும் கூடுதலான பஸ்களைத் தருவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் தருவிக்கப்படவுள்ள பெரிய ரக ‘அசோக் லேலண்ட்’ பஸ்கள் பிரதான வீதிகளிலும், கிராமப்புற வீதிகளிலும் ஈடு படுத்தப்பட உள்ளதோடு, மீள் குடியேற்றம் நடத்தப்பட்ட பகு திகளிலும் ஈடுபடுத்தப்படும் எனவும் இ.போ.ச. தலைவர் கூறினார். இதுதவிர யாழ்ப்பாணத்தில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக சொகுசு பஸ்களை தருவிக்கவும் இ.போ.ச. திட்டமிட்டுள்ளது. வடக்கில் மீள்குடி யேற்றப்பட்ட பகுதிகளில் 300க்கும் அதிகமான பஸ்கள் ஏற்கெனவே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நூல் வெளியீட்டு விழா – ‘இராமாயணத்தின் வரலாற்று நம்பகத்தன்மை விமர்சன ரீதியான ஒரு மதிப்பீடு’

Mayooran_Bookசுடரொளி வெளியீட்டுக் கழகத்தின் ஆதரவில் இடம்பெறும் ஊடகவியலாளர் அ.மயூரனின்  ‘இராமாயணத்தின் வரலாற்று நம்பகத்தன்மை விமர்சன ரீதியான ஒரு மதிப்பீடு’ என்ற நூலின் வெளியீட்டு விழா இன்று யூன் 5, 2010ல் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.

ஜுன் 05, 2010 சனிக்கிழமை, மாலை 4.00 மணி தொடக்கம் 9.00 மணி வரை நடைபெறவுள்ளது.

ஈலிங் கனகதுர்க்கை அம்மன் கோவில் மண்டபம்
5 Chapel Road, West Ealing, London W13 9AE

கலை நிகழ்ச்சிகளும், தொடர்ந்து இராப்போசன விருந்துபசாரமும் நடைபெறும்.

குறித்த நேரத்தில் நிகழ்ச்சியைத் தொடங்க உங்கள் ஒத்துழைப்பை வேண்டுகின்றோம்.

அன்றையதினம், ஈழத்தில் வெளியான புதிய தமிழ் நூல்களின் கண்காட்சியும் விற்பனையும் வாசகர் வட்டம் அமைப்பினரால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

அ.மயூரன்
நூலாசிரியர்
078 9498 6780

ஐ.தி.சம்பந்தன்
செயலாளர்,
சுடரொளி வெளியீட்டுக் கழகம்
020 8552 6992

வெளிநாட்டு உதவிகளில் 60 வீதம் வடமாகாண அபிவிருத்திக்கே பயன்பாடு – ஆளுநர் சந்திரசிறி

cha.jpgவெளி நாடுகளிலிருந்து இலங்கைக்குக் கிடைக்கும் மொத்த உதவிகளில் 60 சதவீதமான நிதி வட மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கே பயன்படுத்தப்பட்டு வருவதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வட மாகாணத்தை துரிதமாக அபிவிருத்தி செய்யும் நோக்கிலேயே அரசாங்கம் இந்தளவு நிதியை ஒதுக்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு ஒதுக்கப்படும் நிதிகள் வட மாகாணத்தின் உட்கட்டமைப்பு, வீதி, நீர்ப்பாசன, மின்சார, விவசாய, வீடமைப்பு, குடிநீர் வசதி, மீள்குடியேற்றம், நிவாரண, கல்வி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜப்பான், சீனா உட்பட பல்வேறு உலக நாடுகள் அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் நிதியுதவிகளை வழங்கி வருகின்றது என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை அரசின் போர்க்குற்றங்களை வெளியிட்ட சனல்-4 தொலைக்காட்சிக்கு சிறந்த செய்திக்கான விருது!

channel-4.jpgஇலங்கை அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பான செய்திகளை வெளியிட்ட சனல் – 4  செய்திச்சேவைக்கு சர்வதேச மன்னிப்புச் சபையின் சிறந்த தொலைக்காட்சி செய்திக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் லண்டனில் நடைபெற்றது. 

திரைப்பட விழாவும் இந்திய முதலீடும் இலங்கையின் வளர்ச்சிக்கு அங்கீகாரம் – iifa விழாவில் ஜனாதிபதி மஹிந்த

Mahinda Rajapaksaஇலங்கை யின் மீதும் அதன் பொருளாதாரக் கொள்கையின் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையினாலேயே சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவை இந்தியா இலங்கையில் நடத்த முன்வந்துள்ளது. அது மட்டுமன்றி இலங்கையில் அதிகளவு முதலீடுகளைச் செய்யவும் இந்தியா தற்போது முன்வந்துள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவின் முன்னோடியாக நேற்று இந்திய – இலங்கை வர்த்தக சம்மேளனங்களின் விசேட அமர்வு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

வர்த்தக சம்மேளன அமர்வினை அங்குரார்ப்பணம் செய்து வைப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட அதிதியாக வருகை தந்திருந்தார்.ஜனாதிபதியுடன் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் தலைவர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பேசுகையில்:-

பயங்கரவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தை ஒரு வருடங்களுக்கு முன்னர் தான் நாம் வெற்றி கண்டோம். தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள், சிறுவர் போராளிகள், குண்டுத் தாக்குதல்கள் என பயங்கரவாதத்துக்கு வேறு பரிமாணத்தை எல். ரி. ரி. ஈ. யினர் அறிமுகப்படுத்தினார்கள். இருப்பினும் இராணுவ ரீதியான எங்கள் வெற்றியானது உலகளாவிய ரீதியில் அறியப்பட்டபோதும், பொருளாதார ரீதியாக நாங்கள் அடைந்த வெற்றி பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை.

ஆதலால் பொருளாதார ரீதியாக நாங்கள் அடைந்த வெற்றியைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுவதாயின் 2005 ஆம் ஆண்டில் இருந்து 2008 ஆம் ஆண்டு வரை வருடம்தோறும் 6 சதவீதத்திலும் பார்க்கக் கூடுதலான வளர்ச்சியை எமது நாடு அடைந்திருந்தது. 2008 ஆம் ஆண்டில் பணவீக்கம் 22 சதவீதமாகவும் 2009 இல் 4 வீதத்திலும் பார்க்கக் குறைவாகவும் இருந்தது. உட்கட்டமைப்புகள் நாம் என்றும் எதிர்பாராத வகையில் அபிவிருத்தி கண்டு வருகின்றன. துறைமுகங்கள், விமான நிலையங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள், மீன்பிடித்துறை முகங்கள், ரயில்வே பாதைகள் என்பன நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

எமது நாட்டின் வேலை வாய்ப்பின்மை 5.7 சதவீதத்திலும் குறைவாக இருக்கின்றது. உலகில் வேலை வாய்ப்பின்மை மிகக் குறைந்தளவில் இருப்பது இலங்கையில் மட்டும் தான். நாட்டிலுள்ள அனைவரும் 24 மணி நேரமும் மின்சாரம் பெறுவது இன்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. தனிநபர் வருமானம் கடந்த 5 வருடங்களில் 2000 அமெரிக்க டாலர்களாக இருக்கின்றது. இது அடுத்த 5 வருடங்களில் 4000 டொலராக அதிகரிக்கப்படுவதை இலக்காகக் கொண்டு நாம் செயற்படுகின்றோம்.

உலகப் பொருளாதாரச் சிக்கலை நாம் வெற்றிகரமாக எதிர்கொண்டோம். எமது எந்தவொரு வங்கியோ அல்லது நிதி நிறுவனமோ பொருளாதாரச் சிக்கலால் மூடப்படவில்லை. சர்வதேச உணவுச் சிக்கலையும் நாம் வெற்றிகரமாக எதிர்கொண்டோம். பயங்கர வாதத்துக்கெதிராகப் போரிட்டுக் கொண்டே நாம் அடுத்தடுத்து எழுந்த இச் சிக்கல்களையும் எதிர்கொண்டோம்.

அபிவிருத்தியல்லாமல் சமாதானம் இல்லையென்பதை நாம் திடமாக நம்புகின்றோம். இடம் பெயர்ந்தவர்களை மிகக் குறுகிய காலத்தில் மீளக் குடியமர்த்திய நாடு இலங்கையே. எல். ரி. ரி. ஈயினரால் பலவந்தமாக யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்ட சிறார்களை புனர்வாழ்வளிப்பதிலும் நாம் வெற்றி கண்டிருக்கின்றோம். இலங்கையின் ஒவ்வொரு பிரஜையும் பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தைக் காணச் செய்வதே எமது இலக்கு. யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் நாம் ஆரம்பித்த துறைகள் எல்லாம், எமது மக்களுக்கு பல்வேறுபட்ட வாய்ப்புகளை வழங்குகின்றன.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்புகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமைவாய்ந்தவை. இராமாயண காலத்தில் இருந்து தொடர்பவை. ஒரு பொதுவான மரபு ரீதியான பொருளாதார வர்த்தக முயற்சிகளே இரண்டு நாடுகளிலும் காணப்படுகின்றன. தற்போது இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளுக்கு புதிய வர்த்தக வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் மேலும் வலுச்சேர்க்கின்றோம் என்றார்.

இலங்கையில் நீங்கள் முதலிடவிரும்பினால் உங்களுக்கு பல்வேறுபட்ட வாய்ப்புகள் இங்கு நிறைந்து காணப்படுகின்றன. ஆற்றல், திறமை, அர்ப்பணிப்பு, ஆர்வம் போன்ற தனித்துவத்தன்மைகளையும் நீங்கள் இங்கு காணலாம்.இந்த வர்த்தக சம்மேளனம் இரு நாடுகளுக்குமிடையிலான புதிய உறவுகள் புதிய வர்த்தக முயற்சிகளுக்கு வழிவகுக்கும் என்று நம்புவதாக அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தார். இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சசி தருர் ஆகியோரும் உரையாற்றினர்.